Skip to main content

பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது எப்படி?

பொதுவாக பங்குகளில் நேரடி முதலீடு செய்வது என்பது சற்று நேரம் பிடிக்கும் வேலை. மேலும் நிறுவனங்களை பற்றிய, பங்குகளைப் பற்றிய சில தொழிற்நுட்ப தகவல்களையும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் முதலீட்டாளர்களுக்கு உண்டு. நேரடியாக பங்குகளில் முதலீடு செய்ய வாய்ப்பில்லாதவர்களுக்கும், இந்திய பொருளாதார வளர்ச்சியின் பயன்களை அடைய பரஸ்பர நிதி முதலீடுகள் ஒரு நல்வாய்ப்பினை வழங்குகின்றன. அதே சமயம், பங்குகளின் எண்ணிக்கையை விட பரஸ்பர நிதி திட்டங்களின் எண்ணிக்கை அதிகமோ என்று மலைப்புற செய்யுமளவுக்கு இன்று பரஸ்பர நிதி திட்டங்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகி விட்டன. நாளுக்கு நாள் புதிய புதிய திட்டங்களைப் பற்றிய ஏராளமான விளம்பரங்களும் வந்த வண்ணம் உள்ளன. ஒரு நல்ல பரஸ்பர நிதி திட்டத்தினை தேர்ந்தெடுக்க உதவும் சில வழிமுறைகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

முதலில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது. புதிய திட்டங்களில் முதலீடு செய்வதை தவிருங்கள். காரணங்கள் கீழே.

1. புதிய திட்டங்களில், விளம்பர செலவினம், தரகு போன்ற செலவின தொகைகள் அதிகமாக இருக்கும். அந்த செலவினத்தொகைகள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்பவர்களின் மீதுதான் சுமத்தப் படும். எனவே நிதியின் செயல்பாடு வெகுவாக பாதிக்கும்.
2. புதிய திட்டங்களுக்கு எந்த ஒரு வரலாறும் கிடையாது. பழைய வெற்றிகள் வருங்காலத்திற்கு உத்திரவாதம் அளிக்காது என்றாலும், குறிப்பிட்ட திட்டத்தின், பரஸ்பர நிதியின் மற்றும் நிதி மேலாளரின் திறமை பற்றி கணிக்க "வரலாறு ரொம்பவும் முக்கியம்" நண்பர்களே!
3. நடப்பு பரஸ்பர நிதித் திட்டங்களில் நாம் முதலீடு செய்யும் போது, அந்த பணம் கால தாமதம் இல்லாமல் பங்கு சந்தைக்கு போகின்றது. ஆனால் புதிய திட்டங்களில் முதலீடு செய்யும் பணம் பங்கு சந்தைக்கு போக சிறிது கால அவகாசம் பிடிக்கின்றது.
4. தரகர்கள் ஆசைக் காட்டுவது போல புதிய நலத்திட்டங்கள் மலிவான விலையில் ஒருபோதும் கிடைப்பதில்லை. அதே போல ஒரு திட்டத்தின் உள்ளிருப்பு மதிப்பு (NAV), அது எவ்வளவு குறைவு அதிகமாக இருந்தாலும், நிதியின் செயல்பாட்டை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.

ஆக மொத்தத்தில், நிருபிக்கப் பட்ட நடப்பு திட்டங்களில் (Existing Schemes with Proven Track Record) முதலீடு செய்வதையே நான் இங்கு பரிந்துரைக்கின்றேன்.

சந்தையில் ஏராளமாக உள்ள நடப்பு நிதி திட்டங்களில் நாம் ஒரு நிதி திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்படி என்று இனிமேல் பார்ப்போம்.

ஏற்கனவே சொன்னபடி வரலாறு ரொம்பவும் முக்கியம். ஒரு திட்டம் கடந்த சில ஆண்டுகளில், எவ்வளவு லாபத்தை ஈட்டியிருக்கிறது என்பதை பார்ப்பதை, வருமான அளவு எவ்வளவு சீராக உள்ளது (Consistent Performance) என்பதை ஆராய்வதே சிறந்தது. உதாரணத்திற்கு, சந்தை சிறப்பாக இருக்கும் போது அந்த நிதியின் செயல்பாட்டை விட, சந்தை சரிவின் போது நிதியின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதே முக்கியம்.

அதே போல, நிதி மேலாளரின் முன்னனுபவம் எவ்வளவு, அந்த அனுபவம் சிறப்பானதா என்பதையும் பார்க்க வேண்டும். குறுகிய காலத்தில் வேகமான வளர்ச்சி காண முனையும் நிதி மேலாளர்களை தவிர்ப்பது நல்லது. மேலும், நிதியின் செலவினங்கள் எவ்வளவு என்பதையும் பார்க்க வேண்டும். (இந்த தகவல்களை எளிதாக இணையத்தில் சேகரிக்க முடியும்).

