Sunday, April 26, 2009

ஆடு புலி ஆட்டம்!


சென்ற வாரம், உலக சந்தைகள் ஓரளவுக்கு நிதானித்த போதிலும், நமது சந்தைகள் தமது வெற்றி நடையை ஏழாவது வாரமாக தொடர்ந்தன. இறக்கம் வரும் என்று காத்திருந்தவர்கள் ஏமாந்து போனதுதான் மிச்சம். முதல் மூன்று நாட்கள் சற்று தடுமாறினாலும், கடைசி இரண்டு நாட்களில் சந்தையின் முக்கிய குறியீடுகள் வலுவான எதிர்ப்பு அரண்களை முறியடித்து பெருமளவு முன்னேறி உள்ளன. அதே சமயம் முதல் மூன்று நாட்களில் இதுகாறும் பெருமளவு முன்னேறிய சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் லாப விற்பனை காரணமாக வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத் தக்கது.

ஏற்கனவே சொன்ன படி, உலக சந்தைகள் சென்ற வாரம் பெரும்பாலும் வீழ்ச்சியையே சந்தித்தன. ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் சீனா குறியீடுகள் இரண்டு சதவீதத்திற்கும் மேல் வீழ்ந்தன. பொதுவாகவே இந்த சந்தைகளுடன் ஒன்றாகவே இதுகாறும் பயணித்து வந்த நமது சந்தை இந்த வாரம் ஒரு மாறுதலாக தனித்து முன்னேற்றத்தைக் கண்டது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும்.

சென்ற வாரம் இந்திய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி வீதங்களை (Repo and Reverse Repo Rates) 0௦.25% குறைத்தது. மேலும் வரும் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் (GDP Growth) ஆறு சதவீதமாக இருக்கும் என்ற மத்திய வங்கியின் கணிப்பும் நிதி சந்தையில் பணத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளப் படும் என்ற உறுதிமொழியும் சந்தைகளை மகிழ்ச்சி கொள்ள செய்தன.

சென்ற வாரம் வெளியிடப் பட்ட ரிலையன்ஸ் நிதி அறிக்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. லாப விகிதம் குறைந்து காணப் பட்டது. இருந்தாலும் கிருஷ்ணா-கோதாவரி படுகை எரிவாயு உற்பத்தி வருங்காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பெருத்த வருவாயை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சந்தை ஏற்றத்தையே கண்டது.

இறக்குமதியாகும் உருக்குக்கு மத்திய அரசு வரி விதித்ததை தொடர்ந்து உலோகத்துறை குறிப்பாக உருக்குத் துறை பங்குகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டன. மென்பொருட் துறை பங்குகளும் கூட சென்ற வாரம் நல்ல வளர்ச்சியைக் கண்டன. டிஎல்எப் நிறுவனம் டெல்லி புகுதியில் தனது அடுக்குமாடி குடியிருப்பை முழுமையாக விற்றது என்ற செய்தி கண்டு ரியல் எஸ்டேட் பங்குகள் நன்கு வளர்ச்சியைக் கண்டன.

பணவீக்க விகிதம் (WPI Inflation Rate) சற்று உயர்ந்து ௦0.26% அளவை எட்டியது.

வரும் வாரத்தில் ஒரு சுவாரஸ்யமான காளை - கரடி மோதல் காத்திருக்கிறது என்று நினைக்கிறேன். வாக்குப் பதிவு மற்றும் மகாராஷ்ட்ரா தினம் ஆகியவற்றை முன்னிட்டு இரண்டு நாட்கள் விடுப்பு வருவதால், மூன்று நாட்கள் மட்டுமே சந்தை வர்த்தக நாட்கள். இதில் கடைசி நாள் "எதிர்கால வர்த்தக" நிறைவு நாள் (F&O Settlement Day) வேறு. எனவே வரும் வாரம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்று நினைக்கிறேன். "எதிர்கால வர்த்தக சமன் செய்யும்" (Squaring of F&O Open Positions) போக்கினால் சந்தையில் ஏற்றத்தாழ்வு (Volatality) அதிகம் காணப் படும். வர்த்தகர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கீழே உள்ள படத்தில் உள்ளபடி சந்தையின் முக்கிய குறியீடுகள் தமது எதிர்ப்பு நிலைகளான 200-நாட்கள் நகரும் சராசரி அளவை (200-Day Moving Average) வெற்றிகரமாக முழுமையாக முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி சந்தையின் தன்னம்பிக்கையை பெருமளவு உயர்த்தி உள்ளது. வரும் வார துவக்கம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் சென்செக்ஸ் குறியீட்டின் அடுத்த இலக்கு 11800 மற்றும் 12500 அளவுகளாக இருக்கும். அரண் 10900 மற்றும் 10700 அளவுகளுக்கு அருகாமையில் இருக்கும். வர்த்தகர்கள் இந்த அளவுகளில் தகுந்த இழப்பு நிறுத்தத்தை (Strict Stop Loss Limits) அமைத்துக் கொள்ளலாம். மேலும் அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகளின் போக்கை தொடர்வதும் நல்லது.




அதே போல நிபிட்டி குறியீட்டின் அடுத்த இலக்குகள் 3600 மற்றும் 3800 புள்ளிகள் ஆக இருக்கும். அதே போல வலுவான அரண் 3350 மற்றும் 3140 புள்ளிகள் அளவில் இருக்கும்.

வர்த்தகம் செய்ய வீடியோகான் பங்கு ஏற்றது என்று நினைக்கிறேன். இப்போது 122 அளவில் உள்ள இந்த பங்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 850 அளவையும் தாண்டியது. கீழே 82 அளவில் விழுந்தும் உள்ளது. இப்போது முக்கிய எதிர்ப்பு நிலைகளை முறியடித்துள்ள இந்த பங்கு 143 வரை உயர வாய்ப்பு உள்ளது. கீழே 110 அளவில் இழப்பு நிறுத்தத்தை (Strict Stop Loss Limit) அமைத்துக் கொள்ளலாம்.

ரூபாய் வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஐம்பதிற்கு கீழேயே இருக்கும் பட்சத்தில் நமது சந்தைகளின் போக்கு வலுவாக இருக்கும். ஐம்பதிற்கு மேல் உயர்ந்தால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

பின்குறிப்பு: இந்த பதிவு தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. சந்தை முதலீடுகள் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டவை. முதலீடுகள் தனது சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.

Saturday, April 25, 2009

பதிய விரும்பியதும் தவறிப் போனதும்


கிட்டத்தட்ட ஓரிரு நாட்களுக்கு ஒருமுறையேனும் புதிய பதிவுகளை பார்க்க முடியும் இந்த வலைப் பூவில் சென்ற வாரம் முழுக்க எந்த ஒரு புதிய பதிவினையும் இட சந்தர்ப்பம் வாய்க்க வில்லை. சில நண்பர்கள் தொலைபேசி வாயிலாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் என்னை தொடர்பு கொண்டு நலம் கூட விசாரித்தனர். அவர்களுக்கு என் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது கணினியில் ஏற்பட்ட சிறிய தொழிற்நுட்ப கோளாறு, அதிகப் படியான பணி நிர்பந்தங்கள், சில சொந்த வேலைகள், சில மன மாற்றங்கள் ஆகியவையே மேற்சொன்னவாறு பதிவுகள் இட முடியாமைக்கு முக்கிய காரணங்கள். இருந்த போதும், பதிவுக்கான சில "பொருள்கள்" எனது மனதில் ஊஞ்சலாடிக் கொண்டே இருந்தன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த வார துவக்கத்தில், இரண்டு நாட்கள் கிட்டத்தட்ட முழுமையாக பணி நிமித்தமாக தாஜ் மகால் பேலஸ் ஹோட்டலில் (சமீபத்திய மும்பை தாக்குதலில் பாதிக்கப் பட்டது) நான் இருக்க நேரிட்டது. 'அரண்மனை' என்ற பெயருக்கு ஏற்றபடி நாம் ஏதோ "அரண்மனையில்தான்" தங்கி இருக்கிறோமோ என்ற பிரமிப்பை உருவாக்கும் வகையில் பாரம்பரியமும் கலை நேர்த்தியும் ஒருங்கே கொண்ட இந்த 'ஹோட்டல் தாஜ்' தீவிரவாதிகளால் தாக்கப் பட்ட இடம் என்ற அடையாளம் துளியும் இல்லாதவாறு பிரமாதமாக புனரமைக்கப் பட்டிருந்ததும் முன்னைப் போலவே வெளிநாட்டு பயணிகளை பெருமளவு அங்கே பார்க்க முடிந்ததும் மிகுந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கூட இருந்த ஒரு நண்பர் கூறினார். "தாஜ் ஹோட்டல் என்றால் சும்மா இல்லை. இந்தியாவின் பெருமை. யாரோ சில வன்னெஞ்ச மூடர்கள் தாக்கினார்கள் என்பதற்காக நாம் அப்படியே விட்டு விட முடியாது. இந்தியர்களின் தாங்கும் திறனையும் மீண்டெழும் தன்மையும் உலகிற்கு பறை சாற்றுவதே முன்னெப்போதும் போல ஜொலிக்கும் இந்த தாஜ் ஹோட்டல்"

இரண்டாவதாக மனதைப் பாதித்த ஒரு பெரிய விஷயம். ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் அவர்களால் ஈழத்தமிழர் படும் பாடும் பற்றி வெளியிடப் பட்ட தகவல்கள். உலகில் இது எங்கு நடந்திருந்தாலும் எந்த இனத்தவர் மீதும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப் பட்டிருந்தாலும் மனம் பதறும் குணமுடைய நமது தேசம், தனது காலருகே இத்தகைய கொடுமைகள் நடந்து கொண்டிருந்தும் கண்டும் காணாமல் போல இருப்பது மனதிற்கு பெரிய அளவில் வேதனையை ஏற்படுத்தியது. தூர தேசங்களாக இருந்தாலும் பாலஸ்தீனிய போராட்டத்திற்கும் தென் ஆப்பிரிக்க நிறவெறி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெரும் இயக்கங்களை நடத்திய நாடு இந்தியா என்பதை மறக்க முடியாது.

காட்டாட்சி நடக்குமொரு நாட்டை இன்னொரு நாடு, இறையாண்மை உள்ள நாடு என்று சொல்வதெல்லாம் விதண்டாவாதங்கள். அமெரிக்காவால் இஸ்ரேலியர்களுக்கு ஒரு புதிய நாடு உருவாக்கித் தர முடிந்தது. ஜெர்மனி உடைக்கப் பட்டு மீண்டும் ஓட்ட வைக்கப் பட்டது. கொரியா பிரிக்கப் பட்டது. தானே ஒரு ஏழை நாடாக இருந்த போதும் கூட இந்தியாவால் ஒரு பங்களாதேசத்தை உருவாக்க முடிந்தது. சீனா ஒரு பலமான நாடாக இருந்தாலும் இன்னும் கூட தைவான் சுதந்திரமாகவே சுற்றித் திரிகிறது. ஹாங்காங் நேற்று வரை தனி ஆட்சி பகுதியாகவே இருந்தது. இன்றும் கூட திபெத்திற்கு ஆதரவு தரும் இந்தியர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். மேற்சொன்ன சரித்திரத்தை எழுதிய மை இன்னும் காய்ந்து கூட போய் இருக்காது.

ஒவ்வொரு நாளும் பத்திரிக்கையைப் பிரித்தால் இன்று இத்தனை பேர் இறந்தார்கள் என்று பார்க்கும் போதெல்லாம் மனம் துடி துடிக்கும். காலையிலேயே மனம் துவண்டு போய் விடும். சரித்திரத்தின் கொடுங்கோலனாக கருதப் படும் ஹிட்லர் கூட இத்தனை பேரை கொன்று குவித்திருக்க மாட்டார். இவ்வளவு கொடுமைகள் செய்திருக்க மாட்டார். சரித்திரத்தில் மட்டுமே படித்துள்ள இது போன்ற இனப் படுகொலைக்கு இன்று நாமே ஒரு சாட்சியாக உள்ளோமே என்பது ஒருவித குற்ற உணர்வை ஏற்படுத்தியது. தமிழன் என்பதனால் மட்டுமல்ல. எந்த ஒரு இனம் இப்படி அழிக்கப் பட்டாலும் மனசாட்சி உள்ள ஒரு மனிதனால் பொறுத்துக் கொள்ள முடியாது.

இன்றோ நாளையோ, ஒரு வேளை, விடுதலை புலிகள் முற்றிலும் அழிக்கப் பட்டாலும், பிரபாகரனே ஒரு வேளை கொல்லப்பட்டாலும், ஈழத்தில் சிங்களர்களால் உருவாக்கப் பட்டுள்ள ரணங்கள் ஆறாது. போரினால் சமாதானம் உருவாகியதாக சரித்திரங்கள் சொல்வதில்லை. மீண்டும் மீண்டும் புதிய விதைகள் முளைக்கும். இன்று ஈழத்தில் சிங்களர்கள் பற்ற வைத்துள்ள தீ ஒரு நாள் அவர்களையும் சுட்டெரிக்கும்.

மூன்றாவதாக நாம் வாழுமிடத்திற்கு மிக அருகே இவ்வாறு பூண்டோடு அழிக்கப் படும் தம் தொப்புள் கொடி உறவுகளை காப்பாற்ற முனையாமல் ஏதேனும் சாக்குப் போக்கு சொல்லித் திரியும் தமிழக அரசியல்வாதிகள். தமிழரை விட பதவியே பெரிது, தமிழரை விட ஒரு குடும்பத்தின் கண்ணசைவே பெரியது என்றெல்லாம் ஒற்றுமையில்லாமல் தம் இனத்தையே காட்டிக் கொடுக்கும் ----கள். (நீங்களே எப்படி வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளுங்கள்). பெயருக்கு கடையடைப்பு போராட்டங்களை நடத்தி வீட்டு தமது சொந்த தொலைக்காட்சிகளில் சிறப்பு திரைப் படங்களை நிரப்பும் ----கள். இது பற்றி நமது வால்பையன் கூட ஒரு பதிவினை இட்டிருந்தார்.

நான்காவதாக பிரியங்கா செய்த ஒரு காமெடி. அமேதி தொகுதியில் பெருவாரியாக வந்து வாக்களிக்க வேண்டுமென்று மக்களை தான் கோரியிருந்த போதிலும் குறைவான அளவே மக்கள் வாக்களித்தது தன்னை இரண்டு நாட்கள் தூங்க விடாமல் செய்தது என்று பேட்டியளித்திருந்தார். பதவி கிடைத்தவுடன் தங்கள் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடும் அரசியல்வாதிகள் மக்கள் மட்டும் மாறாமல் தமக்கே வாக்களிக்க வேண்டுமென்று அதுவும் அலை அலையாக வந்து வாக்களிக்க வேண்டுமென்று விரும்புவது வேடிக்கையாக இருக்கிறது அல்லவா?

இந்தியா சுதந்திரம் அடைந்தற்கு எத்தனையோ மகா புருஷர்கள் காரணம் என்றாலும் சுதந்திரத்திற்காக எத்தனையோ தியாகிகள் தங்கள் உயிர் உடமை அனைத்தையும் இழந்தனர் என்றாலும் அத்தனைப் பெருமையும் சுமக்க முடியாமல் தனியாக சுமந்து கொண்டு கஷ்டப் படும் இந்த நேரு-காந்தி குடும்பம்தான் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிகப் பெரும்பாலான காலம் ஆட்சியில் (முன்னாலிருந்தோ அல்லது பின்னாலிருந்தோ) இருந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது, இந்தியாவின் அறுபது ஆண்டு கால அவல நிலைக்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்? நிலைமை இப்படி இருக்க இந்திய மக்கள் என்றென்றும் தங்களுக்கு கடமைப் பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

ஐந்தாவதாக தனிப்பட்ட முறையிலான மிகவும் வேடிக்கையான ஒரு அனுபவம். என்னை ஏமாற்ற முயன்று இறுதியில் தானே ஏமாந்து போனவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு வாழ்க்கைப் பாடம். பகிர்ந்து கொள்ள விரும்பும் சில கருத்துக்கள்.

