Thursday, December 31, 2009



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Sunday, December 6, 2009

தடை ஓட்டம்


கடந்த காலாண்டிற்கான இந்தியாவின் மொத்த பொருளாதார வளர்ச்சி, பல பொருளாதார நிபுணர்களின் கணிப்பையும் வெகுவாக விஞ்சி 7.9% அளவாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் முக்கிய காரணம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப் பட்ட ஊதிய உயர்வு நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு செலவினத் தொகைகள்தான் என்றாலும் கூட, சென்ற காலாண்டில் குறிப்பிடத் தக்க அளவு இந்திய தொழிற்துறை வளாச்சி பெற்றதும் குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் ஏற்றுமதி வீழ்ச்சியின் அளவும் சென்ற மாதம் வெகுவாக குறைந்திருப்பது, கூடிய சீக்கிரமே இந்தியா ஒரு "வேகமான வளர்ச்சிப் பாதைக்கு" திரும்பும் (Return to High Growth Trajectory) என்ற நம்பிக்கையை உருவாக்கி உள்ளது.

இந்த வளாச்சி பாதைக்கு பெரிய வில்லனாக அமைந்திருப்பது, கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் "உணவுப் பொருட்களின் விலைவாசிகள்" ஆகும். அமெரிக்காவின் "எளிமையான வட்டியில் கடன் " (Easy Monetary Policy) எனும் பொருளாதார கொள்கை மற்றும் இந்தியாவின் "அதிகரிக்கும் வருவாய் இடைவெளி" சமூக அமைப்பு, தெளிவில்லாத "உணவு கொள்கை" மற்றும் உணவு பதுக்கல்கள் ஆகியவை எல்லாம் ஒருங்கே சேர்ந்து இன்றைய தேதியில் விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர வழிவகுத்துள்ளன. பங்குசந்தையின் ஏற்ற இறக்கங்களை பற்றி அளவுக்கதிகமாகவே கவலைப் படும் நமது அரசாங்கம் உணவுப் பொருட்களின் விண்ணை முட்டும் விலைவாசிகளைப் பற்றி அதிகம் கவலைப் பட்டதாக தெரிய வில்லை.

மும்பை தாக்குதலின் நினைவு தினத்தை விட அமெரிக்க அதிபர் விருந்திற்க்கே அதிக முக்கியத்துவம் கொடுத்த இந்த அரசிடம் இருந்து சாமான்ய மக்கள் தரப்பில் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் உணவு பொருட்களின் விலை உயர்வின் தாக்கம் தொழிற் துறையையும் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால், அரசு ஏதேனும் "பணக்கட்டுப்பாடு" (Reversal of Fiscal/Monetary Relief Measures) முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னபடி பங்குசந்தைகள் இப்போதைக்கு இரண்டு முக்கிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஒன்று இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி. சென்ற காலாண்டின் வேகம் அடுத்த இரு காலாண்டுகளிலும் தொடர வாய்ப்புக்கள் சற்று குறைவுதான் என்றாலும், இந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த வளாச்சி ஏழு சதவீதமாக இருக்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன என்று பல பொருளாதார நிபுணர்களும் கருதுகின்றனர். எனவே பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த பொருளாதார வளர்ச்சி தகவலினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இரண்டாவது முக்கிய காரணி, தடையில்லாத அமெரிக்க டாலர் உள்வரத்து (FII Inflows). சென்ற வெள்ளிக்கிழமை வெளிவந்த அமெரிக்க "வேலைவாய்ப்பு இழப்பு விகிதம்" (Unemployment Rate) முந்தைய மாதத்தை விட குறைந்திருப்பது, அமெரிக்க மத்திய வங்கி தனது "எளிய வட்டிக் கொள்கையை" மறுபரிசீலனை செய்யுமோ என்ற பயத்தை சந்தைகளில் உருவாக்கியுள்ளது. இந்த பயத்தின் விளைவாக, தங்கம் ஒரே நாளில் பெரிய விலை வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டுள்ளது. "டாலர் மாற்று வர்த்தக திருப்பம்" (Unwinding of Dollar Carry Trade) நேரிட்டால் உலக அளவில், பங்குசந்தைகளில் பெரிய இழப்பு நேர வாய்ப்புக்கள் உள்ளன. அதே சமயம், "எளிய வட்டிக் கொள்கை", வெறுமனே அமெரிக்க பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே சார்ந்தது இல்லை என்பதையும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கையின் இன்னொரு வெளிப்பாடே இந்த கடன் கொள்கை என்பதையும் மனதில் வைத்து பார்க்கும் பார்க்கும் போது, உடனடியாக வட்டிகள் கடுமையாக்கப் படும் என்ற பயம் தேவையில்லை என்றே இப்போதைக்கு தோன்றுகிறது.

ஏற்கனவே சில பதிவுகளில் சொன்னபடி நிபிட்டி 5100 -5200 அளவுகளில் பெருத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது. 5200 என்ற அளவு ஒருவேளை "அதிக வர்த்தகத்துடன் முழுமையாக" (Break Out with High Volume) முறியடிக்கப் பட்டால், சந்தைகள் இன்னும் கூட வெகுவாக உயர வாய்ப்புள்ளது. முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பெரிய சரிவின் போதும், அடிப்படைகள் சிறப்பாக உள்ள நிறுவனங்களின் பங்குகளை நீண்ட கால நோக்கில் சேகரிக்கலாம். ஏற்கனவே பல பதிவுகளில் சொல்லியுள்ளபடி இந்தியா மற்றும் (அடிப்படை சிறப்பாக உள்ள) இந்திய நிறுவனங்களின் வளாச்சி நீண்டகால நோக்கில் சிறப்பானதாகவே இருக்கும். ஆனால், அந்த வளர்ச்சியின் பலனை இந்தியர்கள் முழுமையாக அனுபவிக்க, அந்நிய முதலீட்டாளர்களும் இந்திய அரசின் குறுகிய கால முதலீட்டுக் கொள்கைகளும், அதிக இடம் தருவதில்லை என்பது வருந்துதற்குரிய விஷயம். வர்த்தகர்கள் 5200 என்ற நிபிட்டி அளவை "மையப் புள்ளியாக" (Pivot Point) வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி.

Tuesday, December 1, 2009

ஜாலியாக இருக்கலாம்! ஆனால்?


நவீன இலக்கியத்தின் சிறந்த படைப்புக்களில் ஒன்றாக கருதப் படும் "ஆல்கெமிஸ்ட் (The Alchemist)" புதினத்தில் இருந்து ஒரு சிறிய கதையை பதிவுலக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.

முன்னொரு காலத்தில், ஒரு வியாபாரி தன் மகனை "மகிழ்ச்சியின் ரகசியத்தை" அறிந்து கொள்வதற்காக, ஒரு மகாஞானியிடம் அனுப்பி வைத்தார். அவனும் பல நாட்கள் அலைந்து திரிந்து அந்த மகாஞானியின் இருப்பிடத்தை கண்டறிந்தான். அங்கே துறவியின் எளிமையான கோலத்துடன் மகாஞானி இருப்பார் என்று எதிர்பார்த்த வியாபாரியின் மகனுக்கு ஆச்சரியமே காத்திருந்தது. ஒரு ஆடம்பரமான மாளிகையில் ஏராளமானோர் வந்து சென்று கொண்டிருக்க ஒரு மூலையில் இன்னிசையுடன் மிகப் பெரிய விருந்தும் நடந்து கொண்டிருந்தது. பலருடனும் உரையாடிக் கொண்டிருந்த அந்த ஞானியுடன் பேசுவதற்கான வாய்ப்பே இரண்டு மணி நேரம் கழித்துத்தான் நமது ஹீரோவுக்கு கிடைத்தது.

நம் ஹீரோ தன்னை தேடி வந்த காரணத்தை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட ஞானி, அவனிடத்தில் ஒரு டீ ஸ்பூனைக் கொடுத்து அந்த ஸ்பூனில் இரண்டு சொட்டு எண்ணெய்யை விட்டு விட்டு, "முதலில் இந்த இடத்தை சுற்றிப் பார்த்து விட்டு வா! அதே சமயத்தில் எண்ணெய் கீழே சிந்தாமல் பார்த்துக் கொள்" என்று கூறினார்.

அந்த மாளிகை மிகவும் பெரியதாக இருந்தது. மாளிகையில் பல அடுக்குமாடிகள், நந்தவனங்கள், நூலங்கள், கேளிக்கை கூடங்கள் என்று பல பகுதிகளிலும் சுற்றினாலும், இளைஞனின் கவனம் முழுதும் ஸ்பூனில் இருந்த எண்ணெய் மீதே இருந்தது.

ஒருவழியாக பத்திரமாக எண்ணெய்யை திருப்பிக் கொண்டு வந்த இளைஞனிடம் ஞானி கேட்டாராம், "என்னுடைய மாளிகையில் உலகப் புகழ் வாய்ந்த பல அம்சங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் கண்டு மகிழ்ந்தாயா?"

தன்னுடைய கவனம் முழுதும் எண்ணெய் மீதே இருந்ததால், ஒன்றையும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்ட இளைஞனிடம், "மீண்டும் ஒரு முறை சென்று அனைத்தையும் ஆசை தீர அனுபவித்து வா" என்று பணித்தாராம்.

மனம் லேசாகிய இளைஞன், இந்த முறை ஸ்பூனைப் பற்றி கவலைப் படாமல், மாளிகை முழுதும் சுற்றிப் பார்த்து விட்டு ஆனந்தமாக திரும்ப, அந்த ஞானி கேட்டாராம், "உன்னை நம்பி நான் கொடுத்த எண்ணெய் எங்கே?" என்று.

திகைத்துப் போன இளைஞன் ஸ்பூனை பார்க்க அதில் எண்ணெய் இல்லை.

அப்போது ஞானி சொன்னாராம், "உனக்கு ஒரே ஒரு அறிவுரையை சொல்ல விரும்புகிறேன்! மகிழ்ச்சியின் ரகசியம் உலகத்தின் அனைத்து சந்தோசங்களையும் அனுபவிக்கும் அதே சமயம் தன்னுடைய கடமையிலும் கவனமாக இருப்பதுதான்"

எனக்கு மிகவும் பிடித்த இந்த கருத்தை இரண்டு வரிகளில் சொல்ல வேண்டுமென்றால்

"வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஜாலியாக இருப்போம்! அதே சமயம் வருங்காலத்திலும் அந்த ஜாலி நிலைத்திருக்கும்படி ஜாக்கிரதையாகவும் இருப்போம்!"

நன்றி

டிஸ்கி: இந்த பதிவு எய்ட்ஸ் தினத்தன்று வெளியிடப் பட்டாலும், அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Sunday, November 29, 2009

மின்னுவதெல்லாம் பொன்னல்ல!


சென்ற வார "துபாய் உலகம்" விவகாரம் உலக சந்தைகளை நிலை குலைய செய்திருக்கிறது. இதன் பின்புலத்தைப் பற்றியும், இந்த விவகாரத்தினால் இந்தியாவிற்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் பற்றியும் இங்கு பார்ப்போம்.

துபாய் ஐக்கிய அரேபிய கூட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். எண்ணெய் வளம் குறைந்த இந்த நாட்டின் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் வணிகத்தையே நம்பி உள்ளது. துபாயை ஒரு மிகப் பெரிய வணிக மற்றும் சுற்றுலா மையமாக்க விரும்பிய துபாய் அரசு "துபாய் உலகம்" என்ற ஒரு அரசு நிறுவனத்தின் வாயிலாக பல கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது. துரதிர்ஷ்டவசமாக, சென்ற ஆண்டின் பொருளாதார சிக்கல் ரியல் எஸ்டேட் துறையை வெகுவாக பாதிக்க, "துபாய் உலகம்" தான் கடனாக பெற்ற தொகையில் சுமார் 59 பில்லியன் டாலர் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரேபிய கூட்டமைப்பின் முதன்மை நாடான அபுதாபி ஓரளவுக்கு உதவிக் கரம் நீட்டினாலும், அந்த உதவி முழுமையானதாக அமைய வில்லை. எனவே, இந்த கடனை திருப்பி செலுத்த ஆறுமாத கால அதிக அவகாசம் அளிக்கும்படி துபாய் அரசு தற்போது கோரியுள்ளது. இந்த கோரிக்கையின் அடிப்படையில், துபாய் அரசு நிறுவன கடன் பத்திரங்களை "டீபால்ட்" (Default) நிலைக்கு உலக தர நிர்ணய நிறுவனமான (Rating Agency) S&P தரம் தாழ்த்தியது.

பொருளாதார சிக்கலில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் உலக நாடுகளுக்கு இந்த தகவல் ஒரு அதிர்ச்சியாக இருந்தது. உலக பொருளாதாரத்தில் துபாயின் பங்கு மிகச் சிறியதே ஆனாலும், வளமான நாடாக கருதப் பட்ட துபாய் அரசு "டீபால்ட்" செய்திருப்பது, உலக பொருளாதார சிக்கல் இன்னும் நிறைவு பெற வில்லை என்ற ஒரு கருத்தை முன்வைத்துள்ளது.

ஏற்கனவே ஒரு முறை சொன்னபடி, "V " வடிவ பொருளாதார மீட்சி இருக்கும் என்ற நம்பிக்கையில் பங்கு சந்தைகள் கடந்த எட்டுமாத காலத்தில் ஏராளமாக முன்னேறியுள்ளன. ஆனால் அடுத்தடுத்து வரும் பொருளாதார தகவல்கள் "V " வடிவ மீட்சி இருக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளன. வரப் போகிற பொருளாதார மீட்சி ஒன்று "U" வடிவமாக இருக்கும் அல்லது அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்தது போல (Double Dip Recession) "W" வடிவாக இருக்கும் என்ற ஒருவித பயம் சந்தைகளை இப்போதைக்கு ஆட்டிப் படைக்கின்றது. அதே சமயம், அமெரிக்காவில் குறைந்த வட்டியில் பெருந்தொகையை கடனாக பெற்று, அந்நிய சந்தைகளில் முதலீடு செய்யும் "Dollar Carry திருடி" முறை, ஏராளமான புதிய "விரைவு பணத்தை" (Hot Money) உருவாக்கி, சந்தைகளை கீழே வரவிடாமல் தடுத்து வந்துள்ளது.

இந்த நிலையில் சென்ற வார "துபாய் விவகாரம்", சந்தைகளை கீழ்நோக்கி நகர்த்த பெரிய வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல சாக்காக அமைந்துள்ளது. அதே சமயம், துபாய் விவகாரம் ஏற்கனவே சொன்னபடி உலக பொருளாதாரத்தில் எந்த ஒரு பெரிய பாதிப்பும் (ஒருவித செண்டிமெண்ட் பாதிப்பை தவிர) ஏற்படுத்திவிட முடியாது என்றே நினைக்கிறேன்.

இந்தியாவை பொறுத்த வரை துபாய் விவகாரம் ஓரளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். இந்தியர்கள் பலரும் துபாயில் பணி புரிகின்றனர். அவர்கள் இந்தியாவிற்கு ஏராளமான "அந்நிய செலவாணியை" சம்பாதித்து தருகின்றனர். இந்திய கட்டுமான நிறுவனங்கள் (வோல்டாஸ், எல்&டி போன்றவை) பலவும் துபாயில் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வருகின்றன. பேங்க் ஆப் பரோடா வங்கி துபாயில் பல கிளைகளை கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒரு முக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எம்மார் எம்ஜிஎப், துபாய் அரசுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. துபாய் இந்தியாவின் ஒரு முக்கிய வணிக கூட்டாளியாகவும் (Exports-Imports) இருந்து வருகிறது.

தற்போதைய சிக்கலில் இருந்து துபாய் முழுமையாக மீண்டாலும் கூட, இந்த "டீபால்ட்" விவகாரம் துபாயின் வருங்கால வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் என்றே நினைக்கிறேன். இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருக்கும் ஒரு முக்கிய நாடான துபாயின் வளர்ச்சிக்கு வருங்காலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புக்களின் வீச்சு இந்தியாவிலும் (குறைந்த அளவேயாயினும்) உணரப் படும் என்று கருதுகிறேன்.

இந்திய பங்கு சந்தைகளை பொறுத்த வரை கூட பெரிய பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் குறைவு என்றாலும், ஏற்கனவே சொன்னபடி, ஏற்கனவே ஏராளமாக உயர்ந்துள்ள சந்தைகளை கீழ்நோக்கி நகர்த்த பெரிய வர்த்தகர்களுக்கு இந்த விவகாரம் நல்ல உதவியாக இருந்துள்ளது. கடந்த வியாழன்று, அதிக வர்த்தகத்துடன் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்தது (Fall with high trade volume), சந்தையின் கீழ்நோக்கிய பயணம் இன்னும் கூட தொடரும் என்றே இப்போதைக்கு தோன்றுகிறது. அதே சமயம், குறுகிய கால வர்த்தகர்களின் "விற்றபின் வாங்கும் போக்கினால் (Short Covering)" சந்தைகள் அவ்வப்போது மேலே உயரவும் வாய்ப்புள்ளது.

வர்த்தகர்கள் சந்தைகள் மேலே சென்றால் விற்பதற்கு (Shorting) ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் சந்தையின் ஒவ்வொரு பெரிய சரிவின் போதும், அடிப்படைகள் சிறப்பாக உள்ள நிறுவனங்களை (Fudamentally Strong Companies) ஓராண்டு நோக்குடன் மெல்ல மெல்ல சேகரிக்கலாம்.

நிபிட்டி 5050-5150 அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும். 4700-4800 அளவுகளில் நல்ல அரணைக் கொண்டிருக்கும்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

Saturday, November 28, 2009

ஏன்? எதற்காக?


