Thursday, November 18, 2010

ஊழலின் ஊற்றுக்க்கண்!


ஓய்வு பெற்ற வங்கி உயர் அதிகாரி ஒருவர் சமீபத்தில் தம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த போதும் கூட, கல்லூரி கட்டணத்தை செலுத்தும் அளவிற்கு வசதி இல்லாததால், அவர் தனது மருத்துவர் கனவை கைவிட்டு வங்கி வேலையில் சேர நேர்ந்ததாம்.

கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்த அவர், வங்கியில் உயர் பதவிக்கு வந்ததும் கல்விக் கடன்களை, குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு, உணர்வோடு வழங்கி வந்தார். ஆனால் அந்த கடன்களை திருப்பி வசூலிக்க முனைந்த போது அவருக்கு கிடைத்த அனுபவம் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தவணைகளை விடுங்கள்!

கடன் தொகையின் மொத்த அளவு சம்பளம் கிடைக்கும் படியாக வாழ்வில் பெருமளவுக்கு உயர்ந்த மாணவர்கள் கூட கல்விக் கடன்களை திருப்பிச் செலுத்த முனையவில்லை. மாறாக அலட்சியப் படுத்தி உள்ளனர்.

வயதில் மூத்தவரும் "அந்த கால மனிதருமான" அவரால் இதை ஜீரணிக்கவே முடிய வில்லை. யார் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.ஆனால் வாழ்வின் முதல் படியினையே "ஏமாற்றும் படியாக" எப்படி இவர்களால் ஆரம்பிக்க முடிகிறது என்று புலம்பிக் கொண்டே இருந்தார். இந்த அனுபவம் எங்கேயோ எப்போதோ ஏற்பட்ட ஒன்றல்ல. இந்தியாவில் உயர்ந்து கொண்டே வரும் கல்வி வாராக் கடன்கள் இந்த நிகழ்வை உறுதிப் படுத்துகின்றன.

அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது அந்த கால பழமொழி.

ஊழல் சமூகத்தில் இருந்துதான் ஸ்பெக்ட்ரம் ராஜாக்கள் உருவாகிறார்கள் என்பது இந்த கால புதுமொழி.

கல்மாதிகளும், எட்டியூரப்பாக்களும், ரெட்டிகளும்,அசோக் சவான்களும் இன்றைய குப்பன்களையும் சுப்பன்களையும், ரமேஷ்களையும் சுரேஷ்களையுமே பிரதிபலிக்கிறார்கள் என்பது மிகையாகாது.

ஊழலை ஒழிப்பது என்பது ஒவ்வொரு தனி இந்தியரிடமிருந்தும் துவங்க வேண்டும்.

சுத்தமான சமூகத்தில் ஊழல் பெருச்சாளிகளுக்கு எப்போதுமே இடமில்லை.

நன்றி!

12 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரிதான் முதல்படியே ஊழல்ன்னா முதல்கோணல் முற்றும் கோணல் தான்.. :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரிதான் முதல்படியே ஊழல்ன்னா முதல்கோணல் முற்றும் கோணல் தான்.. :(

vasu said...

:(

vasan said...

சுத‌ந்திர‌ இந்தியாவின் ஊழ‌ல் ஊற்றுக்க‌ண்ணை திற‌ந்த‌(ஜீப் ஊழ‌ல்) கிருஷ்ண‌மேன‌னைக் காப்ப‌ற்றிய‌வ‌ர் முத‌ல் பிர‌த‌ம‌ர் நேரு. சாஸ்திரி உண்மையான ஒரே பிர‌த‌ம‌ர். (யாருக்கு ஞாப‌க‌ம் இருக்கு) இந்திராவுக்கு ந‌க‌ர்வாலா. மொராஷி தேசாய் யோக்கிய‌மான‌வ‌ர், ம‌க‌ன் ம‌ட்டும் அராத்த‌ல். ராஜீவ், சொல்ல‌வே வேண்டாம் போப‌ர்ஸ் பிர‌ங்கி இன்னும் புகைகிற‌து. ந‌ர‌சிம்ம‌ராவ்ஜி,
ஒரு கோடி சூட்கேஸ் இன்னும் பாதி திற‌ந்தே கிட‌க்கிற‌து. மாநில‌ங்க‌ளை எடுத்தால்,லாலுவின் மாட்டு தீவ‌ன‌ம்,மாயாவ‌தியின் தாஜ் வ‌ளாக‌ம் ம‌ற்றும் ப‌ண‌மாலை, அந்துலேயின் சிமெண்ட் ஊழ‌ல், முக‌ வின் ச‌ர்க்காரியா க‌மிஷனின் விஞ்ஞான‌பூர்வ‌க் குற்ற‌ம், ஜே யின் டான்சி, பிள‌ச‌ன்ட் ஸ்டே, இப்ப‌டி எத்த‌னையோ குற்ற‌ங்க‌ளைப் பார்த்து, கேட்டு, அனுப‌வித்து, அனும‌தித்திருக்கிற‌து இந்த‌ இந்திய‌ ம‌க்க‌ளாட்ச்சி ம‌ன்ற‌ம். காறி.... வேண்டாம் ச‌பை நாக‌ரீக‌ம் க‌ருதி விர‌லில் மை த‌ட‌வி ஓட்டுப் போட்டு விட்டு அம‌ருகிறேன். (விடுப‌ட்ட‌ ஊழ‌ல்க‌ள் லிஸ்ட் இதைவிட அதிகமிருக்கு)

periyannan said...

