Sunday, January 24, 2010

வழியிலே மேடுபள்ளம்!


பெரும்பாலான உலக சந்தைகள் சென்ற வாரம் பெரியதொரு வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தன. சீனா அரசு கொண்டு வந்த கடன் கட்டுப்பாட்டு நடவடிக்கை, ஒபாமா அமெரிக்க வங்கிகளின் சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவென்று அறிமுகப் படுத்த விரும்பும் சட்ட திருத்த நடவடிக்கை மற்றும் கிரீஸ் அரசின் கடன் தடுமாற்றம் ஆகியவை பங்கு சந்தை மனநிலையை வெகுவாக பாதித்தன.

உள்ளூரை பொறுத்தவரை மிகப் பெரிய கட்டுமானத்துறை நிறுவனமான லார்சென் டூப்ரோ எதிர்பார்ப்புக்கு குறைவாக லாபம் ஈட்டியது அந்த நிறுவனத்தின் பங்கினை மட்டுமல்லாமல், பல கட்டுமானப் பங்குகளையும் கீழே விழச் செய்தது.

இந்தியாவின் புள்ளியியல் துறையின் தலைவர் பணவீக்க விகிதம் இரண்டு இலக்கத்தை தொட வாய்ப்புக்கள் உள்ளன என்று கூறியதும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததும் உள்ளூர் சந்தையை தடுமாறச் செய்தன.

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய தலைமை வங்கி "ரொக்க இருப்பு விகிதத்தை" (CRR) அதிகரிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ரியல் எஸ்டேட், வாகனத் துறை போன்ற Interest Rate Sensitive துறை பங்குகளை வீழ்ச்சி செய்ய அடிகோலியது.

ஒபாமாவின் கட்சி அமெரிக்க மேல்சபையில் சூப்பர் மஜோரிட்டி இழக்கும் பட்சத்தில் ஒபாமா கொண்டு வர விரும்பிய "மருத்துவ நல" மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் இருக்கலாம் என்ற அச்சத்தில் மருந்து துறை பங்குகளும் வீழ்ச்சியடைந்தன. சீனாவின் வளர்ச்சி விகிதம் குறைந்தால் கச்சா எண்ணெய் & உலோகங்களின் தேவை குறையலாம் என்ற அச்சத்தில் குறிப்பிட்ட துறை பங்குகளும் வீழ்ந்தன.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குகளை மிகப் பெரிய அளவில் விற்பனை செய்தன. இந்திய நிதி நிறுவனங்கள் ஓரளவுக்கு பங்குகளை வாங்கியது சந்தையின் வீழ்ச்சியை மட்டுப் படுத்த உதவியது.

இப்போது வரும் வார சந்தை நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

சென்ற வார இறுதியில் அமெரிக்க பங்குகள் பெருமளவுக்கு வீழ்ந்தது நாளைய சந்தை துவக்கத்தை ஓரளவுக்கு பாதிக்க வாய்ப்புள்ளது. வரும் வியாழன்று நிகழவுள்ள "மாதாந்திர எதிர்கால நிலை வர்த்தகத்தின் நிறைவு" சந்தையில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தலாம். அமெரிக்க வங்கிகளை எந்த அளவுக்கு ஒபாமா கட்டுப் படுத்த விரும்புகிறார் என்பதையும் அந்த முயற்சி அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் இந்திய வரவை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதையும் கூர்மையாக கவனிக்க வேண்டியிருக்கும்.

வரும் வெள்ளியன்று இந்திய தலைமை வங்கி, தனது நிதி கொள்கையின் காலாண்டு அறிக்கையை வெளியிடவுள்ளது. அந்த அறிக்கையில் வட்டி வீதங்களை தலைமை வங்கி உயர்த்துமா என்பதையும் சந்தை அச்சத்துடன் கவனித்து கொண்டிருக்கும்.

பாரதிய ஸ்டேட் வங்கி, மகிந்திரா, ஸ்டெரிலைட், ஹிண்டல்கோ, SAIL டாட்டா மோட்டார், டாட்டா ஸ்டீல் போன்ற பெரிய நிறுவனங்கள் வரும் வாரத்தில் தமது காலாண்டு நிதி அறிக்கையை வெளியிடவுள்ளன. இந்த காலாண்டு அறிக்கைகள் சந்தையின் எதிர்பார்ப்புக்களை எந்த அளவுக்கு பூர்த்தி செய்யும் என்பதும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.

இவை மட்டுமல்லாமல், அடுத்த வாரம் வெளியிடப் படவுள்ள அமெரிக்க தலைமை வங்கியின் வட்டி நிர்ணய முடிவு மற்றும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி போன்றவையும் நமது சந்தையின் போக்கினை பாதிக்கும்.

ஆக மொத்தத்தில், வரும் வாரத்தில் நமது சந்தை பல மேடு பள்ளங்களை சந்திக்கும் என்றே இப்போதைக்கு தோன்றுகிறது. குறுகிய கால வர்த்தகர்கள் தகுந்த ஸ்டாப் லாஸ் லிமிட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடவும். நீண்ட கால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பெரிய சரிவின் போதும் வலுவான பங்குகளை மெல்ல மெல்ல சேகரித்து வரலாம்.

வரைபட தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி இன்டெக்ஸ் 4950 & 4780 அளவுகளில் நல்ல அரணை கொண்டிருக்கும் வாய்ப்புள்ளது. 5180 புள்ளிகள் எதிர்ப்பாக இருக்கக் கூடும்.

வரும் வாரம் எல்லாவகையிலும் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி.

2 comments:

manjoorraja said...

கடந்தவாரம் முழுவதும் சந்தையில் இறங்குமுகமாகவேஇருந்தது. லார்சன் ட்யூப்ரோ மற்றும் சைனாவினால் தான் என நினைத்தேன். மேலதிக தகவல்களை தந்ததற்கு மிகவும் நன்றி.

Maximum India said...

நன்றி மஞ்சூர் ராசா!

Blog Widget by LinkWithin