நமது சாலைப் பயணம் சில சமயங்களில் ரேஸ் பயணமாக மாறி விடுவதுண்டு. நாம் சென்றடைய வேண்டிய இலக்கை நோக்கி சீராக பயணம் செய்து கொண்டிருக்கையில், விருட்டென்று ஒரு வண்டி நம்மை (சற்று முரட்டுத்தனமாக) முந்தினால் நமக்கு ஒருவகையான கோபம் வந்து விடுகிறது. உடனடியாக, "விட்டேனா பார்" என்று அந்த வாகனத்துடன் ஒருவித மானசீக ரேஸ் ஆரம்பித்து விடுகின்றது. சில சமயங்களில் அடைய வேண்டிய இலக்கு, மற்ற பிரச்சினைகள் அனைத்தும் மறந்து போய், அந்த குறிப்பிட்ட வாகனத்தை விஞ்சுவது மட்டுமே நமது ஒரே இலக்காக மாறி விடுகிறது. இந்த "சாலை வழி இலக்கிற்காக" நாம் சில சமயங்களில் உயிரைக் கூட பணயம் வைத்து வண்டியை செலுத்துவதும் உண்டு. இந்த ரேஸ்கள் பல சமயங்களில் ஈடு செய்ய முடியாத நஷ்டத்தையும் ஏற்படுத்துவதுண்டு.

இன்று மும்பை-புனே சாலையில் செல்லும் போது நான் சிந்தித்த ஒரு விஷயம், "சில நிமிட ரேஸ் (?) பயணத்திற்கு பின்னே அந்த போட்டி வண்டி (?) தடம் மாறி விடுகிறது. அதற்கப்புறம் அந்த வண்டி நம் கண்ணில் படப் போவதே இல்லை. அந்த வண்டி ஓட்டுனர் யாரென்று கூட நமக்கு தெரியாது. அல்லது அக்கறையும் கொள்வதில்லை. வெற்றி பெற்றதற்காக யாரும் இங்கே கோப்பைகளும் கொடுப்பதில்லை. சொல்லப் போனால் யாரும் கண்டுக் கொள்ளப் போவதுமில்லை. மானசீகமான ஈகோ வெற்றியை தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. பின்னர் எதற்காக இப்படி உயிரை (வாகன ஓட்டியின் உயிர் மட்டுமல்ல. இன்னும் பல உயிர்கள்) பணயம் வைத்து பிரயோஜனமில்லாத ஒரு போட்டி?"

இதே சிந்தனை நமது வாழ்க்கை பயணத்திற்கும் பொருந்துமல்லவா? வாழ்க்கைப் பயணத்தில் நாம் போட்டியாளர்களாக, சில சமயங்களில் எதிரிகளாகவே கூட கருதும் பலர் உண்மையில் நம்முடன் பயணிக்கப் போவது வெகு சில காலம் மட்டுமே. அவர்களுடன் முட்டி மோதி வெற்றி பெறுவது மட்டுமே நம் லட்சியமாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. அவ்வாறான முயற்சிகள், பெரும்பாலும் நம் சக்தியை வீணடிப்பதாகவே அமையும். சில சமயங்களில் நம்முடைய ஒரிஜினல் இலக்கை அடைய முடியாத படி கூட செய்து விடும்.

நம்முடைய கவனம், நாம் சென்றடைய வேண்டிய இலக்கு, அதை அடைய வேண்டியதற்கான தூரம், நேரம், முயற்சிகள் ஆகியவற்றின் மீது மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

என்னுள் எழும்பிய கேள்வி.

இடையில் வந்து இடையிலேயே காணாமல் போகிறவர்கள் பற்றி நமக்கு என்ன அக்கறை?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நன்றி.

Thursday, November 26, 2009

கடனில் தத்தளிக்கும் துபாய்!


பொதுவாக ஒரு வளம் கொழிக்கும் நாடாக அறியப் படும் ஐக்கிய அரேபிய கூட்டமைப்பின் (UAE) முக்கிய அங்கமான துபாய் இன்றைய தேதியில் பெரிய கடன் சிக்கலில் தத்தளித்து வருகின்றது தெரியுமா? இந்த தகவல் முதலில் எனக்குக் கூட மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பின்னர் சற்று ஆழமாக ஆய்ந்த போது, கிடைத்த சில தகவல்கள் பகிர்வுக்காக இங்கே.

ஐக்கிய அரேபிய கூட்டமைப்பில் மொத்தம் ஏழு நாடுகள் உள்ளன. அவற்றில் துபாய் மிகப் பெரிய "மாநகர" நாடாகும். துபாய் எண்ணெய் வளம் மிக்க அரேபிய பகுதியில் இருந்தாலும் அதனது பொருளாதாரத்தில் எண்ணெய் வருவாய் மிகக் குறைவானதேயாகும். மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய வணிக நகரமான துபாயின் பெரும்பாலான வருமானம் வணிக நடவடிக்கைகளின் வாயிலாகவே வருகின்றது.

இந்நிலையில் வணிக மற்றும் சுற்றுலா மையமான "துபாய் உலகம்" அமைப்பதற்காக சுமார் 80 பில்லியன் டாலர் (3,60,000 கோடி ருபாய்) கடனாக துபாய் அரசு நிறுவனங்களால் பெறப் பட்டது. கடந்த ஆண்டின் பொருளாதார சிக்கல் ரியல் எஸ்டேட் விலைகளை பாதிக்கும் மேல் குறைத்து விட, "துபாய் உலகம்" தான் பெற்ற கடனில் சுமார் 59 பில்லியன் டாலர் அளவுக்கு இன்று வரை திருப்பி செலுத்த முடியவில்லை என்று சொல்லப் படுகிறது. எனவே கடன் திருப்பி செலுத்துவதை தள்ளி போட துபாய் அரசு முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப் படுகிறது. கடந்த 2001 இல் கடன் திருப்பி செலுத்த முடியாமல் போன அர்ஜென்டினா அரசாங்கத்திற்கு பிறகு ஒரு அரசாங்கம் தனது கடனை திருப்பி செலுத்த முடியாமல் போவது இதுதான் முதல் முறை என்றும் சொல்லப் படுகிறது.

தனது ஒட்டு மொத்த பொருளாதாரத்தை விட (GDP is about $37 billion) அதிக கடன் சுமையை தாங்கி வரும் துபாய் அரசாங்கம் "திவால்" ஆகி விடுமோ என்ற அச்சம் இன்றைய தேதியில் உலக சந்தைகளில் எழுந்துள்ளது. இதன் காரணமாக அரசாங்கங்களின் கடன் பத்திரங்களின் மீதான "கடன் உத்திரவாத பிணையங்கள்" (Credit Default Swaps) விலை உயர்ந்துள்ளன. முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் ஒருமுறை அடி வாங்கியுள்ளது. அதனால் டாலர் மதிப்பு பெருமளவுக்கு உயர்ந்து மற்ற கரன்சிகளின் மதிப்பு குறைந்துள்ளது. பங்கு சந்தைகளும் பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளன.

ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். இங்கே ஆயிலையும் வழுக்கி விழச் செய்தது "அளவுக்கு மீறிய ஆசைதானே"?

நன்றி.

டிஸ்கி: பிளாக்கர் தளத்தின் சில தொழிற்நுட்ப கோளாறுகளின் காரணமாக என்னுடைய "பதில் பின்னூட்டங்களை" பதிய முடியவில்லை. எனவே பின்னூட்ட நண்பர்கள் பொறுத்தருளவும்.

Wednesday, November 25, 2009

தோல்வி எமக்கில்லை!


எட்மன்ட் ஹில்லாரி சரித்திரத்தின் ஒரு சிறு நிகழ்வு நமக்கு ஒரு நல்ல வாழ்வியல் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது.

எட்மன்ட் ஹில்லாரி - டென்சிங் இணை எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலாக எட்டிப் பிடித்தவர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் . ஆனால், பல முறை கண்ட தோல்விக்கு பின்னர்தான் அந்த சாதனை சாத்தியமாயிற்று என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்விக் குறியே.

எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொள்வதற்காக ஹில்லாரி 1951 மற்றும் 1952 ஆண்டுகளில் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தாலும், அவருடைய புகழ் இங்கிலாந்தில் பெருமளவுக்கு பரவி இருந்தது. 1952 முயற்சி தோல்வி அடைந்த சில வாரங்களுக்குள்ளேயே இங்கிலாந்தில் ஒரு கூட்டத்தில் முக்கிய உரையாற்றும்படி ஹில்லாரிக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.

மேடையை நோக்கி சென்ற ஹில்லாரிக்கு பலத்த கைத்தட்டலுடன் வரவேற்பு இருந்தது. ஆனால் மைக்கின் முன்னே நிற்காமல் சற்று ஓரமாக நின்ற ஹில்லாரி, எவரெஸ்ட் மலை படத்தை பார்த்துச் சொன்னாராம்.

" எவரெஸ்ட்! இந்த முறை என்னை தோற்கடித்து விட்டாய். ஆனால் அடுத்த முறை உன்னை நான் தோற்கடிப்பேன். காரணம், நீ வளர முடிந்த வரை வளர்ந்து விட்டாய். ஆனால் நான் இனியும் வளர்ந்து கொண்டே இருப்பேன்"

சொன்னபடியே அடுத்த வருடம் எவரெஸ்ட் மலையை முறியடித்த ஹில்லாரி, மனித முயற்சியின் மகத்துவத்தை நிலைநாட்டி உலக சரித்திரத்தில் அழியாப் புகழை பெற்றுள்ளார்.

நமது வாழ்க்கையிலும் இப்படித்தான், "தாண்டி செல்ல முடியாதோ" என்று அஞ்சும் அளவுக்கு பெரிய பெரிய பிரச்சினைகள் தடையை வந்து நிற்கின்றன.

ஹில்லாரியின் வார்த்தைகளை மனதில் பதியம் போட்டுக் கொள்வோம்.

மனித முயற்சியின் மகத்துவத்திற்கு நிகரேதுமில்லை என்பதை மனனம் செய்து கொள்வோம்.

பிரச்சினைகளை விட நாம் அதிக உயரம் வளரும் போது, எவரெஸ்ட்டும் கூட எறும்பு போல காட்சி தரும்.

நன்றி.

Sunday, November 22, 2009

அந்நிய முதலீடுகளை கட்டுப்படுத்த வேண்டுமா?



பொதுவாக வளரும் நாடுகளில், மனித வளம், கனிம வளம், நீர் ஆதாரங்கள், நிலம் என பல்வேறு இயற்கை ஆதாரங்கள் மிகுதியாக இருக்கும். ஆனால், இவற்றை ஒருங்கிணைத்து, பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்கும் கிரியா ஊக்கியான "மூலதனம்" (Capital) என்பது அரிதான ஒன்றாகவே இருக்கும். எனவேதான், வளரும் நாடுகள் அந்நிய முதலீட்டாளர்களை ரத்தின கம்பளம் இட்டு வரவேற்கின்றன.

அந்நிய முதலீடுகளை அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் அந்நிய நிறுவன முதலீடு (FII) என இரண்டு வகையாக பிரிக்கலாம். சீனா போன்ற நாடுகள் அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் ஊக்குவிக்கின்றன. அந்நிய நேரடி முதலீட்டின் வாயிலாக "மூலதனம்" மட்டுமில்லாமல் வேறு சில நன்மைகளும், அதாவது வளரும் நாடுகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் "அரிய வகை தொழிற்நுட்பங்கள்", "சீரிய மேலாண்மை முறைகள்", "ஏற்றுமதி வருவாய்" மற்றும் "அதிக வேலை வாய்ப்பு" போன்றவையும் அந்நிய நேரடி முதலீடுகள் வழியாக கிடைக்கின்றன. மேலும், இது போன்ற நேரடி முதலீடுகள் எளிதாக திரும்ப பெற முடியாதவை என்பதால் ஒரு வித "நிதி பாதுகாப்பு"ம் (Long Term Investments) வளரும் நாடுகளுக்கு கிடைக்கின்றன.

மற்றொரு வகையான அந்நிய முதலீடான "அந்நிய நிறுவன முதலீட்டின்" வாயிலாகவும் சில நன்மைகள் வளரும் நாடுகளுக்கு கிடைக்கின்றன. "தொழிற்முனைவோர் திறன்" (Enterpreneurship Skills) அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகள் இந்த வகையான முதலீடுகளை வரவேற்கின்றன. இந்த வகை அந்நிய முதலீட்டாளர்கள் பங்கு முதலீடு மட்டுமே செய்கின்றனர். மற்ற பொறுப்புக்கள் அனைத்தும் இந்திய நிறுவனங்களையே சார்ந்துள்ளன.

இந்த வகை அந்நிய முதலீடு, இந்திய நிறுவனங்கள் மற்றும் புதிய தொழிற் முனைவோர் திரட்ட விரும்பும் "மூலதனத்திற்கான செலவை (Capital Cost ) " பெருமளவு குறைக்கின்றது. இதனால் புதிய தொழில் துவங்குவதும் தற்போதைய தொழிலை விரிவுபடுத்துவதும் எளிதாகிறது. மேலும், தொழிற்துறையில் முன்னுக்கு வருவது பொருளாதாரரீதியாக மிகப் பெரிய வருவாயை அளிப்பதால் (Listing in Capital Markets) புதிய தொழிற்முனைவோர் அதிக அளவில் உருவாகவும் உதவுகின்றது. இறக்குமதியையே அதிகம் சார்ந்திருக்கும் (Import oriented ) நம் நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதி இடைவெளியை (Trade Deficit) ஈடுகட்டவும் இவ்வகை முதலீடுகள் உதவுகின்றன. எனவேதான் இந்திய அரசாங்கம் இந்த வகை முதலீடுகளை பெருமளவில் ஊக்குவிக்கின்றது.

ஆனால், இந்த வகை முதலீடுகளால் பலவகையான பொருளாதார சிக்கல்கள் உருவாகுகின்றன. அதாவது, இவ்வாறு இந்தியாவில் வந்து குவியும் அந்நிய செலவாணி பணத்தை, குறிப்பிட்ட நாடுகளிலேயே குறைந்த வருவாயில் முதலீடு செய்யும் கட்டாயம் இந்திய மத்திய வங்கிக்கு ஏற்படுகின்றது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்க முதலீட்டாளர்கள் அமெரிக்காவில் குறைந்த வட்டியில் கடன் வாங்கி இந்தியாவில் முதலீடு செய்யும் போது, அவர்கள் மூலம் இந்தியா வரும் அமெரிக்க டாலர்களை, அமெரிக்க அரசாங்கம் வெளியிடும் கடன் பத்திரங்களில் அதிக அளவில் இந்திய மத்திய வங்கி முதலீடு செய்கிறது. அவ்வாறான பத்திரங்களில் மிகக்குறைவான (0.25% முதல் 4% வரை) வருவாயே கிடைக்கின்றது. மேலும் டாலர் மதிப்பீடு ஒவ்வொரு நாளும் குறைந்து வருவதாலும் இந்தியாவிற்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகின்றது. சென்ற நிதியாண்டில் மட்டும் இந்த வகையில் இந்தியாவிற்கு பல பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப் படுகின்றது.

உள்நாட்டிலும் அதிகப் படியான அந்நிய பண வரத்தினால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. பங்கு சந்தையில் ஏற்படும் பெரிய ஏற்றத்தாழ்வுகள் உள்நாட்டு முதலீட்டாளர்களையும் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன. "சூடான பணம் (Hot Money)" அதிக பணவீக்கத்தையும் (Asset Inflation) உருவாக்குகின்றது. ரியல் எஸ்டேட், கம்மொடிட்டி போன்ற பொருளாதாரத்திற்கு நேரடி பலன் அளிக்காத துறைகளில் (Unproductive Sectors) இந்த வகை பணம் பாய்ந்து "சொத்து குமிழ்களை (Assets Bubbles)" உருவாக்குகின்றன. மேலும், வளரும் நாடுகளின் வளங்களை மறைமுகமாக சுரண்ட வளர்ந்த நாடுகளுக்கு ஒரு பெரிய வாய்ப்பாகவும் இந்த வகை முதலீடுகள் அமைகின்றன.

எனவேதான், இந்த வகையான முதலீடுகளை கட்டுபடுத்த பிரேசில் போன்ற சில வளரும் நாடுகள் சமீபத்தில் சில நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இந்தியாவில் கூட அரசின் சார்பில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சில வலுவான இந்திய பங்கு வர்த்தகர்கள் குறுகிய கால லாப நோக்கிற்காக இவற்றை எதிர்த்து வருகின்றனர். இந்திய அரசாங்கமும் உறுதியான நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றது. பொதுவாக, பங்கு சந்தைகள் உயர்ந்து கொண்டே இருப்பதைத்தான் பலரும் (முக்கியமாக பங்கு வர்த்தகர்கள் மற்றும் பெரிய பணக்காரர்கள்) விரும்புகிறார்கள். ஆனால் அவ்வாறு உயர்வதற்காக நாடு ஒரு மிகப்பெரிய விலையை கொடுத்து வருகின்றது என்பது அவர்களுக்கு நன்கு புரிந்தாலும் கூட அலட்சியம் செய்கின்றனர்.

என்னைப் பொறுத்த வரை நீண்ட கால அந்நிய நிறுவன மற்றும் நேரடி முதலீடுகள் வரவேற்கப் பட வேண்டியவையே. அதே சமயம் குறுகிய கால நோக்கிற்காக சுனாமிகளை ஏற்படுத்தும் "குறுகிய கால பரஸ்பர நிதிகள் (Hedge Funds)" கட்டுப்படுத்தப்பட வேண்டியவை. இதற்காக அரசாங்கம், குறுகிய கால லாபத்தின் மீது அதிக வரிக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம் நாட்டில் சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பங்கு நம் நாட்டிற்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதில் எந்த தவறும் இல்லையே? மேலும் இந்திய பங்கு வர்த்தகர்கள் கூட, ஒரு சீரான நிதானமான வளர்ச்சி பெறும் ஒரு பங்கு சந்தையின் மூலம்தான் அதிக பணம் ஈட்ட முடியும். மிக வேகமாக செயல்படக் கூடிய திறமை கொண்ட "குறுகிய கால அந்நிய முதலீட்டாளர்கள்" அவ்வப்போது ஏற்படுத்தும் "சுனாமிகள்" சிறிய இந்திய பங்கு முதலீட்டாளர்கள் பலரையும் காணாமல் போக செய்து விடுகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்போது பங்கு சந்தை நிலவரத்திற்கு வருவோம்.

