Thursday, July 30, 2009

பாரெல்லாம் பைந்தமிழ்!


பாரெல்லாம் பரவி இருந்த என் பைந்தமிழ் இன்று பள்ளிக் கூடங்களில் மறுக்கப் படுகின்றதே? தரணி எல்லாம் தவழ்ந்து வந்த என் தீந்தமிழை இன்றைய மழலையர் கற்க முடியாதபடி தனியார் பள்ளிகள் ஆங்கில கல்வி புகட்டுகின்றனவே? உலகெல்லாம் ஓங்கி ஒலித்த என் தமிழை ஒழித்துக் கட்ட தமிழின துரோகிகள் முனைந்து விட்டனரே? இதை தடுப்பவர் யார்?

திரண்டு வாருங்கள் தமிழர்களே! அழிகின்ற தமிழை காக்கும் பொறுப்பு உங்களிடம்தான் இருக்கிறது! பல்லாயிரம் ஆண்டு காலம் வாழ்ந்த நம் தமிழ் நாம் வாழ்ந்த காலத்தில் அழிந்தது என்று சரித்திரம் சொல்லக் கூடாது. தாய்மொழியை உதறுபவன் தன தாயை இகழ்ந்ததற்கு சமம். தமிழ் வழிக் கல்வியை தடுப்பவனை தாய் தடுத்தாலும் விடேன்.

இப்படியெல்லாம் சரளமாக எழுதிக் கொண்டிருந்த கவிக் கோவின் கண் முன்னே ஏராளமான கைத்தட்டுக்களும் பாராட்டுக்களும் விரிந்தன. தமிழ் குடிதாங்கி, தமிழின காவலர், தமிழ் செம்மல் என்றெல்லாம் ஏராளமான பட்டங்களை ஏற்கனவே சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும் தான் வருங்காலத்தில் இன்னும் என்னவெல்லாம் பட்டங்கள் சுமக்க வேண்டுமோ என்ற ஒருவித சந்தோச பயம் கூட அவருக்கு வந்தது.

இந்த போராட்டத்தை எதிர்த்து சில தமிழின துரோகிகளும், மாற்று மொழி தாசர்களும் நீதிமன்றத்திற்கு போகலாம். அந்நிய மொழியை குழந்தைகளுக்கு புகட்டுவதை அடிப்படை உரிமை என்றும் கூட கூறலாம். தடைகளை முறியடித்து தமிழ் கல்வி பற்றிய விழிப்புணர்வை எப்படி மக்களிடம் பரப்பலாம் என்று ஆழமான சிந்தனையில் மூழ்கி இருந்தவரை ஒரு குரல் தட்டி எழுப்பியது.

"ஹை டாடி! ஐ யாம் லீவிங் பார் அமேரிக்கா! சீ யு சூன்! "

சொன்னது வெறும் யாருமல்ல அமெரிக்காவில் ஐ.டி பிசினெஸ் பண்ணும் அவர் ஆசை மகன்தான்!

"ஓகே மை டியர் சன்! டேக் கேர்! கால் மீ லேட்டர்! "

பதில் அளித்த அவர் மீண்டும் எப்படி தமிழ் வழிக் கல்வி பற்றிய பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்புவது என்ற சிந்தனையில் மூழ்கி விட்டார்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!

நன்றி.

Wednesday, July 29, 2009

டாலரின் சுழற்சிக் கதை.


எனது முந்தைய பதிவின் அடிப்படையில் ஒரு நண்பர் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு விளக்கமாக பதில் சொல்ல வேண்டியிருந்தாலும், அந்த கேள்வி பதில் பலரையும் சென்றடைய வேண்டும் என்று எண்ணியதாலும் இதை ஒரு பதிவாகவே உருவாக்கி விட்டேன்.

கேள்விகள்

"1.அமெரிக்க அரசு இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து வெளிவிடுகிறதே,இதற்கு எதுவும் வரைமுறை (அ)கட்டுப்பாடு இல்லையா?

2.இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து புழக்கத்தில் விட்டும் டாலர் மதிப்பு 48.25 யாக இருப்பது எப்படி? 2007ல் இதன் மதிப்பு 38 ரூபாய் தானே இருந்தது.

3.இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து புழக்கத்தில் விடுவதால் டாலர் மதிப்பு குறையும் என்று கூறிகிறார்கள் ஆனால் அவ்ர்கள் டாலரை மற்ற நாட்டு பங்குசந்தைலும், மற்ற நாட்டு பொருட்களை வாங்கி குவித்தால் டாலர் மதிப்பு எப்படி குறையும்? இது மற்ற நாட்டு பொருளாதாரத்தை பாதிக்காதா ? "

இந்த கேள்விகளுக்கு சற்று விளக்கமாக பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

உதாரணத்திற்கு சீனாவை எடுத்துக் கொள்வோம். சீனா ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்கிறது. அந்த பொருட்களில், உள்ளூர் உபயோகம் போக மீதியை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. அந்த பொருட்களுக்கு ஈடாக அமெரிக்கா ஏராளமான டாலர் பணத்தை தருகிறது.

இங்கு ஒரு விஷயத்தை கருத்தில் கொள்ளவும். ஒரு நாட்டின் கரன்சி வேறு ஒரு நாட்டில் ஒருபோதும் செல்லுபடி ஆகாது. (கரன்சி மாற்றுபவர்களும் இறுதியாக அந்த கரன்சியை அச்சடித்த நாட்டுக்குத்தான் அனுப்பி வைப்பார்கள்) எனவே அமெரிக்காவிடம் இருந்து பெற்ற கரன்சியினால் சீனாவிற்கு உள்நாட்டில் உபயோகம் ஏதும் இல்லை.

எனவே ஏற்றுமதி மூலம் தான் பெற்ற டாலர் பணத்தை சீனா மீண்டும் அமெரிக்க நாட்டிலேயே முதலீடு செய்கிறது. (வேறென்ன செய்ய முடியும்?) சீனா முதலீடு செய்ய ஏதுவாக அமெரிக்கா பல கடன் பத்திரங்களை அச்சடிக்கிறது. (அவ்வாறு கடன் மூலம் பெற்ற பணத்தைத்தான் அமெரிக்கா தன் இறக்குமதிக்கு ஈடாக கொடுக்கிறது) தான் பெற்ற கடனுக்கு வட்டியாகவும் (மிகவும் குறைவு) டாலர் பணத்தை சீனாவிற்கு அமெரிக்கா அளிக்கிறது. அந்த பணத்தையும் சீனா அமெரிக்காவிலேயே மீண்டும் முதலீடு செய்கிறது. இப்படி அமெரிக்காவில் இருந்து உருவாக்கப் படும் டாலர் பணம் அமெரிக்காவில்தான் இறுதியில் தஞ்சமடைகிறது.

ஒருவேளை, சீனா தான் பெற்ற டாலர் பணத்தை, தனது சொந்த இறக்குமதி தேவைக்காக இந்தியா போன்ற இன்னொரு நாட்டிடம் வழங்கலாம். ஆனால் அந்த பணமும் அங்கு சுற்றி இங்கு சுற்றி இறுதியில் சென்றடைவது அமெரிக்காவில்தான்.



இந்த டாலர் சுழற்சி முறையில், சில சமயங்களில் அமெரிக்க அரசாங்கம் ஏராளமான கடனை வாங்கி வட்டி கட்ட முடியாமல் நிதிப் பற்றாக்குறையில் தடுமாறும் போது, அந்நாட்டின் மத்திய வங்கி புதிய நோட்டுக்களை உருவாக்குகிறது. அந்த பணம் மீண்டும் உலகம் சுற்ற ஆரம்பிக்கிறது.

இப்படி ஏராளமான டாலர் பணம் புழக்கத்தில் வரும் போது டாலர் மதிப்பு சர்வதேச சந்தையில் குறைந்து விடுகிறது. மற்ற நாணயங்களின் மதிப்பு உயர்கிறது.

அதே சமயத்தில், மற்ற நாடுகளும் இதே போன்ற ஒரு பாணியை (Monetization of Fiscal Deficit), சிறிய அளவில், பின் பற்றுவதால், டாலர் மதிப்பு மிகவும் பெரிய அளவில் குறைந்து போவதில்லை. குறிப்பாக இந்தியாவில் கூட (அரசு கடனை சந்தையில் இருந்து வாங்குவதன் மூலம்)ஏராளமான புதிய பணம் மத்திய வங்கியினால் உருவாக்கப் படுகிறது.

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் அந்நிய செலவாணி (குறிப்பாக டாலர்) கையிருப்பு பெரிய அளவில் உள்ளன. இந்த பணம் பெரும்பாலும் மிகக் குறைந்த வட்டிக்கு அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப் படுகின்றன. இந்த முதலீட்டினால் ஏராளமான நஷ்டத்தையும் (வட்டி குறைவு மற்றும் நாளுக்கு நாள் டாலர் மதிப்பு குறையும் அபாயம்) சந்திக்கின்றன.

தனது அந்நிய செலவாணி கையிருப்பை டாலரிலிருந்து யூரோ நாணயத்திற்கு மாற்றியதாலேயே சதாம் ஹுசைன் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளானார் என்று சொல்லப் படுகிறது. இப்போது சீனா தனது கையிருப்பை யூரோ நாணயத்திற்கு மாற்றி வருகிறது. டாலருக்கு மாற்றாக ஒரு புதிய உலக கரன்சியை உருவாக்க வேண்டும் என்றும் கூட சீனா சொல்லி வருகிறது. சீனாவும் ஒரு வல்லரசு என்பதால் அமெரிக்கா ராஜரீக நிர்பந்தங்களை மட்டும் ஏற்படுத்தி வருகிறது.


இந்தியா போன்ற நாடுகளின் கரன்சிகள், பொதுவாக, மற்ற நாடுகளால் அங்கீகரிக்கப் படுவதில்லை. எனவே தமது இறக்குமதி தேவைக்கும் வெளிநாட்டுக் கடன்/வட்டி திருப்பி செல்வதற்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு டாலர் உதவி தேவைப் படுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை டாலர் என்பது வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு உதவும் ஒரு முக்கிய சாதனம் (vehicle) ஆகும். இந்த சாதனத்தின் சந்தை விலை, தேவை மற்றும் வழங்குதல் (Demand and Supply) ஆகிய சந்தை விதிகளின் அடிப்படையில் மாறுபடுகிறது. (ஆனால் முழுக்க முழுக்க என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ரூபாய் நாணய மாற்று வீதம் (Capital Account Convertiblity) முழுமையானதல்ல) கடந்த இரண்டு வருடங்களில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் (FIIs) தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற்றதாலேயும், இந்தியாவின் ஏற்றுமதியை விட இறக்குமதி மிகவும் அதிகமாக இருப்பதாலேயும் சந்தையில் டாலர் தேவை அதிகமாக ரூபாய் மதிப்பு குறைந்து போனது.

