Saturday, November 28, 2009

ஏன்? எதற்காக?


நமது சாலைப் பயணம் சில சமயங்களில் ரேஸ் பயணமாக மாறி விடுவதுண்டு. நாம் சென்றடைய வேண்டிய இலக்கை நோக்கி சீராக பயணம் செய்து கொண்டிருக்கையில், விருட்டென்று ஒரு வண்டி நம்மை (சற்று முரட்டுத்தனமாக) முந்தினால் நமக்கு ஒருவகையான கோபம் வந்து விடுகிறது. உடனடியாக, "விட்டேனா பார்" என்று அந்த வாகனத்துடன் ஒருவித மானசீக ரேஸ் ஆரம்பித்து விடுகின்றது. சில சமயங்களில் அடைய வேண்டிய இலக்கு, மற்ற பிரச்சினைகள் அனைத்தும் மறந்து போய், அந்த குறிப்பிட்ட வாகனத்தை விஞ்சுவது மட்டுமே நமது ஒரே இலக்காக மாறி விடுகிறது. இந்த "சாலை வழி இலக்கிற்காக" நாம் சில சமயங்களில் உயிரைக் கூட பணயம் வைத்து வண்டியை செலுத்துவதும் உண்டு. இந்த ரேஸ்கள் பல சமயங்களில் ஈடு செய்ய முடியாத நஷ்டத்தையும் ஏற்படுத்துவதுண்டு.

இன்று மும்பை-புனே சாலையில் செல்லும் போது நான் சிந்தித்த ஒரு விஷயம், "சில நிமிட ரேஸ் (?) பயணத்திற்கு பின்னே அந்த போட்டி வண்டி (?) தடம் மாறி விடுகிறது. அதற்கப்புறம் அந்த வண்டி நம் கண்ணில் படப் போவதே இல்லை. அந்த வண்டி ஓட்டுனர் யாரென்று கூட நமக்கு தெரியாது. அல்லது அக்கறையும் கொள்வதில்லை. வெற்றி பெற்றதற்காக யாரும் இங்கே கோப்பைகளும் கொடுப்பதில்லை. சொல்லப் போனால் யாரும் கண்டுக் கொள்ளப் போவதுமில்லை. மானசீகமான ஈகோ வெற்றியை தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. பின்னர் எதற்காக இப்படி உயிரை (வாகன ஓட்டியின் உயிர் மட்டுமல்ல. இன்னும் பல உயிர்கள்) பணயம் வைத்து பிரயோஜனமில்லாத ஒரு போட்டி?"

இதே சிந்தனை நமது வாழ்க்கை பயணத்திற்கும் பொருந்துமல்லவா? வாழ்க்கைப் பயணத்தில் நாம் போட்டியாளர்களாக, சில சமயங்களில் எதிரிகளாகவே கூட கருதும் பலர் உண்மையில் நம்முடன் பயணிக்கப் போவது வெகு சில காலம் மட்டுமே. அவர்களுடன் முட்டி மோதி வெற்றி பெறுவது மட்டுமே நம் லட்சியமாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. அவ்வாறான முயற்சிகள், பெரும்பாலும் நம் சக்தியை வீணடிப்பதாகவே அமையும். சில சமயங்களில் நம்முடைய ஒரிஜினல் இலக்கை அடைய முடியாத படி கூட செய்து விடும்.

நம்முடைய கவனம், நாம் சென்றடைய வேண்டிய இலக்கு, அதை அடைய வேண்டியதற்கான தூரம், நேரம், முயற்சிகள் ஆகியவற்றின் மீது மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

என்னுள் எழும்பிய கேள்வி.

இடையில் வந்து இடையிலேயே காணாமல் போகிறவர்கள் பற்றி நமக்கு என்ன அக்கறை?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நன்றி.

18 comments:

Pandian R said...

நல்ல சிந்தனை

Maximum India said...

நன்றி fundoo !

பீர் | Peer said...

இடையிடையே வருபவர்களையும் உடன் அழைத்துச்செல்லும் ஆவலாய் இருக்கலாம். :)

Maximum India said...

இருக்கலாம்! இருக்கலாம்! :)

அப்புறம், பக்ரித் எப்படி இருந்தது? ஊர் பக்கம் வரலியா? :)

வாழ்த்துக்கள்!

MCX Gold Silver said...

சிறந்த பதிவு நன்றி சார்

Maximum India said...

நன்றி DG !

பீர் | Peer said...

ம்.. பக்ரீத் நல்லா போச்சு சார். மதியம் நண்பர் வீட்டில் விருந்து. மாலை வெறொரு நண்பருடன் ஊர் சுற்றல் :)

அடுத்த மாதத்திலிருந்து ஊரிலேயே தான் இருக்கப்போகிறேன்.

Thomas Ruban said...

நல்ல உயர்ந்த சிந்தனை சார்.

அந்த சில நிமிட ரேஸ் பயணத்தில் உயிர் போனால் கூட பரவாயில்லை!! ஆனால், உடல் உறுப்புகளை இழந்து வாழ்நாள் முழுவதும் அடுத்தவர்க்கு பாரமாய் மனவேதனையோடும், உடல்வேதனையோடும், வாழும் கொடுமை இருக்கிறேதே......

