Skip to main content

பணவீக்கமும் விஷக் காய்ச்சலும்!

பரதப்பட்டி ஜனங்களெல்லாம் பாவப் பட்ட ஜனங்களாம். பலதரப் பட்ட வியாதிகளால் அடிக்கடி பாதிக்கப் படுவார்களாம். ஒரு முறை எல்லாரும் ஒண்ணா கூடி இந்த பிரச்சினைக்கு வழி என்னன்னு யோசிச்சாங்களாம். அப்ப வந்த யோசனைப்படி ஒரு டாக்டரை அதுவும் வெளிநாட்டில் படிச்ச டாக்டரை ஊர் தலைவரா போட்டாங்களாம். அவருக்கு துணையா நிறையா படிச்ச டாக்டர்களாக வச்சுகிட்டாங்கலாம்.

நம்மூரு தலைவரா ஒரு டாக்டர் இருக்காருன்னு, இனிமேல நமக்கு வியாதி தொல்லை இருக்காது நினைச்ச பரதப்பட்டி ஜனங்களோட சந்தோஷம் ரொம்ப நாளைக்கு நீடிக்கலையாம். திடீரென்னு ஒரு விஷக் காய்ச்சல் ஊரெல்லாம் பரவுச்சாம்.

பரத் பவார் என்கிற ஒரு டாக்டர் சொன்னாராம், காசு அதிகமாக சம்பாதிக்கிறதால ஊரு ஜனங்க எல்லாரும் நிறைய சாப்பிடறாங்க. அதனாலதான் காய்ச்சல் வருதுன்னு. பாரினில படிச்ச இன்னொரு டாக்டர் பதம்பரம் சொன்னாராம், "இது ஒலக பிரச்சினை. எல்லா இடத்திலும்தான் காய்ச்சல் இருக்கு. அங்க எல்லாருக்கும் சரியாப் போனா, நம்மூரிலும் சரியாப் போயிடும்'னு". திட்டம் போடுற படா டாக்டர் பளுவாலியா சொன்னாராம். "நேத்திக்கு நூறு டிகிரி இருந்த காய்ச்சல், இன்னைக்கு ஒரு டிகிரிதான் ஏறி இருக்கு. இதுல இருந்து தெரிய வருது என்னான்னா, காய்ச்சல் ஏறுற வேகம் கட்டுக்குள்ளதான் இருக்கு'ன்னு". இன்னொரு டாக்டர் பப்பா ரெட்டி சொன்னாராம், "யாரும் கவலைப் படாதீங்க, வருகிற மார்ச் மாதத்துக்குள்ள, காய்ச்சல் நூறு டிகிரிக்குள்ள வந்துடும்'னு.

எல்லாரும் ரொம்பவே நம்புன டாக்டர் பன்மோகன் சிங் சபதம் போட்டாராம். நூறு நாள்ல இந்த விஷக் காய்ச்சல கட்டுப் படுத்துவேன்னு. சொன்ன அதே வேகத்துல அந்த ஊருல வித்த மருந்தோட விலை எல்லாத்தயும் ஏத்திட்டாராம். விலைய எத்தி எப்படி விஷக் காய்ச்சலை கட்டுப் படுத்த முடியும்னு காரணம் கேட்டா, இதெல்லாம் ஒலக சமாசாரம் , உங்களுகெல்லாம் புரியாதுன்னு சொல்லிட்டாராம். குட்டி டாக்டர் பாகுல் காந்தி சொன்னாராம். "இதே எங்க பாட்டி மட்டும் இருந்திருந்தா கை வைத்தியம் பாத்தே எல்லா காய்ச்சலையும் விரட்டி இருப்பாங்க. அதுக்குத்தான் சொல்றேன், இந்த பணநாயகம் எல்லாம் வேணாம், எங்க நாட்டாமை ஆட்சியை மறுபடியும் கொண்டு வந்தா போதும்"

பரதப் பட்டி தெக்கு தெரு கவுன்சிலர் பருனாநிதி ஒரு கலைப் பிரியராம். அதுவும் கூத்துக் கலை மேல கொலைப் பிரியராம். அவங்க தெருவுல இருந்த எல்லாருக்கும் கூத்து காட்டி காட்டியே, காய்ச்சலோட கடுமைய மறக்கச் செஞ்சாராம். விஷக் காய்ச்சல குறைக்க அடிக்கடி பன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதுனாராம். மருந்தோட விலைய பன்மோகன் சிங் பத்து ரூபா ஏத்தினா, அதுல ஒரு ரூபாய் விலய குறைச்சு மக்கள் மேல கருணை மழை பொளிஞ்சாராம்.

