Skip to main content

தடை ஓட்டம்

கடந்த காலாண்டிற்கான இந்தியாவின் மொத்த பொருளாதார வளர்ச்சி, பல பொருளாதார நிபுணர்களின் கணிப்பையும் வெகுவாக விஞ்சி 7.9% அளவாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் முக்கிய காரணம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப் பட்ட ஊதிய உயர்வு நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு செலவினத் தொகைகள்தான் என்றாலும் கூட, சென்ற காலாண்டில் குறிப்பிடத் தக்க அளவு இந்திய தொழிற்துறை வளாச்சி பெற்றதும் குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் ஏற்றுமதி வீழ்ச்சியின் அளவும் சென்ற மாதம் வெகுவாக குறைந்திருப்பது, கூடிய சீக்கிரமே இந்தியா ஒரு "வேகமான வளர்ச்சிப் பாதைக்கு" திரும்பும் (Return to High Growth Trajectory) என்ற நம்பிக்கையை உருவாக்கி உள்ளது.

இந்த வளாச்சி பாதைக்கு பெரிய வில்லனாக அமைந்திருப்பது, கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் "உணவுப் பொருட்களின் விலைவாசிகள்" ஆகும். அமெரிக்காவின் "எளிமையான வட்டியில் கடன் " (Easy Monetary Policy) எனும் பொருளாதார கொள்கை மற்றும் இந்தியாவின் "அதிகரிக்கும் வருவாய் இடைவெளி" சமூக அமைப்பு, தெளிவில்லாத "உணவு கொள்கை" மற்றும் உணவு பதுக்கல்கள் ஆகியவை எல்லாம் ஒருங்கே சேர்ந்து இன்றைய தேதியில் விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர வழிவகுத்துள்ளன. பங்குசந்தையின் ஏற்ற இறக்கங்களை பற்றி அளவுக்கதிகமாகவே கவலைப் படும் நமது அரசாங்கம் உணவுப் பொருட்களின் விண்ணை முட்டும் விலைவாசிகளைப் பற்றி அதிகம் கவலைப் பட்டதாக தெரிய வில்லை.

மும்பை தாக்குதலின் நினைவு தினத்தை விட அமெரிக்க அதிபர் விருந்திற்க்கே அதிக முக்கியத்துவம் கொடுத்த இந்த அரசிடம் இருந்து சாமான்ய மக்கள் தரப்பில் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் உணவு பொருட்களின் விலை உயர்வின் தாக்கம் தொழிற் துறையையும் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால், அரசு ஏதேனும் "பணக்கட்டுப்பாடு" (Reversal of Fiscal/Monetary Relief Measures) முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னபடி பங்குசந்தைகள் இப்போதைக்கு இரண்டு முக்கிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஒன்று இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி. சென்ற காலாண்டின் வேகம் அடுத்த இரு காலாண்டுகளிலும் தொடர வாய்ப்புக்கள் சற்று குறைவுதான் என்றாலும், இந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த வளாச்சி ஏழு சதவீதமாக இருக்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன என்று பல பொருளாதார நிபுணர்களும் கருதுகின்றனர். எனவே பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த பொருளாதார வளர்ச்சி தகவலினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இரண்டாவது முக்கிய காரணி, தடையில்லாத அமெரிக்க டாலர் உள்வரத்து (FII Inflows). சென்ற வெள்ளிக்கிழமை வெளிவந்த அமெரிக்க "வேலைவாய்ப்பு இழப்பு விகிதம்" (Unemployment Rate) முந்தைய மாதத்தை விட குறைந்திருப்பது, அமெரிக்க மத்திய வங்கி தனது "எளிய வட்டிக் கொள்கையை" மறுபரிசீலனை செய்யுமோ என்ற பயத்தை சந்தைகளில் உருவாக்கியுள்ளது. இந்த பயத்தின் விளைவாக, தங்கம் ஒரே நாளில் பெரிய விலை வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டுள்ளது. "டாலர் மாற்று வர்த்தக திருப்பம்" (Unwinding of Dollar Carry Trade) நேரிட்டால் உலக அளவில், பங்குசந்தைகளில் பெரிய இழப்பு நேர வாய்ப்புக்கள் உள்ளன. அதே சமயம், "எளிய வட்டிக் கொள்கை", வெறுமனே அமெரிக்க பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே சார்ந்தது இல்லை என்பதையும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கையின் இன்னொரு வெளிப்பாடே இந்த கடன் கொள்கை என்பதையும் மனதில் வைத்து பார்க்கும் பார்க்கும் போது, உடனடியாக வட்டிகள் கடுமையாக்கப் படும் என்ற பயம் தேவையில்லை என்றே இப்போதைக்கு தோன்றுகிறது.