" சிலரை சில நாட்கள் ஏமாற்றலாம் பலரை பலநாட்கள் ஏமாற்றலாம். ஆனால் எல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

பொய் சில தற்காலிக வெற்றிகளை கொடுக்கும். ஆனால் முடிவில் பெரும் தோல்வியை கொடுக்கும்.

உண்மையில் உண்மையாக இருப்பதே எளிதான ஒன்று. பொய்யாக வாழ்வது மிகவும் கடிமான ஒன்று.

பொய் முகம் நிறைய முகமூடிகளை அணிய வேண்டியிருக்கும். உண்மைக்கு ஒரிஜினல் முகமே போதுமானது.

எனவே எளிதான நிறைவான வாழ்விற்கு தேர்ந்தெடுப்போம் உண்மையை"

நன்றி.

Sunday, April 19, 2009

காலம் மாறி விட்டதா?


தொடர்ந்து ஆறாவது வாரமாக இந்திய பங்குச் சந்தை வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது. விடா நம்பிக்கையாளர்களால் கூட நம்ப முடியாத இந்த காளை ஓட்டம் (Bull Run), சரித்திரம் இதுவரை கண்ட மீட்சி முன்னேற்றங்களிலேயே (Relief Rally) மிகவும் வலுவானதாகவும் வேகமானதாகவும் கருதப் படுகிறது. இந்த ஓட்டம் தொடருமா? விழுந்து கிடக்கும் கரடி மீண்டும் எழுந்திருக்குமா? காளை ஓட்டம் தடைபடுமா?

இந்தியாவில் தொடரும் விடுமுறைகளால் கூட காளை ஓட்டத்தை கட்டுப் படுத்த முடியவில்லை. சென்ற வாரம் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் வர்த்தக விடுமுறையாக இருந்தாலும், மீதம் உள்ள நாட்களில் சந்தை வெகுவாக முன்னேற்றம் கண்டது.

இன்போசிஸ் நிறுவனம் சென்ற காலாண்டில் சந்தையின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி வருவாய் மற்றும் லாப முன்னேற்றம் கண்டிருந்தாலும், வருங்காலத்திற்கான வருவாய் மற்றும் லாபக் கணிப்பு (Guidance) சந்தையின் எதிர்பார்ப்புக்கு மிகவும் குறைந்து காணப் பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சந்தை துவக்கத்தில் பெருமளவு வீழ்ச்சி கண்டது. கரடிகள் கொஞ்சம் உற்சாகம் அடைந்தனர். ஆனால் அவர்கள் உற்சாகம் வெகுநேரத்திற்கு நீடிக்க வில்லை. . உலக சந்தைகள் தொடர்ந்து கண்டுவரும் முன்னேற்றம் நம்மூர் காளைகளை குஷிப் படுத்த, சரிவிலிருந்து மீண்டு வந்த காளைகள் மீண்டும் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டினர். அந்நிய நிறுவனங்களின் மீள்வரவு சந்தைகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது. சீனாவின் பொருளாதார வீழ்ச்சி பற்றிய தகவல்கள் கூட சந்தையின் மனநிலையைப் பாதிக்க வில்லை. சுவிஸ் வங்கி கறுப்புப் பணம்தான் இப்படி அந்நிய நிறுவனங்களின் பெயர் கொண்டு வருவதாக சந்தைகளில் வதந்தியும் காணப் படுகிறது.

பெரிய பங்குகளை விட சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் பெருமளவு முன்னேற்றம் கண்டது குறிப்பிடத் தக்கது. சந்தையின் "பெரும் வர்த்தகர்கள்" (Operators) முழுவீச்சில் தங்கள் 'திருவிளையாடல்களை' துவங்கி விட்டனர் என்பதையே இது காட்டுகிறது. சந்தையின் வர்த்தக அளவு பெருமளவு உயர்ந்திருப்பது சிறு வணிகர்களும் பெருமளவு சந்தையில் நுழைந்துள்ளனர் என்பதை காட்டுகிறது.

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்.

தொழிற் நுட்ப ரீதியாக (Technical Analysis) பார்க்கும் போது, பங்கு சந்தையின் முக்கிய குறியீடுகள் தமது முக்கிய எதிர்ப்பு நிலையான '200-நாட்கள் சராசரி அளவை' (200-day Moving Average) வெற்றிகரமாக தாண்டினாலும் அந்த வெற்றி வெகு நேரம் நீடிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இரண்டு முறை தோல்வி என்பது டபுள்-டாப் அமைப்பு (Double-Top Pattern) என்று கருதப் படுகிறது.

சந்தையின் ஒரு சாரார், நிபிட்டி குறியீடு மீண்டும் 3150 அளவுக்கு வரும் என்று எதிர்பார்க்கின்றனர். அதே சமயம் மற்றொரு சாரார், சந்தை தனது காளை ஓட்டத்தைத் தொடரும். அது யாரும் எதிர்பாரா வண்ணம் மிக வேகமானதாக இருக்கும் என்று கூறுகின்றனர். மேலும் ஏற்றத்தாழ்வு குறியீடான 'இந்தியா விக்ஸ்' (Volatility Indicator - India Vix) ஐம்பதிற்கும் மேலே உயர்ந்திருப்பது சந்தை ஒரு நிச்சயமற்ற நிலையில் இருப்பதையே உணர்த்துகிறது.

வரும் வாரத்தில் இந்திய மைய வங்கி (RBI) வரும் ஆண்டிற்கான தனது பணம் மற்றும் கடன் கொள்கையை (Monetary Policy) அறிவிக்க உள்ளது. கடன் வட்டி வீதங்கள் (Policy Rates) மேலும் குறைக்கப் படுமா என்பது சந்தையின் எதிர்பார்ப்பு ஆகும். மேலும் அமெரிக்க பொருளாதார தகவல்கள் மற்றும் உலக சந்தைகளின் போக்கு நம் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.



மேலே உள்ள படத்தைப் பாருங்கள். காளை ஓட்டம் ஒரு சீரான தொடர் கோடுகளுக்கு (Trend Lines) மத்தியிலேயே சென்று கொண்டிருக்கிறது. கீழே உள்ள கோடு முறியடிக்கப் படும் வரை, காளை ஓட்டம் தொடரும் என்று நம்பலாம்.

தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி குறியீடு 3500 அளவில் வலுவான எதிர்ப்பை சந்திக்கிறது. அந்த நிலை முறியடிக்கப் பட்டால் அடுத்த எதிர்ப்பு நிலைகள் 3600 மற்றும் 3750 புள்ளிகள் என கருதலாம்.

நிபிட்டி குறியீடு 3300 அளவில் ஒரு நல்ல அரணைப் பெற்றுள்ளது. இந்த நிலை உடைக்கப் பட்டால் அடுத்த அரண் நிலை 3150 அளவில் இருக்கும்.

வர்த்தகர்கள் சரியான இழப்பு நிறுத்தத்துடன் (Stop Loss Limits) வர்த்தகம் செய்யலாம். முதலீட்டாளர்கள் வலுவான பின்னணி உள்ள நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யவும். சந்தை ஓட்டத்தில் வெகுவாக உயரும் பங்குகளை நம்பி ஏமாற வேண்டாம். ஏனென்றால், இங்கும்,

"புள்ள புடிக்கரவங்க வந்துட்டாங்கையா! வந்துட்டுட்டாங்க! அதுவும் கூட்டம் கூட்டமா வந்துட்டுட்டாங்க!"

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி.

Saturday, April 18, 2009

புள்ள புடிக்கவரங்க வந்துட்டாங்கைய்யா! வந்துட்டாங்க!


இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் மாட்சுகள் ஆரம்பமாகி விட்டன. மக்களை ஐபிஎல் பக்கம் இழுக்க பல நாட்களாகவே விளம்பர வலைகளை வீசிக் கொண்டிருந்த கிரிக்கெட் நிறுவனங்கள் இன்று தமது "புள்ள புடிக்கும்" வேலையை முழு வீச்சில் துவங்கி விட்டன.

இன்றைக்கு காலைச் செய்தித் தாளை கிரிக்கெட் பற்றிய விளம்பரங்களே முழுவதுமாக அடைத்துக் கொண்டிருந்தன. அனைத்து ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளிலும் கிரிக்கெட் புராணங்கள் முழு வீச்சில் துவங்கி விட்டன. கிட்டத்தட்ட, உலகில் இன்றைய தேதியில் உலகில் கிரிக்கெட்டை விட்டால் வேறு எந்த நிகழ்வும் இல்லை என்பது போல செய்தி நேரம் கிட்டத்தட்ட முழுவதுமாக கிரிக்கெட்டுக்கு ஒதுக்கப் பட்டு விட்டது.

கிரிக்கெட்டில் இந்த முறை ஈடுபாடு காட்டக் கூடாது என்று நாம் எவ்வளவுதான் தலைகீழ் பிரயத்தனம் செய்தாலும், இந்த 'தொத்து வியாதியில்' இருந்து நம்மால் தப்பவே முடியாது. ஏனென்றால், நாம் தினந்தோறும் தொடரும் அனைத்து ஊடகங்களிலும் இதே செய்தியை மட்டுமே அதிகம் பார்க்க முடியும். அலுவலக விவாதங்களிலும் மெல்ல மெல்ல கிரிக்கெட் உள்ளே நுழைந்து விடும். ஒரு கட்டத்தில் "எங்கும் கிரிக்கெட் எதிலும் கிரிக்கெட்" என்றான பிறகு நாமும் இந்த கிரிக்கெட் பூதத்திடம் சரனைந்து விட வேண்டியதுதான். வேறு வழியே இல்லாமல் போய் விடும்.

யார் எவ்வளவு ரன் அடித்தார், யார் அடிக்க வில்லை, எந்த கேப்டன் சரியான முடிவு எடுத்தார், யார் எடுக்க வில்லை, எப்படி வெற்றி பெற்றிருக்கலாம் அல்லது எப்படி தோல்வியை தவிர்த்திருக்கலாம், இந்த அம்பயர் முடிவு தவறு அல்லது அந்த மூன்றாவது அம்பயர் தேவையில்லை என்பது போன்ற கருத்துக்கள் ஊடகங்களிலும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்திலும் நம்மை விடாது துரத்தும் "கருப்பு"கள்.

இவை மைதானத்திற்குள்ளே நடைபெறும் விஷயங்கள் என்றால், 'ப்ரீத்தி ஜிந்தா இன்று யார் தோளில் கை போட்டார்', யாருக்கு முன்னாபாய் (நம்மூரில் வசூல் ராஜா) வைத்தியம் பார்த்தார், 'விஜய் மல்லையா இன்று எந்த நடிகைக்காக ஏரோப்ளேன் விட்டார்', கவாஸ்கர் கருத்துக்கு ஷாருக் கானின் மறுப்புச் செய்தி' என்பது போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் இதர தேசிய அல்லது உலக செய்திகளை வெகுவாக பின்தள்ளி விடும்.

இது மட்டுமல்லாமல், "பாவம் டெண்டுல்கர்" ஒரு ரன்னில் நூறை தவற விட்டார், "பாவம் டிராவிட்" அவருக்கு விஜய் மல்லையா போதுமான வாய்ப்பு தரவில்லை, "அதிர்ஷ்டமில்லை டோனிக்கு" இன்று டாசில் தோற்று விட்டார் என்றெல்லாம் நாடு முழுக்க அடுத்த வேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள் கூட "உச்சு" கொட்டிக் கொண்டிருப்பார்கள்.

எப்படியோ! நேரத்தைக் கடத்த முடியாத வயதானவர்களுக்கும், கோடை விடுமுறையில் வெளியூருக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பள்ளிச் சிறார்களுக்கும் இது ஒரு நல்ல பொழுது போக்கு. அழ வைக்கும் சீரியல்களுக்கும் ஆபாசமான ரியாலிடி ஷோக்களில் இருந்து தப்ப நினைப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. தொழிலில் களைத்துப் போய் வீடு திரும்பும் மற்றவர்களுக்கும் கூட இது ஒரு வகையில் மனதை லேசாக்கும் ஒரு பொழுது போக்கு.

பல நூறு கோடிகளை இந்திய கிரிக்கெட் வாரியமும், சில நூறு கோடிகளை விளம்பர நிறுவனங்களும், தொழில் அதிபர்களும் சில கோடிகளையாவது கிரிக்கெட் வீரர்கள் அள்ளப் போகின்றனர் என்றாலும் இந்த கிரிக்கெட் சீசனால் அதிகம் பலனடைய போவது காங்கிரஸ்தான் என்று சொல்லப் படுகிறது. ஏனென்றால், தீவிரவாதம், பொருளாதார மந்த நிலை, ஊழல் போன்ற நாட்டின் முக்கிய பிரச்சினைகளை மக்கள் தற்காலிகமாக கிரிக்கெட் எனும் போதையில் தேர்தல் நேரத்தில் மறந்திருப்பது ஆளுங்கட்சிக்குத்தானே வசதி?

நன்றி.

இது ஒரு (விண்) திரை விமர்சனம்


உலக அதிசயங்களில் ஒன்றாக கருத வல்ல செரேங்கிட்டி நிலப்பகுதியின் (கிழக்கு ஆப்ரிக்கா) வன விலங்குகள் ஆண்டுதோறும் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டத்தை துல்லியமாக விளக்கும் ஒரு ஆவணப் படத்தை (மிகப் பிரமாண்டமாக) ஒரு விண் திரையில் பார்த்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த படத்தின் பெயர் "Africa – The Serengeti”. இந்த படத்தை திரையிட்டு வரும் அரங்கு, (சமீபத்தில்) மும்பை அறிவியல் வளாகத்தில் துவங்கப் பட்டுள்ள "அரை உருண்டை வடிவ விண் திரை" அரங்கான ‘Science Odyssey’

உலகின் அரிய நிகழ்வுகளை அருகில் இருந்து பார்ப்பதைப் போன்ற ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தர வேண்டுமென்பதற்காக "பிரத்யேகமாக" இந்த திரை அரங்கு உருவாக்கப் பட்டுள்ளது. இதில் உள்ள திரையானது அரங்கின் கூரையில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த திரையை பார்வையாளர்கள் அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே ஐந்தாவதாக உருவாக்கப் பட்டுள்ள இந்த அரங்கில், பார்வையாளர்கள் அண்ணாந்து பார்ப்பதற்கென பிரத்யேக இருக்கைகளும் வடிவமைக்கப் பட்டுள்ளன.

சரி இப்போது கதைக்கு வருவோம்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள செரேங்கேடி பகுதி ஒரு மிகப் பெரிய தேசியப் பூங்கா ஆகும். இந்த வனப் பகுதி பல நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு காட்டெருதுகள், வரிக் குதிரைகள், கழுதை புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், நீர் யானைகள், ஆப்ரிக்க வகை யானைகள், காண்டாமிருங்கங்கள், இன்னும் பல பறவைகள் என பல கோடி எண்ணிக்கையிலான வன விலங்குகள் வசிக்கின்றன.

இந்த விலங்குகள் அனைத்தும் வருடத்துக்கொருமுறை (வறட்சியின் போது), தேசிய பூங்காவின் வடக்குப் பகுதியை நோக்கி செல்கின்றன. பல நூறு கிலோமீட்டர் தூரம் அனைத்து விலங்குகளும் கூட்டாக இடம் பெயரும் இந்த நிகழ்வு "great migration" என்று அழைக்கப் படுகிறது. அதே போல மழைக்காலத்தில் இந்த விலங்குகள் தெற்கு நோக்கி மீண்டும் இடம் பெயருகின்றன. இந்த நிகழ்வு உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப் படுகின்றது.

