Sunday, May 30, 2010

(பண) மழை வருமா?


ஐரோப்பிய நாடுகளைப் பற்றிய கவலைகள் சற்று குறைந்ததும் சீனா ஐரோப்பாவுக்கான தனது உதவி திட்டங்களை உறுதிப் படுத்தியதும் சென்ற வாரம் உலக சந்தைகள் ஆசுவாசப் படுத்திக் கொள்ள உதவின. உலக பொருளாதார கூட்டமைப்பு (OECD) இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றிய அளித்த பாசிட்டிவான அறிக்கை இந்திய பங்கு சந்தைக்கு கூடுதல் பலத்தை அளித்தது. மேலும் அம்பானி சகோதரர்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தமும், அந்நிய முதலீட்டாளர்களின் விற்பனை அளவு குறைந்ததும், உள்ளூர் வர்த்தகர்களின் பெருவாரியான ஆதரவும் பங்கு சந்தை சென்ற வாரத்தின் முதல் நாள் இழப்பை முழுமையாக சரிகட்டி வாராந்திர உயர்வை சந்திக்க உதவின. மேலும் எதிர்கால வர்த்தகத்தின் மாதாந்திர முடிவு (F&O monthly expiry) "விற்ற பின் வாங்குதலை (Short Covering)" அதிகப் படுத்தியது. மொத்தத்தில் தொடர் வீழ்ச்சிக்குப் பிறகு முதலீட்டாளர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்த வாரமாக சென்ற வாரம் அமைந்தது.

அதே சமயத்தில், சென்ற வாரம் நமது சந்தை முடிவடைந்த பிறகு வெளிவந்த சில தகவல்கள் வரும் வாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன. ஸ்பெயின் நாட்டின் ரேட்டிங் குறைப்பு ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய வலுவற்ற தன்மையையும், கடன் நெருக்கடியையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. மேலும் அமெரிக்க பொருளாதார தகவல்களும், அந்த நாட்டின் பொருளாதார மீட்சி அதிக வலுவில்லாமல் இருப்பதையே காட்டுகின்றன.

ஏற்கனவே சொன்னபடி, இந்தியாவின் வளர்ச்சி இன்னும் பல காலத்திற்கு தொடரும் என்றாலும் உலக நிகழ்வுகள் இந்தியாவில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய பங்கு சந்தையும் கூட நீண்ட கால நோக்கில் பெருமளவுக்கு வளர்ச்சி பெறும் என்றாலும், குறுகிய கால நோக்கில், பங்கு சந்தையின் முன்னேற்றம் அந்நிய முதலீட்டாளர்களின் மனப்போக்கை சார்ந்தே அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் வாரம் வெளியிடப் படவுள்ள இந்திய பொருளாதார வளர்ச்சி (GDP Quarterly Growth) பற்றிய அறிக்கை, சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திய வானிலை கழகம் எதிர்பார்த்த படி வரும் வாரத்தில், தென்மேற்கு பருவமழை துவங்குகிறதா என்பதையும் சந்தை வர்த்தகர்கள் கூர்ந்து கவனிப்பர். மேலும் இந்திய உற்பத்தி நிலை அளவு (PMI Manufacturing Index), அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கை, ஐரோப்பிய கடன் நெருக்கடி நிலையில் ஏற்படும் முன்னேற்றங்கள், விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகளும் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே சொன்னபடி முதலீட்டாளர்கள் நிபிட்டி அளவு 4950க்கு அருகில், அடிப்படையில் சிறந்த பங்குகளை சிறுகச் சிறுக சேகரிக்கலாம். வர்த்தகர்கள் தகுந்த ஸ்டாப் லாஸ் லிமிட்டுடன் செய்திகளின் அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம்.

வரும் வாரம் வெகு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

Saturday, May 15, 2010

ஆண்டி மடம் கட்டிய கதை!