பரதப்பட்டி மக்களுக்கு இந்த விஷ காய்ச்சல் பத்தியெல்லாம் அதிக கவலை எல்லாம் இல்லையாம். மருந்து வியாபாரிகளும் டாக்டர்களும், இந்த ஆட்சி பொற்காலம் என்றார்களாம். பரதப் பட்டி உலக அரங்கில் உயர்ந்த இடம் பிடிக்க இது போன்ற காய்ச்சல்களும் அதிக மருந்து விற்பனையும் ரொம்ப முக்கியம் என்றார்களாம். இன்னும் கொஞ்ச நாளில் பைனாப் பட்டியை விட இந்தியாவில் மருந்து விற்பனை ஜாஸ்தியாகி விடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்களாம். விஷ காய்ச்சல் வராதவர்களுக்கு இந்த பிரச்சினை என்று ஒன்று இருக்கிறதே தெரிய வில்லையாம். பாதிக்கப் பட்டவங்களோ இது தம்மோட தலை எழுத்துன்னு அமைதியா இருந்துட்டாங்களாம். நல்ல லாபம் பாத்த ஒலக மருந்து வியாபாரிகளெல்லாம், பன்மோகன் சிங் ஒரு ஒலக நாயகன்னு பட்டம் கொடுத்தாங்களாம்.

இந்த காய்ச்சலால பணபுழக்கம் அதிகமாகி இருக்கலாமுங்க. ஆனால் காலப் போக்கில் விஷக் காய்ச்சல் உடம்பை உருக்கி எடுத்த பின்னர்தான் தெரியும், இது ஒரு மீளாப் பயணம் என்று புரிந்த ஒரு சிலரும், தம் பேச்சை கேக்க ஆளின்றி அமைதியாக இருந்து விட்டார்களாம்.

ஓகே நண்பர்களே! இப்ப நம்ம சந்தை நிலவரத்திற்கு வருவோம்.

தொடர்ந்து வெளிவந்த ஊழல் பூதங்கள், அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக வட்டி வீதம் அதிகரிக்குமோ என்ற கவலை, சாதகமில்லாத உலக சந்தை தகவல்கள், உயரும் கச்சா எண்ணெய் விலைகள், இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை, குறைந்த இந்திய தொழிற் வளர்ச்சி, பங்கு லாப விற்பனை போன்றவை சந்தையை கடந்த இரு வாரங்களாக படாத பாடு படுத்தி விட்டன. முக்கிய குறியீடுகள் எட்டு சதவீதம் வரை குறைய, சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து உள்ளன. நிபிட்டி குறியீடு முக்கிய அரண் நிலைக்கு கீழே சரிந்துள்ளது. நிபிட்டி மீண்டும் 5900 புள்ளிகளுக்கு மேலே செல்லும் வரை வாங்கும் நிலையை வர்த்தகர்கள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.



அதே சமயத்தில், 5600 புள்ளிகளுக்கு அருகே நிபிட்டி நல்ல அரனை கொண்டுள்ளது. இந்தியாவில் எல்லா விலைகளையும் பாதித்த பணவீக்கம் சந்தையின் புள்ளிகளையும் பாதித்துள்ளது. முந்தைய 21000 (சென்செக்ஸ்) நிலைக்கும் இன்றைய 21000 நிலைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. எனவே, நீண்ட கால முதலீட்டாளர்கள் அடிப்படையில் சிறந்த பங்குகளை மெல்ல மெல்ல சேகரிக்கலாம். மேலும், வங்கி வட்டி வீதங்கள் உயர்ந்துள்ள நிலையில், வங்கி சேமிப்பினையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளலாம்.

வருகிற வாரம் வெகு சிறப்பாக அமைந்திட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

நன்றி!

Comments

நல்லாத் தான் இருக்கு! ஆனால், விஷக் காய்ச்சல் சீக்கிரம் சரியானால் பரவாயில்லை. :-(
Maximum India said…
நன்றி மிடில் கிளாஸ் மாதவி!
செம குத்து மாப்ளே.
periyannan said…
ப‌ர‌த‌ப்ப‌ட்டி என்று ப‌டித்த‌வுட‌ன் "ஆரு வூட்டு சொத்துக்கு ஆருங்க‌ அடுச்சுக்கிறர‌து?" என்ற‌ ப‌திவை மீண்டும் ஒரு முறை ப‌டித்தேன்.உங்க‌ளின் சொந்த ஊரின் பேச்சில் மகேஷுஅண்ணாத்தே, சுநிலு அண்ணாத்தே ப‌ற்றி சும்மா வெளூத்துவாங்கிவிட்டீர்க‌ள்.உண்மையிலே "ஆரு வூட்டு சொத்துக்கு ஆருங்க அடுச்சுக்கிரது" என்று யோசிக்க‌வைத்துவிட்டீர்க‌ள்.

