Skip to main content

தலைவர்கள் ஜாக்கிரதை!

இன்போசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் நிலகேனி அவர்கள் எழுதிய இமேஜினிங் இந்தியா என்ற புத்தகத்தில் விவரிக்கப் பட்டிருந்த ஒரு உண்மை சம்பவம், தலைவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

அந்த சம்பவம் இங்கே.

சென்ற நூற்றாண்டின் தொண்ணுறுகளில் பொதுத் துறை வங்கி ஊழியர்கள், கணினி மயமாக்குதலை கடுமையாக எதிர்த்து வந்தது அனைவரும் அறிந்ததே. அந்த காலகட்டத்தில், கணினி மயமாக்குதல் வங்கித் துறைக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை விளக்கும் பணி நந்தன் அவர்களிடம் ஒருமுறை கொடுக்கப் பட்டிருந்தது.

ஏ.டி.எம் சேவை, இணைய தள சேவை மற்றும் கிரெடிட் கார்டு சேவை போன்றவை வங்கித் துறையை இன்னும் மேலே எடுத்துச் செல்லும் என்று விளக்குவதற்காக, தன்னுடைய திறமை அனைத்தையும் செலவழித்து முன்கூட்டியே தயார் படுத்திக் கொண்ட நந்தன் அவர்களுக்கு ஆச்சரியமே காத்திருந்தது.

வங்கி ஊழியர்கள் முன்னே அவரளித்த விளக்க உரைக்கு, ஊழியர்களின் தலைவர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது. கணினிமயமாக்கம், வங்கித் துறைக்கு எவ்வளவு அவசியம் அல்லது லாபகரமானது என்பதை வலியுறுத்த முயன்ற அவரது ஒவ்வொரு கருத்துக்கும், வலுவான மாற்றுக் கருத்துக்களை ஊழியர் தலைவர்கள் முன்வைத்தனர். சொல்லப் போனால், நந்தனின் கருத்துக்கள் தவறு என்று பலரையும் நம்ப வைக்கும் அளவுக்கு தலைவர்களின் வாதங்கள் மிக வலுவாகவே இருந்தன. எத்தனையோ நாடுகளுக்கு சென்று எவ்வளவோ நிறுவனங்களை கணினிமயமாக்க ஒப்புக் கொள்ள செய்த, நந்தனின் தொழிற் திறமை இங்கு பலிக்க வில்லை.

முற்றுப் பெறாமலேயே முடிவடைந்த அந்த விவாதங்களுக்குப் பிறகு அனைவரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது நந்தன் அருகே வந்த ஒரு யூனியன் தலைவர் கூறினாராம். "எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.ஒரு பிள்ளை பாஸ்டனிலும் இன்னொரு பிள்ளை சியாட்டிலிலும் மென்பொருட் துறையில் பணி புரிகின்றனர். (கணினிமயமாக்கம் பற்றி) நீங்கள் சொல்லும் அனைத்துக் கருத்துக்களையும் நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அவற்றை நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. காரணம் நான் ஒரு தலைவன் என்ற முறையில் என்னுடைய தொகுதியை (ஊழியர் சங்கம்) காப்பாற்றிக் கொள்ள வேண்டும்."

இந்த சம்பவம் நடந்த பல வருடங்களுக்குப் பின்னரே பொதுத் துறை வங்கிகளில் கணினிமயமாக்கம் நடைபெற்றது. இடையில் நுழைந்த தனியார் வங்கிகள் எவ்வளவோ முன்னேறி விட, பொது துறை வங்கிகள் (தொழிற் நுட்பத் துறையில்) வெகுகாலம் வரை பின் தங்கியே காணப் பட்டன. இது மட்டுமல்ல. ஒரு காலத்தில் அரசு சார்பு நிறுவனங்களில் மிக அதிக ஊதியம் பெற்று வந்தவர்களான அரசு வங்கி ஊழியர்கள், (தங்களது தலைவர்களை கண்மூடித் தனமாக பின்பற்றியதால்) இன்றைக்கு பொதுத் துறை நிறுவனங்களிலேயே மிகக் குறைந்த சம்பளம் வாங்குபவர்களாக இருக்கின்றனர்.

தன பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களை கணினிப் படிப்பு படிக்க வைத்த அந்த வங்கி ஊழியர் சங்கத் தலைவர், தன்னையே நம்பி இருந்த லட்சக்கணக்கான ஊழியர்களின் நலன் பற்றி அக்கறை கொள்ள வில்லை. ஒருவேளை அப்படி அக்கறை இருந்திருந்தாலும், தன்னுடைய பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் அறிவை வளர்ப்பதை விட உணர்வுகளை கொழுந்து விட்டெரிய செய்யவே விரும்பியிருக்கிறார்.

இது போன்ற நிகழ்வு வங்கித் துறையில் மட்டுமல்ல. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், துறையிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இது போன்று மோசடி செய்பவர்கள், பெரிய அரசியல் தலைவர்களாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் அன்றாடம் பழகும், மூத்தவர்கள் என்று நம்பும் பல குட்டித் தலைவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். எனக்கும் கூட தனிப்பட்ட முறையில் இது போன்ற பல தலைவர்களிடமிருந்து ஏராளமான அனுபவ பாடங்கள் கிடைத்துள்ளன.