இத‌ற்கே அதிர்ச்சியா? இப்பொழுதுதான் முத‌ல் க‌டமை முடிந்திருக்கிற‌து. இன்னும் அவ‌ர்க‌ள் வரி ஏய்ப்ப‌து முத‌ல் லஞ்ச‌ம் வாங்குவ‌து வ‌ரை செய்ய‌வேண்டிய‌து நிறைய இருக்கிற‌து.
அருமையான‌ புதுமொழி.
ஊழல் பெருச்சாளிகளுக்கு ம‌த்தியில் சுத்த‌மான‌ ச‌முக‌த்தை எங்கே தேடுவ‌து.

Maximum India said...

நன்றி முத்துலெட்சுமி!

நன்றி வாசு!

நன்றி வாசன்!

நன்றி! பெரியண்ணன்!

nerkuppai thumbi said...

மிகச் சரியான பதிவு.
தம் கடைமையைச் செய்ய வேண்டும் என்ற உணர்தல், சமூகத்தின் வெவ்வேறு நிலைகளிலே இல்லை.
உன் கடைமையை நீ செய் என்று எதிராளிக்கு சொல்லும் "தார்மீக" உரிமையை பலர் இழந்து விட்டதால், இந்த மனப்பான்மை பெருகிவிட்டது.
சம்பளத்தை தவிர மேல் வருமானம் உள்ள தந்தை; சிபாரிசில் வேலை வாங்கிய ஆசிரியர்; மேசைக்கு கீழ் பணம் கொடுத்து அல்லது பொய்யான சாதி சான்றிதழ் கொடுத்து வேலை வாங்கிய அரசு அதிகாரி; ஊழல் செய்து பணம் திரட்டிய அரசியல்வாதிகள்; சிறு வயது முதலே சமூகத்தில் தவறுகளையே காணும் மாணவன் தன அளவுக்கு தன் கல்விக் கடன் அடைக்காமல் இருக்கிறான்.
ஊர் நடுவில் கோயில் விழாவுக்காக ஊரில் உள்ள அனைவரும் பால் ஊற்ற வேண்டும் என்று வைத்த பாத்திரத்தில் தண்ணீரே இருததாக ஒரு கதை உண்டு. நம் நாடும் அது போல் ஆகிவருகிறதோ என்பதே நம் அனைவரின் கவலையும்.

பொதுஜனம் said...

எல் கே ஜி யில் எக்ஸ்ட்ரா கொடுத்து சேர்க்கும் போதே தொடங்கி கடைசியில் நன்றாக எரிய வைக்க வெட்டியானிடம் கொடுக்கும் வரை தொடர்கிறது. நமது வாழ்க்கை முறையாகவே மாறி விட்ட லஞ்ச ஊழலை இப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாது. கவலைபடாதீர்கள் . இந்தியன் தாத்தாவும் சிவாஜியும் நம்மை காப்பாற்றுவார்கள்

Maximum India said...

அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா!

நீங்கள் ஒரு முறை கம்யுனிசம் மற்றும் கேபிடலிசம் பற்றி கூறியது நினைவுக்கு வருகிறது. இருபது வயதில் கம்யுனிசம் பேசாதவன் இதயம் இல்லாதவன். அறுபது வயதில் கேபிடலிசம் பேசாதவன் மூளை இல்லாதவன் என்று கூறினீர்கள். இப்போது இருபது வயதில் கேபிடலிசம் பேசும் இதயமில்லாதவர்கள் இந்தியாவில் பெருகி விட்டார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

நன்றி!

Maximum India said...

உண்மைதான் பொதுஜனம்!

எப்போதுமே ஒரு கல்கியை எதிர்பார்த்து காத்துக் கிடந்தது காத்து கிடப்பதுதான் இந்த சமூகம். திரைப்படங்கள் இந்த எதிர்பார்ப்புக்களை கனவுலகிலாவது பூர்த்தி செய்கின்றன.

நன்றி!

KARTHIK said...

அவங்க பண்ணுர தப்புக்கு பின்னால வரும் மாணவங்க பாதிக்கப்படுறாங்க
ஒன்னும் சொல்லுரதுக்கில்லை :-((

Maximum India said...

//அவங்க பண்ணுர தப்புக்கு பின்னால வரும் மாணவங்க பாதிக்கப்படுறாங்க //

உண்மைதான் கார்த்திக்! அதிக அளவிலான கல்வி வாராக்கடன்கள், வங்கிகளை தமது எளிய கல்வி கடன் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வைத்து விடும் அபாயம் உள்ளது. வாராக்கடன்கள் இன்னும் அதிகரிக்கும் பட்சத்தில் மத்திய அரசினாலும் அதிக கடன்களை வழங்க வேண்டி வங்கிகள் மீது அதிக நிர்பந்தங்கள் கொடுக்க முடியாமல் போய் விடும்.

நன்றி!

Blog Widget by LinkWithin