பதிவுக்கு நன்றி சார்....

Maximum India said...

வெல்கம் பேக் பீர்!

உங்கள் வரவு நல்வரவாகுக!

வாழ்த்துக்கள்!

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

சில தொழிற்நுட்ப கோளாறுகள் காரணமாக சென்ற பதிவில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவற்றுக்கு அடுத்த பதிவில் பதில் சொல்கிறேன்.

//அந்த சில நிமிட ரேஸ் பயணத்தில் உயிர் போனால் கூட பரவாயில்லை!! ஆனால், உடல் உறுப்புகளை இழந்து வாழ்நாள் முழுவதும் அடுத்தவர்க்கு பாரமாய் மனவேதனையோடும், உடல்வேதனையோடும், வாழும் கொடுமை இருக்கிறேதே...... //

உண்மைதான் தாமஸ் ரூபன்!

இந்த ரேஸ் பயணத்தை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பாருங்கள்! போட்டி பொறாமைகள் ஒருவரது சக்தியை உறிஞ்சி விடுகின்றன. நம்முடைய பாதையில் மட்டும் நாம் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நம்முடைய உணவு அடுத்தவர் வயிற்றில் இல்லை என்பதையும் எல்லாருக்கும் முன்னேற வாய்ப்புக்கள் உண்டு என்பதையும் அனைவரும் புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

நன்றி.

நிகழ்காலத்தில்... said...

நல்லதொரு சிந்தனை, தொடரட்டும் நண்பரே

வாழ்த்துகள்

நிலவுக்காதலன் said...

great true sir :) but v need to thank them for motivating us towards success in life. not d bikers i mean

Maximum India said...

நன்றி சுப்ரமணிய ஆதித்தன்!

//but v need to thank them for motivating us towards success in life. not d bikers i mean //

நம்முடன் போட்டி போடுபவர்கள் நம்மிடம் ஒளிந்திருக்கும் சில திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் போட்டியிடாமல் போட்டியிடும் முறையை (blue ocean strategy) நாம் வளர்த்து கொண்டால் மிகப் பெரிய வெற்றிகளை நம்மால் பெற முடியும்.

நன்றி.

Maximum India said...

நன்றி "நிகழ காலத்தில்"!

Naresh Kumar said...

அது கூட பராவாயில்லை!!!

அவனுங்க ரேஸ் விளையாடி சமயத்துல சம்பந்தமே இல்லாதாவன் உயிரை வாங்கிடுறானுங்களே என்ன பண்றது???

பங்குசந்தையோ, வாழ்க்கையோ, பொதுவோ கதை எல்லாத்துக்கும் பொருந்துற மாதிரி இருக்கு!!! அருமை....

Maximum India said...

// அவனுங்க ரேஸ் விளையாடி சமயத்துல சம்பந்தமே இல்லாதாவன் உயிரை வாங்கிடுறானுங்களே என்ன பண்றது???//

உண்மைதான் :(

நன்றி நரேஷ்!

KARTHIK said...

// மானசீகமான ஈகோ வெற்றியை தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை.//

அது ஏன்னு தெரியாதுங்க
மொதல்ல ஈரோடு கோவை சேலம் ரெகுலரா வண்டி ஓட்டிட்டு இருந்தப்ப.
பக்கத்துகார் பெருந்துரைலைருந்து எனக்கும் அவருக்கும் கோவை சிட்டி லட்சுமி மில்ஸ் ஸ்டாப்வரைக்கும் போட்டி அவனாசி தாண்டி ரண்டு வண்டியும் ஒரு இடத்துல சரியா 140 தாண்டி ஒட்டுக்கா போயிகிட்டு இருந்தோம்.
இப்போ அப்படி ஓட்ட கொஞ்சம் பயாமா தான் இருக்குங்க.
இப்போல 80 தாண்டுரதில்லைங்க

அது ஒரு வயசு
இப்போ நெனச்சாலும் அப்படி போக மனசுவராதுங்க மேக்ஸ்
குடும்பம் கண்முன்னாடி தெரியுதே :-))

Maximum India said...

நன்றி கார்த்திக்!

//அது ஏன்னு தெரியாதுங்க
மொதல்ல ஈரோடு கோவை சேலம் ரெகுலரா வண்டி ஓட்டிட்டு இருந்தப்ப.
பக்கத்துகார் பெருந்துரைலைருந்து எனக்கும் அவருக்கும் கோவை சிட்டி லட்சுமி மில்ஸ் ஸ்டாப்வரைக்கும் போட்டி அவனாசி தாண்டி ரண்டு வண்டியும் ஒரு இடத்துல சரியா 140 தாண்டி ஒட்டுக்கா போயிகிட்டு இருந்தோம்.//

அடிபட்டால் என்ன ஆகும் என்று பயம் இல்லாத போது அப்படித்தான் வேகமாகப் போகத் தோன்றும். அனுபவங்களே மனிதரை செம்மைப் படுத்துகின்றன.

//இப்போ நெனச்சாலும் அப்படி போக மனசுவராதுங்க மேக்ஸ்
குடும்பம் கண்முன்னாடி தெரியுதே :-))//

கண்டிப்பாக! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Blog Widget by LinkWithin