Sunday, January 16, 2011

பணவீக்கமும் விஷக் காய்ச்சலும்!


பரதப்பட்டி ஜனங்களெல்லாம் பாவப் பட்ட ஜனங்களாம். பலதரப் பட்ட வியாதிகளால் அடிக்கடி பாதிக்கப் படுவார்களாம். ஒரு முறை எல்லாரும் ஒண்ணா கூடி இந்த பிரச்சினைக்கு வழி என்னன்னு யோசிச்சாங்களாம். அப்ப வந்த யோசனைப்படி ஒரு டாக்டரை அதுவும் வெளிநாட்டில் படிச்ச டாக்டரை ஊர் தலைவரா போட்டாங்களாம். அவருக்கு துணையா நிறையா படிச்ச டாக்டர்களாக வச்சுகிட்டாங்கலாம்.

நம்மூரு தலைவரா ஒரு டாக்டர் இருக்காருன்னு, இனிமேல நமக்கு வியாதி தொல்லை இருக்காது நினைச்ச பரதப்பட்டி ஜனங்களோட சந்தோஷம் ரொம்ப நாளைக்கு நீடிக்கலையாம். திடீரென்னு ஒரு விஷக் காய்ச்சல் ஊரெல்லாம் பரவுச்சாம்.

பரத் பவார் என்கிற ஒரு டாக்டர் சொன்னாராம், காசு அதிகமாக சம்பாதிக்கிறதால ஊரு ஜனங்க எல்லாரும் நிறைய சாப்பிடறாங்க. அதனாலதான் காய்ச்சல் வருதுன்னு. பாரினில படிச்ச இன்னொரு டாக்டர் பதம்பரம் சொன்னாராம், "இது ஒலக பிரச்சினை. எல்லா இடத்திலும்தான் காய்ச்சல் இருக்கு. அங்க எல்லாருக்கும் சரியாப் போனா, நம்மூரிலும் சரியாப் போயிடும்'னு". திட்டம் போடுற படா டாக்டர் பளுவாலியா சொன்னாராம். "நேத்திக்கு நூறு டிகிரி இருந்த காய்ச்சல், இன்னைக்கு ஒரு டிகிரிதான் ஏறி இருக்கு. இதுல இருந்து தெரிய வருது என்னான்னா, காய்ச்சல் ஏறுற வேகம் கட்டுக்குள்ளதான் இருக்கு'ன்னு". இன்னொரு டாக்டர் பப்பா ரெட்டி சொன்னாராம், "யாரும் கவலைப் படாதீங்க, வருகிற மார்ச் மாதத்துக்குள்ள, காய்ச்சல் நூறு டிகிரிக்குள்ள வந்துடும்'னு.

எல்லாரும் ரொம்பவே நம்புன டாக்டர் பன்மோகன் சிங் சபதம் போட்டாராம். நூறு நாள்ல இந்த விஷக் காய்ச்சல கட்டுப் படுத்துவேன்னு. சொன்ன அதே வேகத்துல அந்த ஊருல வித்த மருந்தோட விலை எல்லாத்தயும் ஏத்திட்டாராம். விலைய எத்தி எப்படி விஷக் காய்ச்சலை கட்டுப் படுத்த முடியும்னு காரணம் கேட்டா, இதெல்லாம் ஒலக சமாசாரம் , உங்களுகெல்லாம் புரியாதுன்னு சொல்லிட்டாராம். குட்டி டாக்டர் பாகுல் காந்தி சொன்னாராம். "இதே எங்க பாட்டி மட்டும் இருந்திருந்தா கை வைத்தியம் பாத்தே எல்லா காய்ச்சலையும் விரட்டி இருப்பாங்க. அதுக்குத்தான் சொல்றேன், இந்த பணநாயகம் எல்லாம் வேணாம், எங்க நாட்டாமை ஆட்சியை மறுபடியும் கொண்டு வந்தா போதும்"

பரதப் பட்டி தெக்கு தெரு கவுன்சிலர் பருனாநிதி ஒரு கலைப் பிரியராம். அதுவும் கூத்துக் கலை மேல கொலைப் பிரியராம். அவங்க தெருவுல இருந்த எல்லாருக்கும் கூத்து காட்டி காட்டியே, காய்ச்சலோட கடுமைய மறக்கச் செஞ்சாராம். விஷக் காய்ச்சல குறைக்க அடிக்கடி பன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதுனாராம். மருந்தோட விலைய பன்மோகன் சிங் பத்து ரூபா ஏத்தினா, அதுல ஒரு ரூபாய் விலய குறைச்சு மக்கள் மேல கருணை மழை பொளிஞ்சாராம்.

