Thursday, December 15, 2011

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!


எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன்.

அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார்.

இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் பார்த்த போது, அந்த பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண முடியவில்லை.

இவர்களும் இந்தியர்கள்தானே?

இந்தியாவின் இன்னொரு பக்கம் உள்ள இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் "ஒளிரும் இந்தியா" இவர்களுக்கு என்ன பதில் கூறப் போகிறது?

நன்றி!

Sunday, August 7, 2011

டாலர் செல்லா காசாகுமா?


நாகரிக வளர்ச்சியின் காரணமாக பண்டமாற்று வணிக முறை வழக்கொழிந்த பின்னர், பல நூறாண்டு காலமாக தங்கம்தான் பன்னாட்டு வணிகத்தின் அதிமுக்கிய நாணயமாக திகழ்ந்து வந்தது. ஆனால், கடந்த நூற்றாண்டில் தனிப்பெரும் பொருளாதார வல்லரசாக அமெரிக்கா உருவெடுத்த பின்னர், டாலர் பன்னாட்டு வணிகத்தின் முக்கிய நாணயமாக தலையெடுத்தது.

நிக்சன் அதிர்ச்சிக்குப் பின்னரும், டாலருக்கு மாற்றான உலக நாணயமாக யூரோ நாணயம் முன்னிறுத்தப் பட்ட பின்னரும் கூட டாலர் தனது முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டதுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ரஷ்யாவின் அரசியல் செல்வாக்கு குறைந்த பின்னர், தனிப்பெரும் ஏகாதிபத்தியமாக அமெரிக்கா உருவெடுத்ததும், இந்தியா, சீனா போன்ற உற்பத்தி நாடுகள் அமெரிக்காவின் நுகர்வோர் கலாச்சாரத்தை பெருமளவில் சார்ந்திருந்ததும், டாலரின் மதிப்பு பெருமளவில் வீழாமல் காப்பாற்றின.

சமீபத்திய பொருளாதார வீழ்ச்சிக்கு அதிமுக்கிய காரணம், அளவுக்கதிகமான கடன் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்றாலும், பொருளாதார மீட்சிக்கு உலக நாடுகள் தேர்ந்தெடுத்த பாதை அதே வீழ்ச்சி பாதையானது துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும். அரசின் செலவினங்களை குறைத்து கடன் அளவை குறைப்பதற்கு மாற்றாக, பல நாடுகளின் அரசாங்கங்கள் இன்னும் அதிக கடனை வாங்கின. குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்தின் கடன் அளவு, பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர், நான்கு மடங்காக உயர்ந்ததுள்ளது.

கடனை திருப்புவதிலான அமெரிக்க அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இப்போது பெருமளவு சரிந்திருப்பதற்கான அடையாளமாக, உலக தர நிர்ணய நிறுவனம், அமெரிக்க அரசாங்க கடன் பத்திரங்களின் மீதான தர வரிசையை குறைத்துள்ளது. இதன் தாக்கம் ஏற்கனவே உலக சந்தைகளில் கடந்த வாரம் எதிரொலித்துள்ளது. அமெரிக்க கடன் பத்திரங்களை பெருமளவில் வாங்கிக் குவித்துள்ள உலக வங்கிகளும், பல நாடுகளின் மத்திய வங்கிகளும் இந்த தர இழப்பால் அதிக அளவில் பாதிக்கப் படும் வாய்ப்புக்கள் உள்ளன.

பொருளாதார மீட்சி என்பது பொய்யாகிப் போய், ஒரு இரட்டை பொருளாதார வீழ்ச்சியாக உருப்பெறக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக பல பொருளாதார வல்லுனர்களும் கருதும் இன்றைய சூழ்நிலையில், அமெரிக்கா இந்த கடன் இக்கட்டில் இருந்து எவ்வளவு சீக்கிரம் வெளிவர போகிறது என்பதைப் பொறுத்தே டாலரின் வருங்காலம் அமையும்.



