Sunday, October 31, 2010

தீப ஒளி பரவட்டும்!


நிச்சயமற்ற உலக பொருளாதார சூழல் மற்றும் லாப விற்பனை நம்மூர் சந்தையை சென்ற வாரமும் தளர்ச்சியாகவே வைத்திருந்தன. ரியாலிடி மற்றும் எரிசக்தி துறை பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. பண்டிகை கால எதிர்பார்ப்புக்கள் வாகன மற்றும் நுகர் பொருட் துறை பங்குகளை உயரச் செய்தன.

அமெரிக்க அரசு மற்றும் அதன் மத்திய வங்கி எதிர்பார்த்த அளவுக்கு அமெரிக்க பொருளாதாரத்தின் மீட்சி கடந்த ஒரு வருடத்தில் சிறப்பாக இல்லாமல் போனது பொருளாதார ரீதியாக ஒரு பாதகமான அம்சமாக இருந்தாலும், அமேரிக்கா மீண்டும் ஒருமுறை பெரிய அளவில் மீட்சி திட்டங்களை அறிவிக்கலாம் என்ற புதிய எதிர்பார்ப்பு சந்தையை வார இறுதியில் சற்று நிமிர செய்துள்ளது. நாம் முன்னரே எதிர்பார்த்தது போலவே நிபிட்டி 5930 அளவில் ஒரு சிறப்பான அரணை அமைத்துக் கொண்டு வலுவாக மீண்டுள்ளது.

குறுகிய கால நோக்கில், நிபிட்டி 6130 எனும் இடைக்கால தடையை உடைத்தால், தீபாவளி உற்சாகம் மற்றும் அமெரிக்க புதிய திட்ட எதிர்பார்ப்புக்கள் நிபிட்டியை 6350 வரை கொண்டு செல்ல வாய்ப்புக்கள் உள்ளன. அதே சமயம் சிறிய மற்றும் இடை நிலை பங்குகளை வாங்கும் போது கவனம் அவசியம். ஏற்கனவே சொன்னபடி வர்த்தகர்கள் 5930 அளவை ஸ்டாப் லாஸ் லிமிட்டாக வைத்துக் கொள்ளலாம்.

இப்போது தீபாவளிக்கு வருவோம்.

எப்போதுமே தீபாவளிக்கு முந்தைய வாரம் ஒரு உற்சாகமான வாரம்.

தேடி தேடி செய்யும் தீபாவளி பர்ச்சேஸ் நமது பர்சை காலி செய்தாலும், அது மனதை நிரப்பும் ஒரு டானிக். எனவே இந்த தீபாவளி வாரத்தை மகிழ்ச்சியோடு வரவேற்ப்போம்.

இந்த தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாடும் அன்பு நண்பர்கள் கார்த்திக், மஞ்சள் ராஜன் அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நன்றி!

Sunday, October 17, 2010

மறு மதிப்பீடு அவசியம்!


கடந்த வெள்ளிக் கிழமை அன்று, இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம். காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பிற்கும் மேலே இருப்பதால் இன்போசிஸ் துவக்க்கத்திலேயே வெகுவாக உயரும் என்றும் இன்போசிஸ் பங்கு ஏற்றம் ஒட்டு மொத்த இந்திய சந்தையினையே மேலேடுத்துச் செல்லும் என்றும் சி என் பி சி தொலைக்காட்சியில் சந்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் பேசிக் கொண்டனர். அதிலும் ஒரு பங்குசந்தை விற்பன்னர் (?), அன்றைய தினம் உலக சந்தைகளுக்கே இந்தியா ஒரு பூஸ்ட் ஆக இருக்கும் என்று மிகவும் நம்பிக்கையாக சொன்னார்.