இவ்வாறு இடம் பெயரும் போது இந்த விலங்குகள் சந்திக்கின்ற இயற்கையான மற்றும் மாமிசபட்சினிகளின் வாயிலாக ஏற்படுகின்ற இடையூறுகளை எப்படி சமாளிக்கின்றன என்பதையும் ஒவ்வொரு இனத்தின் முக்கிய கடமையான "பிழைத்திருப்பது" மற்றும் "புதிய சந்ததிகளை" உருவாக்குவது போன்ற கடமைகளை எப்படி நிறைவேற்றுகின்றன என்பதையும் விவரிப்பதே இந்த படத்தின் அடிப்படை நோக்கமாகும்.

படத்தின் துவக்கத்தில் அனல் வீசும் கோடையில் ஒரு குறிப்பிட்ட வனப் பகுதியில் வாழும் விலங்குகளுக்கு இடம் பெயர வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது.

வாழும் இடம் தேடி மந்தைகளாக பயணிக்கும் காட்டெருதுகள், அவற்றுடன் செல்லும் வரிக் குதிரை போன்ற தாவர உண்ணிகள், இடையில் இந்த விலங்குகளை வேட்டையாடும் பெண் சிங்கங்கள். பெண் சிங்கங்கள் வேட்டையாடியதை அவர்களுக்கோ அல்லது குட்டிகளுக்கோ கொடுக்காமல் "பந்திக்கு முந்தி " உண்ணும் "சோம்பேறி ஆம்பள சிங்கங்கள்", எஞ்சியதற்காக ஏங்கி காத்திருக்கும் கழுதைப் புலிகள், அங்கும் அவர்களுடன் போட்டி போடும் வல்லூறுகள், இவற்றுக்கிடையே எந்த ஒரு அச்சமுமின்றி தனக்கென ஒரு ராஜ பாட்டையில் கம்பீர நடை போடும் யானைகள், காண்டாமிருகங்கள், நீர்யானைகள் போன்ற பெரிய விலங்கினங்கள் இவை அனைத்தையும் நம்மால் ரசிக்க முடிகிறது.

யாருமில்லாத காட்டில் தனியாக ஒரு சிறுத்தைத் தாய். ஆண் வர்க்கம், பெண்ணுக்கு குழந்தை கொடுத்து விட்டு காணாமல் போவது காட்டிலும் வழக்கம் போல இருக்கிறது. இறுதியில் தான் உயிர் பிழைத்திருப்பதற்காக தனது குட்டியையே தாய் சிறுத்தை சாப்பிட வேண்டிய கட்டாயம். நம்பிக்கையை தளரவிடாமல் கடைசி வரை காத்திருக்கையில் நம்பிக்கை ஒளியாய் ஒரு மான் கூட்டம். உலகின் அதி வேகமான நில உயிரினமான அந்த சிறுத்தை தான் வாழ வேண்டி மற்றொரு வாழ்க்கையை பறிக்கும் இயற்கையின் அந்த விநோதம். கிடைத்ததையும் தனது குட்டிக்கு கொடுத்த பின்னரே தான் உண்ணும் அந்த கொடுரமான தாயின் பிள்ளைப் பாசம். இந்த நிகழ்வுகள் அனைத்தும் மிகத் துல்லியமாக உணர்வு பூர்வமாக படமாக்கப் பட்டுள்ளன.

அரை உருண்டை வடிவான பிரமாண்டமான விண் திரையில் இவற்றை நாம் பார்க்கும் போது, ஏதோ நாம் மிக அருகில் இருந்து பார்ப்பது போன்ற ஒரு உணர்வு தோன்றுகிறது. மேலும், விண்ணூர்தியின் துணை கொண்டு கேமரா வேகமாக நகரும் போது நாமும் கூடேயே செல்வது போன்ற ஒரு உணர்வும் (virtual experience) தோன்றுகிறது.

இப்போது மீண்டும் முன்னேறும் காட்டு எருதுகளிடம் செல்வோம். வாழ வழி தேடி செல்லும் பாதையில் ஒரு கட்டத்தில் தமது வில்லன்களான சிங்கங்களை நேருக்கு நேராக சந்திக்கின்றன. வாழ வேண்டுமானால் முன்னே செல்ல வேண்டும். ஆனால் எதிரிலேயே எமன்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் துணிச்சலை வரவழைத்துக் கொள்ளும் இந்த விலங்குக் கூட்டம், சிங்கங்களைப் பொருட்படுத்தாமல் முன்னேறத் துவங்குகின்றன.

வலிய வந்து தானாக கையில் விழும் விருந்தை வேண்டாமென்றா சொல்லுவார்கள் இந்த எமன்கள்? அங்கே பலியாவது ஏராளமான உயிர்கள். அவர்கள் வயிறு நிறைய உண்ட பிறகு மிஞ்சியவையும் எஞ்சியவையும் அதி வேகத்தில் வாழுமிடம் தேடி தொடர்ந்து பயணிக்கின்றன.

கடைசியில் ஓடும் தண்ணீரையும் பசுமை நிறைந்த காடுகளையும் கண்டு மகிழும் இந்த மிருகங்கள் அங்கு தமது வாழ்வை மகிழ்ச்சியாக களிக்கின்றன. ஆனால் இது கிளைமாக்ஸ் இல்லை. அங்கு ஒரு டுவிஸ்ட் இவர்களுக்கு காத்திருக்கிறது.

அந்த பகுதி மிக அதிக அளவில் மழை பெய்யக் கூடிய பூமத்திய ரேகை மழைப் பிரதேசம். பருவம் மாறியவுடன் அங்கு அடை மழை பெய்கிறது. இந்த மழையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இந்த வனவிலங்குகள் மீண்டும் தெற்குப் பகுதியை நோக்கி நகரத் தொடங்குகின்றன.

இப்போது இவர்களுக்கு புதிதாக முளைத்திருக்கும் எதிரிகள். மழை வெள்ளம் சீறிப் பாயும் பெரிய ஆறுகள் மற்றும் அங்கு கொலை வெறியுடன் காத்திருக்கும் பெரிய முதலைகள்.

ஆபத்தைக் கண்டவுடன் அச்சத்தில் உறைந்து நிற்கும் இந்த மிருகங்கள் ஒரு கட்டத்தில் ஆற்றை கடந்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் துணிச்சலுடன் ஆற்றில் இறங்குகின்றன. விடுமா முதலைகள்? ஜிலேபியை கடித்து சாப்பிடுவது போல ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு சிறு விலங்கு. இவற்றில் இருந்து தப்பினாலும், சறுக்கும் ஆற்றுப் படுகைகள் பல விலங்குகளை அசைய முடியாதவை ஆக்கி விடுகின்றன. எஞ்சிப் பிழைப்பவை மட்டும் தெற்கு நோக்கிய தமது பயணத்தை வெற்றி கரமாக தொடருகின்றன.

இப்படி வருவோர் போவோரிடம் எல்லாம் விருந்தாகும் இந்த விலங்குகள் எப்படி தமது எண்ணிக்கையை குறையாமல் வைத்திருக்கின்றன? போகும் வழியிலும் வரும் வழியிலும் நேரத்தை வீணாக்காமல் இந்த விலங்குகள் பெத்துப் போட்டுக் கொண்டே இருக்கின்றன. கடைசியில் ஒருவழியாக பயணத்தை தொடங்கிய புல்வெளிப் பகுதிக்கே இந்த மிருகங்கள் வந்து சேர்கின்றன.

கடைசியாக ஒரு பதற வைக்கும் கிளைமாக்ஸ்.

ஒரு காட்டுப் பசு குட்டிப் போடுகிறது. அந்த குட்டி சில நிமிடங்களுக்குள் எழுந்து நிற்க வேண்டும் நிற்கத் தவறினால், அந்த மந்தைக் கூட்டம் அந்த குட்டியை அங்கேயே விட்டு விட்டு தன் பாட்டுக்கு சென்று விடும். அங்கேயே காத்திருக்கும் நரி மற்றும் வல்லூறுகளுக்கு அந்த குட்டி இரையாக வேண்டியதுதான்.

குட்டி எழுந்திருக்கிறது, தவறி விழுகிறது. மீண்டும் எழுந்திருக்கிறது, மீண்டும் தவறி விழுகிறது. குட்டியை எப்படியாவது எழுப்பி விட தாய்ப் பசு முயற்சிக்கிறது. முடிய வில்லை. தந்தை மாடும் முயற்சிக்கிறது, அப்போதும் முடிய வில்லை.

ஒரு கட்டத்தில் குட்டியை விட்டு விட்டு செல்ல இரண்டு மாடுகளும் முடிவு செய்து நகர ஆரம்பிக்கின்றன. தாய்ப் பசு மீண்டுமொருமுறை ஏக்கத்துடன் திரும்பிப் பார்த்து விட்டு முன்னே செல்கிறது. காட்டு நரிகளும், வல்லூறுகளும் குட்டியை நோக்கி முன்னேறுகின்றன. நமக்கோ பதட்டம் பிறக்கிறது.

ஒரு கணத்தில் துள்ளி எழும் அந்த குட்டி தனது கூட்டத்தோடு சென்று கலந்து விடுகிறது. நாமும் பிரமிப்பு கலந்த ஒருவித திருப்தியுடன் எழுந்து திரையரங்கை விட்டு வெளியே வருகிறோம்.

காட்டு வாழ்க்கை என்று சொல்லப் பட்டாலும் அங்கு கூட 'எங்கும் எதிலும்' ஒருவித ஒழுங்கு தென்படுவதை உணர முடிகிறது.

அங்கிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம்.

இயற்கையை தன் விருப்பப்படி வளைககாமலும் பேராசை கொண்டு அழிக்காமலும் வனவிலங்குகள் இயற்கையோடு இயைந்து வாழ்கின்றன. தாமும் வாழ்ந்து தமது சந்ததிகளும் வாழ இயற்கையை மிச்சம் வைக்கின்றன.

வலுத்தவன் பிழைப்பான் என்ற இயற்கை நியதி உள்ள காட்டுப் பகுதியில் வாழும் மாமிச பட்சினிகள் கூட தமது பசிக்காகத் தவிர மற்ற மிருகங்களை மற்ற சமயங்களில் துன்புறுத்துவதில்லை. எந்த ஒரு சுரண்டல் வேளையிலும் ஈடுபடுவதில்லை. நம்மூர் அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் போல பல தலைமுறைகளுக்கும் எதையும் சேமித்து வைப்பதில்லை.

எப்பாடு பட்டேனும் வாழ வேண்டும், தனது தலைமுறையைத் தொடர வேண்டும் என்று பல வகையிலும் விடா முயற்சியுடன் போராடும் மிருகங்கள் சில பாடங்களை சொல்கின்றன. சில தற்காலிகமான பொருளாதார மாற்றங்களுக்கெல்லாம் பயந்து கொண்டு (சோர்ந்து போகும்) சில சமயங்களில் தற்கொலைக்கு முனையும் மனிதர்களுக்கு "வாழ மட்டும்தான் ஒரு உயிருக்கு உரிமை உள்ளது, மாய்த்துக் கொள்ள அல்ல" என்று சொல்லாமல் சொல்கின்றன.

உண்மையில் ஒரு உயர்ந்த வாழ்க்கையை வாழ்வது மிருகங்களா அல்லது மனிதர்களா என்ற வலுவான சந்தேகத்தை கிளப்புகின்றது இந்த ஆவணப் படம்.

1994 இல் வெளி வந்திருக்கும் இந்த ஆவணப் படம் பல விருதுகளை வென்றுள்ளது. இந்த கதையை விளக்கும் குரலில் உள்ள கம்பீரம் நம்மைக் கட்டிப் போடுகிறது. உயிரோட்டமான இசையும் காட்சி தொகுப்பும் இதை ஒரு சிறந்த திரைப் படத்திற்கு நிகராக சொல்ல வைக்கிறது. பறந்து பறந்து ஒளிப்பதிவு செய்யப் பட்டிருக்கும் காட்சிகள் படம் முடிந்த பின்னரும் நம் கண் முன்னேயே நிற்கின்றன.

குழந்தைகளுடன் பெரியவர்களும் பார்க்க வேண்டிய படம் இது.

நன்றி.

Friday, April 17, 2009

காலாண்டு நிதி அறிக்கைகளை வெளியிடத் தயங்கும் இந்திய நிறுவனங்கள்.


மந்த நிலையில் உலகப் பொருளாதாரம். இதை உறுதி செய்யும் வகையில் அன்றாடம் வெளிவரும் பொருளாதாரத் தகவல்கள். அதே சமயம் பெருமளவு முன்னேறிக் கொண்டிருக்கும் பங்கு சந்தைகள். 'கண் கட்டி வித்தை' போல ஒரு மாதத்திற்குள்ளேயே பல மடங்கு விலை உயர்ந்து விட்ட இந்திய நிறுவனப் பங்குகளில் ( இவ்வளவு விலை உயர்ந்த பிறகு) முதலீடு இப்போது செய்யலாமா என்று விழி பிதுங்கும் முதலீட்டாளார்கள். இவர்களின் கலங்கரை விளக்கமாக கருதப் படுபவை நிறுவனங்களின் செயல்பாடு குறித்து விளக்கும் காலாண்டு நிதி அறிக்கைகள். இந்த நிதி அறிக்கைகளை உடனடியாக வெளியிடத் தயங்கும் இந்திய நிறுவனங்கள்.

தயக்கத்திற்கு காரணம் என்ன? இங்கு பார்ப்போம்.

ஒரு நிறுவனத்தின் பங்கு இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் ஆகும் பட்சத்தில், அதனுடைய (தணிக்கைச் செய்யப் படாத) காலாண்டு நிதி அறிக்கை காலாண்டு முடிந்த ஒரு மாதத்திற்குள் வெளியிட வேண்டும். மார்ச்சுடன் நிறைவடையும் காலாண்டிற்கு (அல்லது நிறுவனத்தின் நிதி ஆண்டின் கடைசி காலாண்டு) மட்டும் ஒரு விதி விலக்கு உண்டு. அதாவது, தணிக்கை செய்யப் படாத காலாண்டு அறிக்கையை வெளியிட தேவை இல்லை. அதற்கு பதிலாக தணிக்கைச் செய்யப் பட்ட நிதி அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் வெளியிடலாம். இந்த வருடம் மேற்சொன்ன சலுகையை பயன்படுத்திக் கொண்ட பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையை வெளியிடுவதில் இருந்து விலக்கு பெற்றுக் கொண்டதாக பத்திரிக்கைத் தகவல்கள் கூறுகின்றன. இவற்றில் பல பெரிய நிறுவனங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கு முன் கண்டிராத வண்ணம், இவ்வாறு பல நிறுவனங்கள் தமது காலாண்டு நிதி அறிக்கையை வெளியிட தாமதிப்பதற்கு நிதி வட்டாரங்களில் பல காரணங்கள் கூறப் படுகின்றன. அவையாவன.

இந்திய நிறுவனங்களில் பல நிறுவனங்கள் அந்நிய செலவாணி மாற்று வர்த்தகத்தில் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இந்த நஷ்டத்தை நடப்பு நிதி அறிக்கையில் காட்ட வேண்டியதில்லை என்ற ஒரு புதிய சலுகையை மத்திய அரசு சமீபத்தில் அளித்தது. இதற்கு வசதியாக தணிக்கை நியதி 11 இல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. (இந்த திருத்தம் எந்த அளவுக்கு சரி என்பது விவாதத்துக்குரிய விஷயம்). இவ்வாறு நஷ்ட அளவு மாறுபடுவதால், நிறுவனங்களுக்கு தங்கள் அறிக்கையில் சில மாற்றங்கள் செய்ய போதுமான அவகாசம் தேவை இருப்பதால் இந்த கால தாமதம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

இப்போது நல்ல மனநிலையில் பங்கு சந்தைகள் உள்ளன. இதனால் குருட்டாம் போக்கில் பல பங்குகள் நல்ல விலை உயர்வு கண்டு வருகின்றன. இந்த தருணத்தில், மோசமான அறிக்கையை வெளியிட்டால் அவற்றின் விலை உயர்வு பாதிக்கப் படும். எனவே, மோசமான செய்திகளை தள்ளிப் போட நிறுவனங்கள் முயல்கின்றன என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இன்னொரு கருத்து நம்மைத் திகைக்க வைக்கின்றது. தேர்தலின் முடிவைப் பொருத்து தமது நிதி அறிக்கையை "உருவாக்க" சில நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகவும் கருதப் படுகின்றது. காங்கிரஸ் அல்லது பிஜேபி அரசாங்கம் உருவானால் ஒரு மாதிரியான நிதி அறிக்கை. இடது சாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்தால் இன்னொரு மாதிரியான நிதி அறிக்கை. குறிப்பாக, இந்த முடிவை வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் எடுத்திருப்பதாக் சொல்லப் படுகிறது.