அடுத்த வேளை உணவுக்கும் தூங்குவதற்கும் வசதியில்லாத சில ஆண்டிகள் ஒன்றாகக் கூடி, "தமக்காக பெரிய மடம் கட்டிக் கொள்ள வேண்டும், அங்கே இருபத்து நான்கு மணி நேரமும் உணவுக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்" என்றெல்லாம் கதை பேசி விட்டு நிம்மதியாக குறட்டை விடுவார்கள் என்ற கதையை நாம் கேள்விப் பட்டிருப்போம். சென்ற வாரத்தில் கிரீசுக்கு உதவி செய்ய ஐரோப்பிய யூனியன் முன்வந்த போது எனக்கு இந்த கதைதான் ஞாபகம் வந்தது. குறிப்பாக ஸ்பெயின் போன்ற நாடுகள், தாமே கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கின்ற நிலையில் கிரீசுக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதாக உறுதி அளித்தது வேடிக்கையாகவே இருந்தது. அதுவும் ஆசிய சந்தைகள் துவங்குவதற்கு முன்னரே உதவித்தொகையை அறிவிக்க வேண்டும் என்று முனைந்தது சந்தைகளில் Shorting செய்பவரை (குறிப்பாக யூரோ நாணய சந்தையில்) தண்டிக்க வேண்டும் என்ற நோக்கமே பிரதானமாக இருந்ததை வெளிக்காட்டியது. நீண்ட கால திட்டங்கள் எதுவும் இருப்பதாக தெரிய வில்லை.

இந்த கெட்டிக்காரர்களின் வேடம் மிகக் குறைந்த காலமே நீடித்துள்ளது. கிரீஸ் மற்றும் வேறு சில நாடுகளின் கடன் சிக்கல் தொடரும் பட்சத்தில், வருங்காலத்தில் ஐரோப்பிய யூனியன் பிளவு படும் வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போல தமது நாணயத்தை தாமே (மத்திய வங்கியின் மூலமாக) வெளியிட்டு, விரும்பியபடி (ஓரளவுக்கேனும்) செலவு செய்யும் அதிகாரம் யூனியன் நாடுகளில் இல்லாதது குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளை யூனியனிலிருந்து வெளியேறுவதை பரிசீலிக்கும்படி செய்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் இப்போதைய கடன் சிக்கலில் இருந்து மீண்டு வந்தாலும், முன்பை போல சந்தைகளில் பணத்தை வாரி இறைக்க முடியாது என்பது நிச்சயம். மேலும், ஏற்கனவே சொன்னபடி ஐரோப்பியா உலக பொருளாதாரத்தில் ஒரு பெரிய பங்கினை வகிக்கின்றது. ஐரோப்பிய கடன் சிக்கல் உலக பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய பின்னடைவு என்றே சொல்லவேண்டும். நமது இந்தியாவும் கூட தனது ஏற்றுமதிக்கு பெருமளவில் ஐரோப்பாவை சார்ந்துள்ளது. குறிப்பாக மாருதி, சுஸ்லான் மற்றும் ஐடி நிறுவனங்கள். ஐரோப்பியாவின் பின்னடைவு சீனாவையும் கூட பெருமளவு பாதிக்கும். சீனாவின் தொழிற் உற்பத்தி குறைந்தால் இரும்பு போன்ற தாதுப்பொருட்களின் விலைகள் சரியவும் வாய்ப்புள்ளது.

ஆக மொத்தத்தில் இப்போதைக்கு பங்கு சந்தையில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்வது கடினம். இந்தியாவிலும் கூட தொழிற் உற்பத்தி உயர்வு தொடர்ந்து சிறப்பாக இருந்தாலும், வேகம் மட்டுபட்டிருப்பதும், அரசு மற்றும் மத்திய வங்கி எதிர்பார்த்த அளவுக்கு பணவீக்கம் குறைய வில்லை என்பதும் கவனிக்க வேண்டியவை.

ஏற்கனவே சொன்னபடி நீண்டகால முதலீட்டாளர்கள் சற்று நிதானம் காட்டுவது நல்லது. நிபிட்டி 4950 க்கு அருகே செல்லும் போது, பங்குகளை மெல்ல மெல்ல (முன்போல) சேகரிக்க ஆரம்பிக்கலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

Friday, May 14, 2010

கடித்த படி சாரி, படித்த கடி!


ரீசன்ட்டா படித்து ரசித்தது...

ஒரு ஆள் பாக்கெட்ல மொத்தமா Rs.200 இருக்கு... அப்போ 4 ஏழைகள் அவன் கிட்டே வந்து பணம் கேட்கிறார்கள்.... அவன் உடனே ஆளுக்கு 100 ருபாய் கொடுக்கறான்.. எப்படி??

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?

என்ன, மொத்த பணம் 200 ல நாலு பேருக்கு 100 ருபாய் எப்படி கொடுக்க முடியும், தப்பா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?

"நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா எதுவுமே தப்பில்லே" !!

டிஸ்கி: படித்ததுமே கொஞ்சம் தலை சுற்றியது. அதனால்தான் தலைப்பில் கொஞ்சம் குழப்பம். உங்களுக்கு எப்படி?

நன்றி!

Thursday, May 13, 2010

ஐபிஎல்'லும் ஆஸ்கார் விருதும்!


நமது கிரிக்கெட் வீரர்கள் உலக கோப்பை போட்டிகளில் சொதப்பி விட்டதற்கு அளவுக்கதிமான ஐபிஎல் கொண்டாட்டங்கள்தான் காரணம் என்றும் (எனவே) ஐபிஎல் போட்டிகளை குறைக்க வேண்டும் என்றும் ஏராளமான கண்டனக்குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த கண்டனக் குரல்களை எழுப்புபவர்கள் பெரும்பாலும் முந்தைய உலகக் கோப்பை போட்டிகளில் சொதப்பிய முன்னாள் வீரர்கள் மற்றும் தமது டிஆர்பி ரேட்டிங்குகளை அதிகரிக்க வேண்டி நேற்று வரை ஐபிஎல் துதி பாடிய தொலைக்காட்சிகளும்தான் என்பது குறிப்பிட தக்கது.

சராசரி கிரிக்கெட் ரசிகர்களின் சார்பாக நான் இவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இங்கே.

நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் போன்றவர்கள் நடித்த படங்களில் பல இங்கே சக்கைப் போடு போட்டிருக்கின்றன. ஆனால் இவர்கள் இதுவரை ஆஸ்கார் விருது ஏன் வாங்க வில்லை என்று யாராவது கேள்வி கேட்கின்றனரா? யாரும் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் அனைவருக்கும் தெரியும். "அதுவேறு, இது வேறு" என்று. அதே போலத்தான், ஐபிஎல்'லும் ஐசிசி கிரிக்கெட்டும்.

உள்ளூரில் விலை போகும் சரக்குகள் வெளியூரிலும் விலை போகத்தான் வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

ஐபிஎல் வெற்றிக்கு முக்கிய காரணம், இந்தியாவின் முக்கிய பொழுது போக்கு அம்சங்களான கிரிக்கெட் மற்றும் பாலிவுட்டின் கூட்டணிதான். கவர்ச்சி, திரில், ஆட்டம்-பாட்டம் அனைத்தும் கூடிய ஐபிஎல் இந்தியர்களிடம் எளிதில் விலை போனது ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம்தான்.

உலகக் கோப்பை எல்லாம் "ஆஸ்கார்" போல. ஏதோ சில நாடுகளின் அணிகள் போட்டா போட்டிப் போட்டுக் கொண்டு சில வருடங்களுக்கு ஒரு முறை விளையாடுவது. அதைப் பற்றியெல்லாம் இந்திய ரசிகர்கள் கவலைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு தேவையானது எல்லாம், "நிறைய மசாலா". அதை ஐபிஎல் நிறையவே தருகின்றது.

இந்திய திரைப்படங்கள் ஆஸ்கார் அளவுக்கு உயர வேண்டும் என்று சில உலக நாயகர்கள் (?) (அவ்வப்போது) சொல்லிக் கொண்டே மசாலா படங்களை தயாரிப்பது போல, நாமும், இந்திய அணி உலக தரத்துக்கு உயர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே அடுத்த ஐபிஎல் போட்டிகளை "என்ஜாய்" செய்வதற்காக ஆவலுடன் காத்திருப்போம்.

சூனா பூனா! போ! போ! போயிட்டே இரு!

நன்றி!

Wednesday, May 12, 2010

சாதனையும் வேதனையும் !


முதலில் சாதனைக்கு பாராட்டு!