பங்கு சந்தை தொடர்புகள் குறைந்து போனதால் பங்கு சந்தையின் உடனடி ரியாக்ஷன் பற்றிய நேரடி-புரிதல் வாய்ப்புக்கள் எனக்கு குறைவாக இருந்த நிலையிலும் கூட, இவர்களின் பேச்சுக்கள் எனக்கு அபத்தமாகவே பட்டது. இன்போசிஸ் பங்கின் வருடாந்திர வருவாய் (EPS) சுமார் 110 ரூபாயாக இருக்கும் நிலையில் (அப்போதைய) பங்கின் விலை சற்று அதிகமாகவே தோன்றியது. அதிலும், இன்போசிஸ் நிறுவனத்தின் வருங்கால வளர்ச்சி விகிதத்தைப் பற்றி அதன் தலைவரே கவலை தெரிவித்த நிலையில், பங்கு சந்தை வல்லுனர்களின் (?) கணிப்புக்கள் வழக்கம் போலவே தவறுதான் என்பதை அன்றைய பங்குசந்தை முடிவுகள் மீண்டும் ஒருமுறை உறுதி செய்தன.

இன்போசிஸ் நிறுவனம் என்னதான் நல்ல நிறுவனமாக இருந்தாலும், அதன் செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்தாலும், விலை-வருவாய் விகிதம் (P/E Ratio) முப்பதுக்கு அருகே இருப்பது ஒரு வித நெருடலையே ஏற்படுத்துகிறது. இன்போசிஸ் மட்டுமல்ல ஒட்டு மொத்த சந்தையும் இப்போது அதிக விலை-வருவாய் விகிதத்திலேயே (கிட்டத்தட்ட 20௦) வர்த்தகமாகி வருகிறது என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். இந்திய பொருளாதார வளர்ச்சி எட்டு சதவீதம் மற்றும் பணவீக்கம் எட்டு சதவீதம் என மொத்தத்தில் பதினாறு சதவீத வளர்ச்சி இருக்கும் பட்சத்தில் பங்கு சந்தையின் விலை வருவாய் விகிதம் இருபதுக்கு அருகே இருப்பது, இது மலிவு விலை மார்க்கெட் அல்ல என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

இந்திய பங்குசந்தை வரலாற்றின் மிகப்பெரிய வெளியீட்டான இந்தியா நிலக்கரி நிறுவனத்தின் (Coal India Ltd) கதையும் கிட்டத்தட்ட ஒன்றேதான். இந்த நிறுவனத்தின் லாப வளர்ச்சி விகிதம் பதினைந்து சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்படும் நிலையில், பங்கின் விலை-வருவாய் விகிதம் 15 .4 ஆக நிர்ணயித்திருப்பது ஏமாற்றத்தையே வரவழைக்கிறது. பொதுவாக கனிம பொருட்களின் விலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏராளமாக இருப்பதால், கனிம நிறுவனங்களின் விலை-வருவாய் விகிதம் குறைவாகவே இருப்பது வழக்கம். "கோல் இந்தியா" நிறுவனம் அடிப்படையில் சிறப்பான ஒன்று என்பதால், நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம் என்றாலும், குறுகிய கால கண்ணோட்டத்தில், அரசின் விலை நிர்ணயம் மகிழ்ச்சியை தரவில்லை.

மொத்தத்தில் இந்திய பங்கு சந்தை இன்னும் ஏற்றத்தை காண வாய்ப்புக்கள் உண்டு என்றாலும், இது அறுவடை காலத்தின் ஆரம்பம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. சென்ற வாரத்தில் வெளியிடப்பட்ட இந்திய தொழிற் வளர்ச்சி விகிதம் மற்றும் பணவீக்க புள்ளி விவரங்கள் சந்தைக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், மந்தமான உலக பொருளாதார நிலை காரணமாக, இந்தியாவிற்குள் தொடரும் அந்நிய முதலீடுகள் நமது சந்தை வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன.

குறுகிய கால நோக்கில், முந்தைய சந்தை எதிர்ப்பு நிலையான 5930 என்பது நல்ல அரணாக இருக்கும். குறுகிய கால வர்த்தகர்கள் இந்த நிலையை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு 6400 என்ற இலக்கை நோக்கி வர்த்தகம் செய்யலாம்.

நீண்ட கால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பங்கினையும் தனித்தனியாக மறு மதிப்பீடு செய்து கொள்வது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

மேலும் அனைவருக்கும் தசரா , ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் !

நன்றி!

Monday, October 11, 2010

இது ஒரு அறுவடைக் காலம்!


பங்குசந்தையில் தீபாவளி முன்கூட்டியே ஆரம்பித்து விட்டது. அதிரடியான அந்நிய முதலீடுகளும் இந்திய பொருளாதாரத்தின் வெகு வேகமான மீட்சியும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாகும். விதை முளையாகி, விருட்சமாக வளர்ந்திருப்பது சரியான சமயத்தில் விதைத்தவர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியைத் தரும்.