இதற்கு என்னதான் முடிவு?

ரொம்ப சிம்பிள்.

வாய் சவடால்களை நம்புவதை விட முகமூடியற்ற முகங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஊருக்கு மட்டுமென வரும் உபதேசங்களை ஒதுக்கித் தள்ளுவோம். தலைவர்களை நம்புவதை விட தன்னையே அதிகம் நம்புவோம்.

நன்றி!

Comments

நல்ல பதிவு..நிஜம் சுடுகிறது..
Btc Guider said…
//தன பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களை கணினிப் படிப்பு படிக்க வைத்த அந்த வங்கி ஊழியர் சங்கத் தலைவர், தன்னையே நம்பி இருந்த லட்சக்கணக்கான ஊழியர்களின் நலன் பற்றி அக்கறை கொள்ள வில்லை.//
இது அதிகமான மனிதர்களின் இயற்க்கை குணமாக இருக்கிறது,

//வாய் சவடால்களை நம்புவதை விட முகமூடியற்ற முகங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஊருக்கு மட்டுமென வரும் உபதேசங்களை ஒதுக்கித் தள்ளுவோம். தலைவர்களை நம்புவதை விட தன்னையே அதிகம் நம்புவோம்.//

மிக அருமையான வரிகள்.
நன்றி சார்.
Unknown said…
மிக நல்ல தகவல்.

உண்மையான தகவலும், நன்றி.
இப்பவாவது கணினி வந்துச்சே!
இல்லைனா இன்னும் வரிசையில நின்னு பணம் எடுக்கனும்!
இப்ப இருக்கூர மக்கள் தொகைக்கு இன்னைக்கு பேங்கு போனா அடுத்த வாரம் பணம் எடுத்துட்டு வந்துரலாம்!

//NSE Nifty Stock Ticker//
இது மாதிரி கமாடிடி கிடைக்குமா தல!?
Somebody said rightly " Fighting against changes is fighting against progress"
Thomas Ruban said…
//வாய் சவடால்களை நம்புவதை விட முகமூடியற்ற முகங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஊருக்கு மட்டுமென வரும் உபதேசங்களை ஒதுக்கித் தள்ளுவோம். தலைவர்களை நம்புவதை விட தன்னையே அதிகம் நம்புவோம்.//

சரியாக சொன்னீர்கள் சார்.

//இடையில் நுழைந்த தனியார் வங்கிகள் எவ்வளவோ முன்னேறி விட, பொது துறை வங்கிகள் (தொழிற் நுட்பத் துறையில்) வெகுகாலம் வரை பின் தங்கியே காணப் பட்டன.//

அரசு சார்பு நிறுவனங்களில் இங்கு திறமைக்கு மூன்றாம் இடம் தான். முதலில் அன்பளிப்பு, இரண்டாவது அரசியல்வாதிகளின் சிபார்சு (தலையீடு). பணியில் அமர்ந்தாலும் திறமை வளர்த்துக் கொள்ளாதது. அரசு சார்பு நிறுவனங்களில் முன்னேற்றம் அடையதர்க்கு இதுவும் ஒரு காரணம்.

//தன்னுடைய திறமை அனைத்தையும் செலவழித்து முன்கூட்டியே தயார் படுத்திக் கொண்ட நந்தன் அவர்களுக்கு ஆச்சரியமே காத்திருந்தது. எத்தனையோ நாடுகளுக்கு சென்று எவ்வளவோ நிறுவனங்களை கணினிமயமாக்க ஒப்புக் கொள்ள செய்த, நந்தனின் தொழிற் திறமை இங்கு பலிக்க வில்லை.//

இதாவது பரவாயில்லை. அடையாள அட்டை வழங்கும் திட்டத்தில் அரசியல்வாதிகளிடம் எவ்வளவு கஷ்டப்பட போகிறரோ!!.

உலக வங்கி இந்திய வங்கிகளுக்கு ரூ 10,000கோடி கடன் வழங்க முடிவு செய்துள்ளது (30ஆண்டு தவணையில் )மத்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. இதை பற்றி உங்கள் கருத்து என்ன சார் ?

பதிவுக்கு நன்றி சார் .
Maximum India said…
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அமுதா கிருஷ்ணா!
Maximum India said…
//இது அதிகமான மனிதர்களின் இயற்க்கை குணமாக இருக்கிறது,//

உண்மைதான் ரஹ்மான்! இந்த குணத்தை அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது நம் கடமை.

நன்றி.
Maximum India said…
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மஸ்தான்!
Maximum India said…
//இப்பவாவது கணினி வந்துச்சே!
இல்லைனா இன்னும் வரிசையில நின்னு பணம் எடுக்கனும்!
இப்ப இருக்கூர மக்கள் தொகைக்கு இன்னைக்கு பேங்கு போனா அடுத்த வாரம் பணம் எடுத்துட்டு வந்துரலாம்!//

கணினிகள் பொதுத்துறை வங்கிகளுக்குள் எப்படி நுழைந்தன என்பது ஒரு பெரிய கதை. அதையும் நந்தன் விளக்கி இருக்கிறார்.