சதுரங்க விளையாட்டின் முப்பரிமாணங்களிலும் (League, Knock Out and Match) உலக சாம்பியன் பட்டம் வென்று, அவரை உலக சாம்பியன் என்று அங்கீகரிக்க மறுத்து வந்த ஒரு பிரிவினரை வாயடைக்கச் செய்த, நமது சதுரங்க சக்கரவர்த்தி விஸ்வநாதன் ஆனந்த இப்போது "மிகக் கடுமையான போட்டியாளராக" கருதப் படும் டோபலோவ்'வை வீழ்த்தி, தனது உலக சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். போட்டி ஆரம்பிப்பதற்கு சற்று முன்னே எரிமலை குழம்பின் காரணமாக ஐரோப்பியாவில் விமான போக்குவரத்து தடைபட்டது விஸ்வநாதன் ஆனந்தின் தயார் நிலையை வெகுவாக பாதித்தது. இந்த போட்டியின் முதலாவது ஆட்டத்திலேயே ஆனந்த் தோல்வி அடைந்தது அவரது தயாரின்மையை வெகுவாக வெளிப்படுத்தியது. இருந்தாலும் சாம்பியன்கள் எளிதில் வீழ்வதில்லை என்பதற்கு உதாரணமாக சிறப்பாக மீண்டு வந்த அவர் போட்டியின் எட்டாவது ஆட்டம் வரை முன்னிலையே வகித்து வந்தார். டோபலோவ் இறுதி கட்டத்தில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்றும் ஆனந்தின் வயது மற்றும் உடல் வலு-குறைவு ஆகியவை கடைசி கட்டத்தில் அவருக்கு எதிராக அமையும் என்று சில சதுரங்க முன்னாள் வீரர்கள் கணித்ததற்கு மாறாக வெற்றியாளர்களுக்கு எதுவும் தடையில்லை என்பதை ஆனந்த் மீண்டும் ஒரு முறை நிருபித்துக் காட்டினார்.

அவருக்கு நமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இங்கே பதிவு செய்வோம்.

இப்போது வேதனைக்கு ஆறுதல்!

20-20 உலக கோப்பை போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சூப்பர் லீக் போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்து செமி பைனல் வாய்ப்பையும் இழந்து திரும்பி இருக்கிறது டோனி தலைமையிலான இந்திய அணி. தொடர்ந்து பல நாட்கள் உள்ளூரின் சாதகமான ஆடுகளங்களில் சாதாரண பந்து வீச்சாளர்களுடன் மோதியது, இந்திய பேட்ஸ்மென்களின் தயார்நிலையை வெகுவாக பாதித்தது. கோடை வெயில் வீரர்களின் உடல் தகுதியை ஒருபக்கம் பாதிக்க, இன்னொரு பக்கம் இரவு நேர கேளிக்கைகள் அவர்களின் மனரீதியான தயார்நிலையை பாதித்திருக்கின்றன. குறிப்பாக முக்கியமான உலகக் கோப்பைக்கு இடையேயும் கூட "கேளிக்கைகளுக்காக" நான்கு நாட்கள் இந்திய வீரர்கள் முழுமையாக செலவழித்தது அவர்கள் "ஐபிஎல் ஜுரத்திலிருந்து" முழுமையாக வெளிவரவில்லை என்பதையே வெளிக்காட்டுகிறது. சில நாட்களுக்கு முன்னர் வரை அவர்களை கடவுளர்களாக சித்தரித்த நமது கிரிக்கெட் விமர்சகர்கள் இப்போது அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது. "இதுவும் கடந்து போகும்" என்ற தத்துவம் கிரிக்கெட் விளையாட்டுக்கு மிகவும் நன்றாகவே பொருந்தும். அடுத்து வரும் ஜிம்பாப்வே தொடரில் இந்தியா வெற்றி பெற்றால் போதும். இந்திய அணியினர் மீண்டும் கடவுளர்கள் ஆக்கப் படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

எனவே இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெரிய அளவில் கவலைப் பட வேண்டியதில்லை.

அதே சமயம் கேளிக்கைக் களங்களை விட போராட்டக் களங்களிலேயே பெருவாரியான வெற்றிகள் ஈட்டப்பட்டிருக்கின்றன என்பதை அவர்கள் விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்களிடமிருந்து கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

நன்றி!

Monday, May 10, 2010

மொபைலில் மொபைல் பேச்சு வேண்டாமே!



பொருள் பொதிந்த புகைப்படம்!

நன்றி!

Sunday, May 9, 2010

உலக பொருளாதார சிக்கல் - பகுதி - II ?


நெருப்பை நெருப்பால் அணைக்க முடியுமா? கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத பொருளாதார சிக்கலை இன்னொரு கடனால் தீர்க்க முடியுமா? இந்த கேள்விகளுக்கு விடை "இல்லை" என்பது உண்மையானால் உலகம் இரண்டு வருடங்களுக்குள்ளாகவே மீண்டுமொரு பெரிய பொருளாதார சிக்கலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் உண்மையாகும். சற்று விளக்கமாக இங்கே பார்ப்போம்.


கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு முன்னர் வாடிக்கையாளர்களின் "கடன் வாங்கி செலவு செய்யும் போக்கு" வரைமுறைகளை மீறியதால் அவர்கள் கையை விரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகள் காலாவதியாகும் நிலையும் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர், ஏன் ஒரு வங்கியை கூட இன்னொரு வங்கி நம்பாத சூழ்நிலை உருவாகியது. உலக பொருளாதாரம் சில மாதங்கள் வரை ஸ்தம்பித்து காணப் பட்டது. பங்கு சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு நிதி சந்தைகளும் சரிவை சந்தித்தன.

அப்போது, பொருளாதார சிக்கலை தீர்க்க வேண்டி, உலக நாடுகளின் அரசாங்கங்கள் அதிகப் படியான கடனை வாங்கி அந்த கடனின் உதவியால் சரிந்து கொண்டிருந்த பொருளாதாரத்தை நிமிர்த்தின. அதே போல காலாவதியான வங்கிகளுக்கு (கடன் மூலமாக) அதிக மூலதனத்தை அளித்து புத்துயிர் கொடுத்தன. இப்படி சந்தையினையும் வங்கிகளையும் காப்பாற்றிய பல மேலை நாட்டு அரசாங்கங்கள் தமது சொந்த கடனை திருப்பி தர முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. கிரீஸ் ஒரு "tip of the ice berg" மட்டுமே என்றும் அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற பெரிய நாடுகள் கூட "கடன் சிக்கலில்" தத்தளிக்கும் காலம் விரைவில் வரும் என்று சில பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

கிரீஸ் நாட்டினை காப்பாற்ற ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச நிதி அமைப்புக்கள் முன்வந்தாலும், அவர்களும் கூட மீண்டும் மீண்டும் கடன் வாங்கித்தான் சிக்கலை தள்ளிப்போட முனைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் நாளை (10.05.2010) காலை ஆசிய சந்தைகளில் வர்த்தகம் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒரு உத்தேச திட்டம் வெளியிடப் படும் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்திருப்பது, இவர்கள் நிஜப் பிரச்சினைகளை விட சந்தை சரிவைப் பற்றியே அதிகம் கவலைப் படுகிறார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது.

ஆக மொத்தத்தில் பெருகி வரும் கடன் குவிப்பால் (Spiralling of Public Debt) உலகப் பொருளாதாரம் மீண்டும் ஒரு மந்த நிலைக்கு தள்ளப் பட இப்போதைக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று தோன்றுகிறது.

இப்போது நமது சந்தைக்கு வருவோம்.

நிபிட்டி 5400 புள்ளிகளுக்கு அருகே செல்ல செல்ல லாப விற்பனை செய்யுங்கள் என்றும் புதிய முதலீடுகளை தவிர்க்கவும் என்றும் இந்த பதிவில் திரும்ப திரும்ப வலியிறுத்தி வந்ததை நினைவு கூற விரும்புகிறேன். மேலே சொன்னபடி கிரீஸ் திட்டம் நாளை காலையில் அறிவிக்கப் பட்டு, அந்த திட்டம் சந்தைகளை சந்தோசப் படுத்தும் பட்சத்தில், நிபிட்டி (சந்தையும் கூட) ஒரு தற்காலிக முன்னேற்றம் காண வாய்ப்புக்கள் உள்ளன. சரிவில் மிகவும் பாதிக்கப் பட்ட உலோகம் மற்றும் இதர தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் காண வாய்ப்புக்கள் உள்ளன.

அதே சமயம் ஐரோப்பா என்பது உலக பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாகும். அங்கே காணப் படும் சிக்கல்கள் மற்ற பகுதிகளையும் நிச்சயம் பாதிக்கும். குறிப்பாக ஐரோப்பிய கண்டத்துடன் அதிகப் படியான வர்த்தக தொடர்புகள் வைத்திருக்கும் இந்திய நிறுவனங்களை (நீண்ட கால நோக்கில்) தவிர்க்கலாம். உதாரணம் டாடா ஸ்டீல் போன்றவை.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!

Friday, May 7, 2010

நீதிக்கு தலை வணங்குவோம்!


இந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப் பட்ட இரண்டு முக்கிய தீர்ப்புக்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.