அதேபோன்ற‌ ப‌திவா என்ற‌ ஆவ‌லில் (பணவீக்கமும் விஷக் காய்ச்சலும்) இந்த‌ ப‌திவை ஆழ்ந்து ப‌டித்தேன். என்னுடைய‌ ஆவ‌ல் வீண்போகவில்லை.

படித்துக்கொண்டே வ‌ருகையில் பரதப் பட்டி தெக்கு தெரு கவுன்சிலர் பருனாநிதியை ப‌டித்த‌வுட‌ன் சும்மா செம்ம‌சிரிப்பு.

பாரினில படிச்ச டாக்டர் பதம்பரம் சொன்ன‌து ஆப்ரிக்கா க‌ண்ட‌த்தில் உள்ள Zimbabwe நினைத்து சொல்லியிருப்பாரோ?

நிறையா படிச்ச டாக்ட‌ர்க‌ளுக்கு ப‌ர‌த‌ப்ப‌ட்டி ஜனங்களின் வேண்டுகோள். பரதப்பட்டி ஜனங்களாகிய நாங்க‌ள் பாவப் பட்ட ஜனங்கள். நீங்க‌ளும் ஏதோ ஏதோ ம‌ருந்து மாத்திரை கொடுக்கிறீர்க‌ள். அந்த‌ ம‌ருந்து மாத்திரை பெய‌ர்கூட‌ எங்க‌ளுக்கு தெரியாதுதான்.நிங்க‌ள் சொன்னாலும் எங்க‌ளுக்கு புரியாதுதான். சாதார‌ண காய்ச்சல் விஷ காய்ச்சலா (உடம்பை உருக்கியெடுப்ப‌த‌ற்க்குள்) மாறுவத‌ற்க்குள் எங்க‌ளை காப்பாற்றுங்க‌ள்.

"நீண்ட கால முதலீட்டாளர்கள் அடிப்படையில் சிறந்த பங்குகளை மெல்ல மெல்ல சேகரிக்கலாம்."

க‌ண்டிப்பாக மெல்ல மெல்ல சேகரிப்பேன்.

பங்குசந்தை வெற்றி பயணத்தில் உங்க‌ளுடன் வழிநடக்க என்னையும் அனும‌திப்பிற்க‌ளா?

முத்தான மூன்று பாதைக‌ளில் என‌க்கு பிடித்த‌து முக‌ம‌றியாத‌வ‌ர்க‌ளின் மூன்றாம் பாதை. ரிஸ்க் அதிகம் நிறைந்த‌ உப‌பாதையும் ந‌ன்றாக‌ இருக்கிற‌து.

ப‌திவுக்கு ந‌ன்றி குரு.
Maximum India said…
//செம குத்து மாப்ளே//

நன்றி மாம்ஸ்!
Maximum India said…
நன்றி பெரியண்ணன்!

என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி!

சொல்லப் போனால், கடந்த சில மாதங்களில் என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் (பணி மற்றும் இட மாறுதல்) காரணமாக என்னுடைய பதிவுகள் பலவற்றையும் நான் மறந்தே போய் விட்டேன். முன்னர், அமைதியான மனசூழலில், நிறைய நேரமும் கிடைத்த போது நிறைய எழுத முடிந்தது. இப்போதெல்லாம், உங்களை போன்ற நண்பர்கள் நினைவு படுத்தும் போதுதான், "ஓ! நான்தான் இது போன்ற பதிவுகளை இட்டேனா" என்று தோன்றுகிறது.

//நிறையா படிச்ச டாக்ட‌ர்க‌ளுக்கு ப‌ர‌த‌ப்ப‌ட்டி ஜனங்களின் வேண்டுகோள். பரதப்பட்டி ஜனங்களாகிய நாங்க‌ள் பாவப் பட்ட ஜனங்கள். நீங்க‌ளும் ஏதோ ஏதோ ம‌ருந்து மாத்திரை கொடுக்கிறீர்க‌ள். அந்த‌ ம‌ருந்து மாத்திரை பெய‌ர்கூட‌ எங்க‌ளுக்கு தெரியாதுதான்.நிங்க‌ள் சொன்னாலும் எங்க‌ளுக்கு புரியாதுதான். சாதார‌ண காய்ச்சல் விஷ காய்ச்சலா (உடம்பை உருக்கியெடுப்ப‌த‌ற்க்குள்) மாறுவத‌ற்க்குள் எங்க‌ளை காப்பாற்றுங்க‌ள்.//

உண்மையில் இந்த டாக்டர்களின் நோக்கம் விஷக் காய்ச்சலை சரிப்படுத்துவது அல்ல. வியாதியை தக்க வைத்து, அதன் மூலம் மருந்து விற்பனையை அதிகப் படுத்துவது என்பதே கசப்பான உண்மை.

