Skip to main content

நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்!

வருகிற பட்ஜெட் அறிவிப்புக்கள் குறித்து சந்தையில் ஏற்கனவே ஏகப் பட்ட எதிர்பார்ப்புக்கள் நிலவி வருகின்றன. அரசு ஊழியர் சம்பள உயர்வு, விவசாய கடன் தள்ளுபடி போன்ற பாப்புலர் திட்டங்கள் மக்களிடம் பெற்ற வரவேற்பே காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும், தொழிற் துறைகளுக்கு காங்கிரஸ் அரசு நிச்சயமாக ஏதாவது செய்யும் என்று பல பங்கு வணிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். முக்கியமாக நிறுவன வரி குறைப்புக்கள், நிறுவனங்களுக்கு SEZ போன்ற இதர சலுகைகள், வரி விடுமுறைகள், அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கல் அல்லது குறைந்த பட்சம் அரசின் பங்கினை குறைத்தல் மற்றும் அரசின் புதிய முதலீட்டுத் திட்டங்கள், இப்படி சந்தையின் எதிர்ப்பார்ப்புக்கள் எக்கச்சக்கம்.

ஆனால் அரசு இப்போதிருக்கும் நிதி நிலையில் வரிச் சலுகைகளையும் புதிய முதலீட்டு திட்டங்களையும் அறிவிக்க முடியுமா என்பது சந்தேகமான ஒன்றுதான். அப்படி ஒரு வேளை, ஏற்றுமதி சார்ந்த ஒரு சில துறைகளுக்கு வரிச் சலுகைகள் அரசு வழங்கினாலும் அது வேறு சில சட்டைப் பைகளில் இருந்து எடுக்கப் பட்டதாகவே இருக்கும். மொத்தத்தில் புதிய வரிகள் அல்லது வரி அதிகரிப்பு ஏதும் இல்லாமல் இருந்தாலே நாமெல்லாரும் அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது இப்போதைய அரசின் நிதி நிலை. முதல் அரை ஆண்டில் மட்டும் மத்திய அரசு வாங்க திட்டமிருக்கும் கடன் அளவு சுமார் 2,54,௦௦௦000 கோடி ரூபாய். இந்த கடன் அளவு இன்னும் கூட அதிகமாக வாய்ப்புக்கள் உண்டு என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

எனவே, இந்த பட்ஜெட் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில வரி சீர்திருத்தங்கள், சில சலுகைகள், சில பொது நிறுவனங்களின் பங்கு வெளியீடு, சில வரிகுறைப்புகள் கொண்டதாக இருக்கலாமே தவிர அனைவரின் முக்கியமாக பங்கு வர்த்தகர்களின் அனைத்து எதிர்ப்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு "கனவு பட்ஜெட்" ஆக இருக்க வாய்ப்புக்கள் சற்று குறைவுதான்.

இருந்தாலும் கூட, குறுகிய காலத்தில் பெருமளவு வந்து சேர்ந்துள்ள அந்நிய முதலீடு காரணமாக உருவான ஏராளமான பட்ஜெட் எதிர்பார்ப்புக்களுடன் சந்தை காத்துக் கொண்டிருக்கிறது.

சந்தையின் எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு மத்திய பட்ஜெட் இருப்பது கடினமான ஒன்று என்றாலும் எந்த பட்ஜெட்டையும் கனவு பட்ஜெட்டாக உருவகப் படுத்தும் பலம் (அந்நிய முதலீடு மட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பட்சத்தில்) ஊடகத்திற்கும் பங்கு சந்தை நிபுணர்களுக்கும் உண்டு என்பதையும் மறுக்க முடியாது.

மொத்தத்தில் சந்தையின் போக்கை குறுகிய கால நோக்கில் நிர்ணயிக்கப் போவது அந்நிய நிறுவனங்களின் பண வரத்தாக இருக்குமே தவிர பட்ஜெட்டாக இருக்காது. அதே சமயம் அந்நிய நிறுவனங்களின் இந்திய சந்தை முதலீடு உலக சந்தைகளின் போக்கையும் அமெரிக்க டாலரின் ஏற்றத்தாழ்வுகளையும் பெருமளவுக்கு சார்ந்து இருக்கும்.

உலக சந்தைகளைப் பொருத்த வரை, அமெரிக்காவின் பொருளாதார எழுச்சி மிக முக்கிய காரணியாக கருதப் படுகிறது. ஒரு சில பொருளாதார தகவல்கள் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி கிட்டத்தட்ட நின்று போய் விட்டது என்பதை வெளிகாட்டினாலும், வேறு சில தகவல்கள் முழுமையான மீட்சிக்கு இன்னும் நீண்ட காலம் பிடிக்கும் என்று உணர்த்துகின்றன. முக்கியமாக கச்சா எண்ணெய், அடிப்படை உலோகங்களின் அதிரடி விலை உயர்வு பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று கருதப் படுகிறது.

அதிரடி பொருளாதார மீட்சியை எதிர்பார்த்த உலக சந்தைகள் அது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதை உணர்ந்ததும் தமது வேகத்தை குறைத்துக் கொண்டன. அந்த வேகத்தடையின் எதிரொலி இந்திய சந்தைகளிலும் சென்ற வாரம் உணரப்பட்டது.

அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பானிய யெந் ஆகியவற்றின் உயர்வு மற்ற சந்தைகளை பெருமளவு பாதித்தது. முக்கியமாக இந்தியா உட்பட வளரும் நாடுகளின் சந்தைகள் பெருமளவு பாதிக்கப் பட்டன. சென்செக்ஸ், நிபிட்டி குறியீடுகளின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழங்கப் பட்ட தீர்ப்பு நமது சந்தையின் வீழ்ச்சியை துரிதப் படுத்தியது.