பிரேசில் போல நம் நாட்டிலும் அந்நிய முதலீடுகளின் மீது கட்டுப்பாடுகள் கொண்டுவரப் படுமோ என்ற அச்சத்தில் பங்குசந்தைகள் கடந்த சில காலமாக தடுமாறிக் கொண்டே இருந்தன. டாலர் சர்வதேச செலவாணி சந்தைகளில் முன்னேற்றம் அடைந்ததும், மீண்டும் ஒரு முறை பொருளாதார தளர்ச்சி (Doubel Dip Recession) ஏற்படும் என்று ஒபாமா கூறியதும், அமெரிக்க/ஐரோப்பிய வங்கிகளின் மீது அந்நாடுகளின் மத்திய வங்கிகள் கொண்டுவர விரும்பும் முதலீட்டு கட்டுப்பாடுகளும் இந்திய சந்தைகளின் தளர்ச்சிக்கு மற்ற காரணங்களாக இருந்தன. அந்நிய முதலீடுகளை கட்டுபடுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்று இந்திய அரசாங்கம் உறுதியளித்தவுடன், நமது பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப் பட்டது.

இந்த முன்னேற்றம் எந்த அளவு நீடிக்கும் என்பது இப்போதைய கேள்வி. "பில்டிங் ஸ்ட்ரோங் ஆனால் பேஸ்மென்ட் வீக்" என்ற பிரபல நகைச்சுவை வசனம்தான் தற்போதைக்கு மனதில் எழுகிறது. தெளிவில்லாத பொருளாதார மீட்சி அறிகுறிகளுக்கு இடையே, பங்குசந்தை மதிப்பீடுகள் (Share Price Valuations) மிக அதிக அளவில் உயர்ந்துள்ளன என்பதை பலரும் தற்போது உணர்ந்துள்ளனர். அமெரிக்க/ஐரோப்பிய வங்கிகள் தங்களது பழைய பாணியை பின்பற்றுவது உலக பொருளாதாரத்திற்கு மீண்டும் ஒருமுறை சிக்கலை ஏற்படுத்த வல்லது என்பதை அந்நாடுகளின் மத்திய வங்கிகள் உணர்ந்துள்ளன என்பதை அவர்களது சமீபத்திய நடவடிக்கைகள் தெளிவாக்குகின்றன.

இந்திய சந்தையை பொறுத்த வரை, அந்நிய முதலீட்டாளர்களே அதிக ஆதிக்கம் செலுத்துவதால், அவர்களது நடவடிக்கையை பொறுத்தே நமது பங்கு சந்தையின் போக்கு அமையும் என்று நினைக்கின்றேன். ஏற்கனவே சொன்னபடி நிபிட்டி 5100-5200 அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும்.

நீண்டகால முதலீட்டாளர்கள் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை (ஒவ்வொரு சரிவின் போதும்) சிறிது சிறிதாக சேகரிக்கலாம். வங்கிகளின் இணைப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டால், இந்திய பொதுத்துறை வங்கிகளின் மதிப்பீடு உயர வாய்ப்புள்ளது. விஜயா வங்கி, தேனா வங்கி போன்ற சிறிய வங்கிகளின் மீது வர்த்தகர்களின் கவனம் இப்போது திரும்பி உள்ளது.

குறுகிய கால வர்த்தகர்கள் சற்று எச்சரிக்கையாக தகுந்த "இழப்பு நிறுத்தத்துடன்" பங்கு வணிகம் செய்யவும். குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் மத்திய வங்கிகள் விதிக்கக் கூடிய முதலீட்டுக் கட்டுப்பாடுகள் நம் பங்குசந்தையை வெகுவாக பாதிக்கக் கூடும்.

மொத்தத்தில் வரும் வாரத்தில் சர்வதேச செலவாணி வணிகத்தில், டாலர் அளவில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே நமது சந்தையின் போக்கு அமைந்திருக்கும் என்று கருதுகிறேன்.

வரும் வாரம் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Thursday, November 19, 2009

பங்குசந்தை வெற்றிப்பயணம் - தொடர்பதிவு - ஒரு மீள்பார்வை!


பங்குசந்தையில் எப்படி வெற்றி பெறுவது என்பது பற்றிய சில முன்னோட்ட பதிவுகளை இது வரை பார்த்தோம். பங்குகளை பற்றிய இன்னும் ஆழமான விளக்க கட்டுரைகளுக்கு செல்லும் முன்னே, இதுவரை இட்ட பதிவுகளை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்ப்போம் என்று தோன்றியது.

பங்குகளை நேரடியாக பரிந்துரைப்பதை விட பங்குகளை தேர்வு செய்யும் வழிமுறையை நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தலாமே என்ற ஒரு எண்ணத்தில்தான் இந்த தொடர் பதிவு ஆரம்பிக்கப் பட்டது. இதற்கு முக்கிய காரணம், பங்குகளில் வர்த்தகம் செய்பவர்களுக்கு தாம் முதலீடு செய்யும் நிறுவனங்களைப் பற்றிய நேரடி புரிதல் (ஓரளவேனும்) இருக்கும் போதுதான், எடுக்கப் படும் முடிவுகள் சிறப்பாக இருந்திருக்கின்றன என்பது சரித்திரம் சொல்லும் உண்மை.

இந்த உண்மையை ஒரு பங்கு சந்தை மேதை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.

F&O வர்த்தகத்தில் ஏராளமாக சம்பாதிக்கலாம் என்ற ஆர்வத்தில் பங்கு சந்தைக்குள் நுழைந்தவர் இவர். இந்த துறையில் ஏற்கனவே மிகப் பெரிய நிபுணத்துவம் பெற்று இருந்த தன்னுடைய நண்பரிடம் ஆலோசனை கேட்கின்றார். அவரும் ஒரு குறிப்பிட்ட பங்கின் "option" வாங்குமாறு அறிவுரைக்கிறார். தன்னிடம் இருக்கும் மொத்த பணத்தில் பெரும்பகுதியை முதலீடு செய்யும் நமது பங்குசந்தை மேதைக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது. பணம் முழுவதையும் அந்த குறிப்பிட்ட வர்த்தகத்தில் இழக்கும் இவருக்கு தனது நண்பர் மீது கடும் கோபம் எழுந்து அவரிடம் பேசுவதையே நிறுத்தி விடுகிறார். ஒரு நாள் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. வேண்டாவெறுப்புடன் அவரை சந்திக்க செல்லும் இவரிடம், நண்பர் இவர் இழந்த அனைத்து பணத்தையும் கொடுக்கிறார். எப்படி என்று ஆச்சரியத்துடன் பார்த்த இவரிடம், தான் பரிந்துரைத்த வர்த்தக நிலைக்கு நேர்மாறாக தான் ஒரு வர்த்தக நிலை எடுத்ததாகவும், மற்றவர் பேச்சை முழுமையாக நம்பி பங்கு வர்த்தகம் செய்யக் கூடாது என்ற பங்குசந்தையின் முதல் மற்றும் முக்கிய பாடத்தை புகட்டுவதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் நண்பர் கூறுகின்றார்.

பங்குசந்தை புரியாதாவர்கள் அல்லது அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைப்பவர்கள், பங்குசந்தை பக்கமே வர வேண்டாம் என்று இந்த பங்குசந்தை மேதை கூறுகின்றார். தன் மீதும் தான் எடுக்கும் அறிவார்ந்த முடிவின் மீதும் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமே பங்கு சந்தையில் நிலைக்க முடியும் என்ற இவரது கருத்துடன் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

இந்த கருத்தில் அடிப்படையில்தான் , பங்குசந்தையைப் பற்றிய சில அடிப்படை கல்வியை பரிமாறவே இந்த தொடர்பதிவு ஆரம்பிக்கப் பட்டது.

இந்த தொடர்பதிவின் துவக்கத்தில் பங்குசந்தையில் வெற்றிப் பெற்றவர்கள் பின்பற்றிய பாதைகள் பற்றி மேலோட்டமாக விவரிக்கப் பட்டது. அதிபுத்திசாலித்தன முடிவுகளை எடுக்கும் முதல் பாதை, உழைப்பாளிகளின் இரண்டாவது பாதை மற்றும் பொறுமைசாலிகளின் மூன்றாவது பாதை ஆகியவை அறிமுகப் படுத்த பட்டன. எந்த பாதை சிறந்த பாதை என்பதை அவரவர் தேவைக்கேற்றபடி தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் கூறி இருந்தேன். அல்லது தமக்கேற்றபடி ஒரு புதிய பாதையை கூட வடிவமைத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி இருந்தேன்.

இந்த பாதைகள் மட்டுமில்லாமல், அதிரடியாக முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும் ஒரு துணை பாதை பற்றியும் கூட தெரிவித்திருந்தேன். இந்த பாதையில் செல்வது பற்றிய ஒரு நடைமுறை விளக்கம் கூட கொடுத்திருந்தேன். மீண்டு வரும் நிறுவனங்களில் (Recovery Stocks) முதலீடு செய்வது எவ்வளவு பெரிய லாபத்தை கொடுக்கும் என்பதை நீங்கள் மைத்தாஸ் கதை மூலம் நேரடியாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். "இந்த முயற்சியில் நான் "சொல்லி அடிக்கலாம்". அல்லது "சொல்லி அடியும் வாங்கலாம்". " என்று குறிப்பிட்ட பதிவை முடித்த நான் மைத்தாஸ் விஷயத்தில் "சொல்லி அடித்திருப்பது" இந்த தொடர்பதிவை தொடரும் தன்னம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது.

பங்குகளை வாங்குவது பற்றி முடிவெடுக்க உதவும் மூன்று வழிமுறைகளைப் பற்றியும் மேலோட்டமாக இதுவரை பார்த்து உள்ளோம். பங்குகளின் அடிப்படைகளை அலசும் முறை, பங்கின் ஓட்டத்தை கவனிக்கும் தொழிற்நுட்ப வரைபட அறிவியல் மற்றும் வர்த்தகர்களின் மனநிலையை அறிய உதவும் மனவியல் போன்றவற்றைப் பற்றியும் பார்த்தோம். குறிப்பாக காளை மற்றும் கரடி மனநிலைகளை அறிந்து கொள்வது எப்படி என்று கூட தனியாக ஒரு பதிவில் பார்த்தோம்.

இதற்கிடையே ஒரு "விளையும் பயிரை" (யெஸ் பேங்க்) எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பது பற்றியும் பார்த்தோம். மூன்று வருடங்களில் முதிரும் என்று நாம் எதிர்பார்த்திருக்க, நடப்பு காளை ஓட்டம் இந்த பயிரை மூன்று மாதத்திலேயே முதிர வைத்து விட்டது என்பதை நீங்கள் நேரடியாக அறிந்திருப்பீர்கள். யெஸ் பேங்க் போன்ற ஆரம்ப கால பங்குகளை (Growth Companies) எப்படி தேர்வு செய்வது என்பது பற்றியும் ஓரளவுக்கு புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சரி நண்பர்களே! பங்குசந்தையை பற்றிய சற்று ஆழமான விரிவான கட்டுரைகளை படிக்க நீங்கள் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த தொடர்பதிவுக்காக நானும் கூட பங்குசந்தையில் சில பரிசோதனைகளை செய்து பார்த்து இப்போது இந்த தொடர்பதிவின் அடுத்த நிலைக்கு செல்ல ஓரளவுக்கு தயாராகி உள்ளேன் என்று நம்புகிறேன்.

புதிய பதிவுகளுடன் மீண்டும் சந்திப்போம்.

நன்றி!

Tuesday, November 17, 2009

யானையின் வாலை பிடித்த குருடனின் கதை!


முதல் தடவையாக, சர்தார்ஜி ஜோக்குகளை படிக்கும் போது, பஞ்சாபிகள் உண்மையிலேயே இவ்வளவு பெரிய முட்டாள்களா என்று எண்ணத் தோன்றி இருக்கின்றது. அதுவும், முரட்டுத்தனமான அதே சமயத்தில் மூடத்தனம் சற்றும் குறைவில்லாத பஞ்சாபிகள் சிலருடன் பழக நேர்ந்த போது, சர்தார்ஜி ஜோக்குகள் சரியாகத்தான் எழுதப் பட்டிருக்கின்றது என்று கூட தோன்றி இருக்கின்றது.

மன்மோகன் சிங், அலுவாலியா போன்ற பொருளாதார மேதைகள் பஞ்சாபிகள், பஞ்சாபி சமூகத்தினை சேர்ந்த ஒருவர் நோபல் பரிசு வென்று இருக்கின்றார், பலர் மெத்த படித்து மிக உயரத்தில் இருக்கின்றனர் என்றெல்லாம் தெரிய வந்த போது சமூகங்களைப் பற்றிய ஒரு "மாயத்தோற்றம்" மனதிற்குள் ஆழமாக பதிந்து எப்படியெல்லாம் நமது "அறிவுப் பார்வையை" மறைக்கின்றது என்ற உண்மை புரிய வந்தது.

எதற்காக சர்தார்ஜிகளை பற்றிய ஒரு தமிழ் பதிவு என்று நினைக்கிறீர்களா?

சமீபத்தில் ஒரு சர்தார்ஜி தமிழர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதன் பெயர் "2 States: Story of My Marriage" அவர் பெயர் சேத்தன் பகத்.

பொதுவாக, இந்தியாவின் கலாச்சாரத்தைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப் படும் புத்தகங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான வாசகர்களை மட்டும் குறி வைத்து எழுதப் படுபவை என்று நான் கருதுவதால் இந்த புத்தகத்தை படிக்க விரும்ப வில்லை. அதே சமயம், ஒரு தமிழ் பெண்ணை மணந்து கொள்ளும் ஒரு சர்தார்ஜியின் கதை இது என்பதால், இந்த புத்தகம் குறித்து வெளிவந்த சில விமர்சனங்களையும், எழுத்தாளர் மற்றும் அவரது மனைவியும் அளித்த பேட்டியையும் படித்துப் பார்த்தேன். அப்படி படித்த போது இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளரின் மனநிலையை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.

DNA பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், தமிழர்கள் எல்லோரும் கருப்பர்கள் என்று எழுத்தாளர் கருதியதை ஆட்சேபித்த மனைவியிடம் ஒரு சிலர் மட்டும் கருப்பானவர்கள் இல்லை சமாதானப் படுத்தியதாகவும் சேத்தன் பகத் நக்கல் அடிக்கின்றார். தமிழர்கள் தனது குடும்பத்துடன் அணு ஒப்பந்தம் பற்றி பேசுவார்கள். ஆனால் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று தமிழர்களைப் பற்றி நன்கு அறிந்தவர் போல கூறுகிறார். நாட்டியத்தை நாட்டியமாக (சந்தோசமாக) ஆடத்தெரியாதவர்கள் தமிழர்கள் என்றும் கூறுகின்றார். (நம்மூர் கோயில் திருவிழாக்களில் நடைபெறும் குத்தாட்டங்களை இவர் அறியாதவர் என்று நினைக்கின்றேன்) - நன்றி DNA.

கதையின் நாயகி சீமை சாராயம் அருந்துபவர், பலான விஷயங்களில் ரொம்ப "சூடானவர்". தமிழ் பெண்கள் ஆளை மயக்குபவர்கள், ஹேமமாலினி முதல் ஸ்ரீதேவி (?) வரை அனைத்து தமிழ் பெண்களும் ஒரே கதைதான், தமிழர்கள் லுங்கியுடன் (வேட்டி) பர்சேஸ் செய்கின்றனர் என்றெல்லாம் வர்ணனைகள் இந்த நாவலில் இடம் பெற்று இருக்கின்றவாம். "ஏன், தமிழர்களை இவ்வளவு வாரு வாரியிருக்கிரீர்கள்?" என்று கேட்ட போது, "பஞ்சாபிகளையும் கூட கிண்டல் அடித்திருக்கிறேன்" என்று தனது பாரபட்சமில்லாத நாட்டுப் பற்றை வெளிப் படுத்தியிருக்கிறார். (நன்றி: ஆனந்த விகடன்)

தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தை வைத்துக் கொண்டே தமிழர்களைப் பற்றிய இவ்வளவு "அரிய உண்மைகளை" கண்டு பிடித்திருக்கும் இவர், புத்தகத்தை தனது மாமனார் மாமியாருக்கு சமர்ப்பணம் செய்து உலக வரலாற்றில் ஒரு முத்திரை படைத்ததாகவும் பெருமைப் பட்டுக் கொள்கிறார்.

இவரது பேட்டியை படிக்கும் போது, ஒரு தவறான புரிதலின் பேரில் வடிவேலுவின் மனைவியை (கோவை சரளா) சத்யராஜ் கேவலமாக வர்ணிக்க, "எங்களுக்குள் இதெல்லாம் சகஜம், அவன் குடும்பத்தை நானும் என் குடும்பத்தை அவனும் கேலி செய்வது எங்கள் பொழுது போக்கு" என்று வடிவேலு சமாளிக்கும் ஒரு திரைப்பட நகைச்சுவை காட்சி மனதில் ஓடியது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் அனைத்து சமுதாயங்களும் தம்முடைய சமூகம்தான் (மொழி மற்றும் மதம்) உயர்ந்தது என்பதை அந்தந்த சமூகத்தினரின் மனதில் நிலை நிறுத்துவதற்காக மற்ற சமூகங்களைப் பற்றிய ஒரு இழிவான கருத்தினைத்தான் பதிய வைக்கின்றனர். வேறென்ன, எல்லாம் இரு கோடுகள் தத்துவம்தான்.

