Skip to main content

புத்தாண்டு தினத்தின் பலன்கள்

பொதுவாக புத்தாண்டு பலன்கள் என்று சொல்லும் போது, அடுத்து வருகின்ற புதிய ஆண்டு மொத்தத்திற்கான பலன்கள் என்பதையே குறிப்பது வழக்கம். ஆனால் புத்தாண்டு தினத்திற்கென்றே சில பலன்கள் அதாவது சில நன்மைகள் உண்டு தெரியுமா?

இந்தியா போன்ற பல்வேறு மதம், மொழி, இனத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் ஒரு பெரிய நாட்டில் பல புத்தாண்டு தினங்கள் வருவதுண்டு. தமிழ் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, விஷூ (மலையாளம்), யுகாதி (கன்னட மற்றும் தெலுங்கு), குடி படவா (மராத்தி), பார்சி புத்தாண்டு, கிருஷ்ணா பக்ஷா (ராஜஸ்தான்), முகரம் (இஸ்லாமியர்) என்று பல புத்தாண்டுகள் இங்குண்டு. அதே போல சில பண்டிகைகள் கூட புத்தாண்டு நாட்களாக கருதப் படுவதுண்டு. உதாரணம் பொங்கல் மற்றும் தீபாவளி (மறுநாள்) போன்றவை. அரசு தரப்பிலும் சில வருட முறைகள் பின்பற்றப் படுகின்றன. உதாரணம் சக ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு போன்றவை.

எங்களைப் போன்ற நிதித் துறைகளில் உள்ளவர்களுக்கும் வேறு வேறு நாட்களில் புதிய ஆண்டுகள் பிறப்பதுண்டு. இந்தியாவில், ஏப்ரல் ஒன்று. ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் ஜூலை ஒன்று. அமெரிக்க போன்ற சில நாடுகளில் அக்டோபர் ஒன்று. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அறிவியல்ரீதியாக புத்தாண்டு நாட்களில் பூமியிலும், விண்வெளியிலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. பூமி எப்போதும் போல தன்னைத் தானே சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. சூரியனும் எல்லா நாட்களைப் போலவே கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது. பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்ட பாதையில் எது ஆரம்பம் எது முடிவு என்று யாராலும் சொல்ல முடியாது. இந்த நாளில்தான் உலகம் தோன்றியது என்றோ இந்த நாளில் தான் இயக்கம் துவங்கியது என்றோ அறிவியல் ரீதியாக அறுதியிட்டு எந்த நாளையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

பின் எதற்கு இத்தனை புத்தாண்டு தினங்கள்?

இந்தியாவில் வருடம் முழுதுமே புத்தாண்டுகள்தான் என்று வேடிக்கையாக சொல்லும் ஒரு குஜராத் நண்பியுடன் இது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவர் கூறிய ஒரு கருத்து.

"பொதுவான புத்தாண்டு தினங்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு நல்வாய்ப்பினை அளிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மதம்/இனம்/ மொழியினரின் புத்தாண்டுகள் மேலும் ஒரு கூடுதல் வாய்ப்பினை அளிக்கின்றன. அன்றைய தினம் நாம் அவருக்கு வாழ்த்து சொல்லும் போது அவருக்கு தனி சந்தோஷம் உருவாகிறது. அந்த வாழ்த்தில் அவருக்கும் அவர் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் நாம் வழங்கும் தனித்துவ மரியாதையும் வெளிப்படுகிறது. "

இது புத்தாண்டு தினத்தின் முதல் பலன்.

நம் நாட்டில் பல புத்தாண்டு தினங்கள் பெரிய அளவில் பண்டிகைகளாகவே கொண்டாடப் படுகின்றன. இந்த கொண்டாட்டங்கள் நமக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தருகின்றன.

இது இரண்டாவது பலன்.

இன்னொரு முக்கிய பலன் என்னவென்பதை இந்த நிதி புத்தாண்டில் நான் எனது சொந்த அனுபவத்தில் கற்றுக் கொண்டேன்.