உலக அளவில் என்ரோன் மற்றும் இந்திய அளவில் சத்யம் ஊழல்கள் நிதி அறிக்கையில் எப்படியெல்லாம் பித்தலாட்டங்கள் செய்யப் படுகின்றன என்பதை ஏற்கனவே வெளிக் காட்டி உள்ளன.

எனவே, வாசகர்கள் நடப்பு காளை ஓட்டத்தில் (Bull Run) பங்கு முதலீடு குறித்த தங்களது முடிவுகளை மிகுந்த கவனத்துடன் எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

Thursday, April 16, 2009

உலகிலேயே பெரிய பணக்கார நாடு வாங்கியிருக்கும் கடன் அளவு எவ்வளவு தெரியுமா?


கஷ்டப் பட்டு சம்பாதித்து பணக்காரர்கள் ஆகிறவர்களும் உண்டு. இப்படி கடன் வாங்கியே பணக்காரர்கள் ஆகிறவர்களும் உண்டு. நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நம்மூரில் கூட பார்க்கலாம். துளியும் கடன் சுமை இல்லாத பலர் சாதாரண சைக்கிள்களில் செல்வார்கள். ஆனால் வங்கிகளில் பல கோடி கடன் வாங்கிய தொழில் அதிபர்கள் (அதில் வாராக் கடன் அதிபர்களும் அடக்கம்) மிகப் பெரிய கார்களில், ஏன் சில சமயங்களில் தனியார் ஜெட்டில் கூட செல்வார்கள்.

அதே போல, இந்தியா போன்று குறைவாக கடன் வாங்கிய நாடுகள் எல்லாம் ஏழை நாடுகளாக அறியப் படும் வேளையில், உலகிலேயே அதிக கடன் வாங்கிய நாடு ஒரு வலுவான பணக்கார நாடாக அறியப் படுகிறது.

ஒவ்வொரு நாளும் பில்லியன் டாலர் கணக்கில் அதிகரித்து செல்லும் அமெரிக்காவின் கடன் தொகை கடைசியாக கிடைத்த தகவலின் படி 11 டிரில்லியன் டாலர் அளவையும் தாண்டி விட்டது. இந்திய மதிப்பில் இது எவ்வளவு தெரியுமா? ஏறத்தாள ரூ. 55,00,00,00,00,00,000.00. தலை சுற்றுகிறதா? அதாவது ஐநூத்தி ஐம்பது லட்சம் கோடி ரூபாய். (இந்தியாவின் ஒரு ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவே கிட்டத்தட்ட நாற்பது லட்சம் கோடி ரூபாய் மட்டுமே) இந்த கடன் தொகை அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 75 சதவீதத்திற்கும் மேலே. நூறு சதவீதத்திற்கும் மேலே போனால் இந்த நாடு தாங்குமா என்று தெரியாது. ஆனால் கண்டிப்பாக உலகம் தாங்காது என்று சொல்ல முடியும்.



அமெரிக்க அரசின் மொத்த கடன் தொகையை ஒரு டாலர் நோட்டாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தால், பூமியிலிருந்து சந்திரன் வரை போய் விட்டு வரும் அளவுக்கு உயரமாக இருக்கும். (கிட்டத்தட்ட 7,50,000௦௦௦ மைல்கள்). இதே தொகையை பரவலாக அடுக்கி வைத்தால் மூன்று கால்பந்து மைதான பரப்பளவிலும் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் துபாய் கட்டிடத்தின் உயரத்திற்கு அடுக்க முடியும். சரி ஒரு டாலர் நோட்டு வேண்டாம், நூறு டாலர் நோட்டாக பரப்பி வைக்கலாம் என்று பார்த்தால், அதன் பரப்பளவு வாஷிங்டன் பரப்பளவில் நான்கில் மூன்று பங்கு பிடிக்கும்.

இன்னுமொரு வேடிக்கையான விஷயம், இப்படி நோட்டுக்களாக கடனை அளக்கும் அல்லது அடைக்கும் அளவுக்கு அமெரிக்காவில் போதுமான கரன்சி நோட்டுக்களே இல்லை. புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சிக்களின் மதிப்பே ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கும் குறைவுதான். (அதே சமயம் கடன் அளவு சுமார் 11 டிரில்லியன் டாலர் அளவு)

இந்த கடன் தொகை அரசாங்கத்துடையது மட்டும்தான். அமெரிக்காவில் வாழும் மக்களிலும் மிகப் பலர் கடன் பொருளாதாரத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். அமெரிக்காவின் மொத்த கடன் தொகை அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல (கிட்டத்தட்ட) மூன்றரை மடங்கு என்று சொல்லப் படுகிறது.

தனது சொந்த உழைப்பில் இல்லாமல் இப்படி உலக நாடுகளிடம் கடன் வாங்கியே வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவை ஒரு மிகக் கவர்ச்சியான மற்றும் பெரிய (மோசடி) பைனான்ஸ் கம்பெனி (A Big Ponzi Scheme) என்றும் உலக நாடுகள் எல்லாம் அதில் பணம் போட்டு ஏமாந்து கொண்டிருக்கின்றன என்றும் ஒரு பொருளாதார நிபுணர் கூறினார்.

அவர் சொன்னது போல இருக்குமானால், வெகு சீக்கிரம் இந்த நீர்க் குமிழியும் வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அப்படி அமெரிக்கா திவாலானால் பாதிக்கப் படுவது (பைனான்ஸ் கம்பெனியில் பணியாற்றி வேலை இழக்கும்) அமெரிக்க மக்கள் மட்டுமல்ல, அங்கு முதலீடு செய்துள்ள இந்தியா, சீனா போன்ற வளம் குறைந்த நாடுகளும் அந்த நாடுகளில் உள்ள நம் போன்ற ஏழை மக்களும்தான்.

எப்போதும் போல இந்த விஷயத்திலும் நம்மை முந்திக் கொண்ட சீனா அரசு தனது அந்நிய செலவாணியை டாலர் கணக்கிலிருந்து வேறு கரன்சிகளுக்கு மற்றும் இதர வகை முதலீடுகளுக்கு மாற்றத் தொடங்கி விட்டது. சீனாவைப் போலவே தனது சேமிப்பில் பெரும்பகுதியை அமெரிக்க டாலரில் முதலீடு செய்திருக்கும் இந்தியா என்ன செய்யப் போகிறது? அமெரிக்க அரசு தவறாக எடுத்துக் கொள்ளும் என்று மாற்றம் செய்யத் தயங்கினால் நஷ்டம் நமக்குத்தான்.

நன்றி.

Tuesday, April 14, 2009

அரசியல்வாதிகள் விளம்பர மாடல்கள் ஆனால்?


இது விளம்பர யுகம். விளம்பரம் இல்லாத பொருள் விலை போவது கஷ்டம். எத்தனை நாட்களுக்குத்தான் நாம் விளம்பரங்களில் நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும், தொழிற் முறை மாடல்களையும் மட்டுமே பார்த்து போரடித்துக் கொண்டிருப்பது? நடப்பு விளம்பரங்களில் அரசியல்வாதிகளை நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை. மேலே உள்ள மற்றவர்களாவது காமெரா முன் மட்டுமே நடிக்க முடிந்தவர்கள். ஆனால் நமது அரசியல்வாதிகளோ நல்ல தூக்கத்தில் எழுப்பி விட்டாலும் திறமையாக நடிக்கக் கூடியவர்களாயிற்றே?

ப.சிதம்பரம் - அரசியலில் ஆக்ஷன் பண்ண அருமையான ஷூ " ஆக்ஷன் ஷூ"

மம்தா பானர்ஜீ - உல்லாசப் பயணம் செய்ய உகந்த வாகனம் நானோ கார். யெஸ்! நம்மால் முடியும்!

ராகுல் காந்தி - திருமணத்திற்கு வேண்டிய துணை தேட அவசியம் பாருங்கள் பாரத் மாட்ரிமோனி.காம்.

வருண் காந்தி - இந்தியாவில் பிறந்த அனைவருக்குமே உடனடித் தேவை! சிறந்த ஆயுள் காப்பீடு திட்டங்கள்! ஜீத்தி ரஹோ!

பிரகாஷ் கரட் - உலக மக்கள் எல்லோரும் நம்பி பணம் போட உலகிலேயே நம்பர் ஒன் வங்கி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி

மூன்றாம் அணி - உறுதியாக ஓட்ட வைக்க 'பெவிக்கால்'. இதை யாராலும் பிரிக்கவே முடியாது.

மாயாவதி - என்றைக்கும் மக்களின் வாகனம்! இன்றைக்கும் முந்தும் வாகனம்! ஹீரோ சைக்கிள்!

லாலு பிரசாத் யாதவ் - முப்பது நாட்களில் ஆங்கிலம் பேச கற்றுக் எளிதான வழி! ரெபிடெக்ஸ் புத்தகம்! பேசறது நமக்கு ஈஸி. ஆனா, கேக்கரவங்கதான் பாவம்!

ஜகதிஷ் டைட்லர் - இதுதான் இந்த ஆண்டின் வெற்றித் திரைப் படம்! அனைவரும் பாருங்க! சிங் இஸ் கிங்!

அன்புமணி ராமதாஸ் - (மந்திரி பதவி போல) இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம்! ஐடிசி வில்ஸ் சிகரெட்!

ஜெயலலிதா - இணைந்தாலே கனவு நனவாகும்! அரிய சுவை உதயம்! புதிய சன்ரைஸ்!

கருணாநிதி - உலகத் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்தத் திரைப்படம்! மாவீரன் அலெக்சாண்டர்!

லாலு பிரசாத் யாதவ் - எத்தனை பெத்தாலும் ஸ்ட்ராங்கான புருஷன் பொஞ்சாதி! நாங்களே சொல்றோம்! நாம் இருவர்! நமக்கொருவர்!

ராஜ் தாக்கரே - வெளி மாநிலத்தவரே! மும்பையில் (ரயில்வே) வேலை வேண்டுமா? கண்டிப்பா மும்பை வாங்க! அடி படறதுக்கு நான் காரண்டீ!

ஷிவ்ராஜ் பாட்டில்: ஒவ்வொரு தீவிரவாத சூட்டிங்குக்குப் (தாக்குதலுக்குப்) பின்னாலும் நான் விரும்பி அணிவது "கிராசிம் சூடிங்க்ஸ்" ஐ அம் எ கம்ப்ளீட் மேன்!

முததளிக் - எனக்கு ரொம்ப பிடிக்கும்!
யாரு நான்தானே!
இல்லே!
நான் உங்க பிங்க் கலர் உள்ளாடைய சொன்னேன்!

ராமதாஸ் - அனைவரும் வாருங்கள்! ஜம்போ சர்க்கஸ் பார்க்கலாம்! தேர்தலுக்கு தேர்தல் அருமையான அந்தர் பல்ட்டி பார்க்கலாம்!

கடைசியாக பொது மக்கள் என்ன விளம்பரம் செய்யலாம் என்று பார்ப்போம்.

பசிய மறந்து, கூட்டம் கூடி, கைதட்டி, விசிலடிச்சு, கோஷம் போட்டு, 'வேட்டு'க்கள மறந்து 'வோட்டு'க்கள போட்டு தலைவர்களை உருவாக்கி விட்டு பின்னர் அஞ்சு வருடம் கோமா ஸ்டேஜுக்கு போகும் நம் "குறைந்த நேர ஞாபக சக்தி" மக்கள் அனைவரும் "மெமோரி பிளஸ்" சாப்பிடுங்கன்னு விளம்பரம் செய்யலாம்.

நன்றி.

பின்குறிப்பு: ஐயா! அரசியல் வியாதிகளே! சாரி! அரசியல்வாதிகளே! அவர்களை ஆதரிக்கும் அண்ணன்மார்களே! மேலே சொன்னது எல்லாம் சும்மா தமாசுக்குத்தாங்க! விருப்ப பட்டா உங்களுக்குள்ளார ஒளிஞ்சிருக்கும் ஒரு திறமைய வெளிய கொண்டு வரும் ஒரு சிறிய முயற்சின்னு கூட வச்சுக்கலாம். படிச்சுட்டு சிரிச்சுட்டு அப்படியே போயிடுங்க! தயவு செஞ்சு ஆட்டோல்லாம் வேணாம்! ரொம்ப வலிக்கும்! அவ்வ்வ்வ்!

Monday, April 13, 2009

இன்று வாக்கு வேட்டை. நாளை மான் வேட்டை அல்லது மனித வேட்டை?


மும்பையில் ஒரு நெடிய பேருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற பல நாள் ஆசை நேற்றுத்தான் நிறைவேறியது. கார் அல்லது பைக் பயணத்தின் போது, பெரும்பாலும் நமது கவனம் சாலையின் மீதேதான் இருக்கும். லோக்கல் ரயில் பயணத்திலோ பெரும்பாலும் இருப்புப் பாதைகளையும் ரயில் நிலையங்களையும் மட்டுமே நம்மால் பார்க்க முடியும். அதே சமயம், டவுன் பஸ் பயணமோ நாம் வாழும் ஊரில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக புரிந்து கொள்ள உதவுகிறது.

கேட்வே ஆப் இந்தியாவின் அருகே இருந்து பந்திரா வரை செல்லும் ஒரு பேருந்தில் நேற்று நான் பயணித்த போது, (தென் மும்பையில் சியான் செல்லும்) முக்கிய சாலையில் மக்கள் திரள் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட ஐந்து கிமீ நீளத்திற்கு மிகப் பெரிய அளவில் மக்கள் கூட்டம் இருந்தது. சரி ஏதோ தேர்தல் பிரச்சாரம் போல இருக்கிறது என்று எண்ணியிருந்த போது, சக பயணி ஒருவர் "சல்மான் கான் வருகிறார், பிரச்சாரம் செய்ய" என்று கூறினார். அப்போது அவர் கண்களில் ஒருவித பளபளப்பு இருந்ததை உணர முடிந்தது. சாலையிலும் மக்கள் பெருத்த ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். கைகளில் மாலைகளோடு பலரும் காத்துக் கொண்டிருந்தனர்.

நாட்டின் பிற பகுதிகளில், குறிப்பாக கிராமப் பகுதிகளில், சினிமா நடிகர்களை காண பெருந்திரளான மக்கள் கூட்டம் வருவது சகஜமான ஒன்றாகவே இருக்க முடியும். காரணம் அங்குள்ள மக்கள் அதிகம் துறைகளில் மட்டுமே, திரை நடிகர்களை பார்க்கின்றனர். ஆனால், திரை நட்சத்திரங்கள் வசிக்கின்ற நகரமான மும்பையில் கூட இப்படியா என்று எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. இங்கு பல நட்சத்திரங்களை மிக அருகிலேயே பார்க்க கூடிய வாய்ப்புக்கள் பல சமயங்களில் சாதாரண மக்களுக்குக் கூட உண்டு என்ற நிலையில் ஒரு நடிகரைக் காண இவ்வளவு கூட்டம் இருப்பது அதுவும் வணிக நகரமான மும்பையில் இவ்வளவு ஆரவாரம் வெளிப்படுத்தப் படுவது வியப்பையே உருவாக்கியது.

