Skip to main content

ஐபிஎல்'லும் ஆஸ்கார் விருதும்!

நமது கிரிக்கெட் வீரர்கள் உலக கோப்பை போட்டிகளில் சொதப்பி விட்டதற்கு அளவுக்கதிமான ஐபிஎல் கொண்டாட்டங்கள்தான் காரணம் என்றும் (எனவே) ஐபிஎல் போட்டிகளை குறைக்க வேண்டும் என்றும் ஏராளமான கண்டனக்குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த கண்டனக் குரல்களை எழுப்புபவர்கள் பெரும்பாலும் முந்தைய உலகக் கோப்பை போட்டிகளில் சொதப்பிய முன்னாள் வீரர்கள் மற்றும் தமது டிஆர்பி ரேட்டிங்குகளை அதிகரிக்க வேண்டி நேற்று வரை ஐபிஎல் துதி பாடிய தொலைக்காட்சிகளும்தான் என்பது குறிப்பிட தக்கது.

சராசரி கிரிக்கெட் ரசிகர்களின் சார்பாக நான் இவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இங்கே.

நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் போன்றவர்கள் நடித்த படங்களில் பல இங்கே சக்கைப் போடு போட்டிருக்கின்றன. ஆனால் இவர்கள் இதுவரை ஆஸ்கார் விருது ஏன் வாங்க வில்லை என்று யாராவது கேள்வி கேட்கின்றனரா? யாரும் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் அனைவருக்கும் தெரியும். "அதுவேறு, இது வேறு" என்று. அதே போலத்தான், ஐபிஎல்'லும் ஐசிசி கிரிக்கெட்டும்.

உள்ளூரில் விலை போகும் சரக்குகள் வெளியூரிலும் விலை போகத்தான் வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

ஐபிஎல் வெற்றிக்கு முக்கிய காரணம், இந்தியாவின் முக்கிய பொழுது போக்கு அம்சங்களான கிரிக்கெட் மற்றும் பாலிவுட்டின் கூட்டணிதான். கவர்ச்சி, திரில், ஆட்டம்-பாட்டம் அனைத்தும் கூடிய ஐபிஎல் இந்தியர்களிடம் எளிதில் விலை போனது ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம்தான்.

உலகக் கோப்பை எல்லாம் "ஆஸ்கார்" போல. ஏதோ சில நாடுகளின் அணிகள் போட்டா போட்டிப் போட்டுக் கொண்டு சில வருடங்களுக்கு ஒரு முறை விளையாடுவது. அதைப் பற்றியெல்லாம் இந்திய ரசிகர்கள் கவலைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு தேவையானது எல்லாம், "நிறைய மசாலா". அதை ஐபிஎல் நிறையவே தருகின்றது.

இந்திய திரைப்படங்கள் ஆஸ்கார் அளவுக்கு உயர வேண்டும் என்று சில உலக நாயகர்கள் (?) (அவ்வப்போது) சொல்லிக் கொண்டே மசாலா படங்களை தயாரிப்பது போல, நாமும், இந்திய அணி உலக தரத்துக்கு உயர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே அடுத்த ஐபிஎல் போட்டிகளை "என்ஜாய்" செய்வதற்காக ஆவலுடன் காத்திருப்போம்.

சூனா பூனா! போ! போ! போயிட்டே இரு!

நன்றி!

Comments

உண்மையான நடைமுறையை சொல்லி இருக்கிறீர்கள். மீடியாக்கள் அரசியல்வாதிகளை விட பயங்கரமானவை. ஒருவரை தூக்கி மறுநாளே கீழே போட்டு மிதிக்கும் இவைகளை நாடு நடப்பை தெரிந்து கொள்ள உதவும் சாதனமாக மட்டுமே பார்க்க வேண்டும். இரு பக்கமும் பேசி நம் சிண்டை பிய்த்து கொள்ள விடுவார்கள். இந்தியாவில் கிரிக்கெட் ஒரு போதை. அரசு டாஸ்மாக்கை திறந்து சம்பாதிப்பதை போன்று கிரிக்கெட்டில் பல கும்பல் சம்பாதிக்கின்றன. இந்த நேரத்தில் ஆனந்தையும் அஸ்லான் ஷா கோப்பையும் நமக்கு மறந்து போனதே. விளித்து கொள்ளுங்கள். விஜய் படம் பார்த்தால் நாமும் சூபறப்பு என்று விசில் அடிக்க வேண்டும் . அதை விட்டு இல்லாத கதை, தரம் என கண்டதை பேசக்கொடது. அதே போல கிரிக்கெட். எனக்கு ஏதோ நம் வீரர்களை விட வேஸ்ட் இண்டீஸ் கருப்பு சியர் கேர்ள்ஸ் நன்றாக ஆடினார்கள் போல் தோன்றியது..அட போங்க ஏதோ மேட்ச் பார்த்தோம் . என்ஜாய் பண்ணினோம் என்று போய்டே இருக்க வேண்டியதுதானே.
Maximum India said…
நன்றி பொதுஜனம்!

Popular posts from this blog

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

முத்தான மூன்று பாதைகளில் முதல் பாதை - புத்திசாலிகளின் பாதை

பங்குச்சந்தையில் வெற்றிகரமாக பயணிக்க மூன்று பாதைகள் உண்டு. அந்த மூன்று பாதைகளில் முதல் பாதையை பற்றிய மேலோட்டமான விபரங்கள் இங்கே வழங்கப் படுகின்றன. வாரன் பபெட், டெம்ப்லெட்டான் போன்ற, மிகப் பெரிய சாதனை படைத்த புத்திசாலிகள் தேர்ந்தெடுத்த பாதை இது. இந்த பாதையில் பயணம் செய்ய வேண்டுமானால், பங்குசந்தைகள் பற்றி மட்டுமல்ல பங்கினை சார்ந்த நிறுவனத்தைப் பற்றியும் அதன் துறையைப் பற்றியும் ஓரளவுக்கு நல்ல ஞானம் இருக்க வேண்டும். வாரன் பபெட் ஒரு முறை தனது பங்கு தேர்வைப் பற்றி சொல்லும் போது, தான் ஒரு பங்கில் முதலீடு செய்யும் போது, அந்த நிறுவனத்தின் தொழிலில் முதலீடு செய்வது போல உணர்வதாக கூறினார். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இரண்டு சக்கர வாகன நிறுவன பங்கில் (உதாரணமாக ஹீரோ ஹோண்டா) முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில், லாப நஷ்டங்களில் நீங்களும் பங்கு பெறுகிறீர்கள் என்று பொருள். ஒரு நிறுவனத்தின் உரிமைதாரர் நீங்கள் ஆக வேண்டுமானால், அந்த நிறுவனத்தின் பலங்கள் மற்றும் பலவீனங்கள், வாகனத்துறையில் தற்போது உள்ள சாதக பாதகங்கள், அந்த நிறுவனத்திற்கான தனித்துவ மகிமைகள் ஆகியவற்றை பற்றிய...