Friday, December 31, 2010

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


நண்பர்களே!

வரும் வருடம் அனைவருக்கும் மிகச்சிறந்த ஆண்டாக அமையட்டும்!

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நன்றி!

Saturday, December 18, 2010

ஒரு அரசியல்வாதியின் புலம்பல் !


இது கலிகாலம். பலரும் பார்த்து பெருமூச்சு விடும் அரசியல்வாதிகளையும் இந்த கலிகாலம் விட்டு வைப்பதில்லை.

கர்நாடகத்தில் இப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்தலில், ஒரு பெரிய கட்சியின் சார்பில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் போட்டியிட முனைந்து, பின்னர் போட்டியில் இருந்து விலகி கொண்ட ஒரு உள்ளூர் அரசியல் தலையுடன் பேச இன்று ஒரு வாய்ப்பு கிடைத்தது. வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள வலிமையான கட்சியில் கிடைத்த வாய்ப்பிலிருந்து ஏன் விலகி கொண்டீர்கள் என்று நான் அவரிடம் வினவினேன். அதற்கு அவர் ஒரு பெரிய புலம்பலை பதிலாக தந்தார்.

"எங்கே சார்! நாற்பது நாற்பத்தைந்து லட்சங்களை இந்த தேர்தலுக்காக விட வேண்டியிருக்கும். ஆனால் போட்ட முதலை திருப்பி எடுப்பது இப்போதெல்லாம் ரொம்பவே கஷ்டமாகி விட்டது. நூறு நாள் வேலை திட்டத்தில் இப்போதெல்லாம் ஆன்லைன் கிரெடிட் செய்து விடுகிறார்கள். மாவட்ட அளவிலான சிறிய பணிகளுக்காக இப்போதெல்லாம் அதிக பணத்தை ஒதுக்குவதில்லை. பெரிய தொழிலதிபர்கள் பெரிய இடத்தில் நேரடியாக காண்டக்ட் வைத்துக் கொண்டு மொத்த காண்டிராக்ட்களை பெற்றுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் அரசியல் செய்வது ரொம்ப கஷ்டம் ஆகி விட்டது சார். "

சிறிது நேர மௌனத்திற்கு பின்னர், அந்த ஒரு லட்சம் கோடியை எப்படித்தான் அடித்திருப்பார்கள் சார் என்று ஒருவித ஏக்கத்துடன் கேட்ட அவரை பார்க்க கொஞ்சம் பரிதாபமாகவே இருந்தது.

முதல் பத்தியிலேயே சொன்னபடி பலரையும் புலம்ப விடும் அரசியல்வாதிகளையும் கூட புலம்ப வைக்கும் அளவுக்கு இப்போது காலம் கெட்டுப் போய் விட்டது.

நன்றி!

இந்தியாவின் வண்ணங்களும் ராகுல் காந்தியின் எண்ணங்களும்!


முகரம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடகத்தின் வடபகுதியில் உள்ள எனது அலுவலகத்தில் இந்த வாரம் பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டனர். அங்குள்ள ஒரு தமிழ் நண்பரிடம் இது பற்றி விவாதிக்கும் போது, அவருடைய தொழிற்சாலையில் கூட பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும், இந்த பகுதியில் முகரம் வெகு விசேஷமாக கொண்டாடப் படுவதாகவும் கூறினார். முகரத்தை ஒரு இஸ்லாமிய திருநாளாக மட்டுமே அறிந்திருந்த நான், "முஸ்லிம்கள் மட்டும் விடுப்பு எடுத்திருந்தால் கூட பரவாயில்லை, பல இந்து ஊழியர்களும் கூட முகரத்தை முன்னிட்டு விடுப்பு எடுத்துக் கொண்டது ஆச்சரியமாக உள்ளது" என்று அவரிடம் வினவினேன். அதிலும் ஒரு இந்து பெண் ஊழியர், தீபாவளிக்கு ஊருக்கு போவதை விட முகரத்திற்கு சொந்த ஊருக்கு போவது மிகவும் முக்கியம் என்று என்னிடம் விடுமுறைக்காக மன்றாடியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்ததாக கூறினேன். அதற்கு அவர், இந்த பகுதியில் முகரம் இந்துக்களால் மிக விசேஷமாக கொண்டாடப் படுகிறதாக கூறினார். முகரத்தின் போது தீமிதிப்பது, பூ தேங்காய் பழங்களுடன் மசூதிக்கு சென்று வழி படுவது போன்ற பழக்கங்கள் உண்டு என்று வேறு சில உள்ளூர் நண்பர்களும் கூறினர். வரும் ஞாயிற்றுக் கிழமையன்று தவறாமல் தர்காவிற்கு வந்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இன்று தினமலர் வலைதளத்தில் வந்த ஒரு செய்தி, இது ஏதோ இந்தியாவின் ஒரு பகுதியில் மட்டும் நடக்கும் அபூர்வமான நிகழ்வு அல்ல என்பதை சுட்டிக் காட்டியது. மேலும் இது போன்ற மத இணக்க நிகழ்வுகள் இந்தியாவில் ஏராளம் என்பதை ஒவ்வொரு இந்தியனும் தனது வாழ்வில் ஏதாவது ஒரு வகையில் உணர்ந்திருப்பான். உடல் நிலை பாதிப்புகளின் போது மசூதிக்கு சென்று தாயத்து கட்டுவதும் மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவதும் இந்தியாவில் தினந்தோறும் பார்க்கக் கூடிய மிகவும் சகஜமான நிகழ்வுகள் ஆகும்.

இந்த நிலையில் இந்தியாவின் வருங்கால பிரதமராக வர்ணிக்கப்படும் ராகுல் காந்தி இந்தியாவில் உள்ள நிற தீவிரவாதத்தை பற்றிய அமெரிக்க தூதரிடம் அடித்த கமன்ட்டுக்களை விகிலீக்ஸ் வழியாக அறிய நேரிட்டது.

அவரிடம் சொல்ல விரும்புவது இதுதான்.

"பலதரப்பட்ட வண்ணங்களை விரும்புவர்கள் இந்தியர்கள்.

அவர்களின் விருப்பத்திற்குரிய பலதரப்பட்ட வண்ணங்களிலும், எதை தின்றால் பித்தம் தீரும் என்று அன்றாட சமூக பொருளாதார சிக்கல்களில் அவதிப்படும் சாதாரண இந்தியர்களின் எண்ணங்களிலும் ஒருபோதும் தீவிரவாதத்திற்கு இடம் இருந்தததில்லை.

தீவிரவாதம் வாழ்வதும் வளர்வதும், எப்போதும் ஒட்டுக் கணக்கு போடும், நிமிடத்திற்கு நிமிடம் பல வண்ணங்களை மாற்றும் பச்சோந்தி அரசியல்வாதிகளின் எண்ணங்களில்தான்!

தீவிரவாதத்தின் வீரியம் ஒருபோதும் குறையாமல் பார்த்துக் கொள்வது, நீங்கள் கமன்ட் அடித்த அமெரிக்கா போன்ற மேலாண்மைவாதிகள்தான்.

முதலில் சாதாரண இந்தியர்களை போல எல்லா வண்ணங்களையும் இயல்பாக நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

உங்கள் எண்ணங்கள் தானாக மாறிப்போகும்."

நன்றி!
Blog Widget by LinkWithin