சல்மான் எப்போதும் போல பளபளவென்று உற்சாகமாகவே இருந்தார். ஒரு வண்டியில் நின்று கொண்டு மக்களிடம் கையசைத்துக் கொண்டிருந்தார். தென்மும்பை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான மிலிந்த் தியோராவும் இதர காங்கிரஸ் தலைவர்களும் அவர் அருகே மிக பவ்யமாக நின்று கொண்டிருந்தனர்.

எனக்கு அப்போது தோன்றிய ஒரு கருத்து,

"இன்று தேர்தல் காலத்தில் வாக்கு வேட்டையாட உதவும் சல்மான் கான், நாளை காட்டிற்குள் கன் (gun) உதவியுடன் மானை வேட்டையாடினாலோ அல்லது நாட்டிற்குள்ளேயே கார் உதவியுடன் மனிதர்களையே வேட்டையாடினாலோ அவர் உதவியுடன் பதவிக்கு வரும் இந்த இந்த அரசியல் வியாதிகளால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?"

நன்றி.

இந்த இளம் 'கிராஜுவேட்டை' 'கங்க்ராஜுலேட்' பண்ணுங்க


ஒரு காலத்தில் 'கிராஜுவேட்' ஆக நமக்கெல்லாம் குறைந்த பட்சம் இருபது வயதுக்கு மேல் ஆக வேண்டி இருந்தது. இப்போதெல்லாம் அப்படி இல்லை. மிகக் குறைந்த வயதிலேயே 'கிராஜுவேட்' ஆகி விடுகிறார்கள். மழலையர் பள்ளியிலிருந்து (KG) முதல்நிலை பள்ளிக்கு 'கிராஜுவேட்' (primary school) ஆனாலும் அதற்கென ஒரு தனி பட்டமளிப்பு விழா.




இது வேறு யாரும் இல்லை. எனது செல்ல மகள். டிகிரி வாங்கி விட்டோம் என்று ஒரே பூரிப்பு.



இந்த கிராஜுவேட் மேலும் பல கிராஜுவேஷன் பெற வேண்டுமென்று மனதார வாழ்த்துவோம்.



நன்றி.

Friday, April 10, 2009

கரணம் தப்பினால் மரணம்


இந்த சொற்றொடர் சர்க்கஸ் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல. மும்பையில் அன்றாடம் லோக்கல் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கும் பொருந்தும். மும்பையில் ஆண்டுதோறும் குண்டு வெடிப்பில் இறப்பவர்களை விட அதிகம் பேர் (ஆயிரக்கணக்கானோர்) ரயிலில் அடிபட்டே இறக்கிறார்கள் என்பது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. இந்நிலைக்கு என்ன காரணம்?

மும்பையின் பூகோள அமைப்பு சற்று விசித்திரமானது. நீளமாக வால் போன்று நீண்டு கிடக்கும் இந்த 'ஏழு தீவுகளால் ஆன நகரத்தில்' முக்கிய அலுவலகங்கள் யாவும் நகரத்தின் தென் கோடியில் அமைந்திருக்க, விண்ணளவு உயர்ந்த குடியிருப்பு வாடகைகள்/ விலைகள் இங்கு பணிக்கு செல்வோரை வட கோடிக்கு தள்ளி விட்டன. இதனால் காலையில் பெரும்பாலான மக்களின் பயணம் தெற்கு நோக்கி. மாலையில் அப்படியே நேரெதிரில். சாலைப் பயணம் என்பது போக்குவரத்து நெருக்கடியால் மிகவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ள, பல லட்சம் வருமானம் பெறுவோர் முதல் அன்றாட காய்ச்சிகள் வரை பயண நேரத்தை மிச்சப் படுத்த லோக்கல் ரயில் வசதியினையே நாடுகின்றனர். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட அறுபது லட்சம் பேர் மும்பை லோக்கல் வண்டிகளில் பயணிக்கின்றனர். விளைவு, இரண்டு மூன்று நிமிடத்திற்கு ஒரு ரயில் வண்டி இருந்தாலும் கட்டுகடங்காத கூட்டம். ரயில் வண்டிகளும் ரயில் நிலையங்களும் மூச்சு திணறுவதை நாம் நேரடியாக பார்க்க முடியும்.

மும்பைக்கு புதிதாக வரும் பலரும் ரயில் விஷயத்தில் முதலில் படு எச்சரிக்கையாக இருக்க முயலுவார்கள். கவனமாக வண்டிக்குள் ஏறவும், அனைத்து விதிமுறைகளையும் ஒழுங்காக பின்பற்றவும் முயற்சி செய்வார்கள். நான் கூட மும்பை வந்த புதிதில், கூட்டமாக வரும் ரயிலை விட்டு விட்டு அடுத்து வரும் ரயிலில் போகலாம் என்று எண்ணுவேன். ஆனால் அடுத்த ட்ரைனிலோ முன்பை விட அதிக கூட்டம் வரும். இப்படி ஒவ்வொரு வண்டியாக தவற விட்டுக் கொண்டே இருந்தால் நேரம்தான் போகும். நெரிசலில்லாத ட்ரைன் கிடைக்காது. சலித்துப் போன பின்னர் ஒரு வழியாக துணிச்சலை வரவழைத்துக் கொண்டு முண்டியடித்து ரயிலுக்குள் நுழைய நேரிடும்.

ஆனால், தினந்தோறும் ஒரே போல எச்சரிக்கையை தொடர்ந்து கடைபிடிக்க முடியாது. அலுவலக வேலைப் பளு, அன்றாட சமூக பொருளாதாரக் கவலைகள், நமது கவனத்தை எளிதில் சிதறடித்து விடும். இதற்கிடையே நமது அன்றாட ரயில் நிலைய செயல்பாடுகள் இயந்திர கதியாக மாறிப் போய் இருக்கும்.

விளைவு தொடரும் விபத்துக்கள்.

இங்கு மனிதச் சாவுகள் ஏராளம்.

பெரும்பாலானோர் ஆகாய நடைபாதையில் செல்லாமல் (நேரத்தை மிச்சப் படுத்த) இருப்புப் பாதைகளை கடக்க முயலுகையில் வேகமாக நிலையத்திற்கு உள்ளே வரும் ரயில் அடிபட்டு மரணமடைகின்றனர்.

மீதிப் பேர் ஓடும் ரயில் ஏறவோ அல்லது இறங்கவோ முயலுகையில் தவறி விழுந்து அடிபடுகின்றனர். மும்பை லோக்கல் ரயில் வண்டிகள் ஒவ்வொரு நிலையத்திலும் சில வினாடிகளே நின்று செல்கின்றன. அந்த சில நொடிகளில் நூற்றுக்கணக்கானோர் வண்டியை விட்டு கீழே இறங்க வேண்டும். நூற்றுக்கணக்கானோர் வண்டிக்குள் ஏற வேண்டும். இதற்கிடையே, ரயில் நிலையத்தில் அவ்வப்போது நடைபெறும் பல்வேறு பராமரிப்பு வேலைகள் வேறு பயணிகளை இக்கட்டுக்குள்ளாக்கும்.

அதிர்ஷ்டவசமாக என் வீடு அலுவலகத்திற்கு அருகேயே அமைந்திருப்பதால், ரயில் பயணங்கள் எனக்கு மிகவும் குறைவு. ரயில் விபத்துக்களை பெரும்பாலும் பத்திரிக்கை வாயிலாகவே அறிந்து வந்திருக்கிறேன்.

இந்நிலையில், தமிழகத்திலிருந்து வந்த சில உறவினர்கள் லோக்கல் ரயில் பயணம் எப்படி இருக்கும் என்று உணர விரும்பியதால், நேற்று ரயில் நிலையத்திற்கு சென்ற போது ஒரு நிகழ்வை நேரில் பார்க்க முடிந்தது. நேற்று உள்ளூர் விடுமுறை நாள் என்றாலும், ரயில்களில் கூட்டத்திற்கு குறைவில்லை.

குடும்பத்துடன் சென்றதால், வழக்கம் போல கூட்டம் அதிகமாக வந்த ஒரு ரயிலை விட்டு, சரி, அடுத்த ரயில் போகலாம் என்று சற்று பின் நகர்ந்தால், ஒருவர் ரயில் பெட்டியின் கதவைப் பிடித்து தொங்கிக் கொண்டு செல்கிறார். முதலில் சற்று புரியாமல் மீண்டும் உற்று நோக்கிய போது அவர் கால்கள் ரயிலுக்கு அடியே நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஓடத் துவங்கிய ரயிலில் நுழைய முயன்ற அவரது கால்கள் "சிலிப்" ஆகி விட பேட்டியினை பிடித்துத் தொங்கிக் கொண்டே செல்கிறார். வண்டியோ சில நொடிகளிலேயே முழு வேகம் பிடித்து விட்டது. அலறியபடியே, அவர் தொங்கி கொண்டே செல்ல சுற்றிலும் உள்ளோர் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர். மும்பை லோக்கல் ரயிலுக்கு புதிய என் உறவினர்களோ இப்படியும் நடக்குமா என்று அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

அதிர்ஷ்டவசமாக, நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட இடத்தில் அவர் கால்கள் இருந்ததால், அந்த ரயில் ரயில்நிலையத்தை தாண்டும் வரை அவருக்கும் ஒன்றும் ஆகவில்லை. ஆனால், அதற்கு பின்னர் என்ன ஆனது என்று எனக்கு தெரிய வில்லை. அதிவேக ரயிலில் அரைகுறையாக தொங்கிக் கொண்டு அதிக தூரம் செல்ல முடியாது. அடுத்த ரயில் நிலையம் வருவதற்குள் அவர் வண்டிக்குள் ஏறியிருந்தால் மட்டுமே தப்பித்திருக்க முடியும்.

அவருக்கு இருபத்தைந்து முப்பது வயதுக்குள் இருக்கலாம். வெளிமாநிலத்தவர் போலவே இருந்தார். அவரை நம்பி யாரெல்லாம் இருக்கிறார்களோ? எங்கே இருக்கின்றனரோ?

ஏன் இப்படி? சில நிமிடங்கள் தாமதித்து பயணம் செய்தால் என்ன? அல்லது சில நிமிடங்கள் முன்னரே கிளம்பினாள் என்ன? உயிரை விட பெரியது எது?

இது போன்ற விபத்துக்களை தடுக்கும் முக்கிய கடமை அரசாங்கத்திற்கு (ரயில்வே துறைக்கு) இருந்தாலும், தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டியதும் தன் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு உறுதி செய்ய வேண்டியதும் ஒவ்வொரு தனி மனிதனின் முதல் கடமை அல்லவா?

நன்றி.

பின்குறிப்பு: இன்று காலை முதல் வேளையாக பத்திரிக்கைகளில் ஏதாவது ரயில் விபத்து பற்றிய செய்தி இருக்கிறதா என்று தேடினேன். நல்ல வேளையாக எதுவும் இல்லை. அதே சமயம், மும்பையில் லோக்கல் ரயிலில் யாரும் அடிபட வில்லை என்றால்தான் அது செய்தி. அந்த அளவுக்கு லோக்கல் ரயில் விபத்துக்கள் இங்கு பழகி விட்டன. அந்த நபர் பிழைத்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும் நம்மால்.

அரசியல்வாதியிடமே "ஆட்டைய" போட்ட பலே திருடர்கள்


நம்மூர் அரசியல்வாதிகள் ஜகதலப் பிரதாபன்கள். ஊரையே அடித்து உலையில் போட்டு காய்ச்சி சுவிஸ் பாங்கிற்கு கொண்டு போய் சேர்ப்பதில் கில்லாடிகள். அத்தகைய அரசியல்வாதி அதுவும் தேர்தலில் போட்டியிடும் ஒரு முக்கிய கட்சி வேட்பாளரிடம், "அபேஸ்" செய்யவும் வல்ல சில வல்லவனுக்கும் வல்லவர்கள் நம் நாட்டில் உள்ளார்கள் தெரியுமா?

தென் கோவா தொகுதியில் போட்டியிடுபவர் திரு.நரேந்திர சவோய்க்கர். இவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர். இவருடைய முக்கிய தேர்தல் கோஷம்: " கோவா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது". இது வரை மக்கள் இவர் கூற்றை நம்பினார்களோ இல்லையோ, இனி மேல் நம்பித்தான் ஆக வேண்டும். ஆம். பலே திருடர்கள் இவரிடமே தமது கை வரிசையை காட்டி விட்டனர். அதுவும் ஒரு மிகப் பழைய தந்திரத்தை பயன்படுத்தி.

சம்பவத்தன்று தென் கோவா தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நரேந்திர சவோய்க்கரின் அருகே இரண்டு பேர் வந்தனர். அவர் தோளைத் தட்டிய ஒருவர், "கீழே கிடப்பது உங்கள் பணமா என்று பாருங்கள்" என்று சொன்னார். ஆவலுடன் கீழே குனிந்த (மற்றவர் பணத்தையே விடாத அரசியல் வியாதிகள் தங்கள் சொந்த பணத்தையா விட்டு விடப் போகிறார்கள்) அவரிடமிருந்த லேப்டாப் கணினியை பறித்துக் கொண்டு நொடியில் தலை மறைவாகி விட்டனர்.

அரசியல்வாதியையே கணநேரத்தில் அசத்திய அவர்கள் சாதாரணமான ஆட்களாக இருக்க முடியாது. சொல்ல முடியாது, அவர்கள் ஏதேனும் வேறு தொகுதிகளில் போட்டியிடுபவர்களாகவும் கூட இருக்கலாம்.

நரேந்திராவுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதே நேரத்தில், திருடர்களின் கைவரிசையில் ஏமாறலாம், ஆனால் எக்காரணம் கொண்டும் "கையிடம்" ஏமாந்து போகாதீர்கள் என்றும் ஒரு நல்லெண்ண எச்சரிக்கையும் விடுப்போம்.

நன்றி.

சொந்த கார் கூட இல்லாத அரசியல் தலைவர்கள்


இவர்களுக்கு நம் 'மக்கள் காரான' நானோ காரை பரிந்துரைக்கலாமா?

வருகிற மக்களவை தேர்தலை முன்னிட்டு நம் அரசியல் தலைவர்கள் அவர்களது சொத்து விவரத்தை சமீபத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த பட்டியலைப் பார்த்த போதுதான் நமது அரசியல் தலைவர்கள் எல்லாம் எவ்வளவு கஷ்ட ஜீவனத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்று புரிய வந்தது. மாத சம்பளம் வாங்கும் நம்மைப் போன்ற நடுத்தர மக்களெல்லாம் நல்ல கார் வசதியோடு இருக்கும் போது, நமக்காக ஓடியாடி வேலை செய்யும் நமது அரசியல் தலைவர்கள் சொந்தக் கார் இல்லாமல் கஷ்டப் படலாமா?

ஒரு வேளை இவர்களுக்காகத்தான் ரத்தன் டாட்டா நானோ கார் தயாரிக்க முடிவு செய்தாரா?

சொந்தக் கார் இல்லாமல் கஷ்டப் படும் அரசியல்வாதிகள் கீழே.

ஷரத் பவார்: உலகிலேயே அதிக வருமானம் பார்க்கும் விளையாட்டு அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர். பல ஆண்டுகளாக மத்திய அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதவிகளில் இருந்து வருபவர். மகாராஷ்ட்ராவின் அதுவும் முக்கியமாக "சர்க்கரை பிரதேசத்தின் " அசைக்க முடியாத தலைவர். பல வருடங்களாக இந்திய பிரதமர் பதவியின் கண் வைத்து வருபவர். (பதவிக்காக பல அணிகள் மாறி வந்தாலும் இது வரை கண் மட்டும்தான் வைக்க முடிந்துள்ளது). சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ஒன்பது கோடி ரூபாய். ஆனாலும் சொந்தமாக கார் இல்லை.