என்னுடைய கற்பனையில் மேற்சொன்ன டாலர் சுழற்சி முறை எப்படி இருக்கிறது தெரியுமா?

ஒரு நாட்டில் ஒரு "கொழுத்த" பணக்காரன் இருந்தான். அவனுக்கு சாப்பிடுவதை தவிர வேறு வேலையில்லை. அவனிடம் இருந்த காகிதத்தில் இவ்வளவு காசு என்று எழுதி அவனுக்கு சேவை செய்தவர்களுக்கெல்லாம் கொடுத்து வந்தான். அந்த காசு ஊர் முழுக்க செல்லுபடியானது.

அந்த ஊரின் பொருளாதாரமே அவனை நம்பித்தான் இருந்தது.

உழவன் அவனுக்கு சாப்பிட உணவளித்தான். நெசவாளி உடையளித்தான். ஒருவன் அவன் வீட்டில் வேலை செய்தான். ஒருவன் அவனுக்கு வைத்தியம் பார்த்தான். ஒருவன் அவனிடம் கடன் வாங்கினான். இன்னுமொருவன் அவனுக்கு கடன் கொடுத்தான்.

மேற்சொன்ன கணக்கு வழக்குகளை இன்னுமொருவன் சரி பார்த்தான்.

இன்னுமொருவன் அந்த காகிதத்தை (காசு என்று எழுதப் பட்ட அந்த காகிதத்தை சம்பளமாக வாங்கிக் கொண்டு) தயாரித்துக் கொடுத்தான்.

மேற்சொன்ன அனைவருமே தமது எதிர்காலம் அந்த "கொழுத்தவனை" நம்பித்தான் இருக்கிறது என்று நம்பியிருந்தனர். அவனுக்கு மட்டும்தான் தெரியும் அவனுடைய எதிர்காலம் மற்றவர்களின் ஒற்றுமையின்மையிலும் முட்டாள்தனத்திலும்தான் உள்ளது என்று.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பேராதிக்கம் உலக நாடுகளை ஒவ்வொரு வகையில் சுரண்டித்தான் வந்திருக்கிறது. தற்போதைய காலகட்டம் அமெரிக்காவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் பேராதிக்கத்திற்கு டாலர் ஒரு மிகப் பெரிய ஆயுதமாகவே அமைந்திருக்கிறது.

நன்றி.

Sunday, July 26, 2009

மீண்டும் ஒரு சூப்பர் பப்புள்!



பங்கு சந்தை தனது ஆரவாரமான வெற்றிநடையை சென்ற வாரமும் தொடர்ந்துள்ளது. சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் மீண்டுமொருமுறை முக்கிய நிலையான 15000 புள்ளிகளுக்கு மேலே முடிவடைந்துள்ளது. உலகின் மற்ற பங்கு சந்தைகளும் கூட வெகுவாக உயர்ந்துள்ளன. சீனாவின் ஹாங்செங் குறியீடு 20000 புள்ளிகளுக்கு மிக அருகே உள்ளது. அமெரிக்காவின் டௌ ஜோன்ஸ் குறியீடு 9000 புள்ளிகளுக்கும் மேலே முடிவடைந்துள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் சற்று தெளிவான நிலையை அடைந்து விட்டாலும் கூட தனது "குறைந்த வட்டி கொள்கையை" தொடரப் போவதாக அந்நாட்டு மத்திய வங்கித் தலைவர் கூறியதும் பன்னாட்டு நிறுவனங்களின் காலாண்டு நிதியறிக்கைகள் சென்ற ஆண்டை விட மிகச் சிறப்பாக இருந்ததும் சென்ற வாரத்தில் உலகின் முக்கிய பங்கு சந்தைகள் மிகப் பெரிய அளவில் முன்னேற்றமடைய உதவியாக இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவின் வீட்டு விற்பனை அதிகமானதும் நம் நாட்டின் முக்கிய நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் சிறப்பாக இருந்ததும் கூட உள்ளூர் சந்தை உயர உதவியாக இருந்தன.

நேற்று ஒரு பன்னாட்டு பரஸ்பரநிதியின் நிதி மேலாளர் கூறினார், " அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட ஒன்றரை டிரில்லியன் டாலர் அளவுக்கு (கிட்டத்தட்ட எழுபது லட்சம் கோடி ரூபாய்) ஒரு நிரப்பப் படாத காசோலையை சந்தைகளிடம் (மறைமுகமாக) கொடுத்துள்ளது, இந்தப் பணம் உலகின் அனைத்து சந்தைகளிலும் பாயந்தோடுவதே உலக சந்தைகளின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம்"

அவர் சொன்னதில் உண்மையில்லாமல் இல்லை. அமெரிக்காவின் வீழ்ச்சியை தவிர்ப்பதற்காக எதையும் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தயாராக உள்ளது. அந்நாட்டின் நாணயம் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப் படுவது, புதிய கரன்சி நோட்டுக்களை தாராளமாக அச்சடிக்க மிகவும் சவுகரியமாக உள்ளது.

சந்தை இப்போது ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. வெகு வேகமாக நிகழ்ந்து விட்ட சந்தை வளர்ச்சியில் பலர் (பரஸ்பர நிதிகள் உட்பட) பங்கு பெற வாய்ப்பில்லாமல் போய் விட்டது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பிறகு அவர்களில் பலர் "பொறுத்தது போதும்" என்று பொங்கி எழ வாய்ப்புக்கள் உள்ளது. அப்புறம் என்ன, சந்தையின் அடிப்படை விஷயங்களைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் கண்மூடித் தனமாக பலரும் உள்ளே நுழைய, சரித்திரம் மீண்டும் திரும்பக் கூடும்.

பல முக்கிய பொருளாதார காரணிகள் (பொருளாதார வளர்ச்சி, பண வீக்கம், வட்டிவீதங்கள், கடன் வளர்ச்சி, ஏற்றுமதி வளர்ச்சி போன்றவை) இன்னும் சிறப்பான நிலையை அடையாத போதும் கூட அல்லது அடையுமா என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கும் நிலையிலும் கூட இந்தளவுக்கு பங்கு சந்தை உயர்ந்திருப்பது சற்று ஓவர்தான்.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகளின் வருமான வளர்ச்சி குறைவாகவே இருக்கும் போது, குறியீட்டின் விலை-வருமான விகிதம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதும் அடிப்படைகளுக்கு எதிரானது.

முக்கிய நிறுவனங்களின் லாப விகிதம் உயர்ந்தாலும் அவற்றின் விற்பனை விகிதம் அதிகம் உயர வில்லை என்பதும், செலவினக் குறைப்பு மற்றும் இதர வருமான உயர்வு ஆகியவையே அதிக லாபத்திற்கு முக்கிய காரணம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் மன பாய்ச்சலின் மற்றும் பணப் பாய்ச்சலின் அடிப்படையிலேயே நிகழக் கூடிய இந்த 'சூப்பர் பப்புள்' காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய விரும்புவர் சற்று நிதானித்து செயல்படுவது நல்லது. வதந்திகளின் அடிப்படையில் நீண்ட கால முதலீடு செய்ய வேண்டாம். ஊடகங்களின் பரிந்துரைகளை எச்சரிக்கையாக ஆய்வது நல்லது. சொல்லப் போனால், நல்ல விலை வந்தால், குறைந்த விலையில் வாங்கிய பங்குகளை விற்றும் கூட விடலாம்.

மேற்சொன்ன பரிந்துரைகள் முதலீட்டாளர்களுக்கு மட்டும்தான்.

பங்கு வர்த்தகம் செய்பவர்களுக்கு இது பொற்காலம். அதே சமயம் உரிய நகரும் இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டும் வர்த்தகம் செய்யவும்.

இனி வரும் வார சந்தை கணிப்புக்கள்.

இந்தியாவின் அதிக சந்தை மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் நிறுவன காலாண்டு நிதி அறிக்கை சாதகமாக இல்லாதது சந்தைக்கு ஒரு கெட்ட செய்திதான். இந்திய மத்திய வங்கியின் காலாண்டு கொள்கை அறிவிப்பும் சந்தையில் ஒரு தாக்கத்தை உருவாக்கும். வரும் வாரத்தில் நிகழ உள்ள எதிர்கால நிலைகளின் முடிவும் சந்தையில் அதிக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும்

சென்செக்ஸ் 15600 (நிபிட்டி 4600) அருகில் ஒரு பெரிய எதிர்ப்பை சந்திக்கக் கூடும். இந்த நிலைகள் முழுமையாக முறியடிக்கப் பட்டால் மேலே சொன்னது போல ஒரு வெடிப்பு நிலை உருவாக வாய்ப்புள்ளது.

Intra Week (Nifty)

Spot 4568.55
Support1 4367
Support2 4314
Resistance1 4619
Resistance2 4675

Intra Week (Sensex)

Spot 15378.96
Support1 14721
Support2 14616
Resistance1 15531
Resistance2 15699

வரும் வாரம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.

நாணயம் (ரூபாய்), தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் சந்தைகளை பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக்கவும்.

http://dailyrupee.blogspot.com/2009/07/dollars-flooding-markets.html

நன்றி.

Saturday, July 25, 2009

ஹீரோ சூப்பர் ஸ்டார் ஆனால்?


சாதாரண ஹீரோக்கள் ஆக இருப்பவர்கள், அவர்கள் நடித்த சில படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறும் பட்சத்தில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்று விடுகிறார்கள்.

குறிப்பிட்ட சில படங்கள் வெற்றி பெற்றதற்கான உண்மையான காரணங்கள் வேறாக இருந்தாலும், உதாரணமாக நல்ல கதை, திரைக்கதை, இசை மற்றும் இதர தொழிற் நுட்ப விஷயங்கள் காரணங்களாக இருந்தாலும், திரைப்படத்தின் வெற்றிக்கான முழுக்காரணமும் அந்த படங்களின் முக்கிய கதாபாத்திரமான நடிகர்தான் என்ற ஒரு மாயை உருவாகுகிறது.