நம் அனைவருக்கும் தெரியும். சென்ற நிதி ஆண்டில் சந்தைகளின் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது என்று. ஒரே பாதை அதுவும் சரிவுப் பாதையிலேயே சந்தைகள் சென்ற வருடம் முழுதும் பயணித்து வந்தன. நஷ்டங்கள், இழப்புக்கள், முதலீடுகளின் சந்தை மதிப்பு விழுதல், ஏன் முதலீடு செய்தோம் அல்லது ஏன் முதலிலேயே விற்க வில்லை என்பது போன்ற தன்னிலை விளக்கங்கள் என்று ஒவ்வொரு நாளும் பல்வேறு சோதனைகளை தந்த சென்ற நிதி ஆண்டு பலரும் மறக்க விரும்புகின்ற ஒரு கறுப்பு வருடமாகவே இருந்தது. தொடர்ந்து பல வருடங்கள் லாபங்களை மட்டுமே பார்த்து வந்த நிதித் துறை இந்த நிதி ஆண்டு ஒரு தலைகீழ் மாற்றத்தைக் கண்டது என்றால் மிகையாகாது. இந்த நிலை வேறு பல தொழிற் துறைகளிலும், வியாபாரங்களிலும் கூட இருந்து வந்தது. ஒரு வழியாக சென்ற நிதி ஆண்டு முடிந்தது ஒருவித நிம்மதி பெருமூச்சையே வரவழைத்தது.

புதிய நிதி ஆண்டிற்கான லாப இலக்குகள் நிர்ணயிப்பதற்காக நிதி புத்தாண்டு தினத்தன்று எங்கள் மேலதிகாரியுடன் ஒரு விவாதம் நடந்த போது நான் சொன்னது.

"ஐயா! சென்ற நிதி ஆண்டு முடிவடைந்து விட்டது என்பதே ஒரு பெரிய மன நிம்மதியைத் தருகிறது. சுமப்பதற்கு பழைய பாரங்கள் ஒன்றுமில்லை என்ற விடுதலை உணர்வு ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது. இந்த வருடத்தை புதிதாக சிறப்பாக ஆரம்பிப்போம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை"

புத்தாண்டின் பலன்களிலேயே, மிக முக்கியமாக நான் இதைத்தான் கருதுகிறேன். நம்முடைய பழைய தவறுகளை திருத்திக் கொள்ளவும், மன பாரங்களை கழற்றி விடவும், குறிப்பாக நம்மை நாமே மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளவும் புத்தாண்டு தினம் நமக்கு ஒரு பெரிய வாய்ப்பைக் கொடுக்கிறது.

எனவே ஒவ்வொரு புத்தாண்டையும் ஒரு புதிய வாய்ப்பாக கருதி புத்துணர்ச்சி கொள்வோம்.

இந்த நிதியாண்டு (2009-10) எல்லா தொழிற் துறை மற்றும் வணிகத் துறைகளுக்கும் ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்திற்கும் சிறந்த ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம்.

அனைவருக்கும் நிதி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றி.

Comments

பழயன கழித்து
புதியதை மகிழ்வுடன் ஏற்போம்!
Maximum India said…
நன்றி வால்பையன்
KARTHIK said…
// நம்முடைய பழைய தவறுகளை திருத்திக் கொள்ளவும், மன பாரங்களை கழற்றி விடவும், குறிப்பாக நம்மை நாமே மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளவும் புத்தாண்டு தினம் நமக்கு ஒரு பெரிய வாய்ப்பைக் கொடுக்கிறது.//

சரிதான் நல்லது நடந்தால் சரிதான்.
Maximum India said…
நன்றி கார்த்திக்.

இந்த வருடம் நல்லதாக இருக்கட்டும்.
MCX Gold Silver said…
சார் ஒரு சின்ன வேண்டுகோள்.பங்குசந்தையைப் பற்றி எழுதும்பொழுது டெக்னிக்கல் வரைபடத்துடன் எழுதுங்களேன்.


நன்றி
Maximum India said…
//சார் ஒரு சின்ன வேண்டுகோள்.பங்குசந்தையைப் பற்றி எழுதும்பொழுது டெக்னிக்கல் வரைபடத்துடன் எழுதுங்களேன்.//

அடுத்த முறை முயற்சிக்கிறேன் dg

நன்றி.

Popular posts from this blog

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே. NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகி...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...