Thursday, May 13, 2010

ஐபிஎல்'லும் ஆஸ்கார் விருதும்!


நமது கிரிக்கெட் வீரர்கள் உலக கோப்பை போட்டிகளில் சொதப்பி விட்டதற்கு அளவுக்கதிமான ஐபிஎல் கொண்டாட்டங்கள்தான் காரணம் என்றும் (எனவே) ஐபிஎல் போட்டிகளை குறைக்க வேண்டும் என்றும் ஏராளமான கண்டனக்குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த கண்டனக் குரல்களை எழுப்புபவர்கள் பெரும்பாலும் முந்தைய உலகக் கோப்பை போட்டிகளில் சொதப்பிய முன்னாள் வீரர்கள் மற்றும் தமது டிஆர்பி ரேட்டிங்குகளை அதிகரிக்க வேண்டி நேற்று வரை ஐபிஎல் துதி பாடிய தொலைக்காட்சிகளும்தான் என்பது குறிப்பிட தக்கது.

சராசரி கிரிக்கெட் ரசிகர்களின் சார்பாக நான் இவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இங்கே.

நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் போன்றவர்கள் நடித்த படங்களில் பல இங்கே சக்கைப் போடு போட்டிருக்கின்றன. ஆனால் இவர்கள் இதுவரை ஆஸ்கார் விருது ஏன் வாங்க வில்லை என்று யாராவது கேள்வி கேட்கின்றனரா? யாரும் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் அனைவருக்கும் தெரியும். "அதுவேறு, இது வேறு" என்று. அதே போலத்தான், ஐபிஎல்'லும் ஐசிசி கிரிக்கெட்டும்.

உள்ளூரில் விலை போகும் சரக்குகள் வெளியூரிலும் விலை போகத்தான் வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

ஐபிஎல் வெற்றிக்கு முக்கிய காரணம், இந்தியாவின் முக்கிய பொழுது போக்கு அம்சங்களான கிரிக்கெட் மற்றும் பாலிவுட்டின் கூட்டணிதான். கவர்ச்சி, திரில், ஆட்டம்-பாட்டம் அனைத்தும் கூடிய ஐபிஎல் இந்தியர்களிடம் எளிதில் விலை போனது ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம்தான்.

உலகக் கோப்பை எல்லாம் "ஆஸ்கார்" போல. ஏதோ சில நாடுகளின் அணிகள் போட்டா போட்டிப் போட்டுக் கொண்டு சில வருடங்களுக்கு ஒரு முறை விளையாடுவது. அதைப் பற்றியெல்லாம் இந்திய ரசிகர்கள் கவலைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு தேவையானது எல்லாம், "நிறைய மசாலா". அதை ஐபிஎல் நிறையவே தருகின்றது.

இந்திய திரைப்படங்கள் ஆஸ்கார் அளவுக்கு உயர வேண்டும் என்று சில உலக நாயகர்கள் (?) (அவ்வப்போது) சொல்லிக் கொண்டே மசாலா படங்களை தயாரிப்பது போல, நாமும், இந்திய அணி உலக தரத்துக்கு உயர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே அடுத்த ஐபிஎல் போட்டிகளை "என்ஜாய்" செய்வதற்காக ஆவலுடன் காத்திருப்போம்.

சூனா பூனா! போ! போ! போயிட்டே இரு!

நன்றி!

2 comments:

பொதுஜனம் said...

உண்மையான நடைமுறையை சொல்லி இருக்கிறீர்கள். மீடியாக்கள் அரசியல்வாதிகளை விட பயங்கரமானவை. ஒருவரை தூக்கி மறுநாளே கீழே போட்டு மிதிக்கும் இவைகளை நாடு நடப்பை தெரிந்து கொள்ள உதவும் சாதனமாக மட்டுமே பார்க்க வேண்டும். இரு பக்கமும் பேசி நம் சிண்டை பிய்த்து கொள்ள விடுவார்கள். இந்தியாவில் கிரிக்கெட் ஒரு போதை. அரசு டாஸ்மாக்கை திறந்து சம்பாதிப்பதை போன்று கிரிக்கெட்டில் பல கும்பல் சம்பாதிக்கின்றன. இந்த நேரத்தில் ஆனந்தையும் அஸ்லான் ஷா கோப்பையும் நமக்கு மறந்து போனதே. விளித்து கொள்ளுங்கள். விஜய் படம் பார்த்தால் நாமும் சூபறப்பு என்று விசில் அடிக்க வேண்டும் . அதை விட்டு இல்லாத கதை, தரம் என கண்டதை பேசக்கொடது. அதே போல கிரிக்கெட். எனக்கு ஏதோ நம் வீரர்களை விட வேஸ்ட் இண்டீஸ் கருப்பு சியர் கேர்ள்ஸ் நன்றாக ஆடினார்கள் போல் தோன்றியது..அட போங்க ஏதோ மேட்ச் பார்த்தோம் . என்ஜாய் பண்ணினோம் என்று போய்டே இருக்க வேண்டியதுதானே.

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

Blog Widget by LinkWithin