Skip to main content

நண்பர்களே!

கல்கி ஒரு முறை சொன்னார். "இளமை காலத்தில் மிகுந்த மகிழ்ச்சி கொடுக்கக் கூடிய விஷயங்கள் இரண்டு. ஒன்று காதல் மற்றொன்று நட்பு. அதே சமயம், காதலைப் பொறுத்தவரை அதில் எவ்வளவு ஆனந்தம் இருக்கிறதோ அவ்வளவு துக்கமும் அடங்கி இருக்கிறது. ஆனால், ஆனந்தத்தை தவிர வேறு ஏதும் இல்லாத ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் அது நட்பு மட்டும்தான்".

நட்பு நாட்கள் அற்புதமானவை. இன்றளவும் மறக்க முடியாதவை.

நட்புக்களில்தான் எத்தனை வகை? பள்ளி நட்பு, கல்லூரி நட்பு, அலுவலக நட்பு, பொதுவான நோக்கங்களால் உருவாகும் நட்பு, நட்பின் நட்பான "நாடோடிகள்" நட்பு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

நட்புக்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாது. படித்தவன் படிக்காதவன் என்ற வித்தியாசம் கிடையாது. சேலத்தில் ஒரு இரும்பு உருக்காலையில் பணி புரிந்து, பின்னர் அரசு பணி கிடைத்து அங்கிருந்து விலகிய போது, அங்கு மிகவும் குறைந்த ஊதியத்தில் பணி புரிந்த நண்பர்கள், தமது மாத வருமானத்தில் பெரும்பகுதியை இட்டு, நான் மறுத்த போதும், எனக்காக ஒரு கைக்கடிகாரம் வழங்கினார்கள். அதற்கு பிறகு நான் எத்தனையோ விலை உயர்ந்த கடிகாரங்கள் வாங்கினாலும் அந்த பழைய கடிகாரம் இன்றளவும் எனக்கு ஸ்பெஷல்தான். மற்ற கடிகாரங்கள் நேரத்தை மட்டும் காட்ட, இந்த கடிகாரம் நட்பையும் சேர்த்து காட்டுகிறது.

நட்புக்கு இனம், மொழி, மதம் வித்தியாசங்கள் கிடையாது. என்னுடைய மிகச் சிறந்த நண்பர்களில் பலர் பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள்தான். எத்தனையோ முறை மதம் சார்ந்த இடங்களுக்கு செல்ல திட்டம் இடும் போது, இவர் இந்த மதத்தை சார்ந்தவர், இங்கு வர முடியாது என்றெல்லாம் நினைத்ததே இல்லை. போனால் எல்லோரும் ஒன்றாகத்தான் சென்று இருக்கிறோம்.

நட்புக்கு வயது வித்தியாசம் கிடையாது. பல சமயங்களில், நம்மை விட வயதில் மிகவும் மூத்தவர்களை "டா" போட்டு கூட பேசியிருக்கிறோம். சில பெரியவர்களுடன் ஏற்படும் மரியாதையான நட்பு நமக்கு வாழ்வின் கலங்கரை விளக்கமாக அமைந்திருக்கிறது. இளையவர்களுடன் ஏற்படும் நட்பு, நமது மனதின் வயதை குறைக்கின்றது.

நாடோடிகள் படத்தில் சொல்வது போல, "நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே" மட்டுமே உண்மை அல்ல. "நண்பனின் உறவுகள் எனக்கும் உறவுகளே" என்பது கூட உண்மைதான். நானே எத்தனையோ முறை, நண்பர்கள் வீட்டில் இல்லாத போதிலும் அவர்களின் வீட்டில் தங்கி இருக்கின்றேன். இன்றளவும் கூட, சொந்த ஊருக்கு செல்லும் போதெல்லாம், எனது நண்பர்களின் உறவுகளையும் முடிந்த வரை பார்த்து விசாரித்து விட்டுத்தான் வருகிறேன்.

