Skip to main content

அடங்காத காளையும் விடாத கரடியும்!

கோல்ட்மென் சாக்ஸ் மோசடி விவகாரம் இந்திய பங்கு சந்தையில் இன்னொரு பெரிய சரிவை துவக்கி வைக்கும் என்று கரடிகள் ஆவலுடன் காத்திருக்கையில், மத்திய வங்கியின் வருடாந்திர நிதி அறிக்கை காளைகளுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது. விண்ணை முட்டும் விலைவாசிகளை கட்டுப்படுத்த மத்திய வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கையில், கடனாளிகளுக்கு (குறிப்பாக மத்திய அரசாங்கம்) கடன் தங்கு தடையில்லாமல் கிடைக்கப் வழி வகுப்பதுவும் மத்திய வங்கியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என வெளிப்படையாகவே அறிவிக்கப் பட்டு விட, கடன்களுக்கு வட்டி வீதம் இப்போதைக்கு (பெருமளவுக்கு) உயராது என்ற நம்பிக்கை சந்தையில் உருவாகியுள்ளது. மேலும் வங்கிகள் வாராக் கடன்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியதற்கான காலக் கெடுவை நீட்டிக்கப் போவதாக மத்திய வங்கி அறிவிக்க காளைகளின் கை மேலும் ஓங்கியது. வாராக்கடன்களுக்கான நிதி ஒதுக்கீடு இதுவரை குறைவாக செய்துள்ள பல வங்கிகளின் பங்குகள் சென்ற வாரம் வெகுவாக உயர்ந்தன. நலிவடைந்துள்ள சில பொதுத்துறை வங்கிகளின் பங்குகளில் மத்திய அரசு முதலீடு செய்வதாக அறிவித்ததும் வங்கித்துறை பங்குகள் உயர உதவின. வட்டி வீதம் வேகமாக உயராது என்ற நம்பிக்கை வாகன உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகளையும் கூட நன்கு உயர்த்தியது. சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகளின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு வருமானம் இந்த முறை வெகுவாக உயரும் என்ற வதந்தியும் சந்தை உயர உதவியாக இருந்தது.

கிரீஸ் நாட்டின் நிதி நிலை முன்னர் எதிர்பார்த்ததை விட மோசமாகவே இருக்கின்றது என்ற தகவலும் சீனாவின் ரியல் எஸ்டேட் துறை ஆபத்தான வளர்ச்சியை கண்டிருப்பதால் அந்த நாட்டின் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்ற ஊகமும் இந்திய பங்கு சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை. (ஆறின கஞ்சி பழங்கஞ்சி?). அதே சமயம் மற்ற சந்தைகளை விட நமது சந்தை பலமுறை லேட்டாகவே ரியாக்ஷன் செய்திருக்கிறது என்பதையும் அந்த ரியாக்ஷன் ஓவர் ரியாக்ஷனாக இருந்திருக்கிறது என்பதையும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. (லேட்டானாலும் லேட்டஸ்ட்?).

சென்ற வாரம் சந்தை வெளிவந்த ரிலையன்ஸ் காலாண்டு நிதியறிக்கை எதிர்பார்த்ததை விட மோசமாகவே அமைந்துள்ளது வரும் வார துவக்கத்தில் காளைகளுக்கு சற்று தளர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் "BULLS DIE HARD" என்ற சந்தை மொழிக்கேற்ப அவர்கள் முட்டி மோதி முன்னேறவே எத்தனிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. வரும் வருடத்திற்கான மழை அளவு நீண்ட கால சராசரியை ஒட்டியே இருக்கும் என்று இந்திய வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள காளைகள் முயற்சிப்பார்கள். பொதுவாகவே இந்திய வானிலை அறிக்கைகள் அரசியல் உள்நோக்கங்கள் கொண்டவை என்பதையும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் போலவே நம்பகத்தன்மை அற்றவை என்பதையும் இங்கே மனதில் வைத்துக் கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.

கிரீஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் மோசமான நிதிநிலை கரடிகளுக்கு நல்ல வாய்ப்பை அளிக்கக் கூடும். ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் சர்வதேச நிதி அமைப்பு ஆகியவை கிரீஸ் நாட்டிற்கு உதவி செய்வதாக உறுதி அளித்தாலும், அந்த உதவி போதுமானதாக இருக்குமா என்பது கேள்விக் குறிதான். குறிப்பாக அடுத்த மாதத்தில் முடிவடையும் கடனை கிரீஸ் நாட்டு அரசினால் குறித்த நேரத்தில் திருப்பித் தர முடியுமா என்ற சந்தேகமும் இப்போது உலக சந்தைகளில் எழுந்துள்ளது.

ஏற்கனவே சொன்னபடி நிபிட்டி 5400 புள்ளிகளுக்கு அருகே நல்ல எதிர்ப்பை சந்திக்கக் கூடும். மாதாந்திர வருங்கால வர்த்தக நிறைவு அதிகப் படியான ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும்.

ஏற்கனவே முதலீடு செய்துள்ள நண்பர்கள் லாப விற்பனை செய்யலாம். புதிய முதலீடுகளை செய்வதற்கு சற்று பொறுத்திருக்கலாம். ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரம் இன்னும் பல வருடங்களுக்கு நல்ல வளர்ச்சியை காண முடியும் என்றாலும், அந்த வளர்ச்சியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் திறமை உள்ள நிறுவனங்களில் மட்டுமே நாம் முதலீடு செய்ய வேண்டும். இந்த மாதம் வெளிவரவுள்ள இந்திய நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் அந்த திறமையை கண்டுணர ஓரளவுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!

Comments

Thomas Ruban said…
கடந்த வாரத்தில் பெரும்பாலான உலக பங்குசந்தைகள் சரிந்தாலும் நம் இந்திய
பங்குசந்தைகள் சரியவில்லை கரணம் நம்இந்திய அரசாங்கம் பங்குசந்தைக்கு கொடுக்கும் ஆதரவு (சாதகமான புள்ளி விவரங்கள்) FII முதலீடும் மிகவும் அதிகரித்துயுள்ளது.

//ஏற்கனவே முதலீடு செய்துள்ள நண்பர்கள் லாப விற்பனை செய்யலாம். புதிய முதலீடுகளை செய்வதற்கு சற்று பொறுத்திருக்கலாம். ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரம் இன்னும் பல வருடங்களுக்கு நல்ல வளர்ச்சியை காண முடியும் என்றாலும், அந்த வளர்ச்சியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் திறமை உள்ள நிறுவனங்களில் மட்டுமே நாம் முதலீடு செய்ய வேண்டும். இந்த மாதம் வெளிவரவுள்ள இந்திய நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் அந்த திறமையை கண்டுணர ஓரளவுக்கு உதவும் என்று நம்புகிறேன்.//

உண்மைதான் சார், பதிவுக்கு நன்றி சார்.
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

//கடந்த வாரத்தில் பெரும்பாலான உலக பங்குசந்தைகள் சரிந்தாலும் நம் இந்திய
பங்குசந்தைகள் சரியவில்லை கரணம் நம்இந்திய அரசாங்கம் பங்குசந்தைக்கு கொடுக்கும் ஆதரவு (சாதகமான புள்ளி விவரங்கள்) FII முதலீடும் மிகவும் அதிகரித்துயுள்ளது.//

உண்மைதான். முக்கியமாக அரசு தரப்பில் வெளியிடப் பட்ட மாதாந்திர பணவீக்க அளவு துளிக் கூட நம்பும் படி அமையவில்லை. அந்நிய பண முதலீடுகள் கூட எங்கிருந்து வருகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஐபிஎல் விவகாரத்தை பார்க்கும் போது, நம்பர் டூ பணம் இவ்வகையிலும் வருகின்றதா என்று சந்தேகம் கூட எழுகின்றது.

அதேசமயம் பதிவிலேயே சொன்னபடி, சற்று தாமதமானாலும் சரியும் போது எல்லாவற்றுக்கும் கூட்டு வட்டி போட்டுக் கொண்டு நமது சந்தை உலக சந்தைகளை விட அதிகமாக சரியும் என்று நினைக்கிறேன்.

நன்றி!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...