நன்றி வால்பையன்!
Maximum India said…
//NSE Nifty Stock Ticker//
//இது மாதிரி கமாடிடி கிடைக்குமா தல!?//

தெரியல வால்! கிடைச்சா உங்களுக்கு தகவல் கொடுக்கிறேன்!

நன்றி.
Maximum India said…
நன்றி கௌதமன் சார்!

//" Fighting against changes is fighting against progress"//

உண்மைதான் சார்! மாற்றம் என்பது பலருக்கு "அதிகாரத்தை பிடுங்கும்" மணி ஓசையாக கேட்கிறது. அதிக தொழிற்நுட்பம் அல்லது கல்வி பலரையும் ஒரே தட்டில் அமரவைத்து வித்தியாசங்களை நீக்கி விடுகின்றன. அதானாலேயே பலரும் மாற்றங்களை எதிர்க்கின்றனர். அவர்களுடைய "அதிகாரம்" (Power) பறிபோகாது என்பதை அவர்களுக்கு உரிய முறையில் உணர்த்தும் மாற்றத்தை முன்வைப்பவரின் கடமையாகும்.

நன்றி.
Maximum India said…
//அரசு சார்பு நிறுவனங்களில் இங்கு திறமைக்கு மூன்றாம் இடம் தான். முதலில் அன்பளிப்பு, இரண்டாவது அரசியல்வாதிகளின் சிபார்சு (தலையீடு). பணியில் அமர்ந்தாலும் திறமை வளர்த்துக் கொள்ளாதது. அரசு சார்பு நிறுவனங்களில் முன்னேற்றம் அடையதர்க்கு இதுவும் ஒரு காரணம். //

சரியாக சொன்னீர்கள் தாமஸ் ரூபன்!
மாற்றங்களும் புரட்சிகளும் முதலில் சந்திப்பது எதிர்ப்பைத்தான்.ஆனால் காலத்தின் கட்டாயம் அவை நிகழ்ந்தே தீரும். கையெழுத்து போட தெரியாத கந்தசாமி செல் போனில் எல்லா வித்தையும் தெரிந்து வைத்து இருக்கிறார். ஆக புதிய முயற்சிகளுக்கு மக்கள் எப்போதுமே தயார். நடுவில் உள்ள நந்திகள் தான் தடை. அனால் நந்தன் போன்ற கலங்கரை விலக்கங்கள் உதவியால் கரை சேருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
Maximum India said…
//உலக வங்கி இந்திய வங்கிகளுக்கு ரூ 10,000கோடி கடன் வழங்க முடிவு செய்துள்ளது (30ஆண்டு தவணையில் )மத்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. இதை பற்றி உங்கள் கருத்து என்ன சார் ? //

இதை பற்றி நான் ஏதும் இதுவரை அறிய வில்லை. பின்னர் ஒருமுறை விரிவாக கூறுகிறேன். நன்றி.
Maximum India said…
நன்றி பொதுஜனம்!

// கையெழுத்து போட தெரியாத கந்தசாமி செல் போனில் எல்லா வித்தையும் தெரிந்து வைத்து இருக்கிறார். ஆக புதிய முயற்சிகளுக்கு மக்கள் எப்போதுமே தயார். //

மிகச்சரியாக சொன்னீர்கள். ஏடிஎம் சேவைகள் ஆரம்பிக்க முடிவு செய்த போது, எளிய மக்களால் ஏடிஎம்களை புரிந்து கொள்ள முடியாது என்று சிலர் தடை செய்ய முயன்றனர். வோட்டு இயந்திரத்திற்கும் இதே போன்ற எதிர்ப்பு இருந்தது.

ஆனால் சராசரி எளிய இந்தியன் தொழிற்நுட்பத்தை ஏற்றுக் கொள்கிறான், மாற்றத்தை வரவேற்கிறான் என்பது பல முறை நிருபணமாகி உள்ளது.

கபில் சிபல் போன்று மக்களின் மாற்றத்தை, உயர்வை விரும்பாதவர்கள்தான் மக்களை குண்டுசட்டியில் குதிரை ஓட்ட வைக்க ஆசைப் படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய மேலாதிக்க வெறி ஆகும் .

நன்றி.
KARTHIK said…
வரலாறு நமக்கு கத்துக்கொடுத்தது ஒன்னே ஒன்னு தான்
நாம ஒன்னுமே கத்துகலைங்கிறது மட்டும் தான்

இதுக்கு அப்புறமாவது திறுந்துனாங்கலான்னா அதுவும் இல்ல.
எல்லா அரசு வங்கிகளும் ஸ்டேட் பேங்குகீழ வந்து செயல்பட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.
ஒரு சில தலைவர்களோட பேச்சத்தன இவங்க இன்னும் நம்புராங்க.


// நந்தன் போன்ற கலங்கரை விலக்கங்கள் உதவியால் கரை சேருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.//

நிச்சையம் :-))

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...