மேலும் ஒவ்வொரு சமுதாயமும் தன்னை ஒரு ஆண் சமுதாயமாகவும் மற்ற சமுதாயங்களை பெண் சமுதாயங்களாகவும் கருதிக் கொள்கிறது என்று நினைக்கிறேன். இதனால்தானோ என்னவோ, ஹிந்தி படங்களில் தென்னிந்திய நடிகைகளும் தென்னிந்திய படங்களில் வட இந்திய நடிகைகளும் சக்கைப் போடு போடுகின்றனர். அதே சமயம் நடிகர்கள், அவர்கள் எவ்வளவு சிறந்த நடிகர்கள் என்றாலும் கூட, பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போனதும் கவனிக்கத் தக்கது.

இந்த பதிவு குறிப்பிட்ட சர்தார்ஜியை கண்டிப்பதற்காக அல்ல. காமெடி என்ற பெயரில் வணிக நோக்குடன், தனது மனைவியின் குடும்பத்தை பற்றிய சொந்த கருத்துக்களை ஒரு சமுதாயத்தின் மீதான பார்வையாக திணிக்க முயற்சிக்கும் ஒரு நாவலைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைக்கிறேன். தன்மீது சேறு வாரி பூசிக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைக்கும் பபூன் முயற்சி போன்றே இந்த நாவல் எனக்கு தோன்றுகிறது. (அதே சமயத்தில் பல சமயங்களில் இது போன்ற "பபூன் முயற்சிகள்" வணிகரீதியாக பெரிய வெற்றி பெற்றுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. காரணம். அதே இரு கோடுகள் தத்துவம்தான்)

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி சமையலுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் பல கோடி பேர் அடங்கிய சமுதாயங்களை ஒரு சிலரின் நடவடிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே அளவிட நினைப்பது, யானையின் வாலைப் பிடித்த குருடனின் கதையாகி விடும் என்று நினைக்கிறேன். அதே போல, தன்னுடைய நடத்தையில் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் கௌரவத்தையும் சுமந்து கொண்டிருக்கிறோம் என்றும் சமுதாயத்தின் கௌரவத்தைக் கட்டிக் காப்பது தன்னை உருவாக்கிய அந்த சமுதாயத்திற்கு திருப்பிச் செலுத்தும் நன்றிக் கடன் என்பதையும் ஒவ்வொரு தனி மனிதரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

நன்றி.

Sunday, November 15, 2009

பங்குசந்தையை பாதிக்கும் இரண்டு முக்கிய காரணிகள்!


இந்திய பங்குசந்தையை பொருத்த வரை, இப்போதைக்கு இரண்டு முக்கிய விஷயங்கள் பங்கு வர்த்தகர்களின் மன நிலையை பாதிக்கின்றன. இந்த இரண்டு விஷயங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பொருத்தே நமது பங்குச்சந்தையில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிகழ்கின்றன.

இந்திய பங்கு சந்தைக்குள் நுழையக் கூடிய வெளிநாட்டின் பணத்தின் அளவு மற்றும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவு ஆகிய இரண்டு காரணிகள் இப்போதைக்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் ஆகும்.

முதல் விஷயத்திற்கு வருவோம்.

இந்திய பங்கு சந்தைக்குள் அதிக வெளிநாட்டு பணம் வர வேண்டுமென்றால், உலக சந்தைகளில் ஏற்றத்தாழ்வு நிலை குறைவாக இருக்க வேண்டும். ஏனென்றால், சற்று அமைதியான சூழ்நிலையில்தான் இந்தியா போன்ற ஒரு "அதிக அபாயம் நிறைந்த பங்குச்சந்தையில்" முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முன்வரும். ஒருவேளை உலக சந்தைகளில் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருந்தால், டாலர் பணம் அமெரிக்காவிற்கே திரும்பி சென்று தஞ்சமடையும். உலக சந்தைகளின் ஏற்றத்தாழ்வு நிலை எவ்வளவு என்பதை CBOE Vix (Chicago Board Of Exchanges Volatility Indicator) இல் ஏற்படும் மாற்றங்களை பார்த்து நாம் அறிந்து கொள்ளலாம். அமெரிக்க சந்தையில் (தொடர்ச்சியாக) அதிக ஏற்றத்தாழ்வு நடக்கும் போதெல்லாம், நமது சந்தை பெரிய அளவு வீழ்ச்சி அடைவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

அடுத்த படியாக, டாலர் கரன்சியின் பலவீனம் ஆவது நமது நாட்டிற்கு அதிக வெளிநாட்டு பணம் உள்வர உதவும். அதாவது, அதிகம் உதவாத டாலர் கரன்சி பணத்தை முடிந்த வரை வெளியே தள்ளி விட்டு, மற்ற சொத்து வகைகளை வாங்கிக் குவிக்க உலக நாடுகள் பலவும் முனைகின்றன. அந்த வகையில் டாலர் பலவீனம் ஆனால் நமது பங்கு சந்தைக்கு அதிக பணம் வர வாய்ப்பு உண்டு என்று நம்பலாம். டாலர் நிலையை தெரிந்து கொள்ள Dollar Index அளவு எவ்வளவு இருக்கின்றது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளளலாம். இந்த டாலர் இன்டெக்ஸ் மேலே சென்றால் டாலர் வலுவாகின்றது என்றும் பங்கு சந்தைகள் வீழ வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

டாலர் பலவீனம் அடைவது, அமெரிக்க மத்திய வங்கியின் பணக் கொள்கை மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் "நோட்டு அச்சடிக்கும்" கொள்கை ஆகியவற்றை பொருத்தும் அமையும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி வீதங்களை உயர்த்தும் என்ற வதந்தியின் அடிப்படையில் டாலர் சற்று வலுவடைந்ததை தொடர்ந்து நமது சென்செக்ஸ் குறியீடு இரண்டாயிரம் புள்ளிகள் வரை வீழ்ந்ததும், இன்னும் பல காலம் வரை வட்டி வீதங்கள் உயர்த்தபடாது என்று அமெரிக்க மத்திய வங்கி உறுதி அளித்த சில காலத்திலேயே சென்செக்ஸ் மீண்டும் பெருமளவுக்கு உயர்ந்ததும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இப்போது இரண்டாவது விஷயத்திற்கு வருவோம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏழு சதவீதமாக இருக்கும் பட்சத்தில் பங்கு சந்தையில் ஒரு பெரிய அளவு முன்னேற்றம் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. ஆனால், பருவ மழை தவறியது இந்த ஆண்டு ஏழு சதவீத முன்னேற்றம் இருக்காது என்ற ஒருவித அவ நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டன. அதே சமயத்தில் அடுத்த ஆண்டு ஏழு சதவீத முன்னேற்றம் இருக்கும் என்று பிரதமரும் நிதி அமைச்சரும் தொடர்ந்து கூறி வருவது சந்தையில் அவ்வப்போது எழுச்சியை ஏற்படுத்த உதவுகின்றது. மேலும் சிறப்பான இந்திய தொழிற்துறை முன்னேற்றம் (9.1%) மற்றும் மக்கள் உபயோக சாதனங்கள் (கார், பைக், டிவி போன்றவை) அதிகம் விற்பனை ஆவதும் சந்தையில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்கள் பங்குசந்தையில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேற்சொன்ன இரண்டு காரணிகளை தொடர்ந்து கவனித்து வந்தால், நமது சந்தைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும். இதுவரை சொன்னது, மொத்த பங்கு சந்தையில் ஏற்படும் பொதுவான மாற்றங்களைப் பற்றியது மட்டுமே. தனிப்பட்ட பங்குகளில் ஏற்படும் மாற்றங்கள், அந்தந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பொருத்தே அமைகின்றன.

இப்போது வரும் வார சந்தை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பற்றிப் பார்ப்போம்.

தொடரும் டாலர் பலவீனம் மற்றும் இந்திய பொருளாதாரத்தைப் பற்றி வெளிவரும் நல்ல தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நமது சந்தை இன்னும் கூட மேலே உயர வாய்ப்புக்கள் உள்ளன. வரும் வாரம் நமது பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் குறித்த சில சட்டத்திருத்தங்கள் ஏற்படலாம் என்ற நம்பிக்கையில் இந்த துறை பங்குகள் இன்னும் கூட மேலே செல்ல வாய்ப்புக்கள் உண்டு.

அதே சமயத்தில், நிபிட்டி 5150-5200 அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. குறுகிய கால முதலீட்டாளர்கள் 4950-5000 அளவுகளை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்யலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் சற்று பொறுமையாக இருக்கலாம். சென்ற பதிவில் கூறிய படி 4650 -4700 அளவுகளில் வாங்கியவர்கள், வாங்கிய பங்குகளில் ஒரு பகுதியை 5150-5200 அளவுகளில் விற்று விடலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி!

Saturday, October 31, 2009

வழியில் மேடு பள்ளம்!


பங்கு சந்தையில் பல வாரங்களுக்குப் பிறகு ஒரு பெரியதொரு வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. சந்தைகளில் ஏராளமான கரன்சிகளை வாரி இறைத்து உலக நாடுகளின் அரசாங்கங்கள் கொண்டு வர விரும்பும் பொருளாதார மீட்சிப் பாதையில் ஏராளமான மேடுபள்ளங்களை சந்திக்க வேண்டியும் இருக்கலாம் என்ற கசப்பான உண்மையை சந்தைகள் புரிந்து கொண்டதே இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். இன்னும் சற்று விரிவாக இங்கே பார்ப்போம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் தொடங்கிய "நிதிச் சிக்கல்" பூகம்பம் பொருளாதார சுனாமியாக மாறி உலகெங்கும் ஆட்டிப் படைத்தது. இந்த சிக்கலில் இருந்து மீள "Keynes" முறையை பின்பற்றலாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் முடிவெடுத்தன. அதாவது தனிநபர்கள் செலவு செய்ய தயங்கும் போது, அரசாங்கம் அதிகமாக செலவு செய்து பொருளாதாரத்தில் ஒரு கிளர்ச்சியை உருவாக்குவது. அரசாங்கம் செலவு செய்ய வேண்டுமென்றால், ஒன்று கடன் வாங்க வேண்டும் அல்லது புதியதாக நோட்டுக்களை அச்சடிக்க வேண்டும். இரண்டு வேலைகளையும் அழகாக செய்த அரசாங்கங்கள் அந்த பணத்தை கொண்டு ஏராளமான வரி மற்றும் மான்ய சலூகைகளை வழங்கின. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்காவில் கார் வாங்கினால், கார் செலவில் ஒரு பங்கை அரசாங்கமே வழங்கும். வீடு வாங்கினாலும் இதே போன்ற நிலைதான். மேலும் நலிவடைந்த வங்கிகள் முறையில்லாமல் செய்த முதலீடுகளை அரசாங்கமே ஒரு விலைக்கு வாங்கிக் கொள்ளும். இது போன்ற அரசாங்க முயற்சிகள் பொருளாதாரத்தில் "உபயோகமற்ற பணத்தை" உருவாக்கின. இந்த பணம் உலக சந்தைகளில் அதாவது, பங்கு, ரியல் எஸ்டேட், உணவு பொருட்கள், ஆயில் மற்றும் இதர உலோக சந்தைகளில் பாய்ந்து பரவி, அனைத்து உலக சந்தைகளையும் உயர செய்தன.

சந்தைகளில் விலை ஏராளமாக உயர்ந்தது, பொருளாதாரத்தில் ஒரு செயற்கையான வளர்ச்சியை உருவாக்கியது. பல புள்ளி விபரங்கள், ஒரு பொருளாதார மீட்சி ஏற்படுகின்ற புறத்தோற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அரசாங்கங்கள் மேலும் பணத்தை வெளியிட்டன.

இப்படி ஏற்பட்டுள்ள பொருளாதார மீட்சி நிரந்தமானதுதானா என்ற சந்தேகம் இப்போது சந்தை நிபுணர்களிடையே ஏற்பட்டுள்ளது. காரணம், பல அரசாங்க திட்டங்கள் நிரந்தமானவை அல்ல. அப்படி நிரந்தமாக சலுகைகள் வழங்குமளவுக்கு அரசாங்கங்களின் நிதி நிலை சிறப்பாக இல்லை. மேலும் இந்த சலுகைகள் பணவீக்கத்தை உருவாக்குகின்றனவே தவிர வளர்ச்சிக்கு உதவவில்லை என்பதும் வருந்துதற்குரிய உண்மையாகும்.

அமெரிக்காவின் பொருளாதார தளர்ச்சி முடிவுக்கு வந்து விட்டது என்று சில புள்ளி விபரங்கள் தெரிவித்தாலும், அமெரிக்கா மீண்டும் பொருளாதார தளர்ச்சி பாதைக்கே செல்லும் என்று வேறு சில புள்ளி விபரங்கள் வெளிக்காட்டுகின்றன.

இந்த சந்தேகமே சென்ற வாரம் சந்தைகளில் ஏற்பட்ட பெரியதொரு தடுமாற்றத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவில் கூட இந்த நிலைதான் தொடர்கிறது. இந்தியாவின் சில பகுதிகள் (துறைகள் அல்லது மக்கள்) மட்டும் பொருளாதார வளர்ச்சியின் லாபத்தை அனுபவிக்க மற்ற பகுதிகள் இன்னமும் தடுமாறிக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவில் இத்தனை பேருக்கு வேலை போய் விட்டது என்று உச்சுக் கொட்டும் நம் பெரியவர்கள் இந்தியாவில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கின்றார்கள் என்பதை கணக்கெடுக்கக் கூட முயற்சி செய்வதில்லை. உண்மையான வளர்ச்சி அடிமட்டத்தில் இருந்தே வர வேண்டும். மேலே பெருத்து கீழே சிறுத்திருக்கும் தலைகீழ் பிரமிட் தனது சொந்த எடையின் காரணமாகவே உதிர்ந்து போய் விடும்.

பங்கு சந்தையில் பல வாரங்களுக்குப் பிறகு பெரியதொரு வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. சந்தைகளில் ஏராளமான கரன்சிகளை வாரி இறைத்து உலக நாடுகளின் அரசாங்கங்கள் கொண்டு வர விரும்பும் பொருளாதார மீட்சிப் பாதையில் ஏராளமான மேடுபள்ளங்களை சந்திக்க வேண்டியும் இருக்கலாம் என்ற கசப்பான உண்மையை சந்தைகள் புரிந்து கொண்டதே இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். இன்னும் சற்று விரிவாக இங்கே பார்ப்போம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் தொடங்கிய "நிதிச் சிக்கல்" பூகம்பம், பொருளாதார சுனாமியாக மாறி உலகெங்கும் ஆட்டிப் படைத்தது. இந்த சிக்கலில் இருந்து மீள "Keynes" முறையை பின்பற்றலாம் என்று உலக நாடுகளின் அரசாங்கங்கள் முடிவெடுத்தன. அதாவது தனிநபர்கள் செலவு செய்ய தயங்கும் பொருளாதார தளர்ச்சி காலக் கட்டத்தின் போது, அரசாங்கம் அதிகமாக செலவு செய்து, பொருளாதாரத்தில் ஒரு கிளர்ச்சியை உருவாக்குவது.

அரசாங்கம் செலவு செய்ய வேண்டுமென்றால், ஒன்று கடன் வாங்க வேண்டும் அல்லது புதியதாக நோட்டுக்களை அச்சடிக்க வேண்டும். இரண்டு வேலைகளையுமே அழகாக செய்த அரசாங்கங்கள், அச்சடித்த மற்றும் கடன் வாங்கிய பணத்தை கொண்டு ஏராளமான வரி மற்றும் மான்ய சலூகைகளை வழங்கின. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்காவில் கார் வாங்கினால், கார் செலவில் ஒரு பங்கை அரசாங்கமே வழங்கும். வீடு வாங்கினாலும் இதே போன்ற நிலைதான். மேலும், முறையற்ற முறையில் முதலீடுகள் செய்து நலிவடைந்த வங்கிகளின் முதலீடுகளை அரசாங்கமே ஒரு நல்ல விலைக்கு வாங்கிக் கொள்ளும்.

இது போன்ற அரசாங்க முயற்சிகள் பொருளாதாரத்தில் "உபயோகமற்ற பணத்தை" (Unproductive Money) உருவாக்கின. இந்த பணம், உலக சந்தைகளில் அதாவது, பங்கு, ரியல் எஸ்டேட், உணவு பொருட்கள், ஆயில் மற்றும் இதர உலோக சந்தைகளில் பாய்ந்து பரவி, அனைத்து உலக சந்தைகளையும் உயர செய்தன.

இவ்வாறு சந்தைகள் ஏராளமாக உயர்ந்தது, பொருளாதாரத்தில் ஒரு செயற்கையான வளர்ச்சியை உருவாக்கியது. இதற்கிடையே பல அரசு புள்ளி விபரங்கள், ஒரு பொருளாதார மீட்சி ஏற்படுகின்ற புறத்தோற்றத்தை ஏற்படுத்தின. இதனால் மகிழ்ச்சி அடைந்த அரசாங்கங்கள், மேலும் மேலும் பணத்தை வெளியிட்டன.

இப்படி ஏற்பட்டுள்ள பொருளாதார மீட்சி நிரந்தமானதுதானா என்ற பலமான சந்தேகம் இப்போது சந்தை நிபுணர்களிடையே ஏற்பட்டுள்ளது. காரணம், பல அரசாங்க திட்டங்கள் எப்போதுமே நிரந்தமானவை அல்ல. அப்படி நிரந்தமாக சலுகைகள் வழங்குமளவுக்கு அரசாங்கங்களின் நிதி நிலை சிறப்பாகவும் இல்லை. மேலும் இந்த சலுகைகள் ஒருவித பணவீக்கத்தை உருவாக்குகின்றனவே தவிர தொழிற் வளர்ச்சிக்கு உதவவில்லை என்பதும் வருந்துதற்குரிய உண்மையாகும்.

