Skip to main content

உலக பொருளாதார சிக்கல் - பகுதி - II ?

நெருப்பை நெருப்பால் அணைக்க முடியுமா? கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத பொருளாதார சிக்கலை இன்னொரு கடனால் தீர்க்க முடியுமா? இந்த கேள்விகளுக்கு விடை "இல்லை" என்பது உண்மையானால் உலகம் இரண்டு வருடங்களுக்குள்ளாகவே மீண்டுமொரு பெரிய பொருளாதார சிக்கலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் உண்மையாகும். சற்று விளக்கமாக இங்கே பார்ப்போம்.


கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு முன்னர் வாடிக்கையாளர்களின் "கடன் வாங்கி செலவு செய்யும் போக்கு" வரைமுறைகளை மீறியதால் அவர்கள் கையை விரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகள் காலாவதியாகும் நிலையும் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர், ஏன் ஒரு வங்கியை கூட இன்னொரு வங்கி நம்பாத சூழ்நிலை உருவாகியது. உலக பொருளாதாரம் சில மாதங்கள் வரை ஸ்தம்பித்து காணப் பட்டது. பங்கு சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு நிதி சந்தைகளும் சரிவை சந்தித்தன.

அப்போது, பொருளாதார சிக்கலை தீர்க்க வேண்டி, உலக நாடுகளின் அரசாங்கங்கள் அதிகப் படியான கடனை வாங்கி அந்த கடனின் உதவியால் சரிந்து கொண்டிருந்த பொருளாதாரத்தை நிமிர்த்தின. அதே போல காலாவதியான வங்கிகளுக்கு (கடன் மூலமாக) அதிக மூலதனத்தை அளித்து புத்துயிர் கொடுத்தன. இப்படி சந்தையினையும் வங்கிகளையும் காப்பாற்றிய பல மேலை நாட்டு அரசாங்கங்கள் தமது சொந்த கடனை திருப்பி தர முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. கிரீஸ் ஒரு "tip of the ice berg" மட்டுமே என்றும் அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற பெரிய நாடுகள் கூட "கடன் சிக்கலில்" தத்தளிக்கும் காலம் விரைவில் வரும் என்று சில பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

கிரீஸ் நாட்டினை காப்பாற்ற ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச நிதி அமைப்புக்கள் முன்வந்தாலும், அவர்களும் கூட மீண்டும் மீண்டும் கடன் வாங்கித்தான் சிக்கலை தள்ளிப்போட முனைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் நாளை (10.05.2010) காலை ஆசிய சந்தைகளில் வர்த்தகம் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒரு உத்தேச திட்டம் வெளியிடப் படும் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்திருப்பது, இவர்கள் நிஜப் பிரச்சினைகளை விட சந்தை சரிவைப் பற்றியே அதிகம் கவலைப் படுகிறார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது.

ஆக மொத்தத்தில் பெருகி வரும் கடன் குவிப்பால் (Spiralling of Public Debt) உலகப் பொருளாதாரம் மீண்டும் ஒரு மந்த நிலைக்கு தள்ளப் பட இப்போதைக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று தோன்றுகிறது.

இப்போது நமது சந்தைக்கு வருவோம்.

நிபிட்டி 5400 புள்ளிகளுக்கு அருகே செல்ல செல்ல லாப விற்பனை செய்யுங்கள் என்றும் புதிய முதலீடுகளை தவிர்க்கவும் என்றும் இந்த பதிவில் திரும்ப திரும்ப வலியிறுத்தி வந்ததை நினைவு கூற விரும்புகிறேன். மேலே சொன்னபடி கிரீஸ் திட்டம் நாளை காலையில் அறிவிக்கப் பட்டு, அந்த திட்டம் சந்தைகளை சந்தோசப் படுத்தும் பட்சத்தில், நிபிட்டி (சந்தையும் கூட) ஒரு தற்காலிக முன்னேற்றம் காண வாய்ப்புக்கள் உள்ளன. சரிவில் மிகவும் பாதிக்கப் பட்ட உலோகம் மற்றும் இதர தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் காண வாய்ப்புக்கள் உள்ளன.

அதே சமயம் ஐரோப்பா என்பது உலக பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாகும். அங்கே காணப் படும் சிக்கல்கள் மற்ற பகுதிகளையும் நிச்சயம் பாதிக்கும். குறிப்பாக ஐரோப்பிய கண்டத்துடன் அதிகப் படியான வர்த்தக தொடர்புகள் வைத்திருக்கும் இந்திய நிறுவனங்களை (நீண்ட கால நோக்கில்) தவிர்க்கலாம். உதாரணம் டாடா ஸ்டீல் போன்றவை.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!

Comments

govindasamy said…
நல்ல செய்தி , வாழ்த்துகள் !

உண்மைவிரும்பி,
மும்பை.
Maximum India said…
நன்றி உண்மை விரும்பி!
கிரீஸ் பிரச்னையை தற்காலிகமாக கிரீஸ் போட்டு அடக்கினாலும் மொத்தமாக பிரச்னையை தீர்க்க ஓவர் ஹாலிங் செய்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். துக்ளக் மாதிரி செம்பு நாணயம் இஸ் எக்வல் டு வெள்ளி நாணயம் என்று சொல்லாமல் உருப்படியாக ஒக்காந்து யோசித்து முடிவெடுக்க வேண்டும். இடியாப்ப சிக்கலை எல்லோரும் சேர்ந்துதான் தீர்க்க வேண்டும். மாறாக ஒரு பக்கம் இழுக்க இன்னொரு பக்கம் போனால் சீட்டுக்கட்டு போல் விழ வேண்டியதுதான். ஏப்பா பொருளாதார மேதைகளே ! எத்தனையோ தியரிகளை புட்டு புட்டு வெச்சீங்களே !. மொதல்ல ஓட்டய அடைக்க ஒரு வழி சொல்லகூடாதா ?
Maximum India said…
நன்றி பொதுஜனம்!

//கிரீஸ் பிரச்னையை தற்காலிகமாக கிரீஸ் போட்டு அடக்கினாலும் மொத்தமாக பிரச்னையை தீர்க்க ஓவர் ஹாலிங் செய்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். துக்ளக் மாதிரி செம்பு நாணயம் இஸ் எக்வல் டு வெள்ளி நாணயம் என்று சொல்லாமல் உருப்படியாக ஒக்காந்து யோசித்து முடிவெடுக்க வேண்டும்//

ஒரு கடன் பிரச்சினையை இன்னொரு கடனால் தீர்க்க முடியாது என்பது சரித்திரம். ஆனால் சிலவற்றை பட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

நன்றி!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...