Sunday, June 28, 2009

'பட்ஜெட்' பகவான் வரம் தருவாரா?


மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இன்னும் ஒரு வாரமே இருக்க, பணத்தில் புரளும் கனவான்கள் முதல் அன்றாட உழைப்பில் சோறு பொங்கி அதில் உப்பு மட்டுமே சேர்த்துக் கொண்டு சாப்பிடும் சாமான்ய மனிதர்கள் வரை அனைவரின் கவனமும் இப்போதைக்கு மத்திய பட்ஜெட் மீதுதான் இருக்கிறது.

வறுமை ஒழிப்புத் திட்டங்கள், வேலை உறுதி திட்டங்கள், தனி நபர் ஓய்வூதிய/ காப்புறுதி திட்டங்கள் போன்றவை ஏழை வர்க்கத்தின் ஆவல்கள். தனிநபருக்கான வருமான வரி வரம்புகள் அதிகரிக்கப் படவேண்டும் என்பது மத்திய தர வர்க்கத்தினரின் விருப்பம். விஷம் போல ஏறி இருக்கும் விலை வாசியை குறைக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப் படுமா என்பதும் மேற்சொன்ன இரண்டு வர்க்கத்தினரின் ஏக்கம்.

புதிய ரயில் திட்டங்கள், வெட்டில்லாமல் கிடைக்கும் மின்சாரம், குடிநீர் விநியோகத் திட்டங்கள், சாலை மேம்பாடு, கட்டுமானப் பணிகள் போன்றவையும் பொது மக்களின் எதிர்பார்ப்புக்கள்.

இனி தொழில் துறையினரின் விருப்பங்களைப் பார்ப்போம்.

கலால் வரி குறைப்பு, ஏற்றுமதி சலுகைகள் போன்றவை ஜவுளித் துறையினரின் விருப்பம். கலால் வரி குறைப்பு, வட்டி குறைப்பு மற்றும் தேய்மான சலுகைகள் வாகனத் துறையினர் வேண்டுவது.

வாட் வரி குறைப்பு மற்றும் மூலப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு போன்றவை சிமெண்ட் துறையினர் கேட்பது. வரி விடுமுறையினை நீடிக்க வேண்டும் என்பது தகவல் தொடர்பு/மென்பொருட் துறையின் விருப்பம்.

ஏற்றுமதி வரி குறைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான வரிச் சலுகைகள் போன்றவை மருந்துத் துறையின் விருப்பம். வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகைகள் வீட்டு வசதி திட்டங்களுக்கு வரி விடுமுறை ஆகியவை ரியல் எஸ்டேட் துறையினரின் கோரிக்கைகள்.

நிறுவன வரி குறைப்பு அனைத்து துறைக்கும் தேனாக இனிக்கும். குறைந்த கால பங்கு வர்த்தக வரி நீக்கப் படுமா என்று பங்கு வணிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

அரசு நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் வெளியிடப் படுமா என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசின் நிதி நிர்வாக செயல்பாடு, சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதில் உள்ள நிலைப்பாடு போன்றவற்றை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கூர்ந்து நோக்கி வருகின்றனர்.

இப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு வகையான மக்களுக்கும் பல்வேறு விருப்பங்களும் எதிர்பார்ப்புக்களும் இருக்கின்றன. இவற்றில் எத்தனை விருப்பங்கள், கோரிக்கைகள் நிறைவேறும் என்பதை பட்ஜெட்தான் சொல்ல வேண்டும்.

முன்னரே நாம் இங்கே பலமுறை கூறியுள்ள படி, ஏற்கனவே ஏராளமான கடனில் தத்தளிக்கும் நம் மத்திய அரசால் மேற்சொன்னவற்றில் எத்தனை கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்பது ஒரு பெரிய கேள்விக் குறிதான் என்றாலும், நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டு செல்ல இந்த அரசு எந்த அளவு உறுதியுடன் இருக்கிறது என்பதை இந்த பட்ஜெட் கோடிட்டுக் காட்டும் என்று நம்பலாம்.

