Sunday, June 14, 2009

சோர்ந்து போன காளைகளும் பயந்து போன கரடிகளும்!


பல வாரங்களாக தொடரும் காளைப் பாய்ச்சல் சென்ற வாரம், லாப விற்பனை காரணமாக, கொஞ்சம் தடுமாறி உள்ளது. அதே சமயம், சந்தையில் அடிக்கடி நடைபெறும் அதிரடி மாற்றங்கள் கரடிகளையும் மிரளச் செய்துள்ளன. இப்படி எதிரணியில் உள்ள காளைகளும் கரடிகளும் அடுத்து செய்வதறியாது தயங்கி நிற்கும் நிலையில் வரும் வாரம் எப்படி இருக்கும் என்று இங்கு பார்ப்போம்.

சென்ற வாரம் சந்தைகள் லாப விற்பனை காரணமாக, வீழ்ச்சியுடனேயே துவங்கின. ஏற்கனவே நாம் கூறியிருந்த படி நிபிட்டி 4500-4600 புள்ளிகளுக்கிடையே (லாப விற்பனை காரணமாக) கடுமையான எதிர்ப்பை சந்தித்து வந்தது. சரிதான், இதற்கு மேல் கரடிகள் தங்கள் வேலையை காட்டுவார்கள் என்று பலரும் நினைத்திருந்த நிலையில், இந்தியாவால் 9 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என்ற பிரதமரின் பாராளுமன்ற பேச்சு சந்தையை தலைகீழாக மாற்றியது. மேலும் சத்யம் நிறுவனம் லாபம் சம்பாத்தித்தது மென்பொருள் பங்குகளை உயரத்தில் ஏற்றியது. அதே சமயம், உலக சந்தைகளின் நிலையில்லாத போக்கும், கச்சா எண்ணெயின் விலை உயர்வும் சந்தையை பெரிய அளவுக்கு முன்னேற விடாமல் செய்து விட்டன.

தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த இந்திய தொழிற்துறை உற்பத்தி குறியீடு சென்ற மாதம் உயர்வு கண்டதாக வெளியிடப் பட்ட புள்ளிவிவரங்கள் சந்தைக்கு மகிழ்ச்சி அளித்தாலும், பங்கு வர்த்தகர்களின் லாப விற்பனைக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. சென்ற வாரம் சிறிய மற்றும் மத்திய நிலை பங்குகள் வெகுவாக வீழ்ச்சி அடைந்தன.

மொத்தத்தில், மூன்று மாத காளை ஓட்டத்தின் வேகம் தடை பட்ட ஒரு வாரமாகவே சென்ற வாரம் அமைந்திருந்தது.

அதே சமயம், வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்ந்து வரும் பங்கு சந்தை முதலீடு, கரடிகளை ஒரு உறுதியான நிலைப்பாடு எடுப்பதிலிருந்து தடுத்து வருகிறது.

அமெரிக்காவைப் பொருத்த வரை, பொருளாதார சரிவு ஒரு முடிவின் அருகே நெருங்கி விட்டதாகவே பலரும் கருதுகின்றனர். ஆனால், மீண்டும் அந்த நாடு ஒரு துரித வளர்ச்சியை சந்திக்குமா என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.

இந்தியாவைப் பொருத்த வரை, ஏற்கனவே இங்கு பல முறை சொன்னபடி, நீண்ட கால நோக்கில் பங்கு சந்தைகள் முதலீட்டுக்கு ஏற்றவை. ஆனால், பங்குகளின் தேர்வு சரியான முறையில் அமைந்திருக்க வேண்டும்.

குறுகிய கால நோக்கில், இப்போதைக்கு பங்கு குறியீடுகளின் அளவு ஒரு சமன் நிலையை அடைந்து விட்டதாகவே தோன்றுகிறது.

சென்செக்ஸ் குறியீடு 15600 புள்ளிகள் அளவில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும் என்று தோன்றுகிறது. சென்செக்ஸ் குறியீட்டின் தடையில்லா 14 வார ஓட்டத்தில் ஒரு வேகத்தடை வருவதற்கான அறிகுறிகள் அதிகமாக தென்படுகின்றன. மொத்தத்தில் வரும் வாரத்தில் சந்தை மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும் என்றும் தோன்றுகிறது.

