Skip to main content

பொறுமையின் எல்லை எதுவரை?

ஒரு பந்த் வெற்றி பெற வேண்டுமானால் மக்களின் ஆதரவு கட்டாயம் தேவைப் படும். கடந்த பல வருடங்களாக இந்தியாவில் நடைபெற்ற பல முழு அடைப்பு போராட்டங்கள் (மேற்கு வங்கம் மற்றும் கேரளா நீங்கலாக) தோல்வி பெற்றதற்கு மக்களின் ஆதரவு இல்லாமல் போனது ஒரு முக்கிய காரணமாகும். மேலும், அரசியல் கட்சி இரட்டை நிலைப்பாடும், நீதி மன்றங்களின் தலையீடும் இந்த போராட்டங்கள் நீர்த்துப் போகச் செய்த இதர காரணங்களாக அமைந்தன. நான் மும்பையில் வசிக்கும் ஐந்து வருடங்களில் (எதிர்கட்சிகள் சார்பில்) முழுமையான பந்த் போராட்டத்தை ஒரு தடவை கூட சந்தித்தது இல்லை. ஆனால், முழு அடைப்பு போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசாங்கம் செய்த பல முயற்சிகளையும் மீறி இன்றைய போராட்டம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றி பெற்றதற்கு காரணம் என்ன என்று சற்று யோசித்தேன். எதிர்கட்சிகளின் செல்வாக்கு, கலவரம் குறித்த மக்களின் அச்சம் ஆகியவற்றையும் மீறி, மத்திய அரசின் மீது பொதுமக்களுக்கு குறிப்பாக தொழிலாளர் சமூகத்திற்கு இருக்கும் அதிருப்தியே இதற்கு முக்கிய காரணமாக தோன்றுகிறது. நிர்பந்தங்கள் இல்லாமலேயே பல தொழிலாளர் மற்றும் சிறு வணிகர் அமைப்புக்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .

ஏற்கனவே விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் குறிப்பாக எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப் பட்டுள்ள இன்றைய நிலையில், பணவீக்கம் காகித அளவில் குறைவதை கூட மத்திய அரசு விரும்ப வில்லை என்றே மனதில் படுகின்றது. உலக சந்தையில் பெட்ரோல் விலை மிகக் குறைவாக இருக்கும் இன்றைய சூழலில் மீண்டும் மீண்டும் உள்ளூர் பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்துவது அரசின் நோக்கங்களின் மீது சந்தேகத்தை உருவாக்குகிறது. அதுவும் பணவீக்கத்தை கட்டுபடுத்த இந்திய மத்திய வங்கி எடுத்த நடவடிக்கைகள் பெரிய அளவில் பலனளிக்காது போன இப்போதைய சூழலில் மத்திய அரசு ஒரு செயற்கையான விலைவாசி உயர்வை உருவாக்குவது எளிய மக்களுக்கு மனசோர்வையே அளிக்கின்றது.

சில வாரங்களுக்கு முன்னர் பத்திரிக்கைகளிலும், இணைய உலகிலும் ஐரோப்பிய தொழிற் கூட்டமைப்பினர் சிலரின் இந்தியா மீதான கருத்துக்கள் வலம் வந்தன. இந்திய அரசு பணக்காரர்களின் கரத்தை வலுப்படுத்துவதற்காக எளிய மக்களின் மீது அதிக சுமையை ஏற்றுவதாகவும் எளிய மக்கள் தெருவில் இறங்கி போராடுவதற்கு அதிக காலம் பிடிக்காது என்ற தொனியில் அந்த கருத்துக்கள் அமைந்திருந்தன. வேகமாக முன்னேறி வரும் இந்தியாவின் மீது, பொருளாதார தளர்ச்சியில் உள்ள அவர்களுக்கு பொறாமை என்று கூட நான் சந்தேகப் பட்டேன். ஆனால் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்த எதிர்கட்சிகளின் பந்த் அழைப்பு இன்று குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற்றிருப்பது அவர்களின் கருத்தின் பின்புலத்தை உறுதிப் படுத்துகின்றது.

பொதுமக்களின் துன்பங்களை தொடர்ந்து மத்திய அரசாங்கங்கள் அலட்சியம் செய்தால் இந்தியாவில் பெரிய போராட்டங்கள் தோன்றும் அபாயங்கள் உள்ளன என்பதை கட்டியம் கூறும் நிகழ்வாகவே இன்றைய முழு அடைப்பு போராட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். கூடிய சீக்கிரம் தனது தவறுகளை திருத்திக் கொண்டு, எளிய மக்களின் துயரை தீர்க்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்த பட்சம் அவர்களின் துயரத்தை அதிகப் படுத்தாமல் இருப்பது நம் நாட்டிற்கு இந்த அரசாங்கம் செய்யும் பெரிய தொண்டு என்றே நினைக்கிறேன்.

நன்றி!

Comments

Thomas Ruban said…
முழு அடைப்பு போராட்டம் இந்தியா முழுவதும்(தமிழ்நாடு உட்பட) வெற்றி பெற்றுள்ளது.

//உலக சந்தையில் பெட்ரோல் விலை மிகக் குறைவாக இருக்கும் இன்றைய சூழலில் மீண்டும் மீண்டும் உள்ளூர் பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்துவது அரசின் நோக்கங்களின் மீது சந்தேகத்தை உருவாக்குகிறது.//

உண்மை தான் சார் அதுவும் பெட்ரோல் நிறுவனங்களே உலக கச்சா எண்ணை விலையை பொறுத்து தன்னிச்சியாக விலை நிர்னித்துக்கொள்ளாம் என்பது அநியாயம்.

ஐந்து ஆண்டு காலம் யாரும் நம்மை அசைக்க முடியாது என்று ஆணவத்தில் ஆடுகிறார்கள்.இப்படி ஆணவத்தில் அழிந்தவர்கள் பலபேர்...

வரவர சோனியாவின் மீது பொதுமக்கள் வைத்துயிருக்கும் மதிப்பும்,நம்பிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

பதிவுக்கு நன்றி சார் ஏன் இந்த வார சந்தை நிலவரம் பற்றி எழுதவில்லை.
Muthuramalingam said…
நீங்க சொல்வது நூறு சதவிதம் உண்மை. இந்திய அரசாங்கம் சாதரண மக்களை பற்றி கவலை படுவதே இல்லை.
Muthuramalingam said…
நீங்க சொல்வது நூறு சதவிதம் உண்மை. இந்திய அரசாங்கம் சாதரண மக்களை பற்றி கவலை படுவதே இல்லை.
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

//ஏன் இந்த வார சந்தை நிலவரம் பற்றி எழுதவில்லை.//

வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் இருந்ததால், சில வாரங்களாக சந்தை நிலவரத்தைப் பற்றி பதிய முடிய வில்லை. மேலும் எனக்கு இப்போது பணியிட மாறுதல் இருப்பதால் இன்னும் கூட சில வாரங்கள் வரை பதிவுலகில் அடிக்கடி தலை காட்ட முடியாமல் இருக்க நேரிடலாம். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.

நன்றி!
Maximum India said…
நன்றி முத்துராமலிங்கம்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...