வரும் வாரம் மிகவும் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!

Sunday, July 31, 2011

பணவீக்க சுழற்சியின் இரண்டாம் பாதி ஆரம்பம்?


ஒரு பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னே உருவாகும் பணவீக்க சுழற்சியின் முதல் பகுதி எப்பொழுதுமே விரும்பக் கூடியதாகத்தான் இருக்கும். பொருளாதார மந்த நிலையில் இருந்து விடுதலை, அதிகப் படியான பண புழக்கம், அதிக வேலை வாய்ப்புக்கள், ரியல் எஸ்டேட் உயர்வு, தொழிற் வளர்ச்சியில் முன்னேற்றம் என பல வகையிலும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். அதிகப் படியான விலை அளவுகள் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளின் லாபத்தை உயர்த்தும். அரசாங்கத்தின் வரி வசூலும் அதிகமாகும். மக்களிடையே உருவாகும் அதிகப் படியான பணபுழக்கம் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளையும் குஷிப் படுத்தும். அதிகப்படியான வேலை வாய்ப்புக்கள் மற்றும் சம்பள உயர்வு நடுத்தர வர்க்கத்தினையும் மகிழ்ச்சிப் படுத்தும்.

அதே சமயத்தின் பணவீக்க சுழற்சியின் இரண்டாம் பகுதி சற்று கசப்பாகத்தான் இருக்கும். விலைவாசிகள் விண்ணை முட்டும் பட்சத்தில் நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட் வெகுவாக பாதிக்க படும். அதிகப் படியான கடன் வட்டி வீதங்கள் உற்பத்தியாளர்களை நஷ்டத்தில் தள்ளும். புதிய முதலீடுகள் குறையும். நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு மந்த நிலை உருவாகும்.

இப்போதைய சூழ்நிலையில், மேலோட்டமாக பார்க்கும் போது பணவீக்கம் ஒரு கட்டுக்குள் இருப்பது போல தோன்றினாலும், அடிப்படை பணவீக்கம் தொடர்ந்து மிக அதிக அளவிலேயே இருந்து வருகிறது. இந்திய மத்திய வங்கி வட்டி வீதங்களை தொடர்ந்து அதிகரித்து வருவது, விலைவாசியை கட்டுப் படுத்த ஓரளவு உதவும் என்றாலும், கடன் வட்டி வீதங்களின் உயர்வு புதிய முதலீடுகளை மந்த படுத்துவதுடன் இந்திய பொருளாதார வளர்ச்சியையும் வெகுவாக பாதிக்கும்.


வரும் வாரம் சிறப்பானதாக இருக்க அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

நன்றி!

Sunday, July 17, 2011

சந்தை இப்போது ஒரு முக்கிய தருணத்தில்!


Sunday, May 15, 2011

தமிழக வாக்காளர்களுக்கு வாழ்த்துக்கள்!


காசுக்கும் இலவசத்துக்கும் தமிtழக வாக்காளர்கள் விலை போவார்கள் என்ற பரவலான ஊடக கணிப்புக்களுக்கு முற்று புள்ளி வைத்து, தமது கண்ணியத்துக்கு முக்கியத்துவம் குடுத்த தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஜாதி கணக்குகளையும் கூட்டணி கணக்குகளையும் மனதில் நிறுத்தி தேர்தலை சந்தித்தவர்களின் கணக்குகளை முடித்து வைத்ததற்கு இன்னுமொரு வாழ்த்துக்கள்!

குடும்ப ஆட்சியை முடித்து வைத்ததற்கும் குறுநில மன்னர்களை வீட்டிற்கு அனுப்பியதற்கும் மீண்டுமொரு வாழ்த்துக்கள்!

ஒரு தேர்தலுக்கு ஒரு கூட்டணி என ஜாதி பெயரை சொல்லி வோட்டு கேட்டவர்களுக்கும், தமிழீழ பிரச்சனையில் பஞ்சோந்தியாக நாட்கமாடியவர்களையும் சரியாக இனம் கண்டதற்கும் நல்வாழ்த்துக்கள்!

