Skip to main content

சாதனையும் வேதனையும் !

முதலில் சாதனைக்கு பாராட்டு!

சதுரங்க விளையாட்டின் முப்பரிமாணங்களிலும் (League, Knock Out and Match) உலக சாம்பியன் பட்டம் வென்று, அவரை உலக சாம்பியன் என்று அங்கீகரிக்க மறுத்து வந்த ஒரு பிரிவினரை வாயடைக்கச் செய்த, நமது சதுரங்க சக்கரவர்த்தி விஸ்வநாதன் ஆனந்த இப்போது "மிகக் கடுமையான போட்டியாளராக" கருதப் படும் டோபலோவ்'வை வீழ்த்தி, தனது உலக சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். போட்டி ஆரம்பிப்பதற்கு சற்று முன்னே எரிமலை குழம்பின் காரணமாக ஐரோப்பியாவில் விமான போக்குவரத்து தடைபட்டது விஸ்வநாதன் ஆனந்தின் தயார் நிலையை வெகுவாக பாதித்தது. இந்த போட்டியின் முதலாவது ஆட்டத்திலேயே ஆனந்த் தோல்வி அடைந்தது அவரது தயாரின்மையை வெகுவாக வெளிப்படுத்தியது. இருந்தாலும் சாம்பியன்கள் எளிதில் வீழ்வதில்லை என்பதற்கு உதாரணமாக சிறப்பாக மீண்டு வந்த அவர் போட்டியின் எட்டாவது ஆட்டம் வரை முன்னிலையே வகித்து வந்தார். டோபலோவ் இறுதி கட்டத்தில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்றும் ஆனந்தின் வயது மற்றும் உடல் வலு-குறைவு ஆகியவை கடைசி கட்டத்தில் அவருக்கு எதிராக அமையும் என்று சில சதுரங்க முன்னாள் வீரர்கள் கணித்ததற்கு மாறாக வெற்றியாளர்களுக்கு எதுவும் தடையில்லை என்பதை ஆனந்த் மீண்டும் ஒரு முறை நிருபித்துக் காட்டினார்.

அவருக்கு நமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இங்கே பதிவு செய்வோம்.

இப்போது வேதனைக்கு ஆறுதல்!

20-20 உலக கோப்பை போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சூப்பர் லீக் போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்து செமி பைனல் வாய்ப்பையும் இழந்து திரும்பி இருக்கிறது டோனி தலைமையிலான இந்திய அணி. தொடர்ந்து பல நாட்கள் உள்ளூரின் சாதகமான ஆடுகளங்களில் சாதாரண பந்து வீச்சாளர்களுடன் மோதியது, இந்திய பேட்ஸ்மென்களின் தயார்நிலையை வெகுவாக பாதித்தது. கோடை வெயில் வீரர்களின் உடல் தகுதியை ஒருபக்கம் பாதிக்க, இன்னொரு பக்கம் இரவு நேர கேளிக்கைகள் அவர்களின் மனரீதியான தயார்நிலையை பாதித்திருக்கின்றன. குறிப்பாக முக்கியமான உலகக் கோப்பைக்கு இடையேயும் கூட "கேளிக்கைகளுக்காக" நான்கு நாட்கள் இந்திய வீரர்கள் முழுமையாக செலவழித்தது அவர்கள் "ஐபிஎல் ஜுரத்திலிருந்து" முழுமையாக வெளிவரவில்லை என்பதையே வெளிக்காட்டுகிறது. சில நாட்களுக்கு முன்னர் வரை அவர்களை கடவுளர்களாக சித்தரித்த நமது கிரிக்கெட் விமர்சகர்கள் இப்போது அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது. "இதுவும் கடந்து போகும்" என்ற தத்துவம் கிரிக்கெட் விளையாட்டுக்கு மிகவும் நன்றாகவே பொருந்தும். அடுத்து வரும் ஜிம்பாப்வே தொடரில் இந்தியா வெற்றி பெற்றால் போதும். இந்திய அணியினர் மீண்டும் கடவுளர்கள் ஆக்கப் படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

எனவே இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெரிய அளவில் கவலைப் பட வேண்டியதில்லை.

அதே சமயம் கேளிக்கைக் களங்களை விட போராட்டக் களங்களிலேயே பெருவாரியான வெற்றிகள் ஈட்டப்பட்டிருக்கின்றன என்பதை அவர்கள் விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்களிடமிருந்து கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

நன்றி!

Comments

Thomas Ruban said…
//அதே சமயம் கேளிக்கைக் களங்களை விட போராட்டக் களங்களிலேயே பெருவாரியான வெற்றிகள் ஈட்டப்பட்டிருக்கின்றன என்பதை அவர்கள் விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்களிடமிருந்து கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.//

சரியாக சொன்னிர்கள் சார்.