ஏற்கனவே சில பதிவுகளில் சொன்னபடி நிபிட்டி 5100 -5200 அளவுகளில் பெருத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது. 5200 என்ற அளவு ஒருவேளை "அதிக வர்த்தகத்துடன் முழுமையாக" (Break Out with High Volume) முறியடிக்கப் பட்டால், சந்தைகள் இன்னும் கூட வெகுவாக உயர வாய்ப்புள்ளது. முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பெரிய சரிவின் போதும், அடிப்படைகள் சிறப்பாக உள்ள நிறுவனங்களின் பங்குகளை நீண்ட கால நோக்கில் சேகரிக்கலாம். ஏற்கனவே பல பதிவுகளில் சொல்லியுள்ளபடி இந்தியா மற்றும் (அடிப்படை சிறப்பாக உள்ள) இந்திய நிறுவனங்களின் வளாச்சி நீண்டகால நோக்கில் சிறப்பானதாகவே இருக்கும். ஆனால், அந்த வளர்ச்சியின் பலனை இந்தியர்கள் முழுமையாக அனுபவிக்க, அந்நிய முதலீட்டாளர்களும் இந்திய அரசின் குறுகிய கால முதலீட்டுக் கொள்கைகளும், அதிக இடம் தருவதில்லை என்பது வருந்துதற்குரிய விஷயம். வர்த்தகர்கள் 5200 என்ற நிபிட்டி அளவை "மையப் புள்ளியாக" (Pivot Point) வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி.

Comments

Thomas Ruban said…
//முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பெரிய சரிவின் போதும், அடிப்படைகள் சிறப்பாக உள்ள நிறுவனங்களின் பங்குகளை நீண்ட கால நோக்கில் சேகரிக்கலாம். //

உங்களுடைய அறிவுரைக்கு நன்றி சார்....
Btc Guider said…
//மும்பை தாக்குதலின் நினைவு தினத்தை விட அமெரிக்க அதிபர் விருந்திற்க்கே அதிக முக்கியத்துவம் கொடுத்த இந்த அரசிடம் இருந்து சாமான்ய மக்கள் தரப்பில் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது//

சரியாக சொன்னீர்கள்.

பகிர்வுக்கு நன்றி சார்.
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!
Maximum India said…
நன்றி ரஹ்மான்!
Naresh Kumar said…
சமயங்களில் அரசின் இந்த கையாலாகாத் தனமான, விலை வாசியைப் பற்றி சிறிதும் கவலைப்படாத போக்கைக் கண்டு கண்மூடித்தனமான கோபம் வருகின்றது....

ரெண்டு அரசுக்குமே குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வர்றதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது!!!
என்னங்க. பணி பளு அதிகமா.... பதிவுகள் கம்மியாகிவிட்டதே...
Maximum India said…
நன்றி நரேஷ் குமார்!

(தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்)
Maximum India said…
நன்றி நரேஷ் குமார்!

(தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்)
Maximum India said…
//என்னங்க. பணி பளு அதிகமா.... பதிவுகள் கம்மியாகிவிட்டதே//

உண்மைதான் அகில்! அதிக அலுவல்கள் மற்றும் தனிப்பட்ட பொறுப்புக்கள் காரணமாக அதிகம் பதிய முடிய வில்லை.

மீண்டும் சந்திப்போம்.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...