அறுபது சீட்டு கேட்டு அடம் பிடித்தவர்களை ஐந்து சீட்டுடன் அடக்கி வைத்ததற்கும் வாழ்த்துக்கள்!

கவர்ச்சியும் காமெடியும் திரையில் (சில சமயங்களில் நேரில்) ரசிப்பதற்கு மட்டுமே. திரை மயக்கம் தேர்தலில் செல்லாது என்று மீண்டுமொரு முறை நிருபித்ததற்கும் வாழ்த்துக்கள்!

பண பலம், அதிகார பலம், ரௌடி பலம் அனைத்தையும் அடக்கி அஞ்சா நெஞ்சர்களை அஞ்சா நோஞ்சான்களாக ஆக்கிய தேர்தல் கமிஷன் குறிப்பாக சகாயம் போன்ற சிறந்த அரசு அதிகாரிகளுக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!

தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுதும் உண்மையான ஜனநாயகம் மலர இந்த தேர்தல் ஒரு சிறந்த துவக்கமாக அமையவும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

Friday, May 6, 2011

ஒழியட்டும் ஊழல் எனும் பயங்கரவாதம்!


உலகின் பல்வேறு பகுதிகளில் காலம் காலமாக பல பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருந்தாலும், பயங்கரவாதத்தின் உச்சக்கட்ட தாக்குதலாக கருதப் படுவது, அமெரிக்க இரட்டை கோபுரங்களின் மீது நடந்த விமான தாக்குதல்தான். ஏனென்றால், அதுவரையில் இந்தியா போன்ற வலு குறைந்த நாடுகளை குறி வைத்தே பழக்கப் பட்ட பயங்கரவாதிகள், உலக வல்லரசான அமேரிக்கா மீது குறிவைத்தது பலரையும் வியப்பில் உள்ளாக்கியதுடன், பயங்கரவாதிகளின் வெளிப்படையான தைரியத்தையும் பறை சாற்றியது.

இந்தியாவில் ஊழல் புரையோடிப் போனது அனைவரும் ஒப்புக் கொண்ட ஒன்றுதான் என்றாலும், இன்னும் சொல்லப் போனால் இந்திய மக்கள் ஊழலுடன் ஒத்துப் போய் வாழப் பழகி பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், இரண்டு அலைக்கற்றை ஊழலின் பரிமாணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சொல்லப் போனால் பல ஊழல் பெருச்சாளிகளையும் கூட அந்த ஊழல் திகைப்பில் ஆழ்த்தியது. ஊழல் பணம் வெளிப்படையாக கைமாறியது, தம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஊழல்வாதிகளின் அதி தைரியத்தையும் காட்டியது.

பயங்கரவாதத்தின் தீமைகளுக்கு சற்றும் குறைவில்லாதது ஊழல் தரும் தேசிய இழப்புக்கள். ஊழல்வாதிகளும் பயங்கரவாதிகளைப் போலவே தண்டிக்கப் படவேண்டியவர்கள்தான்.

உலக பயங்கரவாதத்தின் பிம்பமாக கருதப் படும் பின் லாடனின் அழிவு பயங்கரவாதத்திற்கு வைக்கப் பட்ட முற்றுப் புள்ளி அல்ல என்றாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு முக்கிய வெற்றியாகும். அதே போல இரண்டு அலைற்றை ஊழல்வாதிகள் தண்டிக்கப் பட்டால், இந்தியாவில் ஊழலுக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியாக இருக்கும்.

இரண்டு அலைகற்றை அலைவரிசை மீதான விசாரணை உச்ச நீதி மன்றம் முதல் சாதாரண மக்கள் வரை அனைவராலும் கூர்மையாக கவனிக்கப் படும் இந்த வேளையில், ஊழல்வாதிகள் மீதான நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டால், இந்திய அரசியல் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கை வெகுவாக பாதிக்கப் படும்.