20-20 உலக கோப்பை போட்டி சூப்பர் எட்டு கடைசி ஆட்டத்தில் இலங்கையுடன் வெற்றி பெற்றிருந்தால், "இந்தியாவின் விஸ்வநாதன்ஆனந்த் 4வது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்." என்ற செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்யிருக்கும். எல்லாமே நல்லதுக்கு தான்.

உங்கள் பிரச்சினைகள் "இதுவும் கடந்து போகும்" என்ற தத்துவப்படி தீர்ந்ததா? பிரச்சினைகளில்யிருந்து வெளியே வந்து விட்டிர்களா சார்.

பதிவுகளுக்கு நன்றி சார்.
இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் விஷிக்கு வாழ்த்துக்கள். அவரது மனோதிடத்தை கண்டு கிரிக்கெட்டர்கள் பாடம் கற்றுக்கொண்டால் நல்லது.

//சில நாட்களுக்கு முன்னர் வரை அவர்களை கடவுளர்களாக சித்தரித்த நமது கிரிக்கெட் விமர்சகர்கள் இப்போது அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது. //

சத்தியமா நான் இல்லீங்கோ :)
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

//20-20 உலக கோப்பை போட்டி சூப்பர் எட்டு கடைசி ஆட்டத்தில் இலங்கையுடன் வெற்றி பெற்றிருந்தால், "இந்தியாவின் விஸ்வநாதன்ஆனந்த் 4வது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்." என்ற செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்யிருக்கும். எல்லாமே நல்லதுக்கு தான். //

உண்மைதான் தாமஸ் ரூபன்!

//உங்கள் பிரச்சினைகள் "இதுவும் கடந்து போகும்" என்ற தத்துவப்படி தீர்ந்ததா? பிரச்சினைகளில்யிருந்து வெளியே வந்து விட்டிர்களா சார்.//

அக்கறையான விசாரிப்புக்கு நன்றி நண்பரே!

பிரச்சினைகள் கடந்து போகின்றதா இல்லையோ, நாம் அவற்றை கடந்து போக வேண்டியிருக்கிறது. ஒருவேளை நாம் கடக்க வில்லை என்றாலும் கூட காலம் எல்லாவற்றையும் கடத்திக் கொண்டு போய்க் கொண்டேதான் இருக்கின்றது.

நன்றி!
Maximum India said…
நன்றி எட்வின்!

//இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் விஷிக்கு வாழ்த்துக்கள். அவரது மனோதிடத்தை கண்டு கிரிக்கெட்டர்கள் பாடம் கற்றுக்கொண்டால் நல்லது. //

இந்தியாவைப் பொறுத்தவரையில் Class Barriers அதிகம். ஒட்டுமொத்த சமூகமானது தனிப்பட்டவர்கள் மேலெழும்ப சாதாரணமாக அனுமதிப்பதில்லை. இருந்தாலும் விஷி போன்றவர்கள் வெகுவாக முன்னேறி, இந்திய சமுதாயத்தின் தடைகளை முயன்றால் முறியடிக்க முடியும் என்பதை அவ்வப்போது வெளிக்காட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

//சத்தியமா நான் இல்லீங்கோ :)//

நானும் உங்களைச் சொல்லலீங்கோ :)

தம்முடையா காலகட்டத்தில் கட்டையைப் போட்டு இந்திய அணி தோல்வியுற காரணமாக இருந்தவர்களெல்லாம் இன்று தொலைக்காட்சிகளில் விடுகின்ற கதை பொறுக்க முடியலைங்கோ!

நன்றி!
Naresh Kumar said…
ஐபிஎல் சர்ச்சைகளும், அரசியலும் ஒன்றே ஒன்றுதான் உணர்த்துகிறது! இந்தியக் கிரிக்கெட் அமைப்பு இனி ஃப்ரபஷனல் லெவலில் இருப்பது கனவோ என்பதுதான்... மோடியின் பிரச்சினைக்கு அப்புறம் திடிரென பிசிசிஐ ஐபிஎல் லுக்கும், அதற்கும் சம்பந்தமே இல்லாதது போல் பேசுவது மிகப் பெரிய காமெடி!

மாட்டிக் கொண்டவன் திருடனாகிவிட்டான்! ஜாம்பவானாக இருந்தாலும் சுயநல ஆட்டத்துக்கு பேர்போன கவாஸ்கர் இந்திய வீரர்களில் சுயநலத்தை விமர்சிப்பது இன்னொரு காமெடி!!!

தோற்றவுடன் ஆளாளுக்கு தோனியை மட்டும் திட்டுவது கிரிக்கெட் பத்தி யாராவது சொல்லிக் கொடுத்தா பரவாயில்லைனு தோணுது!
Maximum India said…
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் நரேஷ் குமார்!

கொஞ்ச காலம் வெளியூர் சென்றிருந்ததால், பின்னூட்டத்திற்கு பதிலெழுத முடியாமல் போய் விட்டது.

நன்றி!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...