இந்த மாயை ரசிகர்களுக்கு மட்டுமல்ல, படத்தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் இதர தொழிற் நுட்ப கலைஞர்களுக்கும் கூட ஏற்படுகிறது. விளைவு, ஒட்டு மொத்த ரசிகர்களுக்காக என்று இல்லாமல் குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்களுக்காக (ரசிகர் வட்டம் என்பது கூட ஒரு மாயைதான்) என்று படம் தயாரிக்க முனைகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்கள் கூட, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று துவக்கத்தில் இருந்த ஆர்வங்கள் மாறிப் போய், கமர்ஷியல் ஹிட் படங்கள் செய்ய வேண்டும் என்று விளைகிறார்கள்.

கடைசியில் பாதிக்கப்படுவது யார் தெரியுமா? சந்தேகமே வேண்டாம், திரைப் பட விரும்பிகள்தான்!

வெற்றிப் படங்களுக்கென தனி பார்முலாக்கள் உருவாக்கப் படுகின்றன.

புதிய முயற்சிகள் மங்கிப் போய், வெற்றி பெற்ற வேற்று மொழி படங்கள் ரீமேக் அதுவும் அவசர கதியில் செய்யப் படுகின்றன.

நடிகைகள் உடை அளவு மேலும் சுருக்கப் படுகிறது.

இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் இன்னும் அதிகமாகின்றன.

படம் ரிச்சாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட வெளிநாட்டு லொகேஷன்கள் சேர்க்கப் படுகின்றன.

சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு பல கழுதை வயதானாலும், அவர்களை இளமையாக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதில் சிக்ஸ் பேக், எய்ட் பேக் உடற்பயிற்சிகள், அதிலும் டிஜிட்டல் முறையிலான உடல் தோற்றத்தை மாற்றும் முயற்சிகள் வேறு. முன்னர் நடிகைகள் மட்டுமே அடிக்கடி உடையை கழற்றிக் கொண்டிருந்தார்கள். இப்போது நடிகர்களும் தனது சட்டையை அடிக்கடி கழற்றி வீசுகின்றனர்.

இந்த மாயவலையில் கடைசியாக சிக்கி இருக்கும் நடிகர் அக்ஷய் குமார். நடுத்தர பட்ஜெட் படங்களின் கதாநாயகனாக இருந்தவர் அவர். சிங் இஸ் கிங் போன்ற சில படங்கள் அவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துக்கு உயர்த்தின. சென்ற வருடத்தில், கான்களையும் பச்சன்களையும் ஓரம் கட்டி அதிகமான வருமான வரி செலுத்திய ஹிந்தி நடிகர் இவர்தான் என்று சொல்லப் படுகிறது.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற முதுமொழிக்கேற்ப இப்போது படங்களாக சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார். அதுவும் குங் பூ பாண்டா முதல் நம்மூர் பம்மல் கே சம்பந்தம் வரை மாற்று மொழி படங்களை தேடிக் கண்டுபிடித்து ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்.

ஹாலிவுட் ஸ்டன்ட்மேன், சில்வர்ஷ்டல்லோன் போன்ற நடிகர்கள் மற்றும் பம்மல் சம்பத்தின் கதை என்றெல்லாம் திரை அரங்கிற்கு ஆவலுடன் சென்றால் நம்மை கதி கலங்கடித்து விட்டார்கள். படம் பார்த்த அன்று எங்களுடன் சேர்ந்து மும்பை மொத்தமும் அழுதது. இந்த படம் பார்ப்பதற்காக மும்பை மழையில் இவ்வளவு கஷ்டப் பட்டு கூட்டிக் கொண்டு வர வேண்டுமா என்று மனைவி முறைத்தார்.

கோடம்பாக்கத்திற்கு பதிலாக ஹாலிவுட் லொகேஷனை தேர்வு செய்த இவர்கள் ஹாலிவுட் தரத்திற்கு தேவையில்லை, கோலிவுட் தரத்திற்கு கூட படத்தை எடுக்க முடியவில்லை.

நடிகைகள் ஒண்ணேகால் பீஸ் உடையுடன் வலம் வருகிறார்கள். ஆஞ்சநேயர் பக்தராக வரும் கமல் பாத்திரத்தை தலைகீழாக மாற்றி நாளுக்கு ஒரு பெண்ணை தேர்வு செய்யும் ஒரு காமக் கொடூரன் பாத்திரத்தை (தினம் ஒரு பெண். ஆனால் கட்டை பிரமச்சாரி! கொடுமையடா சாமி!) அக்ஷய் குமாருக்கு கொடுத்திருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஒரு விஷயத்தில் கில்லாடிகள். எப்படியோ தமது படத்திற்கு யு சான்றிதழ் பெற்று விடுகிறார்கள். அரங்கில் பல பெரியவர்கள் திரையை பார்க்காமல் தங்களது குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது.

இன்னொரு விஷயத்தில் கூட இவர்களை பாராட்ட வேண்டும். ஊடகங்களின் ஆதரவும் இவர்களுக்கு பலமாகவே இருக்கிறது. நன்றாகவே கவனித்து விடுவார்கள் போல இருக்கிறது. எப்போது நம்மை வெளியே விடுவார்கள் என்று கவனித்துக் கொண்டே இருந்து, வெளிக் கதவு திறந்ததும், போட்டிப் போட்டுக் கொண்டு மக்கள் வெளியேறும் இது போன்ற படங்களை சூப்பர் ஹிட் படங்கள் என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. இந்த சாதனை (நமக்கு வேதனை) படத்தில் நடித்து பற்றி நடிக நடிகையரின் ஏராளமான பேட்டிகள் தொடர்ந்து வெளியாகின்றன.

"கம்பாக் இஷ்க்" வசூலில் புதிய சாதனைகளை உருவாக்கி இருக்கின்றது என்று ஏராளமான விளம்பரங்களை சென்ற வாரம் பார்த்த நான், நம்மை போல இன்னும் யாரெல்லாம் ஏமாற போகிறார்களோ என்று பெருமூச்சு விட்டேன். (சிவாஜி மற்றும் சிங் இஸ் கிங் படங்கள் விஷயத்தில் இது போன்ற விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.)

மொத்தத்தில் ஒரு ஹீரோ சூப்பர் ஸ்டார் ஆனால் அவருக்கு கோடிகளில் சம்பளம். தயாரிப்பாளர்களுக்கும் திரை உரிமையாளர்களுக்கு பல கோடிகளில் வருமானம். ஆனால் ரசிகர்களுக்கு?

நன்றி.

Wednesday, July 22, 2009

பில்டிங் ஸ்ட்ராங் ஆனா பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு!


பிரபலமான இந்த வசனத்தை பலரும் கேட்டிருப்பீர்கள். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் இங்கே!






















டிஸ்கி: இந்த படங்கள் ஏற்கனவே பதிவுலகில் வெளியிடப் பட்டிருந்தால் பொறுத்துக் கொள்ளவும். மேலும் இந்த படங்கள் உண்மையானவையா அல்லது கிராபிக்ஸ் மட்டும்தானா என்பதை உறுதி படுத்த முடியவில்லை. கான்செப்ட் நன்றாக இருந்ததால் மட்டுமே இங்கு பதிவிடப் பட்டது.

நன்றி.

Tuesday, July 21, 2009

கிளாஸ் டீச்சராகிப் போன கிளிண்டன்!


இன்று காலையில் பார்த்த ஒரு பத்திரிக்கை செய்தி, ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபக்கம் கோபத்தை வரவழைத்தது.

பத்திரிக்கை செய்தி இதுதான்!

மன்மோகன் சிங்கைப் பற்றி ஹில்லாரி கிளிண்டனிடம் அத்வானி கம்ப்ளைன்ட் செய்தார்.

இந்த செய்தி எனக்கு "டீச்சர்! இவன் எனது பல்பத்தை திருடிட்டான்" என்ற ஸ்கூல் ஞாபகத்தை வரவழைத்தது.

அப்படி என்ன குற்றச்சாட்டு என்று பார்ப்போம்.

பல மாதங்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பாகிஸ்தான் அரசுடனான பேச்சுவார்த்தையை (பயங்கரவாதத்தைப் பற்றி வலியுறுத்தாமலேயே) இந்தியா மீண்டும் துவங்க சம்மதித்தது மற்றும் பலுசிஸ்தான் பிரச்சினையில் இந்தியாவிற்கு தொடர்பு இருக்கிறது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டிற்கு வலுவான பதில் அளிக்காதது ஆகியவை.

மேலும் முக்கியமாக, மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானால் தண்டிக்கப் படாத நிலையில் பேச்சு வார்த்தையை புதிப்பிப்பது சரியல்ல என்றும் அத்வானி தெரிவித்திருப்பதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

மேற்சொன்ன குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. அவர் தெரிவித்திருக்க வேண்டிய, ஆனால் தெரிவிக்காமல் போன இன்னொரு குற்றச்சாட்டு, பல வருடங்கள் எதை எதிர்த்து இந்தியா போராடியதோ, அந்த ஒப்பந்தத்திலேயே இந்தியா கையெழுத்திட்டது.

கார்பன் வெளியீடு பற்றிய ஒருதலைபட்சமான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதும், இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக இந்தியா போராடிய போது முக்கிய பணியாற்றிய ஒரு அரசு அதிகாரி வெளிப்படையாக எதிர்ப்பை தெரிவித்ததாக பத்திரிக்கை செய்திகள் வெளியிடப் பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதும் அவசர அவசரமாக பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை துவங்கியதும், அமெரிக்க நிர்பந்தங்களின் அடிப்படையில், முக்கியமாக ஹில்லாரி கிளிண்டனின் வருகையை முன்னிட்டுத்தான், என்பது நாடறிந்த ரகசியம்.

இந்த நிலையில், யார் இதற்கெல்லாம் முக்கிய காரணமோ, அவரிடமே சென்று நம் எதிர்கட்சி தலைவர் முறையிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

அதே சமயத்தில் இந்தியா இறையாண்மை கொண்ட ஒரு சுதந்திர நாடு. இந்திய தலைவர்களின் தவறு குறித்து மக்களிடமோ அல்லது மக்கள் பிரதிநிதி சபையிலோதான் முறையிட வேண்டும். இதை விடுத்து அந்நிய நாட்டிடம் அதுவும் நம்மை ஆட்டிப் படைக்க விரும்பும் ஒரு நாட்டின் பிரதிநிதியிடம் முறையிடுவது என்ன விதத்தில் நியாயம்?

நன்றி.