மத்திய அரசின் ஒரு பொதுப் பணிக்காக (அனைத்து இந்திய மக்களுக்கும் அடையாள சிப் அட்டை வழங்கும் திட்டம்) இன்போசிஸ் தலைவர் திரு.நந்தன் நில்கேனி அவர்களை நியமித்திருப்பது ஒரு நல்ல துவக்கம். நாட்டின் நலத் திட்டங்களுக்கு அரசு இயந்திரத்தை மட்டுமே நம்பி இருக்கும் பிரிட்டிஷ் பாரம்பரியத்தில் இருந்து சற்று மாறி அமெரிக்க முறையிலான இந்த பணி நியமனத்திற்காக பிரதமருக்கு ஒரு வணக்கம் கலந்த வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே சமயத்தில், பணம் புரளும் தனியார் வேலையை உதறி விட்டு தேச நலனுக்காக அரசு பொறுப்பை ஏற்க முன்வந்திருக்கும் நந்தன் நில்கேனிக்கு ஒரு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். அவருடைய பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்.

இந்த பணி நியமனத்தைப் போலவே பட்ஜெட்டும் சிறப்பாக இருக்கும் என்று நம்புவோம்.

இப்போது நமது சந்தை நிலவரத்துக்கு வருவோம்.

உலகப் பொருளாதாரம் சரிவில் இருந்து மீள, (முன்னர் எதிர்பார்த்ததை விட) அதிக காலம் பிடிக்கும் என்று உலக வங்கி சொன்னதை அடுத்து சர்வதேச சந்தைகள் சென்ற வாரத்தை சரிவுடனேயே துவக்கின. ஜப்பான் நாட்டின் ஏற்றுமதி வீழ்ச்சி அந்த அவநம்பிக்கையை அதிகரித்தது. அதே சமயம் சென்ற வார அமெரிக்க பொருளாதார வெளியீடுகள் ஒரு புதிய நம்பிக்கையைத் தர, சந்தைகள் சரிவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டன. அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தாமல் பழைய அளவில் தொடர்வதாக அறிவித்ததும் சந்தைகளுக்கு ஒரு உற்சாகத்தை தந்தது. அதே சமயத்தில், திட்டமிட்டதை விட அதிக பணம் சந்தையில் கொட்டப் படாது என்று அந்த வங்கி தெரிவித்தது ஒரு வித மன சோர்வை தந்தது.

வட்டி வீத அறிவிப்புக்குப் பின்னர் உலக சந்தையில் டாலர் வீழ்ச்சியுற்று இதர முக்கிய கரன்சிகள் உயர்ந்தன. அதே போல, கச்சா எண்ணெய், தங்கம், தொழில் உலோகங்கள் மற்றும் பங்கு சந்தைகளும் ஓரளவுக்கு உயர்ந்துள்ளன.

இந்தியாவைப் பொறுத்த வரை, சென்ற வாரத்தின் பெரும்பாலான நாட்களில் அந்நிய நிறுவனங்கள் பங்குகளை பெருமளவுக்கு விற்றது நமது சந்தைக்கு பெரும் நிர்பந்தத்தைக் கொடுத்தது. இருந்தாலும் சிறிய மற்றும் மத்திய நிலை பங்குகள் பெருமளவு உயர்ந்தன. எதிர்கால நிலைகள் சமன் செய்யப் பட்டதின் எதிரொலியாக சந்தையில் பெருமளவில் ஏற்றத்தாழ்வு நிலை காணப் பட்டது.

ஆனால் வாரத்தின் கடைசி நாளில் பங்கு சந்தை பெருமளவில் உயர்ந்து கடந்த வாரத்தை ஒரு வெற்றிகரமான வாரமாக மாற்றியது. (பட"ஜெட்" வாரத்தின் முன்னோடி?).

இப்போது வரும் வார நிலவரம்.

அமெரிக்காவில் சென்ற வார இறுதியில் நான்கு வங்கிகள் நடையை சாத்தியுள்ளன. இந்த வருடத்தில் மட்டும் 44 வங்கிகள் இழுத்து மூடப் பட்டுள்ளன. என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் அமெரிக்காவின் பிரச்சினை இன்னும் ஓயவில்லை என்பதையே வெளிக் காட்டுகிறது.

கடந்த சில மாதங்களில் பங்கு சந்தைகள் ஏராளமாக உயர்ந்தது உண்மையான பொருளாதார நிலையை பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி பல பங்கு நிபுணர்களின் மனதில் இப்போது எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பங்கு சந்தையுடன் போட்டி போட்டுக் கொண்டு உயரும் கச்சா எண்ணெய், உலோகங்கள் மற்றும் இதர பொருட்களின் உயர்வு பொருளாதார மீட்சிக்கு பெரிய முட்டுக் கட்டையாக இருக்கும் என்றும் கருதப் படுகிறது.

