Skip to main content

காலம் மாறி விட்டதா?

தொடர்ந்து ஆறாவது வாரமாக இந்திய பங்குச் சந்தை வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது. விடா நம்பிக்கையாளர்களால் கூட நம்ப முடியாத இந்த காளை ஓட்டம் (Bull Run), சரித்திரம் இதுவரை கண்ட மீட்சி முன்னேற்றங்களிலேயே (Relief Rally) மிகவும் வலுவானதாகவும் வேகமானதாகவும் கருதப் படுகிறது. இந்த ஓட்டம் தொடருமா? விழுந்து கிடக்கும் கரடி மீண்டும் எழுந்திருக்குமா? காளை ஓட்டம் தடைபடுமா?

இந்தியாவில் தொடரும் விடுமுறைகளால் கூட காளை ஓட்டத்தை கட்டுப் படுத்த முடியவில்லை. சென்ற வாரம் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் வர்த்தக விடுமுறையாக இருந்தாலும், மீதம் உள்ள நாட்களில் சந்தை வெகுவாக முன்னேற்றம் கண்டது.

இன்போசிஸ் நிறுவனம் சென்ற காலாண்டில் சந்தையின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி வருவாய் மற்றும் லாப முன்னேற்றம் கண்டிருந்தாலும், வருங்காலத்திற்கான வருவாய் மற்றும் லாபக் கணிப்பு (Guidance) சந்தையின் எதிர்பார்ப்புக்கு மிகவும் குறைந்து காணப் பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சந்தை துவக்கத்தில் பெருமளவு வீழ்ச்சி கண்டது. கரடிகள் கொஞ்சம் உற்சாகம் அடைந்தனர். ஆனால் அவர்கள் உற்சாகம் வெகுநேரத்திற்கு நீடிக்க வில்லை. . உலக சந்தைகள் தொடர்ந்து கண்டுவரும் முன்னேற்றம் நம்மூர் காளைகளை குஷிப் படுத்த, சரிவிலிருந்து மீண்டு வந்த காளைகள் மீண்டும் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டினர். அந்நிய நிறுவனங்களின் மீள்வரவு சந்தைகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது. சீனாவின் பொருளாதார வீழ்ச்சி பற்றிய தகவல்கள் கூட சந்தையின் மனநிலையைப் பாதிக்க வில்லை. சுவிஸ் வங்கி கறுப்புப் பணம்தான் இப்படி அந்நிய நிறுவனங்களின் பெயர் கொண்டு வருவதாக சந்தைகளில் வதந்தியும் காணப் படுகிறது.

பெரிய பங்குகளை விட சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் பெருமளவு முன்னேற்றம் கண்டது குறிப்பிடத் தக்கது. சந்தையின் "பெரும் வர்த்தகர்கள்" (Operators) முழுவீச்சில் தங்கள் 'திருவிளையாடல்களை' துவங்கி விட்டனர் என்பதையே இது காட்டுகிறது. சந்தையின் வர்த்தக அளவு பெருமளவு உயர்ந்திருப்பது சிறு வணிகர்களும் பெருமளவு சந்தையில் நுழைந்துள்ளனர் என்பதை காட்டுகிறது.

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்.

தொழிற் நுட்ப ரீதியாக (Technical Analysis) பார்க்கும் போது, பங்கு சந்தையின் முக்கிய குறியீடுகள் தமது முக்கிய எதிர்ப்பு நிலையான '200-நாட்கள் சராசரி அளவை' (200-day Moving Average) வெற்றிகரமாக தாண்டினாலும் அந்த வெற்றி வெகு நேரம் நீடிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இரண்டு முறை தோல்வி என்பது டபுள்-டாப் அமைப்பு (Double-Top Pattern) என்று கருதப் படுகிறது.

சந்தையின் ஒரு சாரார், நிபிட்டி குறியீடு மீண்டும் 3150 அளவுக்கு வரும் என்று எதிர்பார்க்கின்றனர். அதே சமயம் மற்றொரு சாரார், சந்தை தனது காளை ஓட்டத்தைத் தொடரும். அது யாரும் எதிர்பாரா வண்ணம் மிக வேகமானதாக இருக்கும் என்று கூறுகின்றனர். மேலும் ஏற்றத்தாழ்வு குறியீடான 'இந்தியா விக்ஸ்' (Volatility Indicator - India Vix) ஐம்பதிற்கும் மேலே உயர்ந்திருப்பது சந்தை ஒரு நிச்சயமற்ற நிலையில் இருப்பதையே உணர்த்துகிறது.

வரும் வாரத்தில் இந்திய மைய வங்கி (RBI) வரும் ஆண்டிற்கான தனது பணம் மற்றும் கடன் கொள்கையை (Monetary Policy) அறிவிக்க உள்ளது. கடன் வட்டி வீதங்கள் (Policy Rates) மேலும் குறைக்கப் படுமா என்பது சந்தையின் எதிர்பார்ப்பு ஆகும். மேலும் அமெரிக்க பொருளாதார தகவல்கள் மற்றும் உலக சந்தைகளின் போக்கு நம் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.



மேலே உள்ள படத்தைப் பாருங்கள். காளை ஓட்டம் ஒரு சீரான தொடர் கோடுகளுக்கு (Trend Lines) மத்தியிலேயே சென்று கொண்டிருக்கிறது. கீழே உள்ள கோடு முறியடிக்கப் படும் வரை, காளை ஓட்டம் தொடரும் என்று நம்பலாம்.

தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி குறியீடு 3500 அளவில் வலுவான எதிர்ப்பை சந்திக்கிறது. அந்த நிலை முறியடிக்கப் பட்டால் அடுத்த எதிர்ப்பு நிலைகள் 3600 மற்றும் 3750 புள்ளிகள் என கருதலாம்.

நிபிட்டி குறியீடு 3300 அளவில் ஒரு நல்ல அரணைப் பெற்றுள்ளது. இந்த நிலை உடைக்கப் பட்டால் அடுத்த அரண் நிலை 3150 அளவில் இருக்கும்.

வர்த்தகர்கள் சரியான இழப்பு நிறுத்தத்துடன் (Stop Loss Limits) வர்த்தகம் செய்யலாம். முதலீட்டாளர்கள் வலுவான பின்னணி உள்ள நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யவும். சந்தை ஓட்டத்தில் வெகுவாக உயரும் பங்குகளை நம்பி ஏமாற வேண்டாம். ஏனென்றால், இங்கும்,

"புள்ள புடிக்கரவங்க வந்துட்டாங்கையா! வந்துட்டுட்டாங்க! அதுவும் கூட்டம் கூட்டமா வந்துட்டுட்டாங்க!"

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி.

Comments

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...