Monday, July 20, 2009

ரூபாய் வர்த்தகத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள்


ரூபாய் நிலவரத்தை பற்றி புரிந்து கொள்ள, அதன் வர்த்தகத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். ஒரு நாட்டின் நாணயத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

பொருளாதார வளர்ச்சி
பண வீக்கம்
ஏற்றுமதியாளர்கள் மீது அரசுக்கு இருக்கும் அக்கறை
அரசின் நிதிப் பற்றாக்குறை மற்றும் அந்த அரசுக்கு வழங்கப் பட்டுள்ள தர நிர்ணயம்
ஏற்றுமதி-இறக்குமதி வணிக பற்றாக்குறை
பங்கு சந்தைகளில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள்
நாடுகளுக்கிடையே இருக்கும் வட்டி வீத வித்தியாசங்கள்

மேற்சொன்னவை பற்றி இன்னும் விளக்கமாக தெரிந்து கொள்ள கீழே உள்ள வலைதளத்தில் பாருங்கள்.

http://dailyrupee.blogspot.com/2009/07/factors-impacting-rupee-movement.html

நன்றி.

Sunday, July 19, 2009

ரூபாய் நிலவரம்!


பொதுவாகவே பங்கு சந்தைகளை பற்றி விவாதிக்கவும், பங்குகளை பற்றிய தகவல்களை பரிமாறவும் ஏராளமான வலைதளங்கள் உள்ளன. அதே சமயத்தில், ரூபாய் வர்த்தகத்தைப் பற்றி அதிக வலைதளங்கள் இருப்பதாக தெரிய வில்லை. வர்த்தக தொலைக்காட்சிகளில் கூட ரூபாய் பற்றிய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை.

உண்மையில் ரூபாயின் ஏற்ற இறக்கங்கள் பாமரர் முதல் பங்கு சந்தை வரை பலரையும் அதிக அளவில் பாதிக்கின்றன. உதாரணமாக ரூபாய் தன மதிப்பை இழக்கும் பட்சத்தில் பங்கு சந்தையை உச்சிக்கு கொண்டு செல்லும் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியா பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார்கள். அதே போல நலிந்த ரூபாய் இறக்குமதி செலவினத்தை அதிகப் படுத்தி பணவீக்கத்திற்கு வழி வகுத்து விடும்.

அதே சமயம் நலிவடைந்த ரூபாய் வெளிநாட்டில் பணி புரியும் இந்தியர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். காரணம், அவர்களுடைய ரூபாய் மாற்ற அளவு அதிகமாகும்.

ரூபாய் வர்த்தகத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளைப் பற்றியும் ரூபாய் வர்த்தகத்தின் செயல்பாடு பற்றியும் விவாதிப்பதற்காக ஒரு புதிய பதிவு பூவை உருவாக்கியுள்ளேன்.

http://dailyrupee.blogspot.com/

அறிவைத் தேடும் இந்த பயணத்திற்கு உங்கள் துணையையும் வேண்டி நிற்கிறேன்.

நன்றி

அசர வைத்த அதிரடி ஆட்டம்!


பங்கு சந்தை மீண்டுமொருமுறை பலரையும் மூக்கில் விரல் வைக்க செய்திருக்கிறது. பட்ஜெட்டில் பங்கு சந்தையை திருப்தி படுத்துமளவுக்கு ஒரு விஷயமும் இல்லை, இந்திரா காந்தி காலத்திற்கு நாட்டை காங்கிரஸ் எடுத்துச் செல்கிறது என்றெல்லாம் காரணங்கள் சொல்லி ஒரே வாரத்தில் 1500 புள்ளிகள் (சென்செக்ஸ்) வீழ்ந்த சந்தை, அடுத்த வாரத்திலேயே முன் சொன்ன விஷயங்களை எல்லாம் மறந்து விட்டு கிட்டத்தட்ட 1200 புள்ளிகள் வரை உயர்ந்தது.

தேர்தல் முடிவுக்கு அடுத்த நாள் சந்தை ஒரு பெரிய இடைவெளியுடன் துவங்கியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். தொழிற்நுட்ப அடிப்படையின் படி (Technical Analysis) அந்த இடைவெளி நிரப்பப் பட வேண்டும் என்று நம்பிய பல சந்தை தாதாக்கள் பட்ஜெட்டுக்குப் பின்னர் விற்ற பின் வாங்கும் (Shorting) முடிவை எடுத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் விற்பனை எதுவும் இல்லாததால் துண்டை காணோம் துணியை காணோம் என்று அவசரகதியாக தம்முடைய விற்பனை நிலையை (Short Position) சமன் (Short Covering) செய்ததே இந்த அதிரடி மீட்சிக்கு முக்கிய காரணம் ஆகும்.

உலக சந்தைகளின் சாதகமான போக்கும், பாராளுமன்றத்தில் சந்தை உணர்வுகளுக்கு ஆதரவாக நிதி அமைச்சர் உரையாற்றியதும் கூட சந்தைக்கு உதவியாக இருந்தன. அண்ணன்-தம்பி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமான முறையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது, சென்செக்ஸ் மற்றும் நிபிட்டியின் மிகப் பெரிய பங்கான ரிலையன்ஸ் பங்கினை நன்கு உயர்த்தியது.

இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தைகளின் எதிர்பார்ப்பை விட அதிகமாக இருந்தது தகவல் தொழிற்நுட்ப பங்குகளை நன்கு உயர்த்தியது மட்டுமல்லாமல் மற்ற இந்திய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் நன்றாகவே இருக்கும் என்ற புதிய நம்பிக்கையையும் சந்தைக்கு கொடுத்தது.

ஒரு வேடிக்கையான கதை உண்டு. பல ஆண்டுகள் கழித்து இந்தியா வரும் ஒரு வெளிநாட்டுக்காரர் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியையும் செல்வ செழிப்பையும் பார்த்து ஆச்சரியப் படுகிறார். அப்போது அருகில் இருக்கும் அவரது நண்பரை பார்த்து, எப்படி இப்படி பல இந்தியர்கள் வெகு சீக்கிரத்தில் பணக்காரர்கள் ஆகி விட்டனர் என்று வினா எழுப்புகிறார். பங்கு சந்தையில் முதலீடு செய்துதான் இப்படி பலரும் பணக்காரர்கள் ஆகி இருக்கின்றனர் என்று நண்பர் பதில் கூறுகிறார். சரிதான், அப்படியென்றால் விமான நிலையத்தின் வெளியே பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் யார் என்று வெளிநாட்டுக்காரர் கேட்க, அவர்களெல்லாம் விற்ற பின் வாங்கும் நிலை (Short Position) எடுத்தவர்கள் என்று நண்பர் பதிலளிக்கிறார்.

இப்படி விற்ற பின் வாங்கும் நிலை எப்போதுமே அதிக ஆபத்தானது. இந்த முறையும் அந்த நிலை எடுத்தவர்கள் புல்டோசர் கொண்டு நசுக்கப் பட்டிருக்கிறார்கள்.

சரி, இப்போது வருகின்ற வாரத்தின் நிலையை பார்ப்போம்.

சந்தை இப்போது ஒரு முக்கிய எதிர்ப்பு நிலைக்கு வெகு அருகில் உள்ளது. கீழே உள்ள தொழிற்நுட்ப விளக்க வரைபடத்தைப் (Technical Chart) பாருங்கள்.



திங்கட்கிழமை நமது சந்தை ஒரு இடைவெளியுடன் மேலே எழும்பி அந்த உயரத்தை முழுமையாக தக்க வைத்துக் கொண்டால், சந்தை வெகுவாக உயர வாய்ப்பு உள்ளது. மாறாக வீழ்ச்சியுடன் துவங்கினால் மீண்டுமொருமுறை கீழ்நோக்கி பயணம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.

வர்த்தகர்களுக்கான நிலைகள்

Nifty 4374.95
Support - 1 - 4292
Support - 2 - 4202
Resistance - 1 - 4480
Resistance- 2 - 4610

உலக சந்தைகளின் போக்கை, குறிப்பாக பொருட்கள் சந்தைகளின் (கச்சா எண்ணெய் போன்றவை) போக்கை கவனித்து வருவது நல்லது. கச்சா எண்ணெய் பெரிய அளவில் முன்னேறாதது உலக சந்தைகள் பொருளாதார மீட்சியில் அதிக நம்பிக்கை வைக்க வில்லை என்பதையே காட்டுகிறது.

முதலீட்டாளர்கள் இது போன்ற தொழிற்நுட்ப வரைபடத்தைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை. ஏற்கனவே இங்கு பலமுறை சொன்னபடி, ஒவ்வொரு வீழ்ச்சியிலும் நல்ல பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வரவும். அப்படி சேகரிப்பதற்கு சந்தை பல வாய்ப்புக்களை கொடுக்கும்.

வரும் வாரம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.

நன்றி!

Saturday, July 18, 2009

மிதி எனும் நதியின் கதை



ஜூலை 2005, மும்பையில் ஒரே நாளில் 95 செ.மீ மழை. மும்பை வெள்ளக்காடானது. போக்குவரத்து மற்றும் தொழில் ஸ்தம்பித்தது. நூற்றுக் கணக்கானவர்கள் பலியானார்கள் மழை நாள் அன்று நான் பெங்களூரில் இருந்தாலும், மழை நாளுக்கு இரண்டு நாள் கழித்து மும்பைக்கு பணிமாறுதலை முன்னிட்டு விமானத்தில் குடும்பத்துடன் பயணம் செய்கிறேன்.

மும்பைக்கு மதியம் வந்து சேர வேண்டிய விமானம் நடு இரவில் வந்து சேருகிறது. அதுவும் மும்பைக்கு மேலே நடு வானில் பலமுறை வட்டமடித்த பிறகு. விமான ஓடுதளம் பாதிக்கப் பட்டதனால், ஒரே ஒரு ஓடுதளத்தில் அனைத்து விமானங்களும் இயக்கப் படுகின்றன. மூன்று முறை கீழே இறக்க முயற்சி செய்து பின்னர் ஒவ்வொரு முறையும் நேர்குத்தாக விமானத்தை மேல் எழுப்பிய விமானி, "அதிர்ஷ்டவசமாக எதிரே வந்த விமானத்துடன் மோதாமல் தப்பியதாக" அறிவிக்கிறார். அம்மா கந்தசஷ்டி கவசம் சொல்லிக் கொண்டே வருகிறார்.

