Skip to main content

பங்குசந்தையை பாதிக்கும் இரண்டு முக்கிய காரணிகள்!

இந்திய பங்குசந்தையை பொருத்த வரை, இப்போதைக்கு இரண்டு முக்கிய விஷயங்கள் பங்கு வர்த்தகர்களின் மன நிலையை பாதிக்கின்றன. இந்த இரண்டு விஷயங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பொருத்தே நமது பங்குச்சந்தையில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிகழ்கின்றன.

இந்திய பங்கு சந்தைக்குள் நுழையக் கூடிய வெளிநாட்டின் பணத்தின் அளவு மற்றும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவு ஆகிய இரண்டு காரணிகள் இப்போதைக்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் ஆகும்.

முதல் விஷயத்திற்கு வருவோம்.

இந்திய பங்கு சந்தைக்குள் அதிக வெளிநாட்டு பணம் வர வேண்டுமென்றால், உலக சந்தைகளில் ஏற்றத்தாழ்வு நிலை குறைவாக இருக்க வேண்டும். ஏனென்றால், சற்று அமைதியான சூழ்நிலையில்தான் இந்தியா போன்ற ஒரு "அதிக அபாயம் நிறைந்த பங்குச்சந்தையில்" முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முன்வரும். ஒருவேளை உலக சந்தைகளில் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருந்தால், டாலர் பணம் அமெரிக்காவிற்கே திரும்பி சென்று தஞ்சமடையும். உலக சந்தைகளின் ஏற்றத்தாழ்வு நிலை எவ்வளவு என்பதை CBOE Vix (Chicago Board Of Exchanges Volatility Indicator) இல் ஏற்படும் மாற்றங்களை பார்த்து நாம் அறிந்து கொள்ளலாம். அமெரிக்க சந்தையில் (தொடர்ச்சியாக) அதிக ஏற்றத்தாழ்வு நடக்கும் போதெல்லாம், நமது சந்தை பெரிய அளவு வீழ்ச்சி அடைவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

அடுத்த படியாக, டாலர் கரன்சியின் பலவீனம் ஆவது நமது நாட்டிற்கு அதிக வெளிநாட்டு பணம் உள்வர உதவும். அதாவது, அதிகம் உதவாத டாலர் கரன்சி பணத்தை முடிந்த வரை வெளியே தள்ளி விட்டு, மற்ற சொத்து வகைகளை வாங்கிக் குவிக்க உலக நாடுகள் பலவும் முனைகின்றன. அந்த வகையில் டாலர் பலவீனம் ஆனால் நமது பங்கு சந்தைக்கு அதிக பணம் வர வாய்ப்பு உண்டு என்று நம்பலாம். டாலர் நிலையை தெரிந்து கொள்ள Dollar Index அளவு எவ்வளவு இருக்கின்றது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளளலாம். இந்த டாலர் இன்டெக்ஸ் மேலே சென்றால் டாலர் வலுவாகின்றது என்றும் பங்கு சந்தைகள் வீழ வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

டாலர் பலவீனம் அடைவது, அமெரிக்க மத்திய வங்கியின் பணக் கொள்கை மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் "நோட்டு அச்சடிக்கும்" கொள்கை ஆகியவற்றை பொருத்தும் அமையும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி வீதங்களை உயர்த்தும் என்ற வதந்தியின் அடிப்படையில் டாலர் சற்று வலுவடைந்ததை தொடர்ந்து நமது சென்செக்ஸ் குறியீடு இரண்டாயிரம் புள்ளிகள் வரை வீழ்ந்ததும், இன்னும் பல காலம் வரை வட்டி வீதங்கள் உயர்த்தபடாது என்று அமெரிக்க மத்திய வங்கி உறுதி அளித்த சில காலத்திலேயே சென்செக்ஸ் மீண்டும் பெருமளவுக்கு உயர்ந்ததும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இப்போது இரண்டாவது விஷயத்திற்கு வருவோம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏழு சதவீதமாக இருக்கும் பட்சத்தில் பங்கு சந்தையில் ஒரு பெரிய அளவு முன்னேற்றம் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. ஆனால், பருவ மழை தவறியது இந்த ஆண்டு ஏழு சதவீத முன்னேற்றம் இருக்காது என்ற ஒருவித அவ நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டன. அதே சமயத்தில் அடுத்த ஆண்டு ஏழு சதவீத முன்னேற்றம் இருக்கும் என்று பிரதமரும் நிதி அமைச்சரும் தொடர்ந்து கூறி வருவது சந்தையில் அவ்வப்போது எழுச்சியை ஏற்படுத்த உதவுகின்றது. மேலும் சிறப்பான இந்திய தொழிற்துறை முன்னேற்றம் (9.1%) மற்றும் மக்கள் உபயோக சாதனங்கள் (கார், பைக், டிவி போன்றவை) அதிகம் விற்பனை ஆவதும் சந்தையில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்கள் பங்குசந்தையில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேற்சொன்ன இரண்டு காரணிகளை தொடர்ந்து கவனித்து வந்தால், நமது சந்தைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும். இதுவரை சொன்னது, மொத்த பங்கு சந்தையில் ஏற்படும் பொதுவான மாற்றங்களைப் பற்றியது மட்டுமே. தனிப்பட்ட பங்குகளில் ஏற்படும் மாற்றங்கள், அந்தந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பொருத்தே அமைகின்றன.

இப்போது வரும் வார சந்தை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பற்றிப் பார்ப்போம்.

தொடரும் டாலர் பலவீனம் மற்றும் இந்திய பொருளாதாரத்தைப் பற்றி வெளிவரும் நல்ல தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நமது சந்தை இன்னும் கூட மேலே உயர வாய்ப்புக்கள் உள்ளன. வரும் வாரம் நமது பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் குறித்த சில சட்டத்திருத்தங்கள் ஏற்படலாம் என்ற நம்பிக்கையில் இந்த துறை பங்குகள் இன்னும் கூட மேலே செல்ல வாய்ப்புக்கள் உண்டு.

அதே சமயத்தில், நிபிட்டி 5150-5200 அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. குறுகிய கால முதலீட்டாளர்கள் 4950-5000 அளவுகளை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்யலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் சற்று பொறுமையாக இருக்கலாம். சென்ற பதிவில் கூறிய படி 4650 -4700 அளவுகளில் வாங்கியவர்கள், வாங்கிய பங்குகளில் ஒரு பகுதியை 5150-5200 அளவுகளில் விற்று விடலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி!

Comments

Thomas Ruban said…
//டாலர் இன்டெக்ஸ் மேலே சென்றால் டாலர் வலுவாகின்றது என்றும் பங்கு சந்தைகள் வீழ வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். //

சரியாக சொன்னீர்கள் சார்.

கடந்த வார பங்குசந்தையின் திடீர் உயர்வனை கண்டு,பங்குச்சந்தை வல்லுனர்களும் கூட குழம்பிபோய் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

பதிவுக்கு நன்றி சார்.
MCX Gold Silver said…
பதிவுக்கு நன்றி சார்.
தங்கம் எங்க தல போய் நிக்கும்!?
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

நன்றி DG
Maximum India said…
நன்றி வால்பையன்!

//தங்கம் எங்க தல போய் நிக்கும்!?//

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் டாலருக்கு மாற்றாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது இந்த தங்க விலையேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம். 1200 டாலர் வரை விலை ஏறக் கூடிய வாய்ப்பு உண்டு என்று சொல்லுகிறார்கள். இப்போதைக்கு அமெரிக்கா டாலர் அச்சடிப்பதை குறைத்தால்தான் தங்க விலை உயர்வு நிற்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...