நிரா ராதியா டேப்புகள் மற்றும் கலைஞர் டிவி பணமாற்ற விவகாரங்கள், இரண்டு அலைகற்றை ஊழலில் கனிமொழியின் பங்கினை வெளிப்படையாக காட்டுகின்றன. அவரை தி மு க வெளிப்படையாக ஆதரிப்பதும் கனிமொழி விவகாரத்தினை மாநில ஆட்சியில் பங்கெடுப்பதற்கான மாஸ்டர் ஆயுதமாக காங்கிரஸ் கையில் எடுத்திருப்பதும் ஊழல் அரசியல்வாதிகளின் உண்மையான முகத்தை தோலுரித்து காட்டுகின்றன. இப்போதைக்கு பொது மக்களுக்கு மிச்சமுள்ள நம்பிக்கையெல்லாம் நீதி மன்றங்களின் மீதுதான்.

திமுகவின் தாக்கத்தையும் மீறி, காங்கிரஸின் இரட்டை நாடகங்களையும் தாண்டி, கனிமொழி கைது செய்யப் பட்டால், அந்த நிகழ்வு இந்திய அரசியல் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை மீட்பதுடன் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று நம்புகிறேன்.

மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

கனிமொழியின் கைது ஊழலுக்கு வைக்கப் படும் முற்றுப் புள்ளியாக அமையாவிடினும், ஊழலுக்கான சாவு மணியின் முதலோசையாக இருக்கும்.

நன்றி!

Sunday, January 16, 2011

பணவீக்கமும் விஷக் காய்ச்சலும்!


பரதப்பட்டி ஜனங்களெல்லாம் பாவப் பட்ட ஜனங்களாம். பலதரப் பட்ட வியாதிகளால் அடிக்கடி பாதிக்கப் படுவார்களாம். ஒரு முறை எல்லாரும் ஒண்ணா கூடி இந்த பிரச்சினைக்கு வழி என்னன்னு யோசிச்சாங்களாம். அப்ப வந்த யோசனைப்படி ஒரு டாக்டரை அதுவும் வெளிநாட்டில் படிச்ச டாக்டரை ஊர் தலைவரா போட்டாங்களாம். அவருக்கு துணையா நிறையா படிச்ச டாக்டர்களாக வச்சுகிட்டாங்கலாம்.

நம்மூரு தலைவரா ஒரு டாக்டர் இருக்காருன்னு, இனிமேல நமக்கு வியாதி தொல்லை இருக்காது நினைச்ச பரதப்பட்டி ஜனங்களோட சந்தோஷம் ரொம்ப நாளைக்கு நீடிக்கலையாம். திடீரென்னு ஒரு விஷக் காய்ச்சல் ஊரெல்லாம் பரவுச்சாம்.

பரத் பவார் என்கிற ஒரு டாக்டர் சொன்னாராம், காசு அதிகமாக சம்பாதிக்கிறதால ஊரு ஜனங்க எல்லாரும் நிறைய சாப்பிடறாங்க. அதனாலதான் காய்ச்சல் வருதுன்னு. பாரினில படிச்ச இன்னொரு டாக்டர் பதம்பரம் சொன்னாராம், "இது ஒலக பிரச்சினை. எல்லா இடத்திலும்தான் காய்ச்சல் இருக்கு. அங்க எல்லாருக்கும் சரியாப் போனா, நம்மூரிலும் சரியாப் போயிடும்'னு". திட்டம் போடுற படா டாக்டர் பளுவாலியா சொன்னாராம். "நேத்திக்கு நூறு டிகிரி இருந்த காய்ச்சல், இன்னைக்கு ஒரு டிகிரிதான் ஏறி இருக்கு. இதுல இருந்து தெரிய வருது என்னான்னா, காய்ச்சல் ஏறுற வேகம் கட்டுக்குள்ளதான் இருக்கு'ன்னு". இன்னொரு டாக்டர் பப்பா ரெட்டி சொன்னாராம், "யாரும் கவலைப் படாதீங்க, வருகிற மார்ச் மாதத்துக்குள்ள, காய்ச்சல் நூறு டிகிரிக்குள்ள வந்துடும்'னு.

