Thursday, December 15, 2011

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!


எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன்.

அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார்.

இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் பார்த்த போது, அந்த பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண முடியவில்லை.

இவர்களும் இந்தியர்கள்தானே?

இந்தியாவின் இன்னொரு பக்கம் உள்ள இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் "ஒளிரும் இந்தியா" இவர்களுக்கு என்ன பதில் கூறப் போகிறது?

நன்றி!
Blog Widget by LinkWithin