எனவே வரும் வாரமும் உலக சந்தைகள் பெருத்த ஏற்ற தாழ்வுடனேயே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். உலக சந்தைகள் அமெரிக்க பொருளாதார தகவல்களை குறி வைத்து இயங்கும் அதே சமயம், இந்திய பங்கு சந்தை "பட்ஜெட்டை" குறி வைத்து உயரவும் வாய்ப்புள்ளது.

சென்ற வாரமே சொன்ன படி நிபிட்டி 4400 ஐ கடக்கும் பட்சத்தில் உயர்வை எதிர்நோக்கி வியாபாரம் செய்யலாம். அதே சமயம் பட்ஜெட்டுக்கு முன்னரே லாப விற்பனை செய்வது பாதுகாப்பானது ஆகும். கீழே 4200 ஐ இழப்பு நிறுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

சென்செக்ஸ் எதிர்ப்பு நிலைகள்: 15,500, 16,200
சென்செக்ஸ் அரண் நிலைகள்: 13,900, 13,400

முதலீட்டாளர்கள் எப்போதும் போல, பங்கு விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும் சமயத்தில் மட்டும் பங்குகளை சேகரிப்பது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.

7 comments:

Thomas Ruban said...

//பணம் புரளும் தனியார் வேலையை உதறி விட்டு தேச நலனுக்காக அரசு பொறுப்பை ஏற்க முன்வந்திருக்கும் நந்தன் நில்கேனிக்கு ஒரு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். அவருடைய பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்.//

அவருடைய பணி மத்திய மந்திரிக்கு இணையானது என்று அரசாங்கம் கூறி உள்ளது .

அனைத்து இந்திய மக்களுக்கும் அடையாள சிப் அட்டை வழங்கும் திட்டம் ஓட்டைகள் இல்லாத திட்டமாக சிறப்பாக இருக்கும் என்று நம்புவோம்.

2008-2009 யை விட 2009-2010 அமெரிக்காவில்
அதிக வங்கிகள் இழுத்து மூடப் பட்டுள்ளன.

//கடந்த சில மாதங்களில் பங்கு சந்தைகள் ஏராளமாக உயர்ந்தது உண்மையான பொருளாதார நிலையை பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி பல பங்கு நிபுணர்களின் மனதில் இப்போது எழுந்துள்ளது.//

உங்களுடைய பதிவ்க்கு நன்றி.தொடருங்கள் நன்றி..நன்றி...

MCX Gold Silver said...

தங்களுடைய தகவல் மிகவும் உதவியாக உள்ளது. நன்றி சார்

Maximum India said...

நன்றி DG!

வால்பையன் said...

பணவீக்கம் மைனஸுல போச்சே!
மீண்டும் வீங்க வைப்பாங்களா?

Maximum India said...

அன்புள்ள வால்பையன்!

உற்பத்தியாளர்களுக்கான (மொத்த விலை) பணவீக்கம் மட்டும்தான் மைனஸ். நம்மைப் போன்ற நுகர்வோருக்கான பணவீக்கம் கிட்டத்தட்ட பத்து சதவீதம். இந்த வருடம் மழை பொய்த்தால், இது இன்னும் எகிறும்.

நன்றி.

Btc Guider said...

தங்களுடைய பதிவுகள் மிக அருமை நண்பரே, மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்,நான் வலைப்பூவிற்கு புதியவன்.,
நானும் ஓர் வலைப்பூவை உருவாக்க பல முறை நினைத்து நேற்றுதான் என் வலைப்பூவை உருவாக்கினேன்,தங்கள் என் வலைப்பூவை பார்த்து செய்யவேண்டிய திருத்தங்களையும் பிழைகளையும் எடுத்துரைக்கவேண்டும்.
என் வலைப்பூவின் address http://panguvanigamtips.blogspot.com/
நன்றி
ரஹ்மான்.

Maximum India said...

உங்கள் வலைப்பூ சிறக்க வாழ்த்துக்கள் ரஹ்மான்!

உங்களுக்கு சந்தைகள் பற்றிய தகவல்கள் மேலும் தேவைப் பட்டால் எனது ஈ-மெயில் முகவரியை அணுகுங்கள்.

maximumindia@gmail.com

நன்றி.

Blog Widget by LinkWithin