எல்லாரும் ரொம்பவே நம்புன டாக்டர் பன்மோகன் சிங் சபதம் போட்டாராம். நூறு நாள்ல இந்த விஷக் காய்ச்சல கட்டுப் படுத்துவேன்னு. சொன்ன அதே வேகத்துல அந்த ஊருல வித்த மருந்தோட விலை எல்லாத்தயும் ஏத்திட்டாராம். விலைய எத்தி எப்படி விஷக் காய்ச்சலை கட்டுப் படுத்த முடியும்னு காரணம் கேட்டா, இதெல்லாம் ஒலக சமாசாரம் , உங்களுகெல்லாம் புரியாதுன்னு சொல்லிட்டாராம். குட்டி டாக்டர் பாகுல் காந்தி சொன்னாராம். "இதே எங்க பாட்டி மட்டும் இருந்திருந்தா கை வைத்தியம் பாத்தே எல்லா காய்ச்சலையும் விரட்டி இருப்பாங்க. அதுக்குத்தான் சொல்றேன், இந்த பணநாயகம் எல்லாம் வேணாம், எங்க நாட்டாமை ஆட்சியை மறுபடியும் கொண்டு வந்தா போதும்"

பரதப் பட்டி தெக்கு தெரு கவுன்சிலர் பருனாநிதி ஒரு கலைப் பிரியராம். அதுவும் கூத்துக் கலை மேல கொலைப் பிரியராம். அவங்க தெருவுல இருந்த எல்லாருக்கும் கூத்து காட்டி காட்டியே, காய்ச்சலோட கடுமைய மறக்கச் செஞ்சாராம். விஷக் காய்ச்சல குறைக்க அடிக்கடி பன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதுனாராம். மருந்தோட விலைய பன்மோகன் சிங் பத்து ரூபா ஏத்தினா, அதுல ஒரு ரூபாய் விலய குறைச்சு மக்கள் மேல கருணை மழை பொளிஞ்சாராம்.

பரதப்பட்டி மக்களுக்கு இந்த விஷ காய்ச்சல் பத்தியெல்லாம் அதிக கவலை எல்லாம் இல்லையாம். மருந்து வியாபாரிகளும் டாக்டர்களும், இந்த ஆட்சி பொற்காலம் என்றார்களாம். பரதப் பட்டி உலக அரங்கில் உயர்ந்த இடம் பிடிக்க இது போன்ற காய்ச்சல்களும் அதிக மருந்து விற்பனையும் ரொம்ப முக்கியம் என்றார்களாம். இன்னும் கொஞ்ச நாளில் பைனாப் பட்டியை விட இந்தியாவில் மருந்து விற்பனை ஜாஸ்தியாகி விடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்களாம். விஷ காய்ச்சல் வராதவர்களுக்கு இந்த பிரச்சினை என்று ஒன்று இருக்கிறதே தெரிய வில்லையாம். பாதிக்கப் பட்டவங்களோ இது தம்மோட தலை எழுத்துன்னு அமைதியா இருந்துட்டாங்களாம். நல்ல லாபம் பாத்த ஒலக மருந்து வியாபாரிகளெல்லாம், பன்மோகன் சிங் ஒரு ஒலக நாயகன்னு பட்டம் கொடுத்தாங்களாம்.

இந்த காய்ச்சலால பணபுழக்கம் அதிகமாகி இருக்கலாமுங்க. ஆனால் காலப் போக்கில் விஷக் காய்ச்சல் உடம்பை உருக்கி எடுத்த பின்னர்தான் தெரியும், இது ஒரு மீளாப் பயணம் என்று புரிந்த ஒரு சிலரும், தம் பேச்சை கேக்க ஆளின்றி அமைதியாக இருந்து விட்டார்களாம்.