சுப்ரியா சுலே: இவர் ஷரத் பவாரின் அன்பு மகள். அரசியல் வாரிசாக பாரமதி தொகுதியில் போட்டி இடுகிறார். தனக்காக இல்லையென்றாலும் தன் மகளுக்காகவாவது கார் வாங்கித் தந்திருக்க வேண்டாமா? (மாத சம்பளம் வாங்கும் என்னிடம் தனக்கென ஒரு நானோ கார் வேண்டுமென இப்போதே அடம் பிடிக்கிறது என் வீட்டு சுட்டி) இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 52 கோடி ரூபாய். ஆனால் பாவம் காரில்லை.

சோனியா காந்தி: ஒரு முன்னாள் பிரதமரின் மருமகள். இன்னொரு முன்னாள் பிரதமரின் மனைவி. இந்தியாவின் மிகவும் பழைய கட்சியின் தலைவி. நடப்பு மத்திய அரசை இவர்தான் பின்னிருந்து நடத்துகிறார் என்றும் சொல்லப் படுகிறது. இவரது கணவர் ஒரு முன்னாள் பைலட் கூட. இவர் முக்கிய அரசியல் தலைவர்களிலேயே மிகவும் ஏழை போல. இவர் சொத்து மதிப்பு வெறும் (கிட்டத்தட்ட) ஒரு கோடிதான். ஆனால் சொத்தே இல்லாதவர்கள் அதுவும் கடனாளிகள் பலர் கூட சொந்தமாக கார் வைத்திருக்கும் போது, இவரிடம் சொந்தக் கார் இல்லாதது பரிதாபத்துக்குரியதே.

ராகுல் காந்தி: வயதான அம்மாவிடம் கார் இல்லை என்றால் பரவாயில்லை. இளமையான மகனிடம் கார் இருக்க வேண்டாமா? இத்தனைக்கும் இவர் சொத்து மதிப்பு அம்மாவை விட அதிகம். நேரு-காந்தி வம்சத்தில் பிறந்த ஒருவர் சொந்தக் கார் இல்லாமல் இருக்கலாமா? இது இந்தியர்கள் அனைவருக்கும் அவமானகரமான விஷயமல்லவா? ஒரு வேளை இந்த அவமானத்தை துடைக்கத்தான் உலகிலேயே சல்லிசான கார் தயாரிக்க டாட்டா முடிவு செய்தாரா?

அத்வானி : இந்தியாவின் இன்றைய இரும்பு மனிதர் என்று பெயரெடுக்க ஆசைப் படுபவர். இங்கிலாந்து பாணியில் சொல்லப் போனால் பல வருடங்களாக நிழல் பிரதமராக இருந்து வருபவர். முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் துணைப் பிரதமர். முக்கிய எதிர்கட்சியின் முக்கிய தலைவர். இந்த வயதிலும் வெற்றிக்காக சலிக்காமல் பாடுபடுபவர். இவர் சொத்து கிட்டத்தட்ட மூன்று கோடி. வசிக்க வீடு உள்ளது. ஆனால் பாருங்கள், வயதான காலத்தில் வசதியாக சென்று வர சொந்தமாக கார் இல்லை.

காங்கிரஸ் அரசில் மத்திய அமைச்சராக இருக்கும் ரேணுகா சவுத்ரி, ஆறு கோடி சொத்துள்ள பிஜேபி வேட்பாளர் கிரண் படேல், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜெயபால் ரெட்டி (சொத்து சுமார் ஐந்து கோடி), ஷங்கர்சிங் வகேலா (சொத்து ஒன்றரை கோடி), சஞ்சய் தத்துக்கு பதிலாக லக்னோவில் களமிறக்கப் படும் நபிஸா அலி போன்றவர்கள் கூட சொந்தமாக கார் வைத்திருக்க வில்லை என்று தேர்தல் கமிஷனிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த அரசியல் தலைவர்களுக்கு நானோ காரை முன்னுரிமையில் வழங்க ரத்தன் டாட்டாவிடம் நாம் பரிந்துரை செய்வோம். என்ன இருந்தாலும் மக்களுக்கு முன் மக்கள் தலைவர்கள் இல்லையா?

நன்றி.

Tuesday, April 7, 2009

தொடரும் கிரிக்கெட் வெற்றிகள் - இந்திய அணியின் மாற்றத்திற்கு காரணம் என்ன?


உலகின் கடைசி அரணாக கருதப் பட்ட நியூசிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி இப்போது வெற்றிக் கொடி நாட்டி உள்ளது. 'உள்ளூரில் புலி வெளியூரில் எலி' என்றே ஒரு காலத்தில் கருதப் பட்டு வந்த இந்திய அணி , இந்த வெற்றியுடன் சேர்த்து, கடந்த எட்டு ஆண்டுகளில், கிரிக்கெட் விளையாடும் அனைத்து அந்நிய நாடுகளிலும் இந்திய அணி வெற்றிக் கனியை ருசித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. முன்பெல்லாம் வெற்றிகளை விட தோல்விகளையே அதிகம் சந்தித்து வந்த இந்திய அணி, இப்போது உலகின் தலை சிறந்த மூன்று அணிகளில் ஒன்றாக கருதப் படுகிறது.

எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? காரணங்கள் என்ன? ஒரு சிறிய அலசல் இங்கே.

1990 களில் இந்திய அணியின் கேப்டன் ஆக இருந்த அசாருதின் சூதாட்ட புகார்களில் சிக்கி அணியை விட்டு விலக்கப் பட்ட நேரம் அது. கிரிக்கெட் ஜீனியஸ் ஆக கருதப் பட்ட டெண்டுல்கர் கேப்டன் பதவியில் சாதிப்பார் என்ற கணிப்பு விரைவிலேயே பொய்யாகி, இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே தென் ஆப்ரிக்க அணியிடம் மண்ணை கவ்வி மக்கள் மதிப்பை கிட்டத் தட்ட முழுமையாக இழந்திருந்த நேரம் அது.

அதன் பின்னர் இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணியிடம் முதல் டெஸ்டை மூன்று நாட்களில் தோற்றுப் போன சோகம் தீருவதற்குள், இரண்டாவது டெஸ்டில் பாலோ ஆன் வேறு இந்தியாவை வாட்டி எடுத்தது. ஒரு இந்திய வீரரால் தோல்வியில் இருந்து அணியை மீட்டெடுப்பதுடன், வெற்றிப் பாதைக்கும் அழைத்துச் செல்ல முடியும் என்று அன்று நிரூபித்தவர் விவிஎஸ் லக்ஷ்மன். அந்த மாட்சில், அவரடித்த 281 ரன்கள் இந்திய அணி வீரர்களுக்கு ஒரு புதிய மனத் தெம்பைக் கொடுத்தது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், 1990 களின் கதாநாயகனாக டெண்டுல்கர் இருந்தாலும், இந்திய அணியின் வெற்றிப் பாதைக்கு முதன் முதலில் வித்திட்டவர் விவிஎஸ் லக்ஷ்மன் என்றால் மிகையாகாது.

இரண்டாவது முக்கிய காரணம் கேப்டன் சவுரவ் கங்குலி. பொதுவாகவே (முக்கியமாக வெளிநாடுகளில்) தடுப்பு ஆட்டத்திற்கே பெயர் பெற்ற இந்திய அணியின் முதல் ஆக்ரோஷமான கேப்டன் ஆக கருதப் பட்டவர் கங்குலி. அன்றைய காலகட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை வெல்வதே கடினம் என்று பலரும் எண்ணியிருக்க அவர்களது சொந்த மண்ணிலேயே அவர்கள் பாணியிலேயே ஆக்ரோஷமாக விளையாடி அவர்களை மண்ணைக் கவ்வ வைத்தவர் அவர். கடைசி போட்டியில் ஸ்டீவ் வாவ் ஆட்டம் மற்றும் அம்பயர்களின் சில தவறான முடிவுகள், இந்தியாவின் மிகப் பெரிய கனவான "ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றி"யை தட்டிப் பறித்தாலும், அந்த தொடர் இந்தியர்களுக்கு ஒரு மிகப் பெரிய தன்னம்பிக்கையை அளித்தது.

கங்குலியின் மற்றுமொரு முக்கிய சாதனை, 'தனியாக உலகின் சிறந்த வீரர்கள் ஆனால் குழுவாக மிக மோசமான அணி' என கருதப் பட்ட, "சிறு அணிக்குள் பற்பல கோஷ்டிகளாக" சிதறிக் கிடந்த இந்திய அணியில் ஒரு குழு மனப்பான்மையை கொண்டு வந்தது. (இந்த குழு மனபான்மையை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ள டோனியும் பாராட்டுக்குரியவரே). மேலும் கங்குலி, இளைய தலைமுறையினரை பெரிதும் ஊக்குவித்து பல இளம் வீரர்கள் ஜொலிக்கவும் முக்கிய காரணமாகவும் இருந்தார். தேர்வுக் குழுவின் ஆதிக்கத்தை சற்று குறைத்து கேப்டன் சொல்லுக்கு தனி மரியாதை தேடியும் தந்தார். இந்திய கேப்டன் என்றால் சவுரவ் என்றே ஞாபகம் வருமளவுக்கான அவருடைய இந்த சாதனைகளே இன்றைய இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளன என்றால் மிகையாகாது.

அடுத்த காரணமாக, உலக அளவில் ஏற்பட்ட சில மாற்றங்களை சொல்லலாம். முந்தைய தலைமுறையைப் போல நடுநடுங்க வைக்கும் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்கள் இப்போதெல்லாம் உருவாவதில்லை. இந்த தலைமுறையில் கூட, சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களான மக் கிராத் போன்றவர்கள் ஓய்வு பெற்று விட்டனர்.

மேலும், இப்போதெல்லாம் உலக அளவில் மட்டையாளர்களே அதிகப் புகழ் பெற்று வருகின்றனர். இதனால், உலக நாடுகளில் இப்போதெல்லாம் மட்டையாளர்களுக்கு சாதகமான ஆடு தளங்களே பெரும்பாலும் உருவாக்கப் படுகின்றன. இது இந்திய மட்டையாளர்களுக்கு சாதகமான ஒன்றாக அமைந்து விட்டதுடன் வெளிநாடுகளிலும் இந்திய அணி சம வலிமையுடன் திகழ உதவுகிறது. இந்த நியூசீலாந்து தொடர் போல, எப்போதுமே மட்டையாளர்களுக்கு சாதகமான ஆடுதளங்கள் தயாரிக்கப் பட்டதில்லை என்று கூறப்படுவது குறிப்பிடத் தக்கது.

இந்தியா கூட முன்பு போல சுழற் பந்து வீச்சாளர்களின் அணியாக மட்டுமே அறியப் படுவதில்லை. இந்தியாவாலும் இப்போதெல்லாம் மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்கள் உருவாகி வருகின்றனர். ஒரு மாட்சை டிரா செய்ய மட்டையாளர்கள் முக்கியம். ஆனால் வெற்றி பெற பந்து வீச்சாளர்களே முக்கியம் என்பது குறிப்பிடத் தக்கது. முன்னர் இருந்த ஸ்ரீநாத், பிரசாத் போன்றவர்கள் அதிக பட்சம் எதிர் அணியினரை சற்று பயமுறுத்தவே செய்திருக்க ஜாகிர் கான், இஷாந்த் ஷர்மா, பாலாஜி, இர்பான் பதான் போன்ற புதிய பந்து வீச்சாளர்கள் பெருமளவில் விக்கெட்டுகளை சாய்த்து இந்தியாவுக்கு வெளிநாடுகளில் வெற்றியை தேடித் தந்துள்ளனர். வெளிநாடுகளில் கூட இந்தியா முழுக்க முழுக்க சுழற் பந்து வீச்சாளர்களையே நம்பியிருந்த காலம் மலையேறிப் போய், இப்போதெல்லாம் வெளிநாட்டு அணிகளே, நமக்கெதிராக அதிக சுழற் பந்து வீச்சாளர்களை களம் இறக்குவதை பார்க்க முடிகிறது.

அடுத்த முக்கிய காரணம், உலக அளவில் மிகச் சிறந்த மட்டையாளர்கள் இந்திய அணியில் இருப்பது. முன்னொரு காலத்தில் கடைசி அரை நாள் மட்டும் மட்டை பிடித்தால் போதும், தோல்வியைத் தவிர்க்கலாம் என்ற நிலை இருந்தாலும், அடம் பிடித்து விடாமல் தோற்ற காலம் போய், அந்நிய மண்ணில் இரண்டரை நாட்கள் தொடர்ந்து மட்டை பிடித்து தோல்வியை தவிர்க்கும் அளவுக்கு நம்பிக்கை இப்போதைய அணியில் உருவாகி உள்ளது.

நம் வீரர்களில், சேவாக் சில மணி நேரம் ஆடுகளத்தில் இருந்தாலே மாற்று அணியினரின் வயிற்றில் புளியை கரைத்து விடுவார். காம்பிர் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு புதிய நட்சத்திரம். நிலைமைக்கு தகுந்தாற் போல இவர் விளையாடுவது பாராட்டத் தக்கது. டெண்டுல்கர் வயது ஏறினாலும் காரம் குறைய வில்லை. திராவிட் வெளிநாடுகளில் இந்திய அணிக்கு தொடர்ந்து ஒரு பெரிய பலமாக இருப்பவர். விவிஎஸ் லக்ஷ்மன் பற்றி சொல்லவே வேண்டாம். இந்திய பேட்டிங் வரிசையில் ஒரு ஆச்சரிய வரவு டோனி. அவர் பேட்டிங் ஸ்டைல் வித்தியாசமாக இருந்தாலும் ஆட்டத்திற்கு ஆட்டம் சோடை போகாமல் ரன்களை குவிப்பது பாராட்டத் தக்கது.

தற்போதைய இந்திய அணியை எந்த அளவிலும் குறைத்து மதிப்பிட முடியாது என்றாலும், நாற்பத்து ஒரு ஆண்டுகளாக நியூசீலாந்து மண்ணில் தொடர்ந்து தோற்றுக் கொண்டே வந்ததாலேயே இப்போதைய வெற்றி நமக்கு பெரிதாக தெரிகிறது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இது போன்ற வெற்றி நாற்பத்து ஒரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் என்றால் இந்த வெற்றியில் பெருமைப் பட ஒன்றுமே இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். எனவே, இந்திய அணி தொடர்ந்து பல வெற்றிகள் பெற்றாலேதான் அவர்களை உலகத்தின் சிறந்த அணிகளுள் ஒன்றாக கருதவும் இந்த அணியைப் பற்றி பெருமை கொள்ளவும் முடியும்.

இப்போதைய இந்திய அணியில் பாராட்டத் தக்க விஷயங்கள் பல இருந்தாலும், உலக தர வரிசையில் தொடர்ந்து சிறந்த இடம் வகிக்க இந்திய அணி கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. டெண்டுல்கர், டிராவிட் போன்றவர்கள் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெற்று விடுவார்கள். அவர்களுக்கு பின்னர் நல்ல மட்டையாளர்களை இப்போதே உருவாக்க வேண்டும். யுவராஜ் போன்றவர்கள் சமயத்தில் சிறப்பாக விளையாடினாலும் காம்பிர் போன்று தொடர்ந்து சிறப்பாக விளையாடுபவர்களே அணியின் அவசிய மற்றும் உடனடித் தேவை. அடுத்த படியாக, அணியின் பீல்டிங் மற்றும் உடல் தகுதி சற்று தரம் தாழ்ந்ததாகவே உள்ளது. இதையும் சரி செய்ய வேண்டியது அவசியம்.

விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்காமல், விளையாட்டு வீரர்களை தனிப் பட்ட முறையில் ஹீரோக்களாக ஆக்கி, அவர்களுக்கு ஒருவித நிர்பந்தத்தை அல்லது மயக்கத்தை ஏற்படுத்தாமல் அவர்களை தொடர்ந்து விளையாட்டிலேயே கவனம் செலுத்த அனுமதிப்பது நம் போன்றவர்களின் கடமையாகும்.