விமானதளத்துக்கு வெளியே மும்பை, இது வரை பார்த்திராத வண்ணம் வெறிச்சோடிக் கிடக்கிறது. வீட்டுக்கு செல்ல டாக்ஸி கிடைப்பது கடினமாக இருக்கிறது. சாலையின் ஓரத்தில் வாகனங்கள் அநாதாரவாக விடப் பட்டுள்ளன.

அடுத்த நாள், மளிகை சாமானம் வாங்க கலா நகருக்கு சென்றால், அந்த பகுதியினரின் வீட்டு சாமானங்கள் எல்லாம் சாலையில் கிடக்கின்றன. முதல் மாடி உயரம் வரை வெள்ளம் சென்றதாக மக்கள் கூறுகின்றனர் . மளிகை பொருட்கள் முழுதும் முழுகி விட்டதால் ஒரு வித துர்நாற்றம் வீசுகின்றது.

இந்த பேரழிவுக்கு காரணமான மிதி நதியின் கரையோரத்தில்தான் எனது வீடு அமைந்திருக்கிறது. அந்த நதியின் ஊடாக சுனாமி வரப் போகிறது என்ற வதந்தி வேறு. நாங்கள் சில நாட்கள் தொடர்ந்து அந்த நதியையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

தொடர்ந்து சில நாட்கள் மழை விட்டபாடில்லை. தனது வாழ்நாளில் இது போன்ற ஒரு மழையை பார்த்ததில்லை என்று என் தந்தை கூறுகிறார். திரும்பி ஊருக்கு ஒழுங்காக போவோமோ என்று கூட ஒரு சந்தேகம் அவர்களுக்கு.

பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஏகப்பட்ட விமர்சனம். மிதி எனும் ஒரு அற்புதமான நதியின் போக்கை மாற்றி அதை நகரத்தின் வடிகாலாக (நம்மூர் கூவம் மாதிரி) மாற்றியதுதான் இந்த பேரழிவுக்கு காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் அள்ளி வீசப் படுகின்றன. இன்றளவும் இந்த நதி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து சில கி,மீ. நீளத்திற்கு தூய்மையான நதியாக பாய்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

"மிதியை காப்பாற்றுவோம்" என்ற கோஷங்களுடன் மும்பைக்கர்கள் அந்த நதியின் கரையோரமாக ஊர்வலம் போகின்றனர். "மிதியை காப்பாற்றுவோம்" என்ற கோஷங்கள் இட்ட பனியன்கள் பரபரப்பாக விற்பனையாகின்றன. மும்பைக்கர்களின் ஒற்றுமை மற்றும் மீண்டு எழும் திறம் குறித்து அனைத்திந்திய தலைவர்கள் புகழ்கின்றனர். மிதியை சீர்படுத்த மத்திய அரசின் நிதி உதவி கோரப் படுகின்றது. இது உடனடிக் கடமை என்று மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.

சில நாட்கள் கழித்து, என் வீட்டின் அருகே அனைத்து செய்தி தொலைகாட்சி நிறுவனங்களின் வாகனங்களும் நின்றுள்ளன. ஏகப்பட்ட போலீஸ் பாதுகாப்பு. என்னவென்று விசாரித்த போது, மிதியை சீர்படுத்தும் திட்டம், முதல் அமைச்சரால் துவக்கப் படுவதாக தெரிய வருகிறது.

அடுத்த நாள் பத்திரிக்கைகள் முழுக்க இந்த செய்திதான். பல நூறு கோடி முதலீட்டில் உருவான திட்டத்தின் உதவியால் மும்பையின் தேம்ஸ் நதியாக மிதி மாறப் போகிறது என்ற வகையிலான அறிவிப்புக்கள். படகு சவாரி, குழந்தைகளுக்கான பூங்கா மற்றும் தீம் பூங்காக்கள் இன்னும் பலப் பல விஷயங்கள் மிதி நதிக்கு கிடைக்கப் போகிறது என்றெல்லாம் அறிவிப்புக்கள்.

எல்லா அப்பாவி இந்தியர்களைப் போலவே நானும் கனவில் மிதந்தேன். வீட்டுக்கு அருகே இவ்வளவு அருமையான விஷயங்கள் கிடைக்கப் போகிறதே என்றெல்லாம் நினைத்திருந்தேன்.

மிதி தூய்மை அமைப்பு என்ற ஒரு அரசு அமைப்பு உருவாக்கப் படுகிறது. பல தனியார் தொண்டு அமைப்புக்களும் உருவாக்கப் படுகின்றன.

அடுத்த மழை காலத்திற்குள், சொன்னதில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றுவோம் என்றார் முதல் அமைச்சர். சொன்ன படியே, பல பொக்லைன் வண்டிகள் பணியில் அமர்த்தப் பட்டன. பொக்லைன் வண்டிகளின் போக்குவரத்தால், மும்பையில் ஓரளவுக்கு தூய்மையான எங்கள் பகுதி சேறும் சகதியுமாக காணப் படுகிறது. பல இடைஞ்சல்களையும் நாங்கள் பொறுத்துக் கொண்டோம். நாட்டு நலந்தானே முக்கியம்?

மிதியின் ஓரத்தில் அமைந்திருக்கும் எளிய மக்களின் குடியிருப்புக்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதி மன்றம் ஆணை பிறப்பிக்கின்றது. பல நூறு குடும்பங்கள் வீடு இழக்கின்றனர்.

அதே சமயம், இந்த சேறும் சகதியும் கொட்டப் படும் இடம் குறித்து பல சச்சரவுகள் எழுகின்றன. மீண்டும் மிதி பத்திரிக்கைகளின் கவனத்திற்கு வருகிறது. அதன் பிறகு சில நாட்கள் பொக்லைன் வண்டிகள் தென்படவில்லை.

அதன் பிறகு பொக்லைன் வண்டிகள் வேலை செய்தாலும் சகதி இறைந்து காணப் படுவதும் குறைந்து விடுகின்றது.

சில மாதங்கள் கழித்து பார்த்தால், மிதியின் அகலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை உணர முடிகிறது. என்னவென்று பார்த்தால், மிதி நதியின் மீது ஒரு சமாதி எழுப்பி அதனை பிளாட்டுக்களாக மாற்றி வருவதை கண்கூடாக காண முடிகிறது. படகு போக்குவரத்து, குழந்தைகள் பூங்கா எல்லாம், எப்போதும் போல கனவாக முடிந்து விடுகிறது.

யாரிடம் கேள்வி கேட்க முடியும்?

வாக்களித்த மக்களிடம் வாக்குறுதி அளித்த முதல் அமைச்சர், மும்பை தீவிரவாதி தாக்குதலுக்கு பின்னர், முதல்வர் பதவியில் இருந்து சில காலம் ஓய்வு பெற்று பின்னர் மத்திய அமைச்சராகி விட்டாரே?

கடந்த அக்டோபர் மாதம், மிதி தூய்மை திட்டம் கிட்டத்தட்ட நிறைவு பெற்றதாக மாநகராட்சி ஆணையர் அறிவிக்கின்றார். மும்பைக்கர்களுக்கு மிதியால் இனிமேல் பிரச்சினை வராது என்றும் உறுதி அளிக்கின்றார்.

அடுத்த மழைக்காலமும் வருகின்றது.

சென்ற வாரம் மும்பையில் வெறும் பதினைந்து செ,மீ மழை. ஊர் மீண்டும் வெள்ளக்காடாகிறது. மிதியின் அளவு அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாகவும் பல குடும்பங்கள் வீடுகளை இழந்து விட்டதாகவும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்திகள். முன்னாள் முதல்வரின் கனவின் படி பலர் மீண்டுமொருமுறை படகு சவாரி செய்தனர். பல வாகனங்கள் கைவிடப் பட்டன.

இவ்வளவு குறைந்த மழை அளவுக்கெல்லாம் மும்பையில் வெள்ளம் வருகின்றதே என்ற சில முனகல்கள் இங்கும் அங்கும். மும்பையில் கட்டுமானப் பணிகள் அதிகமாகி விட்டதால்தான் இப்படி அடிக்கடி வெள்ளம் வருகின்றது என்று மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

எந்த கட்டுமானப் பணிகள் என்று சொல்லவே இல்லையே சார் என்று மனம் கேட்கின்றது.

நன்றி.

Friday, July 17, 2009

பைபாஸ் பயணம்!


வாழ்க்கை எனும் சாலையில் முறையான பயணம் செய்தாலும் சில சந்தர்ப்பங்களில் நெறிமுறையற்ற சில சக பயணிகளை சந்திக்க நேரிடுகிறது. அதிலும் "மோதிப் பார்த்து விடு" என்ற அறைகூவலுடன் சிலர் நம்மை நேருக்கு நேராக எதிர் கொள்கின்றனர்.

இன்று முற்பகல் கூட, "நீயா நானா என்று பார்த்து விடலாம்" என்று சவால் விடும் வகையில், ஒருவர் முரட்டுத் தனமாக என்னிடம் நடந்து கொண்டார். முதலில் சற்று தணிந்து போனாலும், மோதல் தொடர்கதையாக, அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணமும் மனதில் எழுந்தது.

இன்று காலைதான், என்னுள் வேறுவிதமான சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன. "மக்களை திருத்துகிறேன், கெட்டவர்களை தட்டிக் கேட்கிறேன்" என்று கிளம்பிய பலர் இறுதியில் தாமே தீவிரவாதிகளாகவும் தாதாக்களாகவும் மாறி இருக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்து கொண்டிருந்த எனக்கு இது ஒரு சோதனையாகவே இருந்தது.

அப்போது, நண்பர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இரண்டு நிமிடம் நேரம் இருக்கிறதா என்று கேட்ட அவர், ஒரு பெரிய கதையின் (மகாபாரதம்) சிறிய கிளைக் கதையை கூறினார்.

பாண்டவர்களின் வனவாசம் மற்றும் தலைமறைவு வாசம் முடிகின்ற தருணம் அது. பாண்டவர்கள் வெவ்வேறு வேடத்தில் விராட மன்னனிடம் பணி புரிகின்றனர். அப்போது விராட நாட்டிலுள்ள பசுக்களை கௌரவர்கள் ஓட்டிச் சென்று விடுகின்றனர். பெண் வேடத்தில் இருக்கும் அர்ச்சுனனும் அந்த நாட்டு இளவரசனும் பசுக்களை மீட்டு வருவதற்காக செல்கின்றனர்.