ஓகே நண்பர்களே! இப்ப நம்ம சந்தை நிலவரத்திற்கு வருவோம்.

தொடர்ந்து வெளிவந்த ஊழல் பூதங்கள், அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக வட்டி வீதம் அதிகரிக்குமோ என்ற கவலை, சாதகமில்லாத உலக சந்தை தகவல்கள், உயரும் கச்சா எண்ணெய் விலைகள், இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை, குறைந்த இந்திய தொழிற் வளர்ச்சி, பங்கு லாப விற்பனை போன்றவை சந்தையை கடந்த இரு வாரங்களாக படாத பாடு படுத்தி விட்டன. முக்கிய குறியீடுகள் எட்டு சதவீதம் வரை குறைய, சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து உள்ளன. நிபிட்டி குறியீடு முக்கிய அரண் நிலைக்கு கீழே சரிந்துள்ளது. நிபிட்டி மீண்டும் 5900 புள்ளிகளுக்கு மேலே செல்லும் வரை வாங்கும் நிலையை வர்த்தகர்கள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.



அதே சமயத்தில், 5600 புள்ளிகளுக்கு அருகே நிபிட்டி நல்ல அரனை கொண்டுள்ளது. இந்தியாவில் எல்லா விலைகளையும் பாதித்த பணவீக்கம் சந்தையின் புள்ளிகளையும் பாதித்துள்ளது. முந்தைய 21000 (சென்செக்ஸ்) நிலைக்கும் இன்றைய 21000 நிலைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. எனவே, நீண்ட கால முதலீட்டாளர்கள் அடிப்படையில் சிறந்த பங்குகளை மெல்ல மெல்ல சேகரிக்கலாம். மேலும், வங்கி வட்டி வீதங்கள் உயர்ந்துள்ள நிலையில், வங்கி சேமிப்பினையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளலாம்.

வருகிற வாரம் வெகு சிறப்பாக அமைந்திட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

நன்றி!

Thursday, January 13, 2011

தந்தியடிக்கும் கலைஞர்!


விலைவாசி ஏற்றம் முதல் ஈழத்தமிழர் இனப்படுகொலை வரை பிரச்சனைகளை கடிதங்கள் மூலமாக கையாண்டு கொண்டிருந்த கலைஞர் ஐயா, இன்று இந்திய மீனவர்கள் இலங்கை படையினரால் படுகொலை செய்யப் படுவதை தடுக்க "தந்தியை " ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

எதிரி நாடாக கருதப் படும் பாகிஸ்தான் கூட எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுவதில்லை. நேச நாடாக நேசிக்கப் படும் இலங்கையோ எல்லைக்கு அருகே வரும் இந்திய மீனவர்களைக் கூட விட்டு வைப்பதில்லை. சிறிது காலம் முன்னர் வரை விடுதலை புலிகளுக்கு உதவ வரும் மீனவர்களைத்தான் சுடுகிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டியவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிராரர்கள் என்று தெரிய வில்லை.

கலைஞர் ஐயாவிற்கு வருவோம். மொபைல், ஈ மெயில், பாக்ஸ் போன்ற பல நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகைக்குப் பின்னர், நலிவடைந்து போன தந்தித் துறைக்கு மறு வாழ்வளிக்க இப்போது கலைஞர் ஐயா முடிவு செய்திருக்கிறார் போல தெரிகிறது.

மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி எழுதியே மன்மோகன் சிங் விலைவாசியை கட்டுப் படுத்துவதை போல, கலைஞரும் இனிமேல் தந்தி அடித்தே தமிழினத்தை வாழ வைக்கப் போகிறார் போல.

நாமும் கலைஞர் (இலவச) டிவியில் சினிமா சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இந்த பொங்கலையும் வழக்கம் போல கண்களை கட்டிக் கொண்டு கனவுலகில் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

நன்றி!
Blog Widget by LinkWithin