தனித் தனியாக சாதிப்பதை விட ஒரு குழுவாக சாதிப்பதிலேயே மேன்மையும் பெருமையும் அடங்கியிருக்கிறது என்பதை அனைத்து இந்தியரும் புரிந்து கொண்டு, இன்று இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வெற்றியை ஒரு நாடாகவும் ஒற்றுமையாக நின்று அடைய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

நன்றி.

Sunday, April 5, 2009

தேவை ஒரு வேகத் தடை ?


நெருப்பை பெட்ரோல் ஊற்றி அணைப்பது மற்றும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பது போன்ற உலகின் பல அரசாங்கங்கள் தொடர்ந்து எடுத்த எடுத்த முயற்சிகள், செய்திகளுக்காக, பல மாதங்களாக தவம் கிடந்த சந்தைகளுக்கு வரமாக கிடைத்தன. பலன், சந்தைகளின் வெற்றி நடை நான்காவது வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வெற்றி நடைக்கு தேவை இப்போதைக்கு ஒரு வேகத் தடை. இல்லையென்றால், மற்றுமொரு மிகப் பெரிய வீழ்ச்சிக்கு நம்மை நாமே தயார் படுத்தி கொள்ள வேண்டியிருக்கும்.

சென்ற வார துவக்கம் பங்கு சந்தைகளுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. அமெரிக்க வாகனத் துறைக்கு அந்த நாட்டு அரசு உடனடியாக மீட்டெடுப்பு உதவி எதுவும் உடனடியாக வழங்காது என்ற செய்தி சந்தைகளுக்கு இடியென வந்தது. நம் சந்தைகளின் முக்கிய குறியீடுகள் பெரிய அளவில் வீழ்ந்தன. அதே சமயத்தில், உள்ளூர் வர்த்தகர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள சிறிய மற்றும் மத்திய ரக பங்குகள் அதிகம் வீழாதது குறிப்பிடத் தக்கது. வருட இறுதி மதிப்பிட்டுக்காக உள்ளூர் பரஸ்பர நிதிகள் பெருமளவில் பங்குகளை வாங்கியதும் சந்தை பெரிய அளவில் விழாமல் காப்பாற்றியது.

அமெரிக்க வங்கிகள் தமது மதிப்பிழந்த சொத்துக்களை தமது விருப்பத்திற்கேற்ற படி மதிப்பீடு செய்து கொள்ளலாம் என்ற அமெரிக்க கணக்கியல் அமைப்பின் அறிவிப்பு அங்கு மட்டுமல்லாமல் இங்குள்ள சந்தைகளுக்கும் ஒரு பெரிய சந்தோசத்தை அளித்தது. அதே போல இந்திய வணிக நிறுவனங்கள் அந்நிய செலவாணி வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்புகளை தமது நிதி அறிக்கையில் நஷ்டமாக காட்ட வேண்டியதில்லை என்ற உள்ளூர் அறிவிப்பும் நமது சந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் நஷ்டங்களை (தற்காலிகமாக) மறைக்க உதவும் இது போன்ற நடவடிக்கைகளினால் வணிக நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் உண்மையான பயன் வந்து விடப் போவதில்லை. மேலும் இந்த இழப்புக்களை சரிகட்டாமல் அல்லது தடுக்காமல் குறைந்த பட்சம் வெளிப்படுத்தாமல் அப்படியே தொடர்ந்து மறைத்து வரும் போது, ஒரு காலகட்டத்தில் நஷ்டங்கள் பெருகி வங்கி/வணிக நிறுவனமே மூடப் படும் அபாயமும் கூட உண்டு.

இது கசப்பான உண்மையாக இருந்தாலும் கூட, வியாதியஸ்தர்களுக்கு வலி மறப்பு மருந்து கொடுத்து கொஞ்சம் நேரம் வலியை மறக்கச் செய்வது போன்ற இத்தகைய முயற்சிகள் சந்தைகளை உற்சாகப் படுத்தி கொண்டேதான் இருக்கின்றன. சந்தைகளை குறை கூறி பயனில்லை. எத்தனை நாளைக்குத்தான் தொடர்ந்து வீழ்ந்து கொண்டே வருவது? நாங்களும் (தற்காலிகமாவது) லாபம் பார்க்க வேண்டாமா?

தவறான வணிக முறைகளினால் பெருமளவு நஷ்டத்தை சந்தித்து வரும் அமெரிக்க வணிக நிறுவனங்களுக்காக அந்த அரசு இது வரை சுமார் $2.6 டிரில்லியன் டாலர் அளவு பணத்தை வாரி இறைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சொல்லுங்கள் பார்ப்போம்.

உண்மையில் இது யாருடைய பணம்?

அமெரிக்க மக்களின் வரிப் பணம் மற்றும் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் ஏற்றுமதி செய்து சம்பாதித்த டாலர் பணம்தான், இப்படி வாரி இறைக்கப் படுகிறது. எல்லாவற்றுக்கு சிகரமாக, G-20 மாநாடு, இன்னுமொரு $1.1 டிரில்லியன் பணத்தை வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத்தில் உள்ள சர்வதேச நிதி அமைப்பிடம் (IMF) வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இந்தப் பணம், கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வரும் இங்கிலாந்து நாட்டை காப்பாற்ற உபயோகப் படுத்தப் படும் என நிதி வட்டாரங்கள் கருதுகின்றன.

ஆக மொத்தத்தில், சில தனியார் நிறுவனங்களை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றுவதற்காக இன்று உலக அரசாங்கங்கள் பொது மக்களின் பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த உதவிகள் சரியாக பயன்படுத்தப் படாமல், பன்னாட்டு தனியார் நிறுவன அதிகாரிகள் (மீண்டும் மீண்டும்) அதிக போனஸ் பெறுவதற்கும் தனியார் ஜெட்டில் பயணம் செய்வதற்கும் உபயோகப் படுத்தப் பட்டால் உலகம் கூடிய சீக்கிரம் ஒரு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும்.

இப்போது நம்மூர் சந்தைகளுக்கு வருவோம். மேற்சொன்ன செய்திகளின் அடிப்படையில் நம் சந்தைகள் சென்ற வாரம் தனது வெற்றி நடையை தொடர்ந்தது. உலக பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்றால் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் அந்தத் துறை பங்குகள் பெருமளவு உயர்ந்தன. நஷ்டங்களை தற்போதைக்கு தவிர்க்க உதவும் AS-11 திருத்தம், ரிலையன்ஸ் போன்று அந்நிய செலவாணி இழப்பு சிக்கலில் மாட்டிக் கொண்ட இந்திய நிறுவனங்களின் பங்குகள் பெருமளவு உயர உதவின, வாகன விற்பனை முன்னேற்றம் கண்டிருப்பதை தொடர்ந்து அந்தத் துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. அமெரிக்காவில் பொருளாதார பின்னடைவு தவிர்க்கப் படும் என்ற நம்பிக்கையில் மென்பொருள் நிறுவனப் பங்குகள் உயர்ந்தன. நானோ தந்த உற்சாகத்தில் டாடா குழும பங்குகளும் உயர்ந்தன.

நாம் ஏற்கனவே பல முறை குறிப்பிட்டிருந்தபடி, நிபிட்டி குறியீடு தனது முக்கிய இலக்கான 3200 புள்ளிகளை இந்த வாரம் வெற்றிகரமாக அடைந்தது.

இனிமேல் நாம் என்ன செய்வது என்பது ஆழ்ந்து யோசிக்க வேண்டிய ஒரு விஷயம்.

ஏற்கனவே சொன்னபடி, சந்தைகளில் புதிய உற்சாகம் வந்திருப்பதும், சிறிய மத்திய ரக பங்குகள் தொடர்ந்து உயர்வதும், தினசரி வர்த்தக அளவு அதிகரித்திருப்பதும் நல்ல விஷயங்கள்தான். அதே சமயம், இது வரை குறைந்த விலையில் வாங்கி உள்ளவர்கள், இப்போது லாப விற்பனை செய்யும் பட்சத்தில் சந்தைகள் சரிவை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.

தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி குறியீட்டின் அடுத்த இலக்கு 3800 புள்ளிகள். 3300௦௦ அளவிலும் நல்ல எதிர்ப்பு இருக்கும். அதே சமயம் 3100 புள்ளிகளுக்கு கீழே நிபிட்டி சென்றால் சந்தை பெரிய வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும். வர்த்தகர்கள் 3100 அளவை மனதில் வைத்துக் கொண்டு குறுகிய கால வர்த்தகம் செய்யலாம். கீழே 2970௦ அளவில் நல்ல அரண் இருக்கும்.

முதலீட்டாளர்கள் தொடர்ந்து நல்ல டிவிடென்ட் தரும் நிறுவனங்களில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம்.

நாம் ஏற்கனவே குறிப்பிட்ட படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 க்கு கீழ் இறங்காமல் இருந்தது குறிப்பிடத் தக்கது. சந்தைகள் எதிர்பார்த்த படி பெருமளவு அந்நிய முதலீடு இந்தியாவிற்குள் வராமல் போனதும் கவனிக்கத் தக்கது. பங்கு வர்த்தகர்கள் ரூபாய் மற்றும் அந்நிய வரவுகளில் ஒரு கண் வைத்தபடி வர்த்தகம் செய்வது நல்லது.

ஆக மொத்தத்தில், சந்தைகள் இன்னும் மேலே செல்ல வாய்ப்பு இருந்தாலும், சற்று எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Saturday, April 4, 2009

இந்தியப் பொதுத் தேர்தல்கள் - சில சுவாரஸ்ய தகவல்கள்


இந்திய வரலாற்றில் 1989 தேர்தல்கள் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தின. ஒரு கட்சி ஆதிக்கம் முடிவுக்கு கொண்டு வரப் பட்டதுடன், இந்தியாவிற்கு மிகவும் புதியதான (1977 ஜனதா அரசு சற்றே வேறுபட்டது) ஒரு கூட்டணி ஆட்சி முறை அறிமுகப் படுத்தப் பட்டதுடன், அந்த முறை தொடர வலுவான அச்சாரமும் போடப்பட்டது. அன்று முதல் இன்று வரை அரசியலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் தொடருகின்ற சில பொதுவான விஷயங்கள் நம்மை ஆச்சரியப் படுத்துகின்றன.

ஒரு கட்சி அல்லது ஒரு குடும்ப ஆட்சி என்றிருந்த நிலையிலிருந்து முற்றிலும் விலகி, இந்தியா ஒரு புதிய ஜனநாயக பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் சில சுவாரஸ்யங்கள் இங்கே.

1989 க்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை. 1991 காங்கிரஸ் அரசு தவிர அனைத்து அரசாங்கங்களும் பல கட்சிகளின் கூட்டணி அரசாங்கமாகவே அமைந்தன. 1991 தேர்தலில் கூட தேர்தலில் மெஜாரிடி பெற முடியாத காங்கிரஸ் மற்ற கட்சிகளில் இருந்து வெளியேறியவர்களின் துணையுடன் பின்னர் பெரும்பான்மையை ஏற்படுத்திக் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. 1996 இல் பிஜேபி தனி ஆட்சி முயற்சி உடனடி தோல்வி கண்டது.

1991 க்கு பிறகு நடைபெற்றுள்ள அனைத்து தேர்தல்களிலும் மாநில/ பிராந்திய விவகாரங்களே அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதே போல மாநில கட்சிகளின் பலம் தேசிய அளவில் மிகுந்துள்ளது. முக்கியமாக இரண்டு மூன்று தொகிதிகளைப் பெறும் கட்சிகள் கூட பெரிய அளவில் பேரங்கள் பேச துவங்கி விட்டன. "மாநிலத்தில் நாங்கள் மத்தியில் நீங்கள்" என்ற உடன்பாடு மாறிப் போய், மாநிலத்தில் நாங்கள் மத்தியில் நாம்" என்ற வகையிலான புதிய உடன்பாடுகள் ஏற்பட துவங்கி விட்டன. தேசிய கட்சிகளின் பலம் மங்கி மாநில கட்சிகளுக்கு பல வகையிலும் ஒத்துப் போக வேண்டிய கட்டாயங்கள் ஏற்பட்டுள்ளன. பல சமயங்களில் தனக்கு கீழே பணியாற்ற வேண்டிய அமைச்சர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கூட பிரதமருக்கு வழங்கப் படவில்லை.

1989 க்கு பிறகு எந்த ஒரு தேர்தலிலும் பிரதமராக முன்னிறுத்தப் பட்டவரின் கட்சி அல்லது கூட்டணிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை. பிரதமர் வேட்பாளராக களம் கண்டு பிரதமரான 1998 தேர்தலில் வாஜ்பாயீ கூட அவரது தலைமையை வெளியில் இருந்து ஆதரித்த தெலுங்கு தேசத்தின் துணையுடனேயே முழுப் பெரும்பான்மையை அடைய முடிந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

வாஜ்பாயி அவர்கள் தவிர, மற்ற அனைத்து பிரதமர்களும் தேர்தலுக்கு பின்னரே முடிவு செய்யப் பட்டனர். பல தருணங்களில் மக்களுக்கு, தேர்தலுக்கு பிறகான பிரதமர் தேர்வு மிகப் பெரிய ஆச்சரியத்தையே அளித்து. மேலும், அவர்கள் சொந்த கட்சி/ கூட்டணியிலேயே இரண்டாவது மூன்றாவது சாய்ஸ் ஆக இருந்தது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக, தேவ கௌட, மன்மோகன் சிங் போன்றவர்கள் பிரதமர் ஆவார்கள் என்று அவர்களே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

1989, 1996 தேர்தல்கள் (மூன்றாவது அணி ஆட்சி) தவிர அனைத்து தேர்தல்களிலும், பெரிய இரண்டு கட்சிகளில் எந்த கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் கிடைத்தனரோ, அந்த கட்சியின் தலைமையிலேயே ஆட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன.

1999 தேர்தல் தவிர அனைத்து தேர்தல்களிலும் ஆளும் கட்சி/ கூட்டணி தோல்வியைத் தழுவின.

விடுதலை பெற்றதிலிருந்து 1989 வரை (இடையில் சிறிது காலம் தவிர்த்து) ஆட்சியில் இருந்து வந்த நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் 1989 தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவிக்கு வர வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

எப்போதெல்லாம் மூன்றாம் அணி பதவிக்கு வந்ததோ அப்போதெல்லாம் நம்மால் இரண்டு பிரதமர்களைப் பார்க்க முடிந்தது.

இந்த தேர்தலுக்கு வருவோம்.

இந்த தேர்தலில் குறைந்தது 10 பேருக்கு பிரதமர் பதவியை அடைய வாய்ப்புக்கள் உள்ளன. ஒரு மாநிலத்தை மட்டுமே சார்ந்த கட்சித் தலைவர்கள் கூட பிரதமர் கனவில் மிதக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் (கிட்டத்தட்ட) அனைத்துக் கட்சிகளும் 1991 க்கு பிறகு ஏதேனும் ஒரு அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றன. அல்லது ஏதேனும் ஒரு அரசாங்கத்தில் முழு செல்வாக்கு கொண்டு இருந்திருக்கின்றன. பதவி மற்றும் செல்வாக்கை உபயோகித்துக் கொண்டு பல காரியங்களை சாதித்திருக்கின்றன. பதவிக்காகவும் செல்வாக்குக்காகவும் கூசாமல் கூட்டணி மாறி வந்துள்ளன.

இந்த தேர்தலில், கிட்டத்தட்ட ஐந்நூறு தொகுதிகள் சீரமைக்கப் பட்டவையாக உள்ளன. இந்த சீரமைப்புக்கள் பல "வாக்கு வங்கிக் கணக்குகளை" புரட்டிப் போடக் கூடும் எனக் கருதப் படுகிறது. இது பல வேட்பாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஏறத்தாழ 10 கோடி புதிய வாக்காளர்களுக்கு வோட்டுரிமை இந்த தேர்தலில் புதிதாக கிடைக்க இருக்கிறது.