அமெரிக்காவின் பொருளாதார தளர்ச்சி முடிவுக்கு வந்து விட்டது என்று சில புள்ளி விபரங்கள் இப்போதைக்கு தெரிவித்தாலும், அமெரிக்கா மீண்டும் பொருளாதார தளர்ச்சி பாதைக்கே செல்லும் என்று வேறு சில புள்ளி விபரங்கள் வெளிக்காட்டுகின்றன.

இந்த சந்தேகமே, சென்ற வாரம் சந்தைகளில் ஏற்பட்ட பெரியதொரு தடுமாற்றத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவில் கூட இந்த நிலைதான் தொடர்கிறது. இந்தியாவின் சில பகுதிகள் (துறைகள் அல்லது மக்கள்) மட்டும் பொருளாதார வளர்ச்சியின் லாபத்தை அனுபவிக்க மற்ற பகுதிகள் இன்னமும் தடுமாறிக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவில் இத்தனை பேருக்கு வேலை போய் விட்டது என்று உச்சுக் கொட்டும் நம் பெரியவர்கள் இந்தியாவில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கின்றார்கள் என்பதை கணக்கெடுக்கக் கூட முயற்சி செய்வதில்லை. உண்மையான வளர்ச்சி அடிமட்டத்தில் இருந்தே வர வேண்டும். மேலே பெருத்து கீழே சிறுத்திருக்கும் தலைகீழ் பிரமிட் (Reverse Pyramid) தனது சொந்த எடையின் காரணமாகவே உதிர்ந்து போய் விடும்.

உண்மையான பொருளாதார வளர்ச்சி தொழிற் துறையிலும், பொது மக்களின் வேலை வாய்ப்பு மற்றும் அவர்களின் செலவிடும் திறன் உயர்வதிலேயே அடங்கி இருக்கின்றது. என்னடா இது, முதலாளித்துவ பங்கு சந்தையை பற்றி எழுதும் போது, கம்யூனிசம் பேசுகிறான் என்று எண்ண வேண்டாம். என்னைப் பொறுத்த வரை பங்கு சந்தைகளின் நிரந்தர வளர்ச்சி தொழிற் துறையின், பொருளாதாரத்தின் முறையான வளர்ச்சியில்தான் அடங்கி இருக்கின்றதே, இப்போது நடப்பது போன்ற அதிகப்படியான பணப்போக்குவரத்தில் இல்லை.

இப்போது பங்கு சந்தையைப் பற்றி பார்ப்போம்.

வரும் வாரத்திலும் பங்கு சந்தை தடுமாற வாய்ப்புள்ளது என்றாலும், கடந்த முறை பங்குகளை வாங்க தவறி விட்டோம் என்று எண்ணுபவர்கள் புதிதாக வாங்கவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே சொன்ன படி நிபிட்டி 4600-4700 அளவுகளில் நல்லதொரு அரண் கொண்டிருக்கும்.

கடந்த எட்டு மாதங்களாக இந்தியாவில் ஏராளமாக முதலீடு செய்து அந்நிய நிறுவனங்கள் தங்கள் பணத்தை வெளியேற்ற நினைத்தால் சந்தை வீழ்ச்சி இன்னும் கூட பெரிதாக இருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க மத்திய வங்கி, அமெரிக்க பொருளாதார மீட்சியைப் பற்றி எண்ண கூறவுள்ளது என்பதை வர்த்தகர்கள் கூர்மையாக கவனிப்பார்கள். இந்தியாவில் பொறுத்த வரை, பல பெரிய நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் சிறப்பாக இல்லாத நிலையில், இனி வெளிவரவுள்ள நிதி அறிக்கைகளும் கவனிக்கப் படும்.

நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய விரும்புவர்கள் சற்று பொறுத்திருக்கலாம். அல்லது அடிப்படை சிறப்பாக உள்ள பங்குகளில் (உதாரணத்திற்கு எஸ்பிஐ, மாருதி, இன்போசிஸ் மற்றும் ஐடிசி போன்ற நிறுவனங்களில்) சிறிது சிறிதாக முதலீடு செய்யலாம். எந்த பங்கை வாங்குவது என்று தடுமாறுபவர்கள், நிபிட்டி பீஸ் போன்ற நிதிகளை (Nifty BEES) சேகரிக்கலாம். குறுகிய கால நோக்கில் முதலீடு செய்ய விரும்புவர்கள் 4600-4650 அளவுகளில் பங்குகளை வாங்கலாம். அதே சமயம் குறைந்த கால நோக்கில் முதலீடு செய்பவர்கள் தகுந்த ஸ்டாப் லாஸ் அளவுடன் செயல்படுவது நல்லது.

வரும் வாரம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி.

Sunday, October 25, 2009

தீபாவளி கஷாயம்!


தீபாவளிக்கு ஏராளமான இனிப்புக்களை சாப்பிட்டு விட்டு பின்னர் வயிறு கெட்டுப் போய் கஷாயத்தை தேடி அலையும் கதை சந்தைக்கும் ஏற்பட்டு உள்ளது. தீபாவளி வரை அதிரடியாக முன்னேறி பல புதிய உயரங்களை தொட்ட பங்கு சந்தை சென்ற வாரம் மிகவும் தடுமாறியது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சந்தைக்கு பல தருணங்களில் மீட்சியை அளித்து வந்த "முக்கிய தடுப்பரண்" (Important Trendline) சென்ற வாரத்தில் முழுமையாக உடைக்கப் பட்டு விட்டது. இந்த தடுமாற்றத்திற்கு என்ன காரணங்கள் என்று முதலில் பார்ப்போம்.

உலக சந்தையில் மளமளவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை இந்திய ரூபாயின் மதிப்பை குறைத்து விடக் கூடிய நிலை உருவாகும் பட்சத்தில் அந்நிய முதலீடு குறையலாம் என்ற ஒரு அச்சம் சந்தையில் உருவானது. இந்த அச்சத்தை உறுதிப் படுத்தும் வகையில், ருபாய் வீழ்ச்சியின் தொடர்ச்சியாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய சந்தையில் பங்குகளை விற்றன.

வங்கிகள் கடன் வழங்கும் அடிப்படை வட்டி வீதத்தில் சில மாற்றங்களை மத்திய வங்கி கொண்டு வர விருப்பம் தெரிவித்தது, வங்கிகளின் சுதந்திரத்தை ஒருவகையில் பாதிக்கும் என்ற அச்சத்தை சந்தையில் உருவாக்கியது. இந்த அச்சம் தொடர்ந்து பல நாட்கள் வரை நட்சத்திரங்களாக ஜொலித்த வங்கிப் பங்குகளை சற்று நிலை தடுமாற செய்தது.

கிருஷ்ணா கோதாவரி படுகையின் K6 பகுதி மூடப் பட வேண்டியிருக்கும் என்ற தொனியில் வெளிவந்த செய்திகள், பங்கு குறியீடுகளின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் நிறுவனத்தை தடுமாற செய்தது. மேலும், தொடர்ந்து உயரும் கச்சா எண்ணெய் விலை இந்திய எண்ணெய் விற்பனை பங்குகளை வீழச் செய்தது.

மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான லார்சென் & டூப்ரோவின் காலாண்டு நிதி அறிக்கை சந்தைகளுக்கு திருப்தி அளிக்க வில்லை. சந்தைக் குறியீடுகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் இந்த நிறுவன பங்கின் வீழ்ச்சி மொத்த சந்தையையும் சற்று தடுமாற செய்தது.

அதே சமயம், நுகர்வோர் நிறுவனங்கள் பாதுகாப்பானதாகவும், ஐடிசி போன்ற நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் சிறப்பாக இருந்ததாலும், இந்த துறை பங்குகள் ஓரளவுக்கு முன்னிலை பெற்றன. டிசிஎஸ் நிறுவனத்தின் சிறப்பான காலாண்டு அறிக்கை மற்றும் ருபாய் வீழ்ச்சி மென்பொருட் துறை நிறுவனங்களின் பங்குகளை உயரச் செய்தது.

ஆக மொத்தத்தில் அங்கங்கு சில சிறப்பான பங்கு வளர்ச்சிகள் இருந்தாலும், சந்தையில் வீழ்ச்சியே பெரிதாக காணப் பட்டது.

ஏற்கனவே சொன்னபடி முக்கிய அரண் நிலைக்கு கீழே முக்கிய குறியீடுகள் சரிந்துள்ள நிலையில், பல வர்த்தகர்களின் எதிர்பார்ப்பு சந்தை இன்னும் கூட நிறைய தடுமாற்றங்களை சந்திக்கும் என்றே உள்ளது.

மேலும் வரும் செவ்வாய் கிழமை மத்திய வங்கி அறிவிக்கவுள்ள காலாண்டு நிதிக் கொள்கை சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வட்டி வீத உயர்வுகள் ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப் பட்டாலும், பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றிய மத்திய வங்கியின் கருத்துக்கள் சந்தையில் பெருமளவுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

வரும் வாரத்தில் நிகழக் கூடிய முன்பேர வர்த்தகத்தின் மாதாந்திர நிறைவும் (Monthly F&O Settlement) கூட சந்தையில் பெரிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

உலக வர்த்தக போக்கு முக்கியமாக கச்சா எண்ணெய் விலை நிலவரம், ருபாய் வர்த்தகம் மற்றும் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்தே சந்தையின் போக்கு வரும் வாரம் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நிபிடியை பொறுத்த வரை 4850 -4900 & 4650 -4700 நிலைகள் நல்ல அரண்களாக இருக்கும். 5100-5200 அளவு வலுவான எதிர்ப்பு நிலையாக இருக்கும்.

கடந்த ஆறு மாதங்களாக பங்குகளை வாங்கி வைத்திருக்கும் நண்பர்கள், தங்கள் மொத்த வர்த்தக நிலையை சற்றுக் குறைத்துக் கொள்ளலாம். இந்த பதிவுவலையில் பரிந்துரைக்கப் பட்ட யெஸ் பேங்க் மற்றும் மைத்தாஸ் நிறுவனங்களின் பங்குகள், மிகக் குறைந்த காலத்திலேயே, மிகச் சிறப்பான வளர்ச்சியை கண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். இந்த பங்குகள் இன்னும் கூட மேலே செல்ல வாய்ப்புக்கள் உள்ளன என்றாலும் கூட, மொத்த முதலீட்டை கொஞ்சம் குறைத்துக் கொள்வது (Partial profit booking is desirable) நல்லது என்று நினைக்கிறேன்.

வரும் வாரம் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி.

Friday, October 16, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


இந்த தீபாவளி அனைவரது வாழ்விலும் தீப ஒளி ஏற்றட்டும்!



நம்மைச் சுற்றி உள்ள இருள் விலகட்டும்!




உலகெங்கும் ஆனந்த ஒளி பரவட்டும்!










அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Sunday, October 11, 2009

வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?


பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.

முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல்

தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது.

இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ்

பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக அறிவித்தது. ஒன்று வாங்கினால் இன்னொன்று என்று அறிவித்து விட்டு பழைய ஸ்டாக்களை (பாதி விலை என்ற பெயரில் ஆனால் அதே விலையில்) வெளியனுப்பும் துணிக்கடைகளின் பாணியில், வெளி வந்த இந்த அறிவிப்பால் கவரப்பட்ட பலரும் அன்றைய தேதியில் ரிலையன்ஸ் பங்கினை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். ஆனால் பங்கோ ஒரே நாளில் பல்லிளித்து விட்டது.

மூன்றாவது புஸ்வாணம் - இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை மிகச் சிறப்பாகவே அமைந்திருந்தது. சிக்கலான உலக பொருளாதார சூழ்நிலையிலும் கூட சிறந்த முறையில் செயலாற்றியிருப்பது பாராட்டத்தக்க விஷயம்தான் என்றாலும் கூட சந்தைகள் இதனை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் வெடிச்சத்தம் பெரிதாக கேட்க வில்லை. வரும் ஆண்டிற்கான பங்கு வருவாய் நூறு ரூபாயாக இருக்கும் என்று தனது முந்தைய வருவாய் கணிப்பை இன்போசிஸ் நிறுவனம் உயர்த்தியது சந்தோசமான விஷயம்தான் என்றாலும், பொருளாதார சிக்கல்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில், இந்த பங்கின் மதிப்பு (P/E Ratio) 22 என்று அதிக அளவில் இருப்பதை சந்தைகள் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதையே பங்கின் விலை போக்கு காட்டுகின்றது. நல்ல நிறுவனம் நல்ல முடிவுகள் என்று நம்பி பங்கினை வாங்கிய வர்த்தகர்கள் முகத்தில் ஒளிச்சிதறல்கள் இல்லை. மாறாக, கரியே பூசப் பட்டது.

நான்காவது புஸ்வாணம் - உலக சந்தைகள்

அமெரிக்காவிற்கு சளி பிடித்தால் இந்தியாவிற்கு இருமல் வரும் என்று சொல்லப் படுவதுண்டு. இதில் உண்மை இல்லாமல் இல்லை. டொவ் ஜோன்ஸ், நாஸ்டாக், எஸ்&பி போன்ற குறியீட்டுக்களின் போக்கின் அடிப்படையிலேயே நம்மவர்களில் பலர் வர்த்தகம் செய்வதுண்டு.

சென்ற வாரம் அமெரிக்க சந்தைகளில் உண்மையான தீபாவளி கொண்டாட்டம் இருந்தது. அங்கிருந்து வெளிவரும் முக்கிய பொருளாதார குறியீடுகள் எல்லாம் அமெரிக்க பொருளாதாரம் இன்னும் தடுமாற்றத்திலேயே இருக்கின்றது என்பதை தொடர்ந்து வெளிக்காட்டி வரும் இந்த வேளையில், முக்கிய தகவல்கள் ஏதும் வெளிவராத ஒரு "முக்கிய புள்ளி விவர விடுமுறை வாரமாக" அமைந்த சென்ற வாரம் அமெரிக்க பங்கு வர்த்தகர்களுக்கு அள்ளித்தரும் ஒரு வாரமாக இருந்தது ஆச்சரியமான விஷயமாக இல்லை. ஆனால் அமெரிக்க பங்கு சந்தைகளை நம்பி வர்த்தகம் செய்த நம்மவர்களுக்கு கிடைத்தது என்னவோ கடைசியில் நசுங்கிப் போன சொம்புதான்.

ஐந்தாவது புஸ்வாணம் - ருபாய் வர்த்தகம்

ருபாய் வலிமை பெற்றால் ஏராளமான அந்நிய முதலீட்டு பணம் வருகிறது என்ற ஒரு அர்த்தமும் உண்டு. ருபாய் மதிப்பு உயர்வதின் தொடர்ச்சியாக டாலர் பணத்தை நம்மிடம் (RBI) கொடுத்து விட்டு அதற்கு பதிலாக ரூபாயை வாங்கி வைத்திருக்கும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நமது பங்கு சந்தை விலைகள் உயராவிடினும் ருபாய் மதிப்பு உயர்வதன் மூலம் மட்டுமே கூட லாபம் ஈட்ட முடியும். எனவே, ருபாய் உயர்ந்தால் அதிக அந்நிய முதலீட்டாளர்கள் வருவார்கள் என்பது சந்தைகளின் பொதுவான நம்பிக்கை.

சென்ற வாரம் ருபாய் ஏராளமாக உயர்ந்தது. ஆனால், பலகாரத்தை தேடி ஈக்கள் வர வில்லை. பலகாரத்தில் இருந்த இனிப்புச்சத்து முழுமையாக உறிஞ்சப்பட்டு விட்டதுதான் காரணமா என்று தெரிய வில்லை. "ஈக்கள்" வரும் என்று பலகாரங்களை ஏகப்பட்ட விலையில் வாங்கி காத்திருந்த பல கடைக்காரர்கள் ஏமாற்றத்துடனேயே கடைகளை சாத்த வேண்டியிருந்தது.

இப்படி ஒவ்வொரு நாளும், நம்பிக்கை எனும் வாண வேடிக்கைகளும் ஏமாற்றம் எனும் புஸ்வாணங்களுமாகவே சென்ற வாரம் கழிந்தது.

வரும் வாரம் வாணவேடிக்கைகள் இருக்குமா அல்லது சென்ற வாரத்தைப் போல இன்னொரு புஸ்வாண வாராமாக போய் விடுமா என்பதே இப்போதைய கேள்வி.

தொழிற்நுட்ப வரைபட கணிப்புக்களின் படி சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி ஆகியவை 16500 & 4920 என்ற முக்கிய நிலைகளின் மிக அருகே அமைந்துள்ளன. இந்த நிலைகளை அரண்களாக வைத்துக் கொண்டு சந்தை மேலே செல்லுமானால் இரண்டு அல்லது மூன்று தினங்களில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் அளவுக்கு மேலே கூட உயர வாய்ப்புள்ளது என்று சில பங்குசந்தை வல்லுனர்கள் கருதுகின்றனர். மாறாக இந்த அரண் நிலைகள் முழுமையாக முறியடிக்கப் பட்டால் சந்தை ஒரு பெரிய வீழ்ச்சியை சந்திக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

பங்குசந்தையில் குறுகிய கால அடிப்படையில் வர்த்தகம் செய்வோர் மேற்சொன்ன நிலைகளை மையப் புள்ளிகளாக அமைத்துக் கொண்டு வர்த்தகம் செய்வது நல்லது.

காலாண்டு அறிக்கைகளை மட்டுமே நம்பிக் கொண்டு பங்குகளை வாங்கும் வர்த்தக நிலை எடுக்க வேண்டாம். அதே போல நல்ல நிறுவனம் என்பதனால் மட்டும் முதலீடு செய்யும் முடிவையும் எடுக்க வேண்டாம். இன்றைய நிலையில் பல பங்குகள் தமது விலையில் பல நல்ல செய்திகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டுதான் (Prices have discounted many many good news) வர்த்தகம் ஆகி வருகின்றன.