சென்செக்ஸ் குறியீட்டுக்கான அடுத்த அரண் நிலைகள் 14500 மற்றும் 13500 புள்ளிகளுக்கு அருகாமையில் இருக்கும். வாங்கும் நிலை எடுக்க விரும்புவர்கள், 15600 என்ற எதிர்ப்பு நிலை முழுமையாக முறியடிக்கப் படும் வரை பொறுத்திருப்பது நல்லது.

ஒருவேளை சந்தை பெருமளவில் வீழ்ச்சி அடைந்தால், குறைந்த விலையில் ஊடகம் மற்றும் சிமெண்ட் துறை பங்குகளை நீண்ட கால நோக்கில் கவனிப்பது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

9 comments:

Maximum India said...

நன்றி தமிழினி!

கூடிய சீக்கிரமே உங்கள் வலைதளத்துடன் இந்த பதிவுப் பூவினை இணைக்க முயற்சிக்கிறேன்.

நன்றி.

Thomas Ruban said...

வரும் வாரத்தில் சந்தை மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும் என்றும் தோன்றுகிறது.

உங்களுடைய கருத்துகள் என்க்கு மிகவும் பயன் உள்ளதாக இருத்தது.உங்களுக்கு நன்றிகள் பல பல...இனி வாரம் வாரம் தொடருத்து எழுதிவ்ர்கள் என நம்பிகிற்ன்.

நன்றி ....நன்றி ....நன்றி ....

KARTHIK said...

தகவலுக்கு நன்றி

Maximum India said...

அன்புள்ள தாமஸ் ரூபன்!

//வரும் வாரத்தில் சந்தை மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும் என்றும் தோன்றுகிறது.//

உண்மைதான்!

//உங்களுடைய கருத்துகள் என்க்கு மிகவும் பயன் உள்ளதாக இருத்தது.உங்களுக்கு நன்றிகள் பல பல...இனி வாரம் வாரம் தொடருத்து எழுதிவ்ர்கள் என நம்பிகிற்ன்.//

உங்கள் ஆதரவு தொடரும் போது, என்னால் தொடர்ந்து எழுத முடியும் என்று நம்புகிறேன்.

நன்றி.

Maximum India said...

நன்றி கார்த்திக்!

Thomas Ruban said...

/உங்கள் ஆதரவு தொடரும் போது, என்னால் தொடர்ந்து எழுத முடியும் என்று நம்புகிறேன்.//

எங்களுடைய ஆதரவும், ஓட்டும் எப்பொழுதும் உங்களுக்கு.

நன்றி.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

சதுக்க பூதம் said...

அமெரிக்கா நிதி நெருக்கடியை சரி செய்ய பல பில்லியன் டாலர்களை பெடரல் ரிசர்வ் வங்கிகளுக்கு வட்டியில்லா கடனாக கொடுத்துள்ளது. அமெரிக்காவில் அவர்கள் முதலீடு செய்ய இது சரியான தருணம் இல்லாததால் இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் --- முதலீடு செய்கின்றனர். அவர்கள் ஏற்ற இறக்கத்தில் நன்கு சம்பாதிக்க முயலுவார்கள். அமெரிக்க பொருளாதாரம் சரி அடையும் வரை இது போல் ஏற்ற இறக்கங்களும், இந்திய பொருளாதாரத்தை பற்றிய சிறு நம்பிக்கை செய்திக்கும் நன்கு உயர்வதும் தொடரும் என்று நினைக்கிறேன்.

Maximum India said...

//அமெரிக்கா நிதி நெருக்கடியை சரி செய்ய பல பில்லியன் டாலர்களை பெடரல் ரிசர்வ் வங்கிகளுக்கு வட்டியில்லா கடனாக கொடுத்துள்ளது. அமெரிக்காவில் அவர்கள் முதலீடு செய்ய இது சரியான தருணம் இல்லாததால் இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் --- முதலீடு செய்கின்றனர். அவர்கள் ஏற்ற இறக்கத்தில் நன்கு சம்பாதிக்க முயலுவார்கள். //

உண்மைதான் சதுக்க பூதம்!

இது போன்ற பணத்தை எப்படி உபயோகப் படுத்துகிறார்கள் என்பது கவனிக்கப் படும் என்று ஒபாமா இப்போது கூறி உள்ளார். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி.

Blog Widget by LinkWithin