முந்தைய தேர்தல்கள் போல அல்லாமல் இந்த தேர்தலில் தொகுதி உடன்பாடுகள் மிகவும் குறைவாக உள்ளன. பல கட்சிகளும் தமது சொந்த பலத்தை சோதித்து பார்த்து விடும் முனைப்பில் உள்ளன. இரண்டு மூன்று தொகுதி கூட பேரம் பேசும் வலிமையை தருவதால், இந்த துணிச்சலான முயற்சி என்று நினைக்கிறேன்.

இதுவரை இலவசங்களை அள்ளி வீசுவது மாநில கட்சிகளின் பாணியாக மட்டுமே இருந்து வந்திருக்க , இந்த முறை தேசிய கட்சிகளும் பல்வேறு இலவசங்களை அறிவித்துள்ளன,

இந்த தேர்தலிலும் எந்த ஒரு தனிக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் தனி மெஜாரிடி கிடைக்கும் என்று தோன்ற வில்லை. தேர்தலுக்கு பின்னர் எந்த கட்சி எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கலாம் என்ற நிலைதான் இந்த தேர்தலிலும் உள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றாக இடம் பிடிக்க வல்ல நமது இந்தியப் பொதுத் தேர்தல்களில் சுவாரஸ்யத்திற்கும் என்றும் பஞ்சமில்லை. சுவாரஸ்யங்களை கண்டு ரசிக்கும் அதே வேளையில் வாக்களிக்கும் கடமையை மறந்து விட வேண்டாம்.

நன்றி.

Friday, April 3, 2009

புத்தாண்டு தினத்தின் பலன்கள்


பொதுவாக புத்தாண்டு பலன்கள் என்று சொல்லும் போது, அடுத்து வருகின்ற புதிய ஆண்டு மொத்தத்திற்கான பலன்கள் என்பதையே குறிப்பது வழக்கம். ஆனால் புத்தாண்டு தினத்திற்கென்றே சில பலன்கள் அதாவது சில நன்மைகள் உண்டு தெரியுமா?

இந்தியா போன்ற பல்வேறு மதம், மொழி, இனத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் ஒரு பெரிய நாட்டில் பல புத்தாண்டு தினங்கள் வருவதுண்டு. தமிழ் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, விஷூ (மலையாளம்), யுகாதி (கன்னட மற்றும் தெலுங்கு), குடி படவா (மராத்தி), பார்சி புத்தாண்டு, கிருஷ்ணா பக்ஷா (ராஜஸ்தான்), முகரம் (இஸ்லாமியர்) என்று பல புத்தாண்டுகள் இங்குண்டு. அதே போல சில பண்டிகைகள் கூட புத்தாண்டு நாட்களாக கருதப் படுவதுண்டு. உதாரணம் பொங்கல் மற்றும் தீபாவளி (மறுநாள்) போன்றவை. அரசு தரப்பிலும் சில வருட முறைகள் பின்பற்றப் படுகின்றன. உதாரணம் சக ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு போன்றவை.

எங்களைப் போன்ற நிதித் துறைகளில் உள்ளவர்களுக்கும் வேறு வேறு நாட்களில் புதிய ஆண்டுகள் பிறப்பதுண்டு. இந்தியாவில், ஏப்ரல் ஒன்று. ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் ஜூலை ஒன்று. அமெரிக்க போன்ற சில நாடுகளில் அக்டோபர் ஒன்று. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அறிவியல்ரீதியாக புத்தாண்டு நாட்களில் பூமியிலும், விண்வெளியிலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. பூமி எப்போதும் போல தன்னைத் தானே சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. சூரியனும் எல்லா நாட்களைப் போலவே கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது. பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்ட பாதையில் எது ஆரம்பம் எது முடிவு என்று யாராலும் சொல்ல முடியாது. இந்த நாளில்தான் உலகம் தோன்றியது என்றோ இந்த நாளில் தான் இயக்கம் துவங்கியது என்றோ அறிவியல் ரீதியாக அறுதியிட்டு எந்த நாளையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

பின் எதற்கு இத்தனை புத்தாண்டு தினங்கள்?

இந்தியாவில் வருடம் முழுதுமே புத்தாண்டுகள்தான் என்று வேடிக்கையாக சொல்லும் ஒரு குஜராத் நண்பியுடன் இது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவர் கூறிய ஒரு கருத்து.

"பொதுவான புத்தாண்டு தினங்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு நல்வாய்ப்பினை அளிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மதம்/இனம்/ மொழியினரின் புத்தாண்டுகள் மேலும் ஒரு கூடுதல் வாய்ப்பினை அளிக்கின்றன. அன்றைய தினம் நாம் அவருக்கு வாழ்த்து சொல்லும் போது அவருக்கு தனி சந்தோஷம் உருவாகிறது. அந்த வாழ்த்தில் அவருக்கும் அவர் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் நாம் வழங்கும் தனித்துவ மரியாதையும் வெளிப்படுகிறது. "

இது புத்தாண்டு தினத்தின் முதல் பலன்.

நம் நாட்டில் பல புத்தாண்டு தினங்கள் பெரிய அளவில் பண்டிகைகளாகவே கொண்டாடப் படுகின்றன. இந்த கொண்டாட்டங்கள் நமக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தருகின்றன.

இது இரண்டாவது பலன்.

இன்னொரு முக்கிய பலன் என்னவென்பதை இந்த நிதி புத்தாண்டில் நான் எனது சொந்த அனுபவத்தில் கற்றுக் கொண்டேன்.

நம் அனைவருக்கும் தெரியும். சென்ற நிதி ஆண்டில் சந்தைகளின் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது என்று. ஒரே பாதை அதுவும் சரிவுப் பாதையிலேயே சந்தைகள் சென்ற வருடம் முழுதும் பயணித்து வந்தன. நஷ்டங்கள், இழப்புக்கள், முதலீடுகளின் சந்தை மதிப்பு விழுதல், ஏன் முதலீடு செய்தோம் அல்லது ஏன் முதலிலேயே விற்க வில்லை என்பது போன்ற தன்னிலை விளக்கங்கள் என்று ஒவ்வொரு நாளும் பல்வேறு சோதனைகளை தந்த சென்ற நிதி ஆண்டு பலரும் மறக்க விரும்புகின்ற ஒரு கறுப்பு வருடமாகவே இருந்தது. தொடர்ந்து பல வருடங்கள் லாபங்களை மட்டுமே பார்த்து வந்த நிதித் துறை இந்த நிதி ஆண்டு ஒரு தலைகீழ் மாற்றத்தைக் கண்டது என்றால் மிகையாகாது. இந்த நிலை வேறு பல தொழிற் துறைகளிலும், வியாபாரங்களிலும் கூட இருந்து வந்தது. ஒரு வழியாக சென்ற நிதி ஆண்டு முடிந்தது ஒருவித நிம்மதி பெருமூச்சையே வரவழைத்தது.

புதிய நிதி ஆண்டிற்கான லாப இலக்குகள் நிர்ணயிப்பதற்காக நிதி புத்தாண்டு தினத்தன்று எங்கள் மேலதிகாரியுடன் ஒரு விவாதம் நடந்த போது நான் சொன்னது.

"ஐயா! சென்ற நிதி ஆண்டு முடிவடைந்து விட்டது என்பதே ஒரு பெரிய மன நிம்மதியைத் தருகிறது. சுமப்பதற்கு பழைய பாரங்கள் ஒன்றுமில்லை என்ற விடுதலை உணர்வு ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது. இந்த வருடத்தை புதிதாக சிறப்பாக ஆரம்பிப்போம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை"

புத்தாண்டின் பலன்களிலேயே, மிக முக்கியமாக நான் இதைத்தான் கருதுகிறேன். நம்முடைய பழைய தவறுகளை திருத்திக் கொள்ளவும், மன பாரங்களை கழற்றி விடவும், குறிப்பாக நம்மை நாமே மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளவும் புத்தாண்டு தினம் நமக்கு ஒரு பெரிய வாய்ப்பைக் கொடுக்கிறது.

எனவே ஒவ்வொரு புத்தாண்டையும் ஒரு புதிய வாய்ப்பாக கருதி புத்துணர்ச்சி கொள்வோம்.

இந்த நிதியாண்டு (2009-10) எல்லா தொழிற் துறை மற்றும் வணிகத் துறைகளுக்கும் ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்திற்கும் சிறந்த ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம்.

அனைவருக்கும் நிதி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றி.

Wednesday, April 1, 2009

உங்கள் மூளை எந்த பக்கம்?


ஒவ்வொரு மனிதனின் மூளைக்கும் இருவேறு பக்கங்கள் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த இரண்டு பகுதிகளும் வெவ்வேறு குணாதிசியங்களைக் கொண்டவை. வலது மூளை மற்றும் இடது மூளை என அறியப் படும் மூளையின் இந்த இரண்டு பகுதிகளும் முற்றிலும் வேறுபட்ட விதமான பணிகளை செய்கின்றன என்றாலும் இந்த இரண்டு பகுதிகளில் ஒரு பகுதி மற்ற பகுதியை ஆதிக்கம் செலுத்தவும் வாய்ப்புள்ளது. ஒரு மனிதனின் எந்த பகுதி மற்ற பகுதியை ஆக்கிரமிப்பு செய்கிறது என்பதின் அடிப்படையில் அவனது குணாதிசியங்கள் மாறுபடக் கூடும். உங்கள் மூளையின் எந்த பகுதி அதிகம் வேலை செய்கிறது அல்லது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? ஒரு சிறிய பரிசோதனை முயற்சி இங்கே.

கீழே சில கேள்விகள் கொடுக்கப் பட்டுள்ளன. உங்கள் பதில்களை தனியாக குறித்து வைத்துக் கொள்ளவும். இந்த விடைகளில் சரியானது என்றோ தவறானது என்றோ ஏதுமில்லை. உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பதை சோதிப்பதற்காக இந்த கேள்வி-பதில்கள் இல்லை. எனவே உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகின்றதோ, சாதாரணமான மனநிலையில் எந்த விடையை அளிப்பீர்களோ அந்த பதிலையே தாருங்கள், அது போதும். அப்போதுதான் நமது மனநிலையை நாமே சரியாக புரிந்து கொள்ள முடியும்.

கேள்வி எண் 1:

நீங்கள் எப்படிப் பட்ட மனிதர்?

அ. மற்றவர்கள் எளிதில் ஊகிக்கக் கூடிய வகையில் எனது நடவடிக்கைகள் இருக்கும்.
ஆ. சமயத்திற்கு தகுந்தாற் போல நடந்து கொள்வேன்.

கேள்வி எண் 2.

A = AM என்பது கீழ்கண்டவற்றில் எதனுடன் பொருந்தும்?

அ. P = PM
ஆ. HA = HAM

கேள்வி எண் 3

"வடக்கு - தெற்கு" என்பது எந்த இணையுடன் பொருந்தும்

அ. மேலே - கீழே
ஆ. கிழக்கு - மேற்கு

கேள்வி எண் 4.

15 மற்றும் 6 ஆகிய எண்களுக்கு உள்ள ஒற்றுமை கீழ்க்கண்ட இணைகளில் எதற்கு உள்ளது.

அ. 23 & 5
ஆ. 23 & 14

கேள்வி எண் 5.

"வேலை - விளையாட்டு" கீழ் கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. கட்டுப்பாடு - கட்டுப்பாடு இல்லாத நிலை
ஆ. தேவையான ஒன்று - தேவையில்லாத நிலை

கேள்வி எண் 6.

"கோபம் - குரோதம்" கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. மோசம் - மிக மோசம்
ஆ. அன்பு - காதல்

கேள்வி எண் 7

"தங்கம் - மஞ்சள்" கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. ராமர் - நீலம்
ஆ. எவர்சில்வர் - வெள்ளை

கேள்வி எண் 8:

"I - M " என்பது கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. U - R
ஆ. 9 - 13

கேள்வி எண் 9

நீங்கள் (அதிகம்) எப்படிப் பட்ட மனிதர்?

அ. நான் மற்றவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவேன்
ஆ. எனது நம்பிக்கையில் உறுதியாக இருப்பேன்

கேள்வி எண் 10

உங்களுக்கு அதிகம் பிடித்தது?

அ. உருவாக்கும் திறன்
ஆ. தெளிவான மனநிலை

இப்போது உங்கள் விடைகளை சரிபாருங்கள்.

உங்கள் விடைகளில் அதிகம் "அ" விடை வந்திருந்தால் உங்கள் வலது மூளையின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று பொருள். மாறாக "ஆ" என்று இருந்தால் இடது மூளை அதிகம் வேலை செய்கிறது என்று பொருள்.

இப்போது மூளையின் ஆதிக்கம் குறித்த பலன்களை பார்ப்போம்.

வலது மூளை ஆதிக்கம் உள்ளவர்கள், கலைத் திறமை, கற்பனைத் திறன் போன்றவற்றை அதிகம் கொண்டிருப்பார்கள். இவர்கள், கலைஞர்களாக அதிகம் வெற்றி பெறுவார்கள். வேகமாக முடிவெடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அதே சமயம், பல சமயங்களில் முன் யோசனை இல்லாத முடிவுகளையே எடுத்திருப்பார்கள். "எமோஷன்" மனநிலை அதிகம் கொண்டிருப்பார்கள். சொல்ல வந்த விஷயத்தை இவர்களால் சரியாக சொல்ல முடியாது.

வலது மூளை ஆதிக்கம் உள்ளவர்கள் சற்று நிதானமாக யோசித்து முடிவு செய்ய பழகிக் கொள்வது பல பிரச்சினைகளில் இருந்து அவர்களை காப்பாற்றும்.

இடது பக்க மூளை உள்ளவர்கள் மிகவும் நிதானித்து தர்க்க ரீதியான முடிவு எடுக்கக் கூடியவர்கள். இவர்கள் தொழிற் முறை வல்லுனர்களாக வெற்றி பெறுவார்கள். அதே சமயம் "கலை" உணர்ச்சி இவர்களிடம் சற்று குறைவாகவே இருக்கும். ஒருவித "இயந்திர ரீதியான" வாழ்வு முறையை இவர்கள் கொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றவர்களால் அதிகம் விரும்பப் பட மாட்டார்கள்.

இடது மூளை ஆதிக்கம் கொண்டவர்கள் ஓய்வு நேரத்தில் தங்கள் கவனத்தை "உருவாக்கும் திறனை வளர்க்கும் பொழுது போக்கு அம்சங்களில் (உதாரணமாக வரைதல், எழுதுதல்)" செலுத்தினால் அவர்கள் மன நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியும்.

உருவாக்கும் திறன் மற்றும் தர்க்க ரீதியான சிந்தனை இரண்டும் சரியான விகிதத்தில் இணைந்தாலே ஒருவரின் மூளை சரியாக செயல் படும். அவர் தொழில் ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் வெற்றி பெற முடியும்.

ஒன்றில்லாத மற்றொன்று உபயோகமில்லாதது. எனவே, உங்களது மூளையில் எந்த பகுதியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பதை சரியாக உணர்ந்து கொண்டு, உங்களை நீங்களே திருத்தி அமைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்வில் வெற்றி காணுங்கள்.

நன்றி.

பின்குறிப்பு: இந்த கேள்வி பதில்கள் ஒரு பரிசோதனை முயற்சி மட்டுமே. இந்த கேள்வி-பதில்கள் ஒரு துல்லியமான முடிவைத் தரும் என்பதற்கு எந்த ஒரு உறுதியும் இல்லை. ஆனால், இந்த கேள்வி-பதில்களை மாதிரியாக வைத்துக் கொண்டு உங்களை நீங்கள் பரிசோதித்துக் கொண்டு ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்.
Blog Widget by LinkWithin