மேலும், ஏற்கனவே பல மடங்கு உயர்ந்து விட்ட பங்குகளை, "அடிப்படையில் மிகவும் சிறந்தவை, நீண்ட கால நோக்கில் பத்து-பதினைந்து சதவீதம் வரை வருமானம் அளிக்கும்" என்றெல்லாம் சொல்லி பங்கு ஆலோசகர்கள் பரிந்துரைத்தால் கண்டிப்பாக புறந்தள்ளி விடுங்கள்.

மற்ற முதலீடுகளுக்கும் பங்கு முதலீட்டிற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. அதாவது, முதலீட்டுப் பணம் முழுமையாக கூட மூழ்கிப் போய் விடும் அபாயம் பங்கு முதலீட்டில் உள்ளது. எனவே, ஒரு பங்கு குறைந்த பட்சம் 25-30 சதவீதம் (ஒரு ஆண்டுக்கு) வருவாய் தரும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே முதலீட்டைப் பற்றி யோசிக்க வேண்டும். அதுவும் அந்த நிறுவனம் 'அடிப்படையில் மிகச் சிறப்பானதாக வளரும் நிறுவனமாக' (rising star growth companies) இருந்தால் அல்லது 'ஒரு கடுமையான சூழலில் இருந்து மீண்டு வருவதாக (recovery stocks)' இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

பின்குறிப்பு: பொதுவாகவே, தீபாவளியை விட தீபாவளிக்கு முந்தைய வாரம்தான் அதிக மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய உடைகள், பட்டாசுகள், பலகாரங்கள், பரிசுப் பொருட்கள் என பலவற்றையும் தீபாவளி 'பர்ச்சேஸ்' செய்வது (பர்ஸை பற்றி கவலைப் பட வில்லையென்றால்) ஒரு சந்தோசமான அனுபவம். தீபாவளிக்காக சொந்த ஊருக்கு பலரும் செல்வதும் வருகின்ற வாரத்தில்தான். ஏராளமான கொண்டாட்ட எதிர்பார்ப்புக்களுடன் நகரக் கூடிய இந்த வாரம் பலருடைய முகத்திலும் புன்னகை பூக்கச் செய்ய வேண்டுமென்று மனதார வாழ்த்துகின்றேன்.

அப்படியே தீபாவளிக்கும் இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என் தரப்பிலிருந்து.

நன்றி!

Friday, October 9, 2009

தீபாவளியும் தங்க விதியும்!


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளியை முன்னிட்டு ஒரு பணிவான கோரிக்கை.

80-20 என்ற தங்க விதியை (The Pareto principle , also known as the 80-20 rule , the law of the vital few, and the principle of factor sparsity) பற்றி பலரும் கேள்விபட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். கேள்விபடாதவர்களுக்காக இங்கே ஒரு சிறிய விளக்கம்.

எண்பது சதவீத விளைவுகள் இருபது சதவீத காரணங்களாலேயே வருகின்றது என்ற இந்த வணிக தத்துவம் பரேடோ என்ற பொருளாதார நிபுணர், 1906 இல் இத்தாலியின் மொத்த நிலப் பரப்பில் எண்பது சதவீத நிலம் இருபது சதவீதத்தினரிடம்தான் உள்ளது என்று கணித்ததின் அடிப்படையில் உருவானது. பரேடோ விதி என்று அழைக்கப் படும் இந்த விதி பல கணித முறைகளிலும் வணிக தத்துவங்களிலும் உதவுகிறது.

அதாவது ஒரு நிறுவனத்தின் எண்பது சதவீத விற்பனை இருபது சதவீத வாடிக்கையாளர்களிடம் இருந்துதான் வருகின்றது. ஒருவரது முதலீட்டின் எண்பது சதவீத வருமானம் அவரது இருபது சதவீத பங்குகளில் இருந்துதான் வருகின்றது.

சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூட இருபது சதவீத முக்கிய பிரச்சினைகள்தான் ஒரு கணினியின் செயல் இழப்புக்கான எண்பது சதவீத காரணங்களாக இருக்கின்றன என்று கண்டறிந்துள்ளது.

80-20 என்ற விகிதம் இன்னும் கூட பல இடங்களில் சிறப்பாக பொருந்தும்.

உலகில் எண்பது சதவீத சொத்துக்கள் இருபது சதவீதத்தினரிடம்தான் உள்ளன. வேறு வகையாக சொல்ல வேண்டுமென்றால் எண்பது சதவீதம் பேர் உழைப்பதை இருபது சதவீதம் பேர் சாப்பிடுகின்றனர். இன்னும் கூட சொல்லப் போனால், செல்வந்தர்களிடையே கூட, எண்பது சதவீத சொத்துக்கள் இருபது சதவீதத்தினர் மட்டும்தான் உள்ளது.

எண்பது இருபது என்பது ஒரு இளகிய தத்துவம். இந்த விகிதம் லேசாக மாறி கூட இருக்கலாம். சமீபத்திய பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் ஒரு சதவீதத்தினரிடம் மட்டும்தான் சேர்ந்துள்ளன என்று சொல்பவர்களும் உண்டு.

எல்லாம் சரி! தீபாவளி கோரிக்கைக்கும் இந்த தங்க விதிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?

இணையத்தில் உள்ள நம்மில் பலரும் வசதியுள்ள முதல் இருபது சதவீதத்திற்குள்தான் இருப்போம் என்று நம்புகிறேன். நம்மை இந்த நிலையில் வைத்திருப்பது, நமக்கு பல வகையிலும் சேவை செய்யும், மீதமுள்ள எண்பது சதவீதத்தினர்தான். அவர்களுக்கு ஏதாவது பதிலுக்கு செய்வது நமது கடமையாகும்.

நம்மால் என்ன செய்ய முடியும் என்று கேட்கிறீர்களா?

நமது தீபாவளி செலவினத்திற்கான மொத்த பட்ஜெட்டில் இருபது சதவீதத்தை மட்டும் தனியாக ஒதுக்கி விடுவோம். அந்த பணத்தில் நம்மை விட எளியவர்களாக இருப்பவர்களுக்கு ஏதாவது செய்வோம். அவர்கள் நம் வீட்டு வேலைக்காரர்களாக இருக்கலாம். வழியில் சந்திப்பவராக இருக்கலாம். ஏன், அவர்கள் முகம் தெரியாதவர்களாக கூட இருக்கலாம். எளியவர்கள் யாருக்காகவாவது அந்த பணத்தை செலவு செய்வோம்.

80-20 தங்க விதி இங்கேயும் கூட அழகாக பொருந்தும். அதாவது உங்கள் மொத்த பட்ஜெட்டில் இருபது சதவீதத்தை மட்டுமே, மற்றவர்களுக்கு உதவுவதற்காக நீங்கள் ஒதுக்கினாலும், இந்த பணத்தின் மூலமாக உங்களுக்கு கிடைக்கப் போவது எண்பது சதவீத மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

நன்றி!

பின்குறிப்பு: இந்த கோரிக்கை ஏதேனும் பெரிய மனுஷத்தனமாக இருந்தால் மன்னிக்கவும். மனதில் தோன்றியதை இணைய நண்பர்களிடம் முன்வைப்போம் என்ற ஆர்வத்தில் மட்டுமே இந்த பதிவு.

Sunday, October 4, 2009

நேற்றொரு தோற்றம் - இன்றொரு மாற்றம்.


நேற்று நாம் பார்த்த சூரியனும் இன்று பார்க்கும் சூரியனும் ஒன்றேதானா என்ற கேள்விக்கு உங்கள் விடை என்னவாக இருக்கும்? ஒன்றுதான் என்று விடை சொல்லும் அதே உறுதியுடன் ஒன்றில்லை வேறு வேறு என்றும் சொல்ல முடியும். ஒவ்வொரு நிமிடமும் அணு சேர்க்கைகளும் அணு பிளவுகளும் தனது நிலப்பரப்பில் நடத்திக் கொண்டிருக்கும் சூரியன் ஒவ்வொரு நிமிடமும் தனது நிலையில் இருந்து மாறிக் கொண்டேதான் இருக்கின்றது. எனவே நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் என்ற பாடல் வரிகள் சூரியனுக்கும் பொருந்தும். கங்கை நதியோ காவேரியோ, நதிகள் அவைகளேதான் என்றாலும் நேற்றிருந்த நீர் இன்றிருப்பதில்லை. மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்ற இந்த அறிவியல் சித்தாந்தம் பொருளாதாரத்திற்கும் வெகுவாகவே பொருந்தும். ஒவ்வொரு நாளும் புதிய நிறங்களை வெளிக்காட்டும் உலக பொருளாதார நிலை பற்றி இங்கு பார்ப்போம்.

உலகெங்கும் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட பல அரசாங்கங்கள், சென்ற ஆண்டு துவங்கிய பொருளாதார மந்த நிலையை போக்குவதற்காக ("Trickling Down Economics" எனும் முறையில்) சந்தையில் பெரிய அளவில் பணத்தை இறக்கி விட்டன. பெரிய பணக்காரர்களுக்கு (அல்லது தொழில் நிறுவனங்களுக்கு) அரசாங்கங்கள் ஏராளமான சலுகையை கொடுக்கும் பட்சத்தில், அவர்களை சார்ந்துள்ள எளிய மக்களும் பயன் பெறுவார்கள் என்ற கருத்துள்ளது இந்த முறை. அதாவது, பங்கு சந்தை வர்த்தகர்களுக்கு, முதலீட்டு வங்கிகளில் பணிபுரியும் கனவான்களுக்கு, பெரிய தொழில் அதிபர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்தால் அவர்கள் ஏராளமாக செலவு செய்வார்கள். அப்படி செலவு செய்யும் போது, அவர்களை நம்பியிருக்கும் கார் ஓட்டுனர்கள், வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் இதர சேவைத்துறையினர் (நம்மூர் பிபிஒ உட்பட) என்று பலரும் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்பது இவர்களது நம்பிக்கை.

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற கதையாகி விட்டது இந்த "Trickling Down Economics" முயற்சி. தொழிற்துறை உயரும் என்று நம்பி அரசாங்கங்கள் இரவு பகலாக அச்சடித்து பொருளாதாரத்தில் இறக்கி விட்ட பணம், சந்தைகளுக்குள்ளே பாய்ந்து பரந்து பங்கு சந்தை, பொருட்கள் சந்தைகளை நல்ல உயரத்தில் கொண்டு போய் வைத்துள்ளது. ஆனால், உலக அரசாங்கங்கள் எதிர்பார்த்தபடி பெரிய அளவில் தொழிற் உற்பத்தி அல்லது மக்களின் செலவின அதிகரிப்பு நடைபெற வில்லை. காலங்காலமாக செலவு செய்து மட்டுமே பழக்கப் பட்ட அமெரிக்கர்கள் இப்போது சேமிக்கத் (எதிர்கால அச்சம் காரணமாக இருக்கலாம்) தொடங்கி விட்டனர். வேலை இழப்பும் குறைந்த பாடில்லை. சொல்லப் போனால் சென்ற மாதம் வேலை இழப்பு விகிதம் (Unemployment Rate) அதிகரித்துள்ளது.

சிறிய விலங்கினங்களுக்கு உணவை நேரடியாக கொடுப்பதற்கு பதிலாக யானைக்கு நிறைய உணவை அளித்தால் அது சாப்பிட்டு சிந்தும் உணவை சிறிய விலங்கினங்கள் சாப்பிட்டு பசியாறும் என்று நினைத்தால், யானைகள் தாம் மட்டுமே சாப்பிட்டு விட்டு மிச்சத்தை பதுக்கி வைத்துக் கொள்வது போல ஒரு பொருளாதார நிகழ்வு நடந்தேறி விட்டது.

பொருளாதார மீட்சி திட்டத்தை பொருத்த வரை, இந்திய அரசாங்கத்தை ஒருவகையில் பாராட்டியாக வேண்டும். அமெரிக்கா போல ஒரு சிலருக்கு மட்டும் பணத்தை வாரி வழங்காமல், பலருக்கும் பணத்தை தாரை வார்த்திருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? கோடிக்கணக்கான மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் லட்சக்கணக்கில் வழங்கப் பட்ட நிலுவை தொகை, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, குறைந்த பட்ச வேலை வாய்ப்பு திட்டம் (NREGP) போன்ற (தேர்தலை மனதில் வைத்து தீட்டப் பட்ட இந்த) திட்டங்கள், எந்த அளவுக்கு சரி என்று சொல்ல முடியாவிட்டாலும், அமெரிக்கா போல பணத்தை குறுகிய வட்டத்தில் மட்டுமே முடக்காமல் பலரிடமும் தஞ்சம் புக வைத்தன. இந்த திட்டங்களால் பலனடைந்த லட்சக்கணக்கான இந்தியர்கள் ஓரளவுக்கு அதிகம் செலவு செய்வதனால் ஏற்பட்டுள்ள இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி ஓரளவுக்கு உறுதியாகவும் நிரந்தரமானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

அதே சமயம் உலக பொருளாதாரம் தத்தளித்து வரும் நிலையில் இந்தியா மட்டும் வெகுகாலத்திற்கு தனித்து வளருவது கடினமான காரியம். இது இந்திய பங்கு சந்தைக்கும் பொருந்தும்.

"யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே" என்ற ஒரு பதிவில் "மணி ஓசைக்கு பின்னர் வருவது யானையாகவும் இருக்கலாம் அல்லது ஐஸ் வண்டியாகவும் கூட இருக்கலாம்" என்று கூறி இருந்தேன். பங்கு சந்தைகள் மணி அடித்த பிறகு வரப் போவது யானைதான் என்று பந்தயம் கட்டின. ஆனால் இதுவரை யானை வந்தபாடில்லை. சென்ற இரு வாரங்களாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பொருளாதார தகவல்கள் (கார் வாங்க காசு கொடுத்தனால் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்ற வாகனத் துறையை தவிர), அந்நாடு உறுதியான பொருளாதார வளர்ச்சியை காண இன்னும் பல காலம் பிடிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளன.

இனிமேலும் அமெரிக்க அரசாங்கம் பணத்தை வாரி இறைப்பது பொருளாதார ரீதியாக கடினமான காரியம். அவ்வாறு செய்தால் பணவீக்கம் பெரிய அளவில் உயரும். அரசாங்கத்தின் ஸ்திர தன்மையும் பாதிக்கப் படும். அரசாங்கத்தால் மேலும் பணத்தை இறக்க முடியாது என்ற பயம் பொருளாதாரத்தை மேலும் பின் தங்க செய்து விடக் கூடும்.

(உலக பொருளாதாரத்தின் என்ஜினாக இன்னமும் கூட அமெரிக்காவே இருந்து வருகிறது என்பதை மறுப்பது கடினம். இந்த பதவிக்காக சீனா முட்டி மோதினாலும், அமெரிக்காவிற்கு சேவை செய்துதான் அது பிழைத்து வருகிறது என்ற உண்மையை அந்த நாடே விருப்பபட்டாலும், மறைக்கவோ மறுக்கவோ முடியாது.)

இந்த சூழ்நிலையானது உலக சந்தைகளை சென்ற இருவாரங்களாக பெருமளவில் கவலை கொள்ள செய்திருக்கிறது. உலக சந்தைகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு வீழ்ச்சியையும் கண்டுள்ளன. ஆனால் இந்திய சந்தையானது இன்னமும் கூட வலுவாகவே தனித்து நடை போட்டு கொண்டிருக்கிறது. அதே சமயம், ஏற்கனவே சொன்னபடி, உலக போக்கில் இருந்து வெகுகாலத்திற்கு விடுபட்டுக் கொள்வது மிகவும் கடினமான காரியம். சொல்லப் போனால் ஒவ்வொரு முறையும் துவக்கத்தில் தனி வழியில் செல்லும் நமது சந்தை, காலப் போக்கில் மற்ற உலக சந்தைகளை விட அதிக ரியாக்சன் காட்டியுள்ளது என்பது சரித்திர உண்மை.

செப்டம்பர் வரை முடிவடைந்த காலாண்டு காலத்திற்கான இந்திய நிறுவனங்களின் நிதி அறிக்கைகளுக்காக நமது சந்தை கொஞ்ச காலத்திற்கு பொறுத்திருக்கும் என்றாலும், உலக சந்தைகள் வரும் காலத்திலும் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தால், நமது சந்தையும் தன்னை உலக போக்குடன் இணைத்துக் கொள்ளும் என்று நம்பலாம்.

ஏற்கனவே முதல் பத்தியில் சொன்ன படி மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்ற தத்துவத்தை மனதில் நிறுத்தி கொண்டு, தொடர்ந்து நிகழும் பொருளாதார மாற்றங்களில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு சந்தைகளில் வர்த்தகம் செய்வது நல்லது.

"Bulls have no resistance. Bears have no support" என்ற பங்கு சந்தை தங்க விதியையும் மனதில் வைத்துக் கொள்ளவும். உலக அளவில் பெரியதொரு பொருளாதார மாறுதல் ஏற்பட்டால் எந்த தொழிற்நுட்ப வரைபட விதியும் (Technical charts ) நம்மை காப்பாற்றாது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Thursday, October 1, 2009

உன்னை போலவே வேற ஒருத்தன்!



செய்யிரதத்தான் நாங்க சொல்லுவோமில்லே?


அதுவும் டயட்டிலே இருக்காம்.

டைம்தானே முக்கியம்?


வயித்துக்குள்ளேயே போனாலும் வழி முக்கியமில்லையா?


இதத்தான் 'சீக்கிரம் கணக்க முடி'க்கறதுன்னு சொல்றாங்களா?


சாரி! டாங் கொஞ்சம் ஸ்லிப்பாயிடுச்சு!