முதலாவது, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாக் தீவிரவாதி கசாப்புக்கு கொடுக்கப் பட்ட மரண தண்டனை.

பல அப்பாவிகளை ஈவிரக்கமில்லாமல் கொடூரமாக கொலை செய்த அவனை நடுசந்தியில் இட்டு பழி தீர்க்க வேண்டும் என்ற வலுவான மக்கள் உணர்வுகளுக்கு மத்தியிலும் சட்டத்தின் ஆட்சியினை நிலை நிறுத்திய இந்திய அரசாங்கம் மற்றும் மிகவும் சிக்கலான ஒரு வழக்கினை சரித்திரத்தில் இதுவரை இல்லாத படி விரைவாக விசாரித்து உறுதியான தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஆகியோருக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

இந்திய அரசாங்கத்தின் கடமை இத்துடன் நிறைவு பெற்று விட வில்லை. கசாபின் மரண தண்டனையை விரைவாக நிறைவேற்ற வேண்டிய மற்றுமொரு பெரிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது.

மற்றொரு தீர்ப்பு!

இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட பாகப் பிரிவினை போராட்ட வழக்கின் தீர்ப்பு.

"கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து வெளிவரும் எரிவாயு மத்திய அரசுக்குத்தான் சொந்தம். ரிலையன்ஸ் ஒப்பந்ததாரர் மட்டுமே". ஒரு குடும்ப ஒப்பந்தம் நாட்டின் ஆதாரங்களை கட்டுப்படுத்த முடியாது என்கிற இந்த தீர்ப்பையும் முழுமனதோடு வரவேற்கிறேன். (இது பற்றிய எனது பழைய பதிவு)

மேலும் என்னைப் பொறுத்த வரை, சட்டப் படி ரிலையன்ஸ் நிறுவனம் என்பது ஒரு பொது நிறுவனம்தான் (Public Limited Company). ஒரு குடும்பத்திற்கு கட்டுப்பட்டது அல்ல. அந்த நிறுவனத்தின் நலன்களை புறக்கணிக்கும் வகையிலான குடும்ப ஒப்பந்தத்தில், பங்குதாரர்களின் முறையான ஒப்புதல் இல்லாமல், கையெழுத்திட்ட முகேஷ் அம்பானியின் மீது கம்பெனி சட்டத்தின் கீழே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்தியாவைப் பொறுத்த வரை பொது நிறுவனங்களிலும் கூட தனி நபர்களின் ஆதிக்கம் மிகுந்திருப்பதை நம்மால் காணமுடிகிறது. இந்த வழக்கின் அடிப்படையில் முகேஷ் அம்பானி மீது நடவடிக்கை எடுக்கப் படின் அது ஒரு நல்ல ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

Thursday, May 6, 2010

பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி?


அன்றாட வாழ்வில் மனிதர்களுக்கு பல விதமான பிரச்சினைகள் வருவதுண்டு. அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு ஒரே மாதிரியாக அமைந்து விட முடியாது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அதே சமயத்தில், பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கான வழி எளிதான ஒன்றுதான் என்று நம்புகிறேன். அந்த வழி என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய எனது கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலில் பிரச்சினை நிகழும் காலகட்டத்தில் நாம் எப்படியெல்லாம் நடந்து கொள்கின்றோம் என்று பார்ப்போம். சில உதாரணங்கள் கீழே.

கஷ்டத்தில் (அல்லது டென்ஷன் ஆக) இருக்கும் போது உணவின் மீது கவனம் குறைந்து விடுகின்றது. ஒன்று சாப்பாட்டின் அளவு குறைந்து போகின்றது. அல்லது கண்டமேனிக்கு (ஆரோக்கியமில்லாத) ஆகாரங்கள் உள்ளே போகின்றன.

தூக்க நேரங்கள் மாறிப்போய் விடுகின்றன. நிறைய டிவி அல்லது சினிமா பார்க்கின்றோம். லேட்டாக படுக்கைக்கு செல்கிறோம். விடிந்த பிறகும் தூக்கம் களைந்த பின்னரும் கூட படுக்கையில் புரண்டு கொண்டே இருக்கின்றோம். உடற்பயிற்சி செய்வது நின்று போகின்றது. லேட்டாக அலுவலகத்திற்கு கிளம்புகின்றோம். அல்லது கட் அடிக்கிறோம்.