கர்ணன் போன்ற கௌரவ தரப்பினரை வெற்றி கொண்டு மேலும் முன்னேறும் போது, "அர்ச்சுனா! நில்!" என்ற குரல் கேட்கின்றது. திரும்பிப் பார்த்தால் துரோணர். "முடிந்தால், என்னை தோற்கடித்து விட்டு மேலே செல்!" என்று அறை கூவுகிறார் துரோணர்.

பாதியில் கதையை நிறுத்திய நண்பர், "அர்ச்சுனன் இப்போது என்ன செய்தான் தெரியுமா?" என்று கேட்டார்.

பதிலுக்கு, "வேறு என்ன செய்ய முடியும், எதிர்த்து போரிட்டு வென்ற பிறகு மேலே செல்ல வேண்டும்" என்று கூறினேன்.

அதுதான் இல்லை என்று கூறிய நண்பர் மேலே தொடர்ந்தார். "எனது முதல் கடமை மாடுகளை மீட்பதுதான். உங்களுடன் போரிடுவதற்கு இப்போது என்னிடம் நேரம் இல்லை. வேண்டுமென்றால், வைத்துக் கொள்ளுங்கள், சில அம்புகளை, உங்கள் காலடியில்" என்று சொல்லி சில அம்புகளை அவரது காலடியில் பாய்ச்சி விட்டு தனது பயணத்தை மேலே தொடர்கிறான். பதிலுக்கு ஒன்றுமே சொல்ல முடியாமல் வாயடைத்து நிற்கிறார் துரோணர்.

வீரம் என்றால் அர்ச்சுனன். அர்ச்சுனன் என்றால் வீரம். அப்படிப் பட்ட அர்ச்சுனனே கடமை முன்னிற்கும் போது அநாவசிய போரைத் தவிர்த்து முன்னே செல்கிறான். அதே போல வாழ்க்கை பயணத்தில் சில சந்தர்ப்பங்களில் பைபாஸ் வழியாக சென்று விட வேண்டும் என்று இந்த பைபாஸ் தத்துவ கதையை சொன்னவர் மூதறிஞர் ராஜாஜி என்று முடித்தார் என் நண்பர்.

எதிரில் வரும் வாகனம்தானே தவறான போக்கில் வருகிறது என்று எண்ணி பேசாமல் இருந்தால் இருந்தால் நஷ்டம் நமக்கும்தானே.

சரியான திசையில், முறையான வகையில் பயணம் செய்து உரிய நேரத்தில் இலக்கை அடைய வேண்டியது மட்டும்தான் நமது குறிக்கோள். இதற்காக சில சமயங்களில், முரட்டு வேகத்தில் முன்னே வரும் சில வாகனங்களை பொருட்படுத்தாமல் சற்று ஒதுங்கிப் போய், பைபாஸ் பயணம் செய்தால் தவறொன்றும் இல்லையே?

நன்றி.

Sunday, July 5, 2009

அங்கும் இங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?


நாளை வெளியிடப் படவுள்ள மத்திய பட்ஜெட் சந்தைகளைப் பொறுத்த வரை ஒரு மிக முக்கிய நிகழ்வாக கருதப் படுகிறது.

ஏற்கனவே, கடனில் தத்தளிக்கும் மத்திய அரசால் அதிசயம் எதுவும் நிகழ்த்த முடியாமல் போனாலும், நிதி சீர்திருத்தங்களில் அரசின் உறுதிப்பாடு மற்றும் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அரசின் திட்டங்கள் ஆகியவை பங்கு வணிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது.

பெரும்பாலான சந்தை வணிகர்கள் இந்த பட்ஜெட் பல நல்ல விஷயங்களை கொண்டிருக்கும் என்றே நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையின் விளைவாக, சென்ற வாரம் பெரும்பாலான உலக சந்தைகள் வீழ்ந்த போதிலும் நமது சந்தை ஏற்றத்துடனேயே முடிவடைந்தது.

உலக சந்தைகளைப் பொறுத்த வரை, அமெரிக்க பொருளாதாரத்தின் மீட்சி, மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்க படுகிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்தியா போன்ற நாடுகள் தமது வளர்ச்சியை ஓரளவுக்கு தொடர்ந்தாலும் உலக வணிகத்தைப் பொறுத்த வரை இத்தகைய நாடுகளின் பங்கு மிகவும் குறைவானதே. மேலும் இந்தியா போன்ற நாடுகளின் மக்கள் சேமிப்பில் அதிகம் கவனம் செலுத்த அமெரிக்கர்கள் மட்டுமே அதிகப் படியான (சொல்லப் போனால் வரவுக்கு மீறிய்) செலவு செய்து வந்தார்கள். இப்போது அமரிக்காவிலும் சேமிப்புப் பழக்கம் அதிகமானது உலக சந்தைகளை எமாற்றத்துக்குள் உள்ளாக்கியது. மேலும் அமெரிக்காவில் நிகழும் ஏராளமான வேலை இழப்புக்கள், அமெரிக்கர்களின் தேவையை குறைத்து விடும் என்ற அச்சத்தையும் உருவாக்கி உள்ளது. எனவே, சென்ற வாரம் பெரும்பாலான உலக சந்தைகள் வீழ்ச்சிக்கு உள்ளாகின. கச்சா எண்ணெய் விலை பெருமளவில் சரிந்தது. உற்பத்தி உலோக சந்தைகளும் பங்கு சந்தைகளும் கூட ஓரளவு வீழ்ச்சியை சந்தித்தன.

யூரோ மற்றும் பவுண்ட் கரன்சிகள் டாலருக்கு எதிராக வீழ்ச்சியை சந்திக்க இந்திய ரூபாயோ, பட்ஜெட் எதிர்பார்ப்புக்களின் காரணமாக, முன்னேற்றத்தை கண்டது. அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் மீள்வரவும் இந்திய சந்தைகளுக்கு உற்சாகத்தை தந்தது.

தொழிற்நுட்ப ரீதியாக இந்திய சந்தை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு வேளை, உள்ளபடியாகவே பட்ஜெட் பல அதிசயங்களை உள்ளடக்கியதாக இருந்தாலோ (வாய்ப்பு குறைவு) அல்லது ஊடகத்தினரும் பங்கு பெருச்சாளிகளும் பட்ஜெட்டை, பெரிய அளவில் கொண்டாடினாலோ (வாய்ப்பு அதிகம்) சந்தைகள் ஒரு புதிய வரம்பை எட்ட வாய்ப்பு உள்ளது. சென்செக்ஸ் 15500 (நிபிட்டி 4700) புள்ளிகளை முழுமையாக முறியடித்தால் சந்தைகள் நன்கு உயரவும் வாய்ப்பு உள்ளது.

இந்த இரண்டும் நிகழா விட்டால், ஏதோ சாக்கு போக்கு சொல்லி சந்தை சற்று உயர்ந்தாலும், லாப விற்பனை காரணமாக சரியவும் வாய்ப்பு உள்ளது. நிபிட்டியின் அரண் நிலை 4200 புள்ளிகளுக்கு அருகில் இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை, இந்தியப் பொருளாதாரம் இன்னும் சில வருடங்களுக்கு (பருவமழை ஏமாற்றாத பட்சத்தில்)சிறப்பாகவே இருக்கும் என்றாலும், பங்கு சந்தை அந்த முன்னேற்றத்தை எந்த அளவுக்கு பிரதி பலிக்கும் என்பது கேள்விக் குறிதான். உதாரணமாக, எல்.ஐ சி, பி.எஸ்.என்.எல், போன்ற நாட்டின் அதி முக்கிய நிறுவனங்களின் பங்குகள் நமது சந்தைகளில் வர்த்தகமாவதில்லை. இன்னொரு உதாரணம், உலகிலுள்ள எண்ணெய் நிறுவனங்களின் சராசரி மதிப்பை விட ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது அதிக விலையில் வர்த்தகமாகி வருகிறது. என்னதான் ரிலையன்ஸ் நிறுவனம் அரசாங்கத்தில் அதிக செல்வாக்கு பெற்று விளங்கினாலும், அதனால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை சற்று ஓவர்தான் என்றே தோன்றுகிறது. இப்படி இந்திய பொருளாதாரத்தை பங்கு சந்தை சரியாக பிரதி பலிக்காத நிலையும், மற்ற உலக நிறுவனங்களை விட இந்திய நிறுவனங்கள் சற்று ஓவராகவே மதிப்பிடப் படுவதும் சந்தையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல.

எனவே பட்ஜெட்டுக்குப் பின்னர் சந்தை ஜெட் வேகத்தில் பறந்தால் முதலீட்டாளர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏற்கனவே சொன்ன படி, சந்தைக்கு புதிதாக வரக் கூடிய அரசு நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்தவும். சந்தை ஊகங்களை நம்பி பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். எப்போதும் போல ஒவ்வொரு சரிவின் போதும், சிறிய அளவில், நன்கு செயல்படும் நிறுவனங்களின் பங்குகளை சேகரித்து வரவும்.

வரும் வாரம் சிறப்பானதாக இருக்க வாழ்த்துக்கள்.

நன்றி.

Friday, July 3, 2009

அன்புள்ள அமெரிக்கா!


உனது பிறந்த நாள் வந்து விட்டது.!

ஆனால் இதை உனது மண்ணின் பிறந்த நாள் என்று சொல்ல முடியாது. அந்த மண்ணின் மைந்தர்களின் உரிமை நாள் என்றும் கூட கூற முடியாது. குடியேற வந்து ஏற்கனவே குடியிருந்தவர்களை மண்ணோடு மண்ணாக்கிய பின்னர், தமது சொந்த தாய்நாட்டின் தொப்புள் கொடி அறுத்த நாள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

முதல் முறையாக மக்களின் உரிமைகளுக்கு மரியாதை கொடுத்த நாடு நீ. மன்னர்களின் அதிகாரம் முடிந்து பிரபுக்களின் ஆதிக்கத்தை முடித்து மக்கள் கையில் அதிகாரம் கொடுத்த நாடு நீ.

ஜனநாயகம் கூட சுரண்டல் நாயகம் ஆகலாம் என்ற பிரிட்டிஷ் பேரரசை உதாரணமாக கொண்டு, அரசுக்குக் கூட மக்கள் உரிமைகளை பறிக்கும் அதிகாரம் இல்லை என்று சட்டமாக கொண்டு வந்த நாடு நீ.

வாழ்வும் தாழ்வும் எல்லாம் மக்கள் கையில் என்று, அரசாங்கத்தின் கையை சுருக்கி, மக்களிடமே பொறுப்பு அனைத்தையும் கொடுத்த நாடு நீ.