உன்னை போலவே வேற ஒருத்தன் கூட இப்படித்தான் முடியாதுன்னு சொன்னான்!


நன்றி!

Wednesday, September 30, 2009

பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - காளை-கரடி மனநிலைகள்


ஒரு பங்கினை ஒருவர் வாங்க அல்லது விற்க விரும்புவதற்கான காரணங்களின் அடிப்படையிலேயே சந்தையின் போக்கினை அறிந்து கொள்ள முடியும். காளை ஓட்டத்திற்கு (Bull Run) ஐந்து நிலைகளும், கரடி ஓட்டத்திற்கு (Bear Run) மூன்று நிலைகளும் (Phases) உண்டு. இந்த ஓட்டங்களை துவக்கத்திலேயே சரியாக புரிந்து கொண்டால் சந்தையில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும். இந்த வெற்றி ரகசியத்தை பற்றி இங்கு விவாதிப்போம்.

முதல் மனநிலை

நிறுவனம் சிறந்த அடிப்படைகளை கொண்டுள்ளது. பங்கின் விலை அதன் உள்மதிப்பை விட மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் பங்கோ தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருக்கிறது அல்லது உயராமலேயே உள்ளது. இந்த பங்கினை நாம் வாங்கின பின்னரும் கூட தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்படலாம். இருந்தாலும் பரவாயில்லை, இது போன்ற ஒரு பங்கு நம்மிடம் இருக்க வேண்டும், என்றாவது ஒருநாள் இந்த பங்கு விலையேறும் என்று ஒருவர் பங்கினை வாங்க ஆசைப்பட்டால், அந்த பங்கின் அல்லது பங்கு சந்தையின் காளை ஓட்ட ஆரம்பத்திற்கு அதிக காலம் பிடிக்காது என்று அர்த்தம்.

இரண்டாவது மனநிலை

நிறுவனம் சிறந்த அடிப்படைகளை கொண்டுள்ளது. விலையும் உயர ஆரம்பித்து விட்டது. உள்மதிப்புக்கும் விலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இருந்தாலும் பரவாயில்லை. ஒரு நல்ல நிறுவனத்தின் பங்கு நம்மிடத்தில் இருக்க வேண்டும், விலை முன்னேற்றம் காலப் போக்கில் இன்னும் கூட அதிகமாகும் என்று விலை உயர்வின் ஊடே ஒருவர் வாங்க ஆசைப்பட்டால் காளை ஓட்டம் துவங்கி விட்டது என்று அர்த்தம்.

மூன்றாவது மனநிலை

நிறுவனம் சிறந்த அடிப்படைகளை கொண்டுள்ளது. விலையோ எக்கச்சக்கமாக ஏற்கனவே உயர்ந்து விட்டது. உள்மதிப்பை விட விலை இப்போது மிகவும் அதிகம். துவக்கத்திலேயே வாங்க விரும்பினோம். ஆனால் நடப்பு காளை ஓட்டத்தின் வேகத்திற்கு நம்மால் ஈடு கட்ட முடியவில்லை. ஆனால் இப்போதும் விட்டு விட்டால் விலை இன்னும் கூடமேலே போய் விடும் என்று குற்றமனப்பான்மையுடன் அல்லது பங்கினை வாங்கி உடனடியாக அதிக விலையில் விற்று விடலாம் என்ற பேராசையுடன் ஒருவர் பங்கினை வாங்கினால் காளை ஓட்டம் முழுவேகத்தில் இருக்கிறது, ஆனால் எச்சரிக்கை அவசியம் என்று அர்த்தம்.

நான்காவது மனநிலை

அடிப்படை சிறப்பாக உள்ள பங்குகள் எல்லாம் மேலேறி விட்டன. அதே சமயம் அடிப்படை சரியில்லாத, அதே சமயம் விலை குறைந்த பங்குகளின் மீது கவனம் திரும்பும் போது காளை ஓட்டம் உச்சகட்டத்தில் இருக்கிறது. ஆனால் முடிவு விரைவில் வரப் போகிறது என்று அர்த்தம்.

ஐந்தாவது மனநிலை

நிறுவனத்தின் அடிப்படைகளைப் பற்றி கவலையில்லை. உள்மதிப்பு பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால், விலை இன்னும் அதிகமாகி விடும். நிறுவனம் எப்படி பட்டதாக இருந்தாலும் உடனடியாக மேலே செல்லும் பங்கை வாங்க வேண்டும் என்று ஒருவர் ஆசைப் பட்டால் அல்லது நம்மை விட ஒரு பெரிய இளிச்சவாயனிடம் இந்த பங்கினை அதிக விலைக்கு தள்ளி விடலாம் ஒருவர் நம்பினால் காளை ஓட்டத்தின் இறுதி கட்டம் வெகு அருகே வந்து விட்டது என்று அர்த்தம்.

இது காளை ஓட்டத்தின் போக்கு என்றால், கரடி ஓட்டத்தின் போக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

முதல் மனநிலை

அடிப்படை சரியில்லாத நிறுவனங்கள் உள்மதிப்பு மிக குறைவாக இருந்த போதும் கூட மிக அதிக விலையில் விற்பனையாகின்றன என்று எண்ணம் தோன்றும் போது, கரடி ஓட்டத்தின் வித்து ஊன்றப் படுகின்றது. இந்த நிலையில் அடிப்படை சரியில்லாத நிறுவனங்கள் அதிக வீழ்ச்சி அடைகின்றன.

இரண்டாம் மனநிலை

அடிப்படை சரியாக இருந்தாலும், விலை அளவு உள்மதிப்பை விட அதிகமாக இருக்கிறது. எனவே பங்கினை விற்க வேண்டும் என்று விருப்பம் வந்தால் கரடி ஓட்டம் துவங்கி விட்டது என்று அர்த்தம். இந்த நிலையில் அடிப்படை சிறப்பாக உள்ள நிறுவனங்களும் கூட விலை வீழ்ச்சி அடைகின்றன.

மூன்றாம் மனநிலை

அடிப்படைகளைப் பற்றியெல்லாம் யாருக்கு தெரியும்? எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ தெரியாது, விட்டால் போட்ட காசு எல்லாம் போய் விடும், வந்த வரை லாபம் என்று ஒருவர் விலை வீழ்ச்சியைப் பற்றி மட்டுமே கவலைப் பட்டுக் கொண்டு விற்க முடிவு செய்தால் கரடி ஓட்டம் முடியப் போகிறது என்று அர்த்தம். இந்த நிலையில் எல்லா பங்குகளும் எல்லா விலையிலும் விற்பனை ஆகின்றன.

சந்தையில் வெற்றி பெற்ற ஜாம்பவான்கள் இந்த நிலைகளை ஓரளவுக்கு சரியாக புரிந்து வைத்துக் கொள்கிறார்கள். விலை மாற்றத்தைப் பற்றி அவ்வளவு கவலைப் படாமல், சந்தையின் மனநிலை மாற்றத்தின் அடிப்படையில் தமது திட்டங்களை மாற்றி கொள்கிறார்கள்.

தனது தாயார் ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து ஒரு குறிப்பிட்ட பங்கினை வாங்க சொன்னதாகவும், காரணத்தை கேட்ட போது அந்த பங்கு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்று மட்டுமே சொல்ல தெரிந்திருந்தாகவும், அந்த கணத்திலேயே சந்தை விரைவில் வீழப் போகிறது என்று தான் புரிந்து கொண்டதாகவும் ஜிம் ரோஜர்ஸ் அவரது சொந்த அனுபவத்தை விளக்கும் போது கூறுகிறார்.

வெற்றிகரமான பரஸ்பர நிதி மேலாளரான பீட்டர் லின்ச் தனது சொந்த அனுபவத்தை விளக்கும் போது, விருந்துகளில் தான் கலந்து கொண்ட போது யாரும் தன்னிடம் வந்து பங்குசந்தையைப் பற்றி பேச ஆர்வம் காட்ட வில்லை என்பது முதல் நிலை என்கிறார். எந்த பங்கு மேலே போகும், எதை வாங்கலாம் என்று மற்றவர்கள் விசாரிக்க ஆரம்பித்தால் காளை ஓட்டம் ஜோராக உள்ளது என்று அர்த்தம். அதே சமயம், அவரிடத்தில் வந்து தான் இந்த பங்கை வாங்கி இவ்வளவு சம்பாதித்தோம், நீங்களும் கூட இந்த பங்கினை வாங்கலாம் என்று (பங்கு சந்தையில் முன் அனுபவம் அதிகம் இல்லாதவர்கள்) மற்றவர்கள் ஆலோசனை சொன்னால் காளை ஓட்டம் முடிவாக போகிறது என்று அர்த்தம் என்று கூறுகிறார்.

இந்திய பாணியில் ஒரு விளக்கம்.

உலக சந்தைகள் முன்னேறுகின்றன. இந்திய பங்கு சந்தைகள் தடுமாறுகின்றன. வணிக தொலைக்காட்சிகளில், இந்தியாவின் பொருளாதாரம் எவ்வளவு தடுமாறிக் கொண்டிருக்கிறது, நிறுவனங்கள் எத்தனை பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன, சென்செக்ஸ் இன்னும் எவ்வளவு விழப் போகிறது என்பதை பற்றி எல்லாம் அதிக விவாதம் நடந்தால் காளை ஓட்டம் துவங்கப் போகின்றது என்று அர்த்தம்.

உலக சந்தைகள் முன்னேறுகின்றன. இந்திய பங்கு சந்தை வேகமாக முன்னேறுகின்றது. இந்த ஓட்டம் ஆபத்தானது, ஏன் இவ்வளவு வேகம் என்று புரியவில்லை, இங்கெல்லாம் ஏராளமான எதிர்ப்பு நிலைகள் உள்ளன, அடிப்படைகள் அவ்வளவு சரியாக இல்லை, அமெரிக்காவில் பிரச்சினை வரப் போகிறது என்றெல்லாம் அதிக விவாதம் நடந்தால் காளை ஓட்டம் ஜோராக உள்ளது என்று அர்த்தம்.

உலக சந்தைகள் தடுமாறுகின்றன. பொருளாதார விபரங்கள் நன்றாக இல்லை. அதே சமயம், உலக சந்தைகளுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை, இந்தியா வலுவானது, தனித்துவமானது, சந்தை இப்போதைக்கு சரிந்தாலும் நீண்ட கால நோக்கில் வலுவாகவே இருக்கும் என்றெல்லாம் கோஷங்கள் வர ஆரம்பித்தால் காளை ஓட்டம் நிறைவு பெறப் போகிறது என்று அர்த்தம்.

"பயத்தின் உச்சியில்தான் காளை ஓட்டம் துவங்குகிறது. நம்பிக்கையின் உச்சக் கட்டத்தில்தான் கரடி ஓட்டம் ஆரம்பமாகுகிறது என்பது பங்குசந்தையின் முக்கிய தங்க விதிகளில் ஒன்று."

மொத்தத்தில் பங்கினையும் நிறுவனத்தின் போக்கினையும் கவனிப்பதோடு உங்களை சுற்றி இருப்பவர்களையும் கவனித்து வாருங்கள். எந்த பங்கினை எந்த விலையில் வாங்கினாலும் லாபம் சம்பாதிக்க முடியும் என்ற மாயை உருவானாலோ, பொதுமக்களிடம் பங்கு சந்தையை பற்றிய ஆர்வம் மிக அதிகமானாலோ, போகிறவர் வருபவர் எல்லாரும் பங்கு சந்தை வெற்றிக் கதைகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டாலோ, நாம் சற்று பதுங்க வேண்டிய காலம் வந்து விட்டது என்று அர்த்தம்.

நன்றி!

பின்குறிப்பு

இதெல்லாம் சரி. பங்குசந்தையின் இப்போதைய நிலை என்ன என்று கேட்க ஆசைப் படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் சந்தை தனது முதலாவது மற்றும் இரண்டாவது (காளை ஓட்ட) நிலைகளை தாண்டி விட்டது என்று நினைக்கிறேன். முடிவு எவ்வளவு சீக்கிரம் என்று சொல்ல முடியா விட்டாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது என்றும் நினைக்கிறேன்.

பயணம் தொடரும்.

Wednesday, September 23, 2009

தலைவர்கள் ஜாக்கிரதை!


இன்போசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் நிலகேனி அவர்கள் எழுதிய இமேஜினிங் இந்தியா என்ற புத்தகத்தில் விவரிக்கப் பட்டிருந்த ஒரு உண்மை சம்பவம், தலைவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

அந்த சம்பவம் இங்கே.

சென்ற நூற்றாண்டின் தொண்ணுறுகளில் பொதுத் துறை வங்கி ஊழியர்கள், கணினி மயமாக்குதலை கடுமையாக எதிர்த்து வந்தது அனைவரும் அறிந்ததே. அந்த காலகட்டத்தில், கணினி மயமாக்குதல் வங்கித் துறைக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை விளக்கும் பணி நந்தன் அவர்களிடம் ஒருமுறை கொடுக்கப் பட்டிருந்தது.

ஏ.டி.எம் சேவை, இணைய தள சேவை மற்றும் கிரெடிட் கார்டு சேவை போன்றவை வங்கித் துறையை இன்னும் மேலே எடுத்துச் செல்லும் என்று விளக்குவதற்காக, தன்னுடைய திறமை அனைத்தையும் செலவழித்து முன்கூட்டியே தயார் படுத்திக் கொண்ட நந்தன் அவர்களுக்கு ஆச்சரியமே காத்திருந்தது.

வங்கி ஊழியர்கள் முன்னே அவரளித்த விளக்க உரைக்கு, ஊழியர்களின் தலைவர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது. கணினிமயமாக்கம், வங்கித் துறைக்கு எவ்வளவு அவசியம் அல்லது லாபகரமானது என்பதை வலியுறுத்த முயன்ற அவரது ஒவ்வொரு கருத்துக்கும், வலுவான மாற்றுக் கருத்துக்களை ஊழியர் தலைவர்கள் முன்வைத்தனர். சொல்லப் போனால், நந்தனின் கருத்துக்கள் தவறு என்று பலரையும் நம்ப வைக்கும் அளவுக்கு தலைவர்களின் வாதங்கள் மிக வலுவாகவே இருந்தன. எத்தனையோ நாடுகளுக்கு சென்று எவ்வளவோ நிறுவனங்களை கணினிமயமாக்க ஒப்புக் கொள்ள செய்த, நந்தனின் தொழிற் திறமை இங்கு பலிக்க வில்லை.

முற்றுப் பெறாமலேயே முடிவடைந்த அந்த விவாதங்களுக்குப் பிறகு அனைவரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது நந்தன் அருகே வந்த ஒரு யூனியன் தலைவர் கூறினாராம். "எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.ஒரு பிள்ளை பாஸ்டனிலும் இன்னொரு பிள்ளை சியாட்டிலிலும் மென்பொருட் துறையில் பணி புரிகின்றனர். (கணினிமயமாக்கம் பற்றி) நீங்கள் சொல்லும் அனைத்துக் கருத்துக்களையும் நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அவற்றை நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. காரணம் நான் ஒரு தலைவன் என்ற முறையில் என்னுடைய தொகுதியை (ஊழியர் சங்கம்) காப்பாற்றிக் கொள்ள வேண்டும்."

இந்த சம்பவம் நடந்த பல வருடங்களுக்குப் பின்னரே பொதுத் துறை வங்கிகளில் கணினிமயமாக்கம் நடைபெற்றது. இடையில் நுழைந்த தனியார் வங்கிகள் எவ்வளவோ முன்னேறி விட, பொது துறை வங்கிகள் (தொழிற் நுட்பத் துறையில்) வெகுகாலம் வரை பின் தங்கியே காணப் பட்டன. இது மட்டுமல்ல. ஒரு காலத்தில் அரசு சார்பு நிறுவனங்களில் மிக அதிக ஊதியம் பெற்று வந்தவர்களான அரசு வங்கி ஊழியர்கள், (தங்களது தலைவர்களை கண்மூடித் தனமாக பின்பற்றியதால்) இன்றைக்கு பொதுத் துறை நிறுவனங்களிலேயே மிகக் குறைந்த சம்பளம் வாங்குபவர்களாக இருக்கின்றனர்.

தன பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களை கணினிப் படிப்பு படிக்க வைத்த அந்த வங்கி ஊழியர் சங்கத் தலைவர், தன்னையே நம்பி இருந்த லட்சக்கணக்கான ஊழியர்களின் நலன் பற்றி அக்கறை கொள்ள வில்லை. ஒருவேளை அப்படி அக்கறை இருந்திருந்தாலும், தன்னுடைய பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் அறிவை வளர்ப்பதை விட உணர்வுகளை கொழுந்து விட்டெரிய செய்யவே விரும்பியிருக்கிறார்.

இது போன்ற நிகழ்வு வங்கித் துறையில் மட்டுமல்ல. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், துறையிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இது போன்று மோசடி செய்பவர்கள், பெரிய அரசியல் தலைவர்களாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் அன்றாடம் பழகும், மூத்தவர்கள் என்று நம்பும் பல குட்டித் தலைவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். எனக்கும் கூட தனிப்பட்ட முறையில் இது போன்ற பல தலைவர்களிடமிருந்து ஏராளமான அனுபவ பாடங்கள் கிடைத்துள்ளன.

இதற்கு என்னதான் முடிவு?

ரொம்ப சிம்பிள்.

வாய் சவடால்களை நம்புவதை விட முகமூடியற்ற முகங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஊருக்கு மட்டுமென வரும் உபதேசங்களை ஒதுக்கித் தள்ளுவோம். தலைவர்களை நம்புவதை விட தன்னையே அதிகம் நம்புவோம்.

நன்றி!