//பங்குசந்தை வெற்றி பயணத்தில் உங்க‌ளுடன் வழிநடக்க என்னையும் அனும‌திப்பிற்க‌ளா?//

கண்டிப்பாக. ஏற்கனவே சொன்னபடி, பங்கு சந்தைக்கும் எனக்குமான தொடர்பு இப்போதெல்லாம் மிகவும் குறைந்து விட்டது. அதே சமயத்தில், மீண்டும் வருவேன்! . மீண்டு வருவேன் ! என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்!

//முத்தான மூன்று பாதைக‌ளில் என‌க்கு பிடித்த‌து முக‌ம‌றியாத‌வ‌ர்க‌ளின் மூன்றாம் பாதை. ரிஸ்க் அதிகம் நிறைந்த‌ உப‌பாதையும் ந‌ன்றாக‌ இருக்கிற‌து.//

பங்கு சந்தையை தொடர நேரம் நிறைய கிடைத்தால் உப பாதையில் செல்லுங்கள். குறைவாக இருந்தால் மூன்றாம் பாதையே பெஸ்ட்!
உங்கள் பயணம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்க்கள்!

நன்றி!
தேடல் said…
//மீண்டும் வருவேன்! . மீண்டு வருவேன் ! என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்! //

ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் தலை வா...
periyannan said…
"கண்டிப்பாக. ஏற்கனவே சொன்னபடி, பங்கு சந்தைக்கும் எனக்குமான தொடர்பு இப்போதெல்லாம் மிகவும் குறைந்து விட்டது. அதே சமயத்தில், மீண்டும் வருவேன்! . மீண்டு வருவேன் ! என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்!"

மிகவும் ந‌ன்றி குரு.

உங்க‌ளின் வ‌ழிகாட்டுத‌லுட‌ன் என்னுடைய‌ ப‌ங்குச‌ந்தை ப‌ய‌ண‌த்தை வெற்றிக‌ர‌மாக‌ தொட‌ர‌யிருப்ப‌து என‌க்கு மிக‌வும் மகிழ்ச்சியாக இருக்கிற‌து. ஒரு க‌ல்லூரியின் முத‌ல்வ‌ர் எடுக்கும் சிற‌ப்பு வ‌குப்பை போல் ஆவ‌லுடன் ஒவ்வொரு ப‌திவையும் க‌வ‌ணிக்கும் மாண‌வ‌ன் நான். ஆக‌! இந்த‌ முத‌ல்வ‌ர் வ‌குப்பு ஆசிரிய‌ராக இருந்தால் எவ்வ‌ள‌வு ந‌ல்லாயிருக்கும் என்ற‌ ஆசை இருந்தாலும், உங்க‌ளின் பொன்னான‌ நேர‌த்தை எங்க‌ளுக்காக ஒதுக்குவ‌த‌ற்க்கு மிக‌வும் ந‌ன்றி. உங்க‌ளின் தொட‌ர்வ‌ருகையை ஆவ‌லுடன் எதிர்பார்க்கிறேன். உங்க‌ளின் தொட‌ர்வ‌ருகைக்கு மிகவும் ந‌ன்றி.

பங்கு சந்தையை தொடர நேரம் நிறைய கிடைத்தால் உப பாதையில் செல்லுங்கள். குறைவாக இருந்தால் மூன்றாம் பாதையே பெஸ்ட்!

கண்டிப்பாக உப பாதையில் செல்ல‌ முய‌ற்சிக்கிறேன்.

"உங்கள் பயணம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்க்கள்!"
மிக‌,மிக‌ ந‌ன்றி குரு.
Maximum India said…
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி "தேடல்"!
Maximum India said…
//ஒரு க‌ல்லூரியின் முத‌ல்வ‌ர் எடுக்கும் சிற‌ப்பு வ‌குப்பை போல் ஆவ‌லுடன் ஒவ்வொரு ப‌திவையும் க‌வ‌ணிக்கும் மாண‌வ‌ன் நான். ஆக‌! இந்த‌ முத‌ல்வ‌ர் வ‌குப்பு ஆசிரிய‌ராக இருந்தால் எவ்வ‌ள‌வு ந‌ல்லாயிருக்கும் என்ற‌ ஆசை இருந்தாலும், உங்க‌ளின் பொன்னான‌ நேர‌த்தை எங்க‌ளுக்காக ஒதுக்குவ‌த‌ற்க்கு மிக‌வும் ந‌ன்றி. உங்க‌ளின் தொட‌ர்வ‌ருகையை ஆவ‌லுடன் எதிர்பார்க்கிறேன். உங்க‌ளின் தொட‌ர்வ‌ருகைக்கு மிகவும் ந‌ன்றி.//

உங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி! நிச்சயமாக பங்கு சந்தை பற்றிய தொடர்பதிவை தொடர முயற்சிப்பேன்!

நன்றி!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...