நட்பு வட்டாரம் பெரிதாக இருக்கும் போது, காதல் எல்லாம் ஒரு மண்ணாங்கட்டி என்று நினைக்க தோன்றும். ஆண் பெண் வித்தியாசம் தெரியாது. நம் மனம் ஒத்தவர் ஒரு மனித துணை என்ற உணர்வு மட்டும்தான் இருக்கும். நண்பர்களுடன் பயணம் செய்யும் போது, ஏதோ ஒரு பெரிய படையின் நடுவே நடப்பது போன்ற ஒரு பாதுகாப்பு உணர்வு கூட தோன்றி இருக்கிறது. மாலையில் தொடங்கி பின்னிரவு வரை எவ்வளவோ பேசி தீர்த்திருக்கிறோம். அப்போதெல்லாம் உலகமே நம் காலடியில் கிடப்பது போன்ற ஒரு உணர்வு தோன்றி இருக்கிறது. அன்று அப்படி என்னதான் பேசினோம் இன்று நினைக்கையில் மலைப்பாக இருக்கிறது.

சேலத்தில் இருந்தவரை எங்களுக்கு ஏற்காடு ஓர் வேடந்தாங்கலாக இருந்திருக்கிறது.
இதே ஆகஸ்ட் முதல் ஞாயிற்று கிழமை நண்பர்கள் தினத்தில் எத்தனையோ முறை ஏற்காடு பின்வழி சாலையில் மெல்லிய மழைச் சாரலில் நடுசாலையில் ஆட்டம் போட்டிருக்கிறோம். மயங்கும் மாலை நேரத்தில், ஏரிக் கரையோரம் அரட்டை அடித்து விட்டு, இரவு நேரங்களில் சேலத்திற்கு திரும்பி இருக்கிறோம். மொபெட் முதல் கார் வரை அனைத்து வாகனங்களும் ஒருவருக்கொருவர் சாலை வெளிச்சம் இட்டு கொண்டு ஊர்வலமாக வந்திருக்கிறோம். அன்றைய தினம் எதிர்கொள்பவர்கள் அனைவருமே நண்பர்களாகத்தான் தெரிந்திருக்கிறார்கள்.

ஒருவரது இன்பதுன்பங்கள் மற்றவர்களாலும் பகிரப் பட்டிருக்கின்றன. காதல் தோல்வியில் காணாமல் போன ஒரு நண்பரை குடும்பத்தோடு சேர்த்து வைக்க வேண்டிய பொறுப்புடன், ஊர் ஊராக தேடி அலைந்த அனுபவங்கள் உண்டு. முன் பதிவு செய்யப் படாமல், சில பிச்சைக்காரர்களுடனும், தொழு நோயாளிகளுடனும், ரயில் பயணம் செய்து, மொழி புரியாத மாநிலங்களில், தேடி அலைந்த "நாடோடிகள்" அனுபவங்களும் உண்டு. ஒவ்வொரு ரயில்வே நிலையத்திலும் போலீசாரிடம் புகைப் படத்தை காட்டி விசாரிக்கையில், ஒரு உரிமை கோராத பிணம் இருக்கிறது என்று தகவல் கிடைக்க, நெஞ்சம் படபடக்க "நண்பர் இல்லை" என்று உறுதி செய்ய வேண்டிய கட்டாயமும் வந்திருக்கிறது.

மேற்சொன்ன அனுபவங்களில் பல பலருக்கும் ஏற்பட்டிருக்கும். பல திரைப் படங்களும் எழுத்துக்களும் நட்பின் பெருமையை மிகச் சிறப்பாகவே வெளிக் காட்டியுள்ளன. இருந்தாலும், இருந்தாலும் கூட, சொந்த அனுபவங்களை இந்த நண்பர்கள் தினத்தில் அசை போடுவது ஒரு விளக்க முடியாத சந்தோசத்தை கொடுக்கிறது.

இன்றளவும் கூட என்னுடைய பல நண்பர்களுடன் தொடர்புகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். அதே சமயம் எத்தனையோ ஆண்டுகள் தொடர்பில்லாமல் பின்னர் எப்போதாவது பார்க்க நேர்ந்தாலும், அதே தோழமை உணர்வுடன் "டேய்! என்னடா இப்படி மாறி விட்டாய்" என்று அன்பை பகிரும் நண்பர்களும் உண்டு. நட்புக்கு ஒருவருