Monday, April 26, 2010

நாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:


வணிகமயமாகி விட்ட இன்றைய சமூக பொருளாதார சூழலில் நாம் மதிக்க தவறிய, மறந்து போனவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பழங்குடி மக்கள். மேலும் பல விஷயங்களைப் போலவே ஊடக மயக்கம் இங்கும் உண்டு. பழங்குடி மக்கள் என்றாலே நாகரிகமற்றவர்கள் (சில சமயங்களில் நரமாமிசம் சாப்பிடுபவர்கள்) காட்டு மிராண்டிகள், மூட நம்பிக்கையில் முழுகிப் போனவர்கள் என்ற ஒருவித மூட நம்பிக்கையை நம் மீது திணித்திருப்பது சினிமா உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள். உண்மையில் அவர்கள் உலக சமநிலைக்கு அவசியமானவர்கள், இயற்கையை அழிக்காமல் அதனுடன் இயைந்து வாழ்பவர்கள் என்பதெல்லாம் மறக்கடிப்பட்டு, அவர்களை அவர்களது சொந்த பூமியில் இருந்து வணிக நோக்கங்களுக்காக வெளியேற்றும் முயற்சி தீவிரமாக இப்போது நடைப் பெற்று வருகின்றது. இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் பலவகையில் உடந்தையாக உள்ளனர். இவர்களைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அலட்சியம் செய்யும் நாமும் கூட ஒருவகையில் இவர்கள் படும் இன்னல்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறோம்.

மரியாதைக்குரிய நண்பர் திரு.நெற்குப்பை தும்பி அவர்களின் பதிவின் பிரதி இங்கே.

நாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:

(பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாழிதழில் 15/4/2010 வந்த Nitin Desai என்பவரின் கட்டுரையில் ஒரு பகுதியின் தமிழாக்கம்;

செய்தி தாள்களிலே, வலைப் பதிவுகளில் ஈழம், தலித், பார்பனீயம், வாழும் வள்ளுவர், நித்ய ஆனந்த லீலைகள் போன்ற தலைப்புக்களுக்கு வழங்குவதில் பத்தில் ஒரு பங்கு கூட நாம் பழங்குடியினர் பிரச்னைகளுக்கு வழங்குவது இல்லை எனத்தோன்றியதால் இந்த பதிவு .)

தண்ட காரண்யத்தில் கிட்டத்தட்ட நம் மக்களின் மீதே அரசு போர் தொடுக்கிறது.

கிழக்கில் பீகார்/மேற்கு வங்கம் முதல் தெற்கே கர்நாடகா/ தெலங்கானா வரை பகுதி தான் கவலைக்கு காரணம். ; ஆனால், மக்களின் (காட்டு வாசிகளின் ) துணையும், பாதுகாப்பும் இருப்பதால் துரத்தும் காவல் துறையிடம் மோத மாவோயிஸ்டுகளுக்கு ஒரு தளம் ஆகிறது. ஆகவே, நாம் களைய வேண்டியது இந்த பழங்குடியினரின் துயரங்களைத்தான்.

பழங்குடியினருக்கும் பிற இந்தியர்க்கும் உள்ள வளர்ச்சி நிலையில் உள்ள வேறுபாடு:இதன் மூலம் தெளிவாகும்: :
வறுமைக் கோட்டின் கீழ் இருப்பவர் பழங்குடியினரிடையே S T 47 %

தலித்துளில் S C 37 %

பிற பின்தங்கிய இனத்தவர் OBC 26%

மற்றவர் 16%


தலித்துகளும் பின்தங்கிய வகுப்பினரும் (ஓரளவு ) தேசிய அளவிலும் , மாநில அளவிலும் அரசியல் சக்தி பெற்றுள்ளனர். பழங்குடியினர் கூட்டணி அரசியலிலே ஓரத்திலேயே உள்ளனர். (ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை ஆட்சிக்கு வந்த எல்லா கூட்டணிகளும் பழங்குடியினர் தலைமை தாங்கிய, மற்றும் பெருவாரியாக இருந்த அரசுகள் தான்: இதற்கு விதி விலக்கு; அதை ஆராய போனால், முக்கிய விஷயம் விட்டு போய் விடும்.)

இது இன்று நேற்று வந்த நிலை அல்ல: அரசியல் சட்டம் எழுதப்படும் போதும் கிட்டத்தட்ட பழங்குடியினர் மறக்கப் பட்டனர்; சரியான சமயத்தில், சரியான விதத்தில் பேசி இட ஒதுக்கீடு கிடைக்க செய்தவர் ஜெயபால் முண்டா.. ஆனால், அதன் பின் அவர்களை மறந்து விட்டோம். இப்போதாவது மீண்டும் நினைப்போம். இதற்கு பொருள், சில கோடிகளை விட்டெறிவோம் என்பதல்ல. தலை முறை தலை முறையாக வந்த பழங்குடியினரின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களுக்கும், ஆட்சியில் , பொருளாதாரத்தில் சக்தி வழங்குவதே நாம் செய்ய வேண்டியது.