அதே சமயத்தில் சரியான சமயத்தில் அறுவடை செய்ய வில்லை என்றால் உழைப்பு எல்லாம் வீணாகிப் போய்விடும் அல்லவா?

ஒரு முதலீடு எவ்வளவு முக்கியமோ, சரியான தருணத்தில் லாப விற்பனை செய்வதும் அவ்வளவு முக்கியமானது. எனவே நண்பர்களே, உங்களிடம் உள்ள முதலீடுகளை ஓரளவிற்கு விற்று விடுங்கள்! எந்த எந்த பங்கை எவ்வளவு விற்பனை செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்.

நெல் கோதுமை போன்ற ஒரு சில ஆயுள் குறைந்த பயிர்கள் முழுமையாக அறுவடை செய்யப் படுகின்றன. காய்கறி, காப்பி போன்ற செடிகளின் உற்பத்திப் பொருட்கள் மாத்திரம் அறுவடை செய்யப் படுகின்றன. அதே சமயம் தென்னை, மாங்கனி போன்றவை விருட்சமாக வளரும் வரை பொறுத்திருக்கிறோம்.

இந்த பதிவு வலையிலேயே பரிந்துரைக்கப் பட்ட மைத்தாஸ் போன்ற பங்குகள் முதல் வகையை சேர்ந்தவை. முழுமையாக விற்று லாபம் பார்க்கலாம். அதே போல இன்னொரு பதிவில் பரிந்துரைக்கப் பட்ட எஸ் பேங்க் போன்ற பங்குகள் இரண்டாம் மூன்றாம் வகையை சேர்ந்தவை. பகுதியை விற்று விட்டு சற்று விலைகுறையும் வரை பொறுமையாக இருக்கலாம்.

மொத்தத்தில் இந்த அறுவடைக் காலத்தை திறமையாக உபயோகிப்பவர்கள் அடுத்த பருவத்தில் இன்னும் பெரிய வெற்றிகளைப் பெறலாம்.

மீண்டும் சந்திப்போம்.

நன்றி!

Sunday, October 10, 2010

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்!


என்னைப் போன்ற அனைத்திந்திய பணியில் உள்ள வங்கி அதிகாரிகளின் வாழ்க்கை முறை ஒரு பணி மாறுதல் உத்தரவில் தலைகீழாக மாறிப் போய் விடுகிறது. அதுவும் பணி உயர்வுடன் கூடிய பணி மாறுதல் என்றால் கேட்கவே வேண்டாம். கிராமப் புற/ சிறு நகர சேவைகள் கட்டாயமாக்கப் பட வேண்டும் என்ற அரசின் கொள்கையின் படி, கர்நாடக மாநிலத்தின் வட பகுதியில் உள்ள ஒரு சிறு நகரத்திற்கு நான் இப்போது மாறுதலாகி உள்ளேன். இதுவரை பெரிய நகரங்களில் மட்டுமே வாழ்ந்து வந்த நான், அதுவும் பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் பல வருடங்கள் வாழ்ந்து வந்த எனக்கு இங்கே முற்றிலும் புதிய அனுபவங்கள்.

குடி நீர், சாலை வசதி, மின்சாரம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து போன்ற வாழ்வியல் ஆதார வசதிகள் மிகவும் குறைந்த இது போன்ற பகுதிகள் இந்தியாவின் மறுபக்கமா அல்லது இதுதான் இந்தியாவின் உண்மையான பக்கமா என்ற கேள்வி என்னுள்ளே இப்போது எழுகின்றது.

அதே சமயம் இந்தியாவின் இந்த பக்கத்தை (அல்லது உண்மையான பக்கத்தை) அறிந்து கொள்ள /புரிந்து கொள்ள கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பாக இந்த பணிக்காலத்தைக் கருதுகின்றேன். எனக்கு இங்கே கிடைக்கும் முற்றிலும் புதிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.

பங்கு சந்தை மற்றும் பொருளாதார பதிவுகளையும் தொடரவும் முயற்சி செய்வேன்.

மீண்டும் சந்திப்போம்.

நன்றி!
Blog Widget by LinkWithin