நிதி திட்டத்தின் நோக்கங்கள் (Objectives and Investment Strategy) யாவை என்பதையும் கவனிக்க வேண்டும். நிதி திட்டத்தின் நோக்கங்கள் முதலீட்டாளரின் நோக்கங்களுடன் ஒத்துப் போக வேண்டும். உதாரணத்திற்கு, ரிஸ்க் குறைவாக எடுக்க விரும்புபவர்கள் விரிவார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் (Diversified Schemes) முதலீடு செய்யலாம். ரிஸ்க் அதிகம் எடுக்க விரும்புபவர்கள் சிறிய நிறுவன பங்கு திட்டங்களில் (Small & Mid Cap Funds) முதலீடு செய்யலாம். ஒரு குறிப்பிட்ட துறை (உதாரணத்திற்கு மென்பொருள்) சிறப்பாக செயல் படும் என்று நம்புபவர்கள், துறை சார்ந்த திட்டங்களில் (Sector Funds) முதலீடு செய்யலாம். வருமான வரி தவிர்க்க விரும்புபவர்கள் பங்கு சிறுசேமிப்பு திட்டங்களில் (ELSS) முதலீடு செய்யலாம். முக்கிய பங்குக் குறியீடுகளின் வளர்ச்சியின் லாபத்தை நேரடியாக பெற விரும்புபவர்கள் குறியீட்டு நிதி திட்டங்களில் (Index Funds/Exchange Traded Funds) முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் தங்க நிதிகளில் முதலீடு செய்யலாம்.

மேலும், அந்த பரஸ்பர நிதியில் தற்போதைக்கு உள்ள பங்குகள் யாவை என்பதையும் பார்க்க வேண்டும். அந்த பங்குகளின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் ஒரு தோராய கணிப்பு முக்கியம். மேலும் மிக அதிகமான பங்குகளின் இருப்போ அல்லது மிகக் குறைந்த பங்குகளின் இருப்போ, ஆக இரண்டுமே பரஸ்பர நிதியின் செயல்பாட்டை பாதிக்கும்.

இப்போது ஒருவர் எத்தனை நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.

ஒருவர் ஏராளமான நிதி திட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. ஒரே நிதி மேலாளர் நிர்வகிக்கும் இரண்டு திட்டங்கள் தேவையில்லை. அதே போல ஒரே நோக்கத்துடன் உள்ள இரண்டு நிதிகளும் அனாவசியம். ஒருவர் நான்கு முதல் ஐந்து வரையிலான திட்டங்களில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு ஒன்று அல்லது இரண்டு விரிவடைந்த நிதி திட்டங்கள், ஒரு சிறிய பங்கு நிதித்திட்டம் (ரிஸ்க் விருப்பத்தைப் பொருத்து), ஒரு துறை சார்ந்த திட்டம், ஓரிரண்டு வரி தவிர்ப்பு திட்டங்கள், ஒரு குறியீட்டு திட்டம் என்று நாம் திட்டமிட்டு செயல்படலாம்.

இப்போது எப்போது முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.

பங்கு சந்தையின் போக்கை ஓரளவுக்கு துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள், ஒவ்வொரு சரிவின் போதும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். சந்தையின் போக்கை தொடர்ந்து கவனிக்க முடியாதவர்களுக்கு வரப்ரசாதமாக அமைந்தவை மாதாந்திர சேமிப்பு திட்டங்கள் (Systematic Investment Plan ) ஆகும். இவற்றில் முதலீடு செய்வது நீண்ட கால நோக்கில் நல்ல பலனைத் தர மிக அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன.

என்னுடைய கணிப்பின் படி எந்தெந்த திட்டங்கள் (இப்போதைக்கு) நன்றாக செயல் படுகின்றன என்பதையும் நான் இங்கு பதிய விரும்புகிறேன்.

1. விரிவார்ந்த பரஸ்பர (பெரிய பங்குகள்) நிதி திட்டங்கள் - HDFC Equity Fund அல்லது HDFC Top 200 Fund
2. விரிவார்ந்த பரஸ்பர (சிறிய பங்குகள்) நிதி திட்டங்கள் - IDFC Premier Equity Plan A
3. வருமான வரி திட்டங்கள் - Fidelity Tax Advantage Plan
4. முக்கிய குறியீடுகளின் திட்டங்கள் - Nifty BeES & Junior Nifty BeES.

உங்களுடைய முதலீடுகள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்!

நன்றி!

டிஸ்கி: பங்கு சந்தை முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன்னர், பரஸ்பர நிதி திட்ட விண்ணப்பத்தில் உள்ள மற்ற டிஸ்கிகளை படிக்கவும்.

Comments

MCX Gold Silver said…
தகவலுக்கு நன்றி சார்
ஜமீல் said…
உபயோகமான பதிவு...! ஒரு சந்தேகம் சார்....!

நீங்கள் குறிப்பிட்டுள்ள Fund- களின் NAV வித்தியாசம் டிவிடென்ட் Fund களுக்கும் Growth Fund களுக்கும் இடையே மிகுதியாக உள்ளது.

Example:

HDFC Top 200 Fund(G)- 180.09 (NAV)
HDFC Top 200 Fund(D)- 46.57 (NAV)


* ஒரே நிறுவனம், ஒரே மேனேஜர், ஒரே போர்டிபோலியோவில் முதலீடு செய்திருக்கையில், ஏன் dividend மற்றும் Growth Fund களின் NAV மதிப்பில் இவ்வளவு வித்தியாசம் காண முடிகிறது ? ஏதேனும் காரணம் உள்ளதா ?

* டிவிடென்ட் Fund களுக்கும் Growth Fund களுக்கும் இவ்வளவு வித்தியாசம் உள்ள நிலையில், Growth option ஐ தேர்வு செய்யலாமா ?
அல்லது டிவிடென்ட் Fund களில் invest செய்தாலே போதுமான ஏறுமுகமான லாபம் பார்க்க முடியுமா ?

இதற்காக தனியே ஒரு பதிவு போட்டால் கூட பயனுள்ளதாக இருக்கும்.

நன்றிகள் பல !

Jameel
Thomas Ruban said…
//பங்கு சந்தையின் போக்கை ஓரளவுக்கு துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள், ஒவ்வொரு சரிவின் போதும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம்.//

சரியாக சொன்னீர்கள்.

//டிஸ்கி: பங்கு சந்தை முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன்னர், பரஸ்பர நிதி திட்ட விண்ணப்பத்தில் உள்ள மற்ற டிஸ்கிகளை படிக்கவும்.//

முக்கியமான அறிவுரை இது தான் சூப்பர்...


பகிர்வுக்கு நன்றி சார்.
Maximum India said…
நன்றி DG !
Maximum India said…
நன்றி ஜமீல்!

//நீங்கள் குறிப்பிட்டுள்ள Fund- களின் NAV வித்தியாசம் டிவிடென்ட் Fund களுக்கும் Growth Fund களுக்கும் இடையே மிகுதியாக உள்ளது.

Example:

HDFC Top 200 Fund(G)- 180.09 (NAV)
HDFC Top 200 Fund(D)- 46.57 (NAV)


* ஒரே நிறுவனம், ஒரே மேனேஜர், ஒரே போர்டிபோலியோவில் முதலீடு செய்திருக்கையில், ஏன் dividend மற்றும் Growth Fund களின் NAV மதிப்பில் இவ்வளவு வித்தியாசம் காண முடிகிறது ? ஏதேனும் காரணம் உள்ளதா ?

* டிவிடென்ட் Fund களுக்கும் Growth Fund களுக்கும் இவ்வளவு வித்தியாசம் உள்ள நிலையில், Growth option ஐ தேர்வு செய்யலாமா ?
அல்லது டிவிடென்ட் Fund களில் invest செய்தாலே போதுமான ஏறுமுகமான லாபம் பார்க்க முடியுமா ? //

பதிவிலேயே சொன்னபடி ஒரு பரஸ்பர நிதித்திட்டத்தின் உள்ளார்ந்த மதிப்புக்கும் அதன் வருங்கால செயல்பாட்டுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. டிவிடென்ட் திட்டங்களில் வருவாயை அவ்வப்போது முதலீட்டாளர்களிடையே பகிர்ந்து கொடுத்து விடுவதால் உள்ளார்ந்த மதிப்பு குறைவாக காணப் படுகிறது. வளர்ச்சி திட்டங்களில் பிரித்துக் கொடுக்கப் படாததால் NAV உயர்வாக காணப் படுகிறது. அவ்வளவுதான் வித்தியாசம். நீங்கள் எந்த திட்டத்தில் முதலீடு செய்தாலும் சந்தை வளர்ச்சியின் பயனை (சமமாகவே) அனுபவிக்க முடியும்.

அதே சமயத்தில் எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்பது, ஒருவரது தனிப்பட்ட தேவைகளை சார்ந்தது. முதலீட்டின் வருவாயை அவ்வப்போது ஈட்ட விரும்புபவர்கள் டிவிடென்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். உடனடி தேவைகள் அதிகம் இல்லாதவர்கள் வளர்ச்சி திட்டங்களில் முதலீடு செய்யலாம்.


நன்றி ஜமீல்!
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!
ஜமீல் said…
விளக்கத்திற்கு மிக்க நன்றி...!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...