சந்தை பொருளாதாரத்தின் தாய் நீ. உழைப்பு எங்கேயோ இருக்க, தொழிற் நுட்பம் எங்கேயோ இருக்க சந்தைகளை மட்டுமே உன்னகத்தே கொண்டு உலகின் பொருளாதாரத்தையே உன்னை நம்பி இருக்க செய்தாய்.

கிழக்கு மனதை வளர்க்க முயல மேற்கின் சிகரமாகிய நீ பணத்தை வளர்க்க முயற்சி செய்தாய். உன்னுடைய ஆசை பேராசையாக உலகையே உனது பணம் கறக்கும் இயந்திரமாக மாற்ற முயன்றாய்!

பேராசை போராசையாக மாற புதியதொரு காலனி கலாச்சாரத்தையே உருவாக்கினாய்.

உன் பேராசைக்கும் போராசைக்கும் இன்று எத்தனை உயிர்கள் பலி என்பதை பார்த்தாயா?

வியட்நாம் முதல் ஈராக் வரை எத்தனை போர்கள்? மடிந்தது எத்தனைப் பேர்கள்? உடல் காயத்தை விட மனக்காயத்தால் துடிப்பவர்கள் எத்தனை பேர்?

உலகின் நாணயத்தையே உருவாகிய உன்னிடம் நாணயம் மட்டும் இல்லையே, ஏன்?

பாலஸ்தீனம் முதல் ஆப்கானிஸ்தான் வரை அடுத்த நாட்டு மக்களை பகடைக் காய்களாக மட்டுமே பார்ப்பதை நீ எப்போது நிறுத்தப் போகிறாய்?

நீ உருவாக்கிய ஒசாமாக்கள் இன்று உலகிற்கே அச்சுறுத்தலாக இருப்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்?

உன் மக்கள் உனக்கு பொன் குஞ்சுகள்தான்! அவர்கள் வளமாகவே வாழட்டும்!

ஆனால் அவர்களுக்கான உணவு எங்கள் வயிற்றில் இல்லை என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.

இந்த சுதந்திர நாளில் உன்னை மனமார வாழ்த்துகிறேன்!

பல்லாண்டு நீடூழி வாழ்க!

அதே சமயம் இன்னொன்றும் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.

வாழு! வாழ விடு!

இதுவே உனது பிறந்த நாளின் எனது கோரிக்கையாக இருக்கும்.

என்னுடையது மட்டுமல்ல இந்த கோரிக்கை. இந்த உலகின் பல கோடி மக்களின் கோரிக்கையும் அதுவாகத்தான் இருக்கும்.

நிறைவேற்றுவாயா?

நன்றி.

Thursday, July 2, 2009

அப்பா எங்கே?


அப்பா! என்று அழைத்தேன். ஆனால், உதடுகள் பிரிந்தாலும் வார்த்தைகள் வெளியேற வில்லை. அப்பா இப்படி இருந்து இத்தனை வருடங்களாக ஒரு போதும் பார்த்ததில்லை. உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் அப்பா எப்படி இருக்கிறார் என்று பல வருடங்கள் வரை கண்டு கொண்டதே இல்லை.

பெருசு, கிணற்றுத் தவளை என்றெல்லாம் கேலி பேசிய காலங்கள் கூட உண்டு. அப்போதெல்லாம், அப்பா கூறுவார், "உனக்கு நாற்பது வயதாகும் போதுதான் ஒரு தந்தையின் மனநிலை புரிய வரும்", என்று. ஆனால் கால ஓட்டத்தின் வேகம் ஒரு தந்தையின் மனநிலையை முப்பது வயதிலேயே ஓரளவுக்காவது உணர்த்தி விட்டது.

"என்ன அப்பா! வேலைக்கு போகலையா?" என்று கேட்டேன்.

"நான் எப்பவுமே பிசி" என்ற விளம்பர வாசகங்கள் அப்பாவிற்கு நிறையவே பொருந்தும். மிகச் சிறிய வயதிலேயே வேலைக்கு செல்ல ஆரம்பித்த அவர், அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட தனியார் வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார். பொருளாதார நிர்பந்தங்கள் எதுவும் இல்லையென்றாலும், தொழில் மீது இருக்கும் ஆர்வம் மற்றும் சோம்பி இருக்கக் கூடாது என்ற மனப் பாங்கு அவரை ஓய்வுக்குப் பின்னரும் வேலைக்கு செல்ல உந்தி வந்திருக்கிறது.

வீட்டில் நடந்த முக்கிய விசேஷங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் கூட அவர் வீடு தங்கியதில்லை. வீட்டில் இருந்தாலும் எப்போதும் எங்களை விரட்டிக் கொண்டேதான் இருப்பார். காலையில் தாமதமாக எழுந்தால் அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. விடுமுறை என்றாலே நிறைய தூங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எங்களுக்கு அவர் விடுப்பு நாட்களில் வேலைக்கு சென்றால் சந்தோசமாகவே இருக்கும். அவரது விடுமுறை நாட்களில் கூட ஏதாவது ஊர் வேலையாக சுற்றிக் கொண்டே இருப்பார்.

"இல்லப்பா! ரொம்ப டயர்டாக இருக்கிறது. ஒரு வாரம் லீவு போட்டு விட்டேன்" என்று பதில் வந்தது அப்பாவிடமிருந்து.

இது கூட கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது எனக்கு. சில மணி நேரம் பயணம் செய்தாலே "இவ்வளவு நேரம் ரெஸ்ட் எடுக்க வேண்டும்" என்று கணக்கு போட்டு ரெஸ்ட் எடுக்கும் மகன் இருக்க, இந்த வயதிலும் காசி முதல் ராமேஸ்வரம் வரை தொடர்ந்து ரயில் பயணம் செய்த பிறகும் அடுத்த நாளே வேலைக்குப் போனவர் எனது தந்தை. இப்படி அடுத்த நாளே வேலைக்குப் போனார் என்று கேள்விப் பட்டவுடன் நான் டயர்டாகி ரெஸ்ட் எடுத்துக் கொண்டது தனிக் கதை.

"நன்றாகத்தான் இருந்தார். திடிரென்று இப்படி ஆகி விட்டது" என்றார் எனது அப்பா.

அவர் என்னிடம் பேசுகிறாரா இல்லை தனக்குத்தானே பேசிக் கொள்கிறாரா என்று எனக்கு புரியாததால் பதில் எதுவும் நான் சொல்ல வில்லை.

அப்பாவின் நெருங்கிய நண்பர் வேலாயுதம், அப்பாவை விட பல வருடங்கள் வயதில் மூத்தவர் என்றாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் நல்ல நண்பர்களாக இருவரும் பழகி வந்தனர். அவரும் கூட அப்பாவைப் போலவே கடுமையான உழைப்பாளி. நேற்று அதிகாலையில் திடீரென்று காலமாகி விட்டார்.

எவ்வளவோ வாழ்வியல் தத்துவங்களை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த எனது தந்தையை நான் என்ன சொல்லி தேற்றுவது என்று எனக்கு புரிய வில்லை.

செத்த பிணத்தைப் பார்த்து வாழும் பிணங்கள் அழுகின்றன என்று சித்தர்கள் எளிதில் சொல்லி விட்டு போய் விட்டாலும் நடைமுறையில் மனிதர்களுக்கு இழப்பு என்பது ஒரு மிகப் பெரிய துன்பமாகவே இருக்கிறது. துன்பம் என்பது செத்த பிணத்திற்க்காக வருவதா இல்லை தானும் ஒரு வாழும் பிணம்தான் என்ற உணர்வு வருவதாலா என்று புரியவில்லை.

எதுவும் சொல்லத் தெரியாமல், "சரி! கிளம்புகிறேன்!' என்று இரண்டு வார்த்தை மட்டும் பேசி விட்டு சொந்த ஊரை விட்டு வந்த ஊருக்கு திரும்பி விட்டேன். வழி முழுக்க ஒரே சிந்தனை, அப்பாவை என்ன சொல்லி தேற்றுவது என்று.

நான் படித்த மேலாண்மை மற்றும் உளவியல் தத்துவங்களை எல்லாம் மீண்டும் ஒருமுறை மனக்கண் கொண்டு வர முயற்சி செய்தேன். ஆனால், அப்பாவை இப்படி பார்த்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் சிந்தனைகள் மேலெழ அனுமதிக்க வில்லை

மறுநாள் காலை எழுந்தவுடன், வீட்டுக்கு போன் செய்தேன். அம்மாதான் போனை எடுத்தார். "அப்பா எங்கே?" என்று கேட்டேன். "அவரா? காலையிலேயே எழுந்து வேலைக்குப் போய் விட்டாரே? " என்று கூறினார்.

மனது கொஞ்சம் லேசானது போல இருந்தது.

நன்றி.

Wednesday, July 1, 2009

முளிச்சுக்கிட்டாங்கையா! முளிச்சிக்கிட்டாங்க!


முன்னரே எழுதப் பட்ட ஒரு கதையின் பின்கதை சுருக்கம் இது. ஏற்கனவே அந்த கதையை படித்தவர்கள் நேராக பின்கதை சுருக்கத்திற்கு சென்று விடுங்கள். படிக்காதவர்கள் கதையை ஒரு முறை படித்து விட்டு பின்கதை சுருக்கத்திற்கு செல்லுங்கள்.

ஆரு வூட்டு சொத்துக்கு ஆருங்க அடுச்சுக்கிரது?

''சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில், எனது சொந்த (ஊரின் பேச்சு) நடையில் ஒரு கற்பனையான சிறு (தொடர்?) கதை இங்கே. சரியாக புரிந்து கொள்வது உங்கள் பாடு.

ஒரே ஒரு ஊரிலே (பரதம் பட்டின்னு வச்சிக்கோங்களேன்) ஒரு ஜகதலப் பிரதாபன் இருந்தாராம். அவரோட பேரு குரு அண்ணாத்தே-வாம். பழய பாலிஸ்டர் துணி வியாபாரியா பொழப்ப ஆரம்பிச்ச அவரு ஊரிலே பாதிய வளைச்சுப் போட்டுகிட்டாராம். அவருக்கு ரண்டு பசங்க இருந்தாங்களாம். ஒருத்தன் பேரு மகேஷுஅண்ணாத்தே . இன்னொருத்தன் பேரு சுநிலு அண்ணாத்தே. ரெண்டு பேரும் அப்பாவ விட அதிபுத்திசாலிங்கலாம்.