பரதப்பட்டி மக்களுக்கு இந்த விஷ காய்ச்சல் பத்தியெல்லாம் அதிக கவலை எல்லாம் இல்லையாம். மருந்து வியாபாரிகளும் டாக்டர்களும், இந்த ஆட்சி பொற்காலம் என்றார்களாம். பரதப் பட்டி உலக அரங்கில் உயர்ந்த இடம் பிடிக்க இது போன்ற காய்ச்சல்களும் அதிக மருந்து விற்பனையும் ரொம்ப முக்கியம் என்றார்களாம். இன்னும் கொஞ்ச நாளில் பைனாப் பட்டியை விட இந்தியாவில் மருந்து விற்பனை ஜாஸ்தியாகி விடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்களாம். விஷ காய்ச்சல் வராதவர்களுக்கு இந்த பிரச்சினை என்று ஒன்று இருக்கிறதே தெரிய வில்லையாம். பாதிக்கப் பட்டவங்களோ இது தம்மோட தலை எழுத்துன்னு அமைதியா இருந்துட்டாங்களாம். நல்ல லாபம் பாத்த ஒலக மருந்து வியாபாரிகளெல்லாம், பன்மோகன் சிங் ஒரு ஒலக நாயகன்னு பட்டம் கொடுத்தாங்களாம்.

இந்த காய்ச்சலால பணபுழக்கம் அதிகமாகி இருக்கலாமுங்க. ஆனால் காலப் போக்கில் விஷக் காய்ச்சல் உடம்பை உருக்கி எடுத்த பின்னர்தான் தெரியும், இது ஒரு மீளாப் பயணம் என்று புரிந்த ஒரு சிலரும், தம் பேச்சை கேக்க ஆளின்றி அமைதியாக இருந்து விட்டார்களாம்.

ஓகே நண்பர்களே! இப்ப நம்ம சந்தை நிலவரத்திற்கு வருவோம்.

தொடர்ந்து வெளிவந்த ஊழல் பூதங்கள், அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக வட்டி வீதம் அதிகரிக்குமோ என்ற கவலை, சாதகமில்லாத உலக சந்தை தகவல்கள், உயரும் கச்சா எண்ணெய் விலைகள், இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை, குறைந்த இந்திய தொழிற் வளர்ச்சி, பங்கு லாப விற்பனை போன்றவை சந்தையை கடந்த இரு வாரங்களாக படாத பாடு படுத்தி விட்டன. முக்கிய குறியீடுகள் எட்டு சதவீதம் வரை குறைய, சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து உள்ளன. நிபிட்டி குறியீடு முக்கிய அரண் நிலைக்கு கீழே சரிந்துள்ளது. நிபிட்டி மீண்டும் 5900 புள்ளிகளுக்கு மேலே செல்லும் வரை வாங்கும் நிலையை வர்த்தகர்கள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.



அதே சமயத்தில், 5600 புள்ளிகளுக்கு அருகே நிபிட்டி நல்ல அரனை கொண்டுள்ளது. இந்தியாவில் எல்லா விலைகளையும் பாதித்த பணவீக்கம் சந்தையின் புள்ளிகளையும் பாதித்துள்ளது. முந்தைய 21000 (சென்செக்ஸ்) நிலைக்கும் இன்றைய 21000 நிலைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. எனவே, நீண்ட கால முதலீட்டாளர்கள் அடிப்படையில் சிறந்த பங்குகளை மெல்ல மெல்ல சேகரிக்கலாம். மேலும், வங்கி வட்டி வீதங்கள் உயர்ந்துள்ள நிலையில், வங்கி சேமிப்பினையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளலாம்.

வருகிற வாரம் வெகு சிறப்பாக அமைந்திட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

நன்றி!

Thursday, January 13, 2011

தந்தியடிக்கும் கலைஞர்!


விலைவாசி ஏற்றம் முதல் ஈழத்தமிழர் இனப்படுகொலை வரை பிரச்சனைகளை கடிதங்கள் மூலமாக கையாண்டு கொண்டிருந்த கலைஞர் ஐயா, இன்று இந்திய மீனவர்கள் இலங்கை படையினரால் படுகொலை செய்யப் படுவதை தடுக்க "தந்தியை " ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

எதிரி நாடாக கருதப் படும் பாகிஸ்தான் கூட எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுவதில்லை. நேச நாடாக நேசிக்கப் படும் இலங்கையோ எல்லைக்கு அருகே வரும் இந்திய மீனவர்களைக் கூட விட்டு வைப்பதில்லை. சிறிது காலம் முன்னர் வரை விடுதலை புலிகளுக்கு உதவ வரும் மீனவர்களைத்தான் சுடுகிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டியவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிராரர்கள் என்று தெரிய வில்லை.

கலைஞர் ஐயாவிற்கு வருவோம். மொபைல், ஈ மெயில், பாக்ஸ் போன்ற பல நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகைக்குப் பின்னர், நலிவடைந்து போன தந்தித் துறைக்கு மறு வாழ்வளிக்க இப்போது கலைஞர் ஐயா முடிவு செய்திருக்கிறார் போல தெரிகிறது.

மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி எழுதியே மன்மோகன் சிங் விலைவாசியை கட்டுப் படுத்துவதை போல, கலைஞரும் இனிமேல் தந்தி அடித்தே தமிழினத்தை வாழ வைக்கப் போகிறார் போல.

நாமும் கலைஞர் (இலவச) டிவியில் சினிமா சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இந்த பொங்கலையும் வழக்கம் போல கண்களை கட்டிக் கொண்டு கனவுலகில் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

நன்றி!
Blog Widget by LinkWithin