Thursday, September 17, 2009

பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - என்னுடைய வழி எளிய வழி


இப்போது உச்ச வேகத்தில் பயணம் செய்யும் பங்குச்சந்தையில் எப்படி முதலீடு செய்வது, முதலீடு செய்த பிறகு, முன்போல அதல பாதாளத்தில் விழுந்து விட்டால் என்ன செய்வது, அதே சமயம் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் சந்தை புதிய உயரத்திற்கு சென்று விடுகிறதே என்றெல்லாம் பலருக்கும் குழப்பங்கள் இருக்கும். இது போன்ற ஒரு சிக்கலான நிலையில் என்னுடய பாணி என்னவென்று இங்கு உரைப்பது சிலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சென்ற பதிவில் அருமை நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதிலையே இந்த பதிவாக வழங்குகிறேன். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.

நன்றி.

//எனவே பங்குகள் வாங்குபவர்கள் இன்னும் சிறிது காலம் தாழ்த்தலாம் என் நினைக்கின்றேன்,

தங்கள் பதில் என்ன குரு?// ( கேட்டவர் திரு.ரஹ்மான்)

இது போன்று, தவறினால் பறந்து விடும். ஆனால் மாட்டிக் கொண்டால் அதல பாதாளத்திற்கு வீழ்ந்து விடும் என்ற நிலையில் வர்த்தகம் செய்வது மிகவும் கடினமான காரியமே.

எனக்கு தெரிந்த வரை இப்போதைய காளை ஓட்டம் நிற்க வேண்டுமென்றால் ஒரு மிகப் பெரிய கெட்ட செய்தி வர வேண்டும். ஒருவேளை அப்படி ஒரு செய்தி வந்து விட்டால் எந்த ஒரு ஸ்டாப் லாஸும் நம்மைக் காப்பாற்றாது.

என்னுடய பாணியையும் இங்கே சொல்லி விடுகிறேன்.

ஒவ்வொரு நாளும் என்னிடம் உள்ள சிறப்பாக செயல் படும் பங்குகளை (மிக) கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக் கொண்டே போகிறேன். செயல்படாத பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே போகிறேன். பங்குகள் விற்ற லாபத்தில் அவ்வப்போது தங்க நிதிகளையும் வாங்குகிறேன். மொத்த முதலீட்டு அளவு அதிகம் மாறாமல் பார்த்துக் கொள்கிறேன்.

சந்தையில் தொடர்ந்து மேலேறும், அடிப்படையில் சிறந்த பங்குகளை மட்டுமே கைவசம் வைத்திருக்க வேண்டும். அதாவது, எவ்வளவு வீழ்ந்தாலும், இன்னும் வாங்கவே விரும்புகிற பங்குகளை அடிப்படையில் சிறந்த பங்குகளை மட்டுமே கைவசம் வைத்திருக்க வேண்டும்.

காற்றில் கிடைக்கும் செய்திகளை நம்பி வாங்குவதை தவிர்க்கவும். சொந்த ஆராய்ச்சியை அதிகம் நம்பவும்.

தோல்வி பற்றிய பயமில்லாமல், அதே சமயம் தோல்வியை பற்றிய விழிப்புணர்வுடன் வர்த்தகம் செய்யவும்.

Be aware of the maximum possible losses. Trade within maximum risk limits. But trade without any fear.

//இது (Yes Bank Ltd) நல்ல சிறந்த நிறுவனம் தான் சார்.உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி சார் இதில் எந்த விலையில் உள்ளே போகலாம்.ஏன் என்றால்,
52 week low=41/-(9-3-09)
52 week high=202/-(17-9-09)
All time high=277/-(10-1-09)
இப்போது விலையில் 192/-உள்ளதே. // (கேட்டவர் திரு.தாமஸ் ரூபன்)

இங்கேயும் என்னுடைய பாணியை சொல்லி விடுகிறேன்.

ஒரு நிறுவனம் எனக்குப் பிடித்திருந்தால், நான் விலைகளை பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை. கவனம். எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே பங்குகளை வாங்குவேன். மற்றவர்களின் பரிந்துரையால் அல்ல.

சிறப்பாக செயல்படும் சில நிறுவனங்களை own செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவேன். அது போன்ற ஒரு நிறுவனம் இது (யெஸ் பேங்க்.

அதே சமயம், மிக அதிக விலையில் ஒரு நிறுவனத்தை வாங்கி விட்டு பின்னர் விலை வீழ்ச்சி ஏற்பட்டால், அது எவ்வளவு நல்ல நிறுவனமாக இருந்தாலும் சரி, மனதில் சில சஞ்சலங்கள் ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக நான் துவக்கத்தில் மிக குறைந்த அளவு பங்குகளை மட்டுமே வாங்குவேன். சில சமயங்களில் அது ஒன்றிரண்டாக கூட இருக்கும்.

ஒரு பங்கை நாம் வாங்கிய பிறகு அந்த நிறுவனத்தை மனதளவில் தொடர ஆரம்பிக்கிறோம். அதற்கு பின்னர் வரும் செய்திகள், சந்தையின் ஓட்டம் ஆகியவை சாதகமாக இருந்தால் பத்து பத்து சதவீதமாக வாங்குவேன். சந்தையின் மேலோட்டம் வேகமாக இருக்கும் போது, இந்த முறை குறைந்த லாபத்தையே கொடுக்கும் என்றாலும், சிக்கி கொள்வதில் இருந்து தப்பிக்க முடியும்.

ஒரு பெரிய பங்குச்சந்தை வித்தகர் கூறி இருக்கிறார்.

"It is very important to remain solvent in a market"

அதாவது, பங்குச்சந்தையில் லாபம் சம்பாதிக்கலாம் அல்லது நஷ்டமாகலாம். ஆனால் ஒருபோதும் ஓட்டாண்டியாகக் கூடாது. ஏனென்றால், அப்புறம் திரும்பி வர முடியாது.

//அரசாங்கம் வங்கியில் உள்ள விவசாயிகளின் கடனை சுமார் 65,oooகோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்தார்களே அதை அரசாங்கம் வங்கிகளுக்கு திரும்ப கொடுத்தா?

வங்கிகள் கூறும் வாராக்கடன்களின் புள்ளிவிவரங்கள் சரியானதா?

வங்கி பங்குகள் எல்லாம் அதிகம் உயர்ந்து உள்ளதால், அதிகம் உயராத,ஹோட்டல்(HOTELLEELA,INDHOTEL), டெக்ஸ்டைல்ஸ்(BOMDYEING,SKUMARSYNF), ஏர்வேஸ்(KFA ,JETAIRWAYS ) பங்குகள் வாங்கலாமா?(2010 ல் காமன்வெல்த் போட்டிகள் நடப்பதால் உயருமா?)//

இந்திய வங்கிகளின் அடிப்படை அம்சங்கள் ஓரளவுக்கு சிறப்பாகவே உள்ளன. அதே சமயம், பொருளாதாரம் வேகமான வளர்ச்சி காணாவிடில் பெரிய அளவு எதிர்பார்க்க முடியாது.

சந்தைகள் இப்போது ஒரு சுழற்சி முறையில் செல்வதைப் போல தோன்றினாலும், அடிப்படை சரியில்லாத நிறுவனங்களை அல்லது துறைகளை முதலீட்டாளர்கள் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. அதாவது பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மென்ட் வீக் போன்ற நிறுவனங்கள் வேண்டவே வேண்டாம்.

அதே சமயத்தில் குறுகிய கால வர்த்தகம் செய்பவர்கள், சந்தையின் மனநிலையை சரியாக கணிக்க முடிந்தால் மட்டுமே இது போன்ற அடிப்படை வலுவில்லாத நிறுவனங்களை தொட விரும்பலாம் .

பங்குச்சந்தையில் வெற்றி பெற்றவர்களில் பலர் உயரும் பங்குகளையே வாங்குகிறார்கள். கீழே வரும் பங்குகளை வாங்குவது, விழுகின்ற கத்தியை கரம் நீட்டி வெறுங்கையில் பிடிப்பது போல என்று கூட சொல்லலாம்.

பங்குச்சந்தையில் வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி.

Wednesday, September 16, 2009

பங்குச்சந்தை வெற்றிபயணம் - ஒரு விளையும் பயிர்!


சென்ற வருடம் வங்கிகளுக்கெல்லாம் குறிப்பாக தனியார் வங்கிகளுக்கெல்லாம் போதாத காலமாக இருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். கடினமான சூழ்நிலையிலும் தனது சிறப்பான செயல்பாட்டை தக்க வைத்துக் கொண்ட ஒரு வங்கியைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ஏற்கனவே சொன்னபடி ஒரு பங்கினை ஆராய்வது எப்படி என்பதை ஒரு நடைமுறை பயிற்சி மூலம் நேரடியாக புரிந்து கொள்வது, எளிமையாகவும் அதே சமயத்தில் மனதில் ஆழமாக பதியும் படி இருக்கவும் வாய்ப்புண்டு. அந்த வகையில் இந்த தொடர்பதிவில் இரண்டாவது முறையாக (முதல் பதிவு இங்கே) ஒரு நிறுவனத்தைப் பற்றி இங்கு ஆராய்வோம். நாம் பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளவிருக்கும் இந்த நிறுவனம் ஒரு வங்கி. பெயர் யெஸ் பேங்க் (Yes Bank Ltd)

ஒரு நிறுவனத்தைப் பற்றி ஆராய்வதற்கு முன்னர், அந்த நிறுவனம் புவியியல் ரீதியாக அமைந்துள்ள நாட்டை (இங்கே இந்தியா) பற்றியும், சார்ந்துள்ள துறையைப் (இங்கே வங்கித்துறை) பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். வாய்ப்புக்களையும் அபாயங்களையும் (opportunities and threats), ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றாலும் நேரமின்மை காரணமாக இங்கு சில மேலோட்டமான தகவல்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

இந்தியா ஒரு வளரும் நாடு. இன்னமும் கூட பல ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை காண முடியும். அதே சமயம், உயரும் பணவீக்கம், குறையான கட்டுமான வளர்ச்சி போன்றவை பலவீனங்கள் ஆகும்.

இந்தியாவில் பல வங்கிகள் இருந்தாலும், இந்திய வங்கித்துறை இன்னமும் அடைய வேண்டிய தூரம் ஏராளமாக உள்ளது. வேகமாக வளரும் தொழிற்துறை மற்றும் மாறி வரும் மக்களின் மனப்பாங்கு (Demographic Change), உயரும் பொருளாதார நிலை ஆகியவை வங்கித் துறைக்கு சாதக அம்சங்கள். அதே சமயம், வாராக் கடன், வலுவற்ற, நிலையற்ற அரசுக் கொள்கைகள் பாதக அம்சங்கள் ஆகும்.

இப்போது யெஸ் பேங்க் பற்றி பார்ப்போம்.

அறிவை நம்பிய (Knowledge Banking) ஒரு தனியார் வங்கியாக வங்கித்துறையில் சிறந்த அனுபவம் கொண்ட ரானா கபூர் அவர்களால் துவங்கப் பட்டது இந்த வங்கி.

இந்த வங்கியில் என்னை கவர்ந்த சில அம்சங்கள் கீழே.

அனுபவம் வாய்ந்த அதே சமயம் குறிப்பிடத்தக்க அளவு துடிப்பாக உள்ள நிர்வாகத் தலைமை.

தொழிற் நுட்பத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் வங்கி இது.

ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள்ளேயே, லாப அளவு பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்ற தனியார் துறை வங்கிகளுக்கெல்லாம் மிகச் சிரமமான வருடமாக இருந்தாலும் கூட, சென்ற வருடமும் கூட இந்த வங்கி சிறப்பான முறையில் லாபம் ஈட்டியது கவனிக்கத் தக்கது.

உயரிய அளவில் உள்ளவர்களுக்காக மட்டுமே (Wholesale Banking) அதிகமாக வங்கி சேவையை வழங்கி வந்த இந்த வங்கி இப்போது சிறு நுகர்வோர்களுக்காகவும் (Retail Banking) அதிக அளவில் வங்கி சேவையை வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத் தக்க அம்சம். இதற்காக இந்தியாவின் பல இடங்களிலும் புதிய கிளைகளை துவக்கவுள்ளது.

(மேலும் விபரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும்)

இது போல இளமையான, துடிப்பான, பெரிய அளவில் வளரும் ஆர்வமுள்ள, தொழிற் நுட்பத்தை அதிகம் நம்பும் ஒரு நிறுவனம் பங்கு முதலீட்டுக்கு மிகவும் ஏற்றது என்று நம்புகிறேன்.

அதே சமயத்தில் எவ்வளவுதான் நல்ல நிறுவனம் என்றாலும், அந்த நிறுவனத்தின் பங்குகளை எந்த விலை கொடுத்து வாங்குகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றி அமையும்.

இந்த வங்கியைப் பொறுத்த வரை ஒரு பங்கு ருபாய் நூற்று தொண்ணூறு அளவில் விற்பனையாகிறது. இதன் மொத்த சந்தை மதிப்பு (Total Market Capitalization) சுமார் 5700 கோடி ரூபாய் ஆகும். அதாவது 5700 கோடி ருபாய் முதலீடு கடந்த வருடம் சுமார் முன்னூறு கோடி சம்பாதித்துள்ளது. விலை - வருமான விகிதம் (P/E Ratio) பதினேழாக உள்ளது.

ஒரு நிறுவனம் தனது வாழ்க்கை சுழற்சியில் (life cycle), வயது அதிகமாக அதிகமாக இந்த விலை-வருமான விகிதம் குறைவாகிக் கொண்டே போகும். (ஒரு மனிதனின் உயர வளர்ச்சி (Growth rate) விகிதத்தைப் போல)

அந்த வகையில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விகிதம் பதினைந்தாக இருக்கும் என்று அனுமானித்துக் கொள்வோம். (இந்த விகிதம் சந்தையின் அப்போதைய மனப்போக்கிற்கு தகுந்தாற் போல மாறக் கூடியது) மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 9000 கோடி ரூபாயாக இருக்க வேண்டுமென்றால், இந்த நிறுவனம் அந்த ஆண்டு குறைந்த பட்சம் அறுநூறு கோடி ருபாய் லாபம் ஈட்ட வேண்டும். சந்தை மதிப்பு உயரும் போது, நமது பங்கின் மதிப்பு கூடவே உயரும். புதிதாக பங்குகள் ஏதும் வெளியிடப் படவில்லையென்றால், ஒரு பங்கின் விலை அப்போது சுமார் 300 ரூபாயாக இருக்க வாய்ப்புண்டு.

மேலே சொன்னவையெல்லாம் ஒரு கணிப்பு மட்டுமே. எல்லாமே தலைகீழாக போகவும் வாய்ப்புக்கள் உண்டு. உதாரணமாக நாட்டின் வளர்ச்சி அல்லது வங்கித் துறையின் வளர்ச்சி தடைபடலாம். நிறுவனத்தின் தலைமையில் மாற்றம் அல்லது நிறுவன செயல்பாடுகளில் குறைபாடு, எதிர்பார்த்த அளவு லாபம் ஈட்ட முடியாமல் போதல் போன்ற அபாயங்களும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக பங்குசந்தையில் ஒரு பெரிய வீழ்ச்சி கூட ஏற்படலாம்.அதனால்தான் பங்கு சந்தை முதலீடுகள் அபாயம் மிக்கவை என்று சொல்கிறார்கள்.

எல்லாமே நல்ல படியாக நடந்தால் மட்டுமே பங்குகள் மேலே செல்ல வாய்ப்புக்களுண்டு.

கடந்த சில நாட்களில் இந்த பங்கு ஏராளமாக உயர்ந்தது இந்த பங்கினை பற்றி எழுத ஒரு தயக்கத்தை கொடுத்தது. இருந்தாலும், பங்கு முதலீட்டுக்கு ஏற்ற ஒரு வளரும் நிறுவனத்தைப் பற்றி எழுதுவது இந்த தொடர்பதிவுக்கு உதவும் என்பதால் இங்கு பதிந்துள்ளேன்.

இந்த பங்கினை வாங்க விரும்புபவர்கள், இந்த நிறுவனத்தின் இணையதளத்தை பார்த்து அதிகப் படியான விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த வங்கியின் கிளைகளுக்கு நேரில் சென்று கூட (வாடிக்கையாளர்களிடம் விசாரித்தும் கூட), வங்கியின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

சந்தையின் வேகம் (பங்கின் வேகமும் கூட) இப்போது அதிகமாக இருப்பதால், நீண்ட கால முதலீடு செய்ய விரும்புவர்கள், ஒரே சமயத்தில் வாங்காமல் இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வேறு வேறு விலைகளில் (Accumulation at periodic intervals at various levels) வாங்கலாம்.

ஒரு முதலீடு என்பது நீண்ட கால தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது ஆகும். எனவே, முதலீட்டுக்கு பிறகு நிறுவனம், துறை மற்றும் நாட்டின் பொருளாதாரம் (உலகமயமாக்கலுக்கு பின்னர் மற்ற நாடுகளைப் பற்றியும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியிருக்கிறது) ஆகியவற்றை பற்றிய செய்திகளை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நமது கணிப்புக்கள் தவறானவை அல்லது தவறுகின்றன என்று தெரிய வந்தால், இந்த நிறுவனத்தை பற்றி மீண்டும் ஒரு முறை (உடனடியாக, காலந்தாழ்த்தாமல்) பரிசீலித்து (Review the performance and the environment) தகுந்தாற்போல முடிவெடுக்கலாம்.

ஒரு பங்கினை எப்படி ஆராய வேண்டும், அதன் விலை எவ்வளவு உயரும் என்பதை எப்படி கணிக்க வேண்டும், கணிப்புகள் தலைகீழாக போக வாய்ப்புக்கள் யாவை, அப்படியானால் என்ன செய்வது என்றெல்லாம் மேலோட்டமாக இங்கே பார்த்தோம். இன்னும் கூட விரிவாக பின்வரும் பதிவுகளில் விவாதிப்போம்.

பயணம் தொடரும்.

டிஸ்கி: இங்கு வெளியிடப் படும், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.
Blog Widget by LinkWithin