அந்த ஊரிலே கடுமையான நல்ல தண்ணி பஞ்சமாம். குடிக்கற தண்ணிய காசு கொடுத்து பக்கத்து ஊரிலே இருந்து வாங்க வேண்டியிருந்துச்சாம். ஒரு நாளு, ஊரு ஜனங்கெல்லாம் ஒண்ணா சேந்து, ஒரு முடிவு பண்ணாங்களாம். ஊருக்கு கிளக்கு பாத்த மாதிரி இருக்க தெங்காட்டிலே ஊருக்கு சொந்தமான ஒரு இடத்திலே நல்ல தண்ணி நெறைய கிடைக்குதுன்னு ரொம்ப படிச்சவங்க சொல்றாங்க. அதனால அங்க ஊருக்கு பொதுவா ஒரு பெரிய கிணறு வெட்டலாம்னு. அப்புறம் நம்ம தண்ணி கஷ்டமெல்லாம் தீந்து போயிடும். பக்கத்து ஊரிலே இருந்து குடிக்கற தண்ணிய காசு போட்டு வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது. இதுக்கு அந்த தெங்காட்ட ஓட்டிகிட்டிருந்த தெலுங்கு பேசற கிட்டன நாயக்கரும் கூட ஒத்துக்கிட்டாராம்

நல்ல யோசனயத்தான் இருக்குது, சரி, யாருகிட்ட கிணறு வெட்டற பொறுப்பு கொடுக்கலாமுன்னு பஞ்சாயத்து போர்ட்காரங்க யோசிச்சாங்களாம். அப்ப, துணி வியாபாரத்திலே இருந்து தண்ணி வியாபாரம் வர எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்த குரு அண்ணாத்தே என்ன என்னமோ பண்ணி எப்படியோ இந்த பொறுப்ப ஏத்துகிட்டாராம். "ஊரிலே பணம் வச்சிருக்கவன் எல்லாம் கொஞ்சம் முதல் போடுங்க . கிணறு வெட்டற மிசுனு நான் கொண்டாரன். ஊரு ஜனங்கக்கிட்ட தண்ணிக்கின்னு கொஞ்சம ஜாஸ்தி வரி போட்டு மிசுனுக்கான மான்யமா எனக்கு கொடுத்துடுங்க. இங்க இருக்க மக்களெல்லாம் கொஞ்சம கிணத்து வேலைலே கூட மாட ஒத்தாச பண்ணாப் போதும் வேல சுளுவா சீக்கிறமா முடுஞ்சு போயிடும். கிடைக்கிர தண்ணியிலே ஊருக்கேல்லாம் தண்ணி கொடுத்து முடுஞ்சதும் மிச்ச தண்ணிய மட்டும் என் வியாபாரத்துக்கு யூஸ் பண்ணிகறேன்" னு பஞ்சாயத்துல ஒரு அக்ரிமேண்டு போட்டுகிட்டாராம். போனா போவுது மிச்சத் தண்ணியதானே கேக்கிராருனு மக்களும் ஒத்துகிட்டாங்கலாம்.

கிணத்துல தண்ணி வரதுக்கு முன்னாடியே பெரிய அண்ணாத்தே மண்டைய போட்டுட்டாராம். அவரோட சொத்து முழுக்க பெரியவன் எடுத்துகிட்டானாம். தம்பிக்கு நாமம் போட்டுட்டானாம். தம்பியும் லேசுப்பட்ட ஆளு இல்ல. அம்மாவப் பிடிச்சு ஆடடய போட்டு வேற உள்ளூரு கச்சிகாரங்களப் பிடிச்சு இன்னும் என்னெனவோ பண்ணி அவனுக்குன்னு கொஞ்சம சொத்தப் பிரிச்சிக்கிட்டானாம். அங்க சுத்தி இங்க சுத்தி கடசியா கிணத்துல வந்து நின்னானாம்.

ஒரு கிணத்த எப்படி ரண்டா பிரிக்கறது? ஒரு நிமிஷம், இது ஊரு கிணருன்னு கூட அவங்களுக்கு மறந்துப் போச்சாம். அவங்க சொந்த கிணருன்னே நினசுக்கிட்டாங்கலாம். அவங்க அம்மா முன்னாடி ரண்டு பேரும் ஒரு கிணத்துத் தண்ணிய எப்படி ரண்டா பிரிக்கிரதுன்னு ஒரு குடும்ப அக்ரிமேண்டு போட்டுகிட்டாங்கலாம். அந்த ஊரு மக்களுக்கு ஒண்ணுமே புரியலயாம். எது எப்படியோ நமக்கு குடிக்கற தண்ணி கிடச்சா போதும் கம்னு இருந்தாங்களாம்.

அண்ணன்காரன் தண்ணிய சுத்தம் பண்ற ஒரு பாக்டரி (அதாங்க நம்ம பிஸ்லேரி தண்ணி மாதிரி) ஒன்னு கட்டிபுட்டானாம். தம்பிக்காரன் ஒரு கூல்ட்ரிங் கம்பெனி கட்டிபுட்டானாம். சும்மா சொல்லக் கூடாதுங்க. ரெண்டு பேரும் கில்லாடி பசங்க. அவஅவன் தொழில் ஆராம்பிச்சு வியாபாரம் நல்லா நடந்தாத்தான் நாலு காசு பாக்க முடியும். இவனுங்க பிசினெஸ் சந்தைக்கு வரும் முன்னாடியே என்னெனமோ செஞ்சு ஒருத்தன் பொண்டாட்டிக்கு பெரிய பாரின் கார் வாங்கிட்டான். இன்னொருத்தன் கிடெச்ச பணத்துல மெட்ராசு போயி பெரிய பெரிய ட்ய்ரெக்டர வச்சு படம் புடிக்க ஆரம்பிச்சுட்டான்.

ஊரு நல்ல நேரமா, மகேஷு சுநிலு நல்ல நேரமா தெரிலே. அந்த கிணத்துலே அந்த ஊருக்கு மட்டுமில்லே பக்கத்து ஊருக்கும் போதும் போதுங்கற அளவுக்கு தண்ணி ஊத்து வந்திடுச்சாம். அந்த ஊரு ஜனங்களுக்கெல்லாம் ஒரே சந்தோசமாம். நம்ம கஷ்டமெல்லாம் தீந்து போச்சுன்னு நினச்சிருந்தாங்கலாம்

அப்பனு பாத்து ரண்டு அண்ணன்தம்பியும் அடுச்சுகிட்டாங்கலாம். கிணத்துல வர தண்ணி யாருக்கு சொந்தமின்னு. ரண்டு பேரும் குடும்ப அக்ரிமன்ட எடுத்துக்குட்டு டவுனு கோர்ட்டுக்கு போயிட்டாங்களாம். கிணத்துல தண்ணி வீணா பாழாப் போகுதாம். பஞ்சாயத்து போர்டுகாரங்களுக்கு கூட ஒண்ணுமே புரியலயாம். இவ்வளவு கஷ்டப்பட்டு சொந்த கிணத்துல தண்ணி வந்த பின்னாடி கூட குடிக்கிற தண்ணிக்கு வளியில்லாம இன்னும் பக்கத்து ஊருக்காரங்கக் கிட்ட அந்த ஊரு ஜனங்க நல்ல தண்ணி விலைக்கு வாங்கிட்டு இருக்காங்களாம். கிட்டன நாயக்கரு பண்ணிக்கிட்டு இருந்த விவசாயமும் நின்னுப் போச்சாம்.

அந்த ஊருல ஒரே ஒருத்தனுக்கு மட்டும் ரொம்ப நாளா சந்தேகமாம்.

நெலம் ஊரோடது. உளுதுட்டு இருந்த நெலத்த கொடுத்தவரு தெலுங்கு பேசற கிட்டன நாயக்கரு. முதலுல முக்காவாசி போட்டது அந்த ஊரு பெரிய தலைங்க. தண்ணி வரி கட்டணது ஜனங்க. அத மானியமா கொடுத்தது பஞ்சாயத்து போர்டு. கிணத்த வெட்ட ஒத்தாச பண்ணது மறுபடியும் அந்த பாளாப் போன ஜனங்க. இவங்கள்ளெல்லாம் உட்டுப்புட்டு உரிமை கொண்டாடறது ரெண்டு அண்ணன்தம்பிங்க.

ஆரு வூட்டு சொத்துக்கு ஆருங்க அடுச்சுக்கிரதுன்னுதான் அந்த சந்தேகமாம்"


பின்கதை சுருக்கம்.


அண்ணன் தம்பி அடிதடி, அண்ணனுக்கு சாதகமான நாட்டாமை தீர்ப்பு இதெல்லாம் எதுமே தெரியாம நிம்மதியா தூங்கிக்கிட்டு இருந்தாங்களாம் அந்த ஊரு பஞ்சாயத்து தலைங்க. திடீருன்னு ஒரு நாளைக்கு கண்முழிச்சி எழுந்து,

"கிணறு ஊருக்குத்தானே சொந்தம்? இவங்களுக்கு தண்ணி எடுக்கற காண்ட்ராக்ட் மட்டும்தானே கொடுத்திருக்கு? இவங்க எப்படி தன்னோட சொந்த சொத்து மாதிரி நினச்சுகிட்டு குடும்ப அக்ரீமென்ட் எல்லாம் போட்டுக்க முடியும்?"

அந்த ஒரே ஒருத்தனுக்கு ஒரு புதிய சந்தேகமாம். பெருசுங்க தூக்க கலக்கத்துல பேசறாங்களா? இல்ல உண்மையாவே முளிச்சுக்கிட்டாங்களா? இவங்க கொஞ்சம் கஜினி மாதிரி இல்லயா ? (அதுதாங்க குறைந்த நேர ஞாபக மறதி!). முளிச்சிட்டாங்கன்னு சந்தோசப் பட்டு முடிக்கரத்துக்குள்ளேயே முளிச்ச்சவங்க மறுபடியும் தூங்க போயிடுவாங்களா?

செய்தி இங்கே:

Govt may take action against RIL on KG gas

The government is contemplating penal action against Reliance Industries (RIL) for committing 28 million standard cubic meters of gas per day (mmscmd) from its KG basin block to Reliance Natural Resources (RNRL) at a price of $2.34 per million British thermal units (mmBtu) as part of the Ambani family settlement without the permission of the government. ( Watch )

“RIL is merely a contractor for the KG basin block (D-6) and not the owner. Two promoters (read Mukesh Ambani and Anil Ambani) can’t divide a national property between themselves without the government’s approval. The matter is being examined,” a senior official in the know told ET, requesting anonymity.
Blog Widget by LinkWithin