எல்லோர் மீதும் கோபம் கோபமாய் வருகின்றது. நிறைய பேரிடம் சண்டைக்குப் போகின்றோம். சாலையில் முரட்டுத்தனமாக வாகனம் ஒட்டுகின்றோம்.

ஒரு சிலர் இன்னும் சில படி மேலே சென்று மது அல்லது போதை பழக்கத்திற்கு அடிமையாகி பிரச்சினையை மறக்க முயற்சிக்கின்றனர்.

மேலே சொன்னவையெல்லாம் உடலையும் மனதையும் இன்னமும் தளர்ச்சியாக்கி பிரச்சினைகளை சமாளிக்கும் (அல்லது தீர்வு காணும்) திறனை குறைக்கின்றனவே தவிர எந்த வகையிலும் நமக்கு உதவியாக இருப்பதில்லை. மேலும் கடைசியாக சொன்ன சில விஷயங்கள் நம்மை மீளமுடியாத அபாயங்களுக்கு தள்ளி விடவும் வாய்ப்புக்கள் உள்ளன.

சமீபத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் என்னை ஒரு பெரிய குழப்பத்தில் ஆழ்த்தி விட, என்னுடைய இயல்பான பழக்க வழக்கங்கள் (பதிவுகள் உட்பட) பலவும் மாறிப்போய் விட்டன. ஒரு வித மந்தமான மனநிலை புதிய சிந்தனைகளை வரவிடாமல் தடுத்துக் கொண்டே இருந்தன. அப்போது என்னை சந்திக்க வந்த ஒருவர் சில கருத்துக்களைக் கூறினார். அவரது பாசிட்டிவான சில கேள்விகள் எனது மனநிலையை வெகுவாக மாற்றியது.

'அதாவது எண்ணங்களை பதிவு செய்வது (Documentation of thoughts) என்ற ஒரு நல்ல விஷயத்தை (பதிவு வலை) ஏன் நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டார். பிரச்சினைகள் வரும் போகும். ஆனால் அவற்றை பற்றியெல்லாம் கவலைப் பட்டுக் கொண்டிராமல் நம்மிடமுள்ள நல்ல பழக்க வழக்கங்களை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறினார். உடனடியாக எழுத ஆரம்பியுங்கள் என்றும் கூறினார்.'

எனக்கு புரிந்த வரையில் எவ்வளவு பெரிய கடுமையான காலகட்டமாக இருந்தாலும், ஒருவரது நல்ல பழக்க வழக்கங்களை நிறுத்தி விடக் கூடாது. சொல்லப் போனால் அந்த காலகட்டத்தில் நல்ல விஷயங்களை இன்னும் கொஞ்சம் அதிகமாக கூட செய்யலாம். உதாரணம், உடற்பயிற்சி, நல்ல புத்தகங்கள், அன்றாட கடமைகளை பெண்டிங் வைக்காதது, சுகாதாரமான உணவு, சிறிய சுற்றுலா போன்றவை. இவை மனதிற்கு சற்று ஓய்வு தருவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண உதவும் பலத்தை தருகின்றன.

மொத்தத்தில் எந்த ஒரு பிரச்சினையுமே நமது வாழ்க்கையிலிருந்துதான் பிறக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. நாமில்லா விட்டால் பிரச்சினைகளும் இல்லை. ஒரு சிஸ்டத்தை விட அதன் சப் சிஸ்டம் ஒருக்காலும் பெரியதாக இருக்க முடியாது. எனவே நாம் எப்போதுமே நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சினையையும் விட பெரியவர்கள்தான்.

பிரச்சினையை வாழ்வின் ஒரு சிறிய அங்கமாக மட்டுமே பார்க்க வேண்டும். வாழ்வை விட பெரியது (larger than life) என்ற தேவையற்ற ஒரு அங்கீகாரத்தை பிரச்சினைகளுக்கு கொடுக்காமல் இருந்தாலே அவற்றை ஓரளவுக்கு எளிதாக சமாளித்துவிடலாம் என்று நம்புகிறேன்.

நன்றி!

டிஸ்கி: இந்த பதிவை எழுதும் வரை பிரச்சினைகள் முற்றுப் பெற வில்லை என்றாலும், இயல்பான உற்சாகமான வாழ்க்கைக்கு ஓரளவுக்கு முழுமையாக திரும்பியது பிரச்சினைக்கான பாதி தீர்வை ஏற்கனவே தந்து விட்டது.
Blog Widget by LinkWithin