அமெரிக்க பொருளாதாரத்தின் நிலை ஓரளவுக்கு தெளிவான பின்னரே இந்தியா போன்ற நாடுகளில் மீண்டும் பெரிய அளவில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சென்ற வாரம் அமெரிக்க வங்கிகளின் தரவரிசை குறைக்கப் பட்டதின் எதிரொலியாக இந்திய பங்குகள் பெருமளவு வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசு விதிக்க விரும்பும் சந்தை கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்க பொது வங்கியின் வட்டி அதிகரிப்பு முயற்சி ஆகியவை உலக சந்தைகளில் பண போக்குவரத்தை பெருமளவு பாதிக்கும் என்றும் நம்பப் படுகிறது.

மேலும், இந்தியாவில் இந்த வருடத்திற்கான மழை அளவு, பொருளாதார சீர்த்திருத்தங்களில் புதிய அரசின் உறுதியான நிலைப்பாடு மற்றும் இந்திய நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் லாப உயர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இனிமேல் புதிய முதலீடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மொத்தவிலை பணவீக்கம் எதிர்மறை பகுதிக்குச் (Negative Territory -1.61%) சென்றது நமது பொருளாதாரத்திற்கு கெட்ட செய்தி என்றாலும் பணச்சுருக்க நிலை (Deflationary Environment) இந்தியாவில் ஏற்படாது என்று மத்திய வங்கித் தலைவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், வர்த்தகர்கள் இப்போதைக்கு எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. ரூபாய் - டாலர் வர்த்தகத்தில் கவனம் வைப்பது நல்லது. நிபிட்டி மீண்டும் ஒருமுறை 4400 அளவுகளை (சென்செக்ஸ் 14725) உறுதியாக கடந்தால் மட்டுமே உயர்வை எதிர்பார்த்து வர்த்தகம் செய்யலாம். வங்கிப் பங்குகளின் மீது ஒரு கண் வைப்பது நல்லது.

சரியும் விலைகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுக்கின்றன. குறைந்த விலையில் கிடைக்கும் அடிப்படையில் சிறந்த பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக சேகரிப்பது நல்லது. சிறப்பாக செயல்படும் அரசு நிறுவன பங்குகளை கவனிக்கலாம். வங்கித் துறைப் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் சேகரிக்கலாம். இந்திரபிரஸ்தா காஸ் போன்ற எரிவாயு சம்பந்தப் பட்ட பங்குகளை நீண்ட கால நோக்கில் கவனிக்கலாம்.

வரும் வாரத்திற்கான தொழிற்நுட்ப அறிகுறிகள்.

சென்செக்ஸ் - அரண்- 14,500, 14200 & 13,600
சென்செக்ஸ் - எதிர்ப்பு - 14,700 & 15,200

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Comments

//அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கல் அல்லது குறைந்த பட்சம் அரசின் பங்கினை குறைத்தல்//

விளங்கீறும்!
Maximum India said…
நன்றி வால்பையன்!

என்னைப் பொறுத்தவரை நன்கு செயல் படும் அரசு நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் வெளியிடப் பட்டால் சந்தையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவியாகவே இருக்கும். நம்மைப் போன்ற சிறிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய இப்போதிருக்கும் ஒரு சில பங்குகளின் பின்னே மட்டுமே செல்ல வேண்டிய கட்டாயம் குறையும். மேலும் அரசு நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகும் பட்சத்தில் அந்த நிறுவனங்களின் ஊழியர்களும் சற்று அதிக (வணிக) பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் அல்லவா?

நேரடி தனியார்மயமாக்க கொள்கை கூட ஒருவகையில் தவறில்லை என்றாலும் ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்கள் அரசின் நம்பகத்தன்மையை குறைக்கின்றன.

நன்றி.
Thomas Ruban said…
//சரியும் விலைகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுக்கின்றன. குறைந்த விலையில் கிடைக்கும் அடிப்படையில் சிறந்த பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக சேகரிப்பது நல்லது. சிறப்பாக செயல்படும் அரசு நிறுவன பங்குகளை கவனிக்கலாம். வங்கித் துறைப் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் சேகரிக்கலாம். இந்திரபிரஸ்தா காஸ் போன்ற எரிவாயு சம்பந்தப் பட்ட பங்குகளை நீண்ட கால நோக்கில் கவனிக்கலாம்.//

உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

பருவ மழை பொய்த்து போனது பங்கு சந்தையில் பதிப்பை ஏற்படுத்துமா?

நன்றி.. நன்றி...
Thomas Ruban said…
//நேரடி தனியார்மயமாக்க கொள்கை கூட ஒருவகையில் தவறில்லை என்றாலும் ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்கள் அரசின் நம்பகத்தன்மையை குறைக்கின்றன. //

உண்மைதான் சார்.


தாங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி.
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

//பருவ மழை பொய்த்து போனது பங்கு சந்தையில் பதிப்பை ஏற்படுத்துமா? //

பங்கு சந்தையில் உடனடி பாதிப்பு இருக்குமா என்பதை கணிப்பது கடினம். ஆனால் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதாரத்தை பங்கு சந்தை சரியாக பிரதிபலிக்க வேண்டும் என்றாலும் அது எப்போது எந்த வகையில் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

நன்றி.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...