கிழக்கிலும், மத்தியிலும் தெற்கிலும் இந்த ஆதிவாசிகளின் உறைவிடம் தான் கனிம, வன வளங்கள் நிறைந்ததாய் இருப்பது பிரச்னையை சிக்கலாக்குகிறது பெருமளவு நிலம் கையகப் படுத்தப் பட்டு, வேறு இனத்தவர் குடியேறுவது, சுரங்க மாபியாக்கள், ஊழல் அரசு அதிகாரிகள், வன வளங்கள் மேல் வைத்திருக்கும் கட்டுப்பாடு, இவற்றால், பழங்குடியினரை அவர்களின் இருப்பிடத்திலேயே அன்னியர் ஆக்கி விட்டது.


ஒரு நல்ல காரியம் 2006 ல் இயற்றப்பட்ட வன உரிமைகள் சட்டம். ஆனால் அது நடை முறைப் படுத்துவதிலும் தடைகள்; ஓட்டைகள். . இந்த ஆண்டு பிப்ரவரி வரை வந்த உரிமை கோரும் விண்ணப்பங்கள்: 27 லட்சம்; . ஒப்புக் கொள்ளப் பட்டவை : 7.60 லட்சம் ; நிராகரிப்பட்டவை : 9.30 லட்சம் ;; முடிவு எடுக்காமல் நிலுவையில் உள்ளவை : 10.10 லட்சம். சமூக உரிமைகளுக்கு சட்ட உருவம் கொடுப்பதிலும், கூட்டு மேலாண்மை நிறுவதிலும் நடை முறை சிக்கல்கள் உள்ளன.

அவர்களுக்கு சொந்தமான இடத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களின் மேல் அவர்களுக்கு உள்ள உரிமையை நாம் அங்கீகரிக்கவில்லை; மேம்பாடு, முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது, ஈட்டுத் தொகை வழங்குகிறோம்; ஆனால், அங்கு கிடைக்கும் பொருள்களின் விலையில் அவர்களுக்கு பங்கு கிடைப்பது இல்லை;! ( மாபியாக்களுக்கும், ஊழல் அரசு அதிகாரிகளுக்கும் பின் வழியாக பங்கு போய் விடுகிறது என்பது உண்மை நிலை).

தலைமுறை தலைமுறையாக ஓரிடத்தில் இருக்கும் பழங்குடியினை இடம் பெயர்த்துவதில் ஏதோ ஒரு குறை உள்ளது அல்லவா? அவர்களை அத்து மீறி குடிசை போட்ட சேரியினரைப் போல நடத்துகிறோம். அமெரிக்காவில் வெள்ளையர்கள் அமெரிக்க நிலத்தில் காலம் காலமாக இருந்து வந்த பழங்குடியினருக்கு உரிமை மறுத்து, அவர்களின் வனங்களை கையகப்படுத்தினர் என்று சரித்திரம் சொல்லும்.

இந்தியாவில் உள்ள ஆதிவாசியினர் பல தலைமுறைகளாக கோலோச்சியவர்கள்; அவர்களில் சிற்றசர்கள் இருந்தனர்; அவர்கள் வெள்ளையரை எதிர்த்து கலகம் செய்தது வரலாறு: உதாரணம்: சாந்தாளர்கள்; மற்றும் அல்லூரி சீதா ராம ராஜூ. முதலியானோர். அவர்களுக்கு சொந்தமான இடத்தில் அவர்களே அரசு செய்யும் ஒரு முறை இயற்ற/ஏற்க வேண்டும்.

ஆதிவாசிகள் இந்து சமுதாயத்தில் ஒதுக்கப் பட்டு வசித்த தலித்துக்கள் அல்லர்; அவர்கள் இந்து சமுதாயத்துக்கு வெளியில் இருந்தவர்; சாதி இந்துகளுக்கு சமமாக நடத்தப்பட்டவர்கள்; புராணக் கதைகளில் இதற்கு, பல ஆதாரங்கள் உண்டு; உதாரணமாக, வால்மீகி ஒரு பழங்குடியினர் . ; இராமாயண காதையில் வரும் சபரி ஒரு ஆதிவாசி; மகா பாரத்தில் ஏகலைவன். (அல்லி கூட அப்படித்தான் என நினைக்கிறேன்).

பழங்குடியினருக்கு மானியம் வேண்டாம்; அவர்களுக்கு தர வேண்டியது அவர்களுக்கு உரித்தான சமூக அந்தஸ்தும், உரிமைகளும்;

நன்றி!

4 comments:

ராஜ நடராஜன் said...

ஆக்கபூர்வமான அலசல்.பகிர்வுக்கு நன்றி.

Maximum India said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜ நடராஜன்!

nerkuppai thumbi said...

மீள் பதிவுக்கு நன்றி

Maximum India said...

@nerkuppai thumbi said...

//மீள் பதிவுக்கு நன்றி//

உங்கள் பதிவை எனது பதிவு வலையில் வெளியிட அனுமதித்ததற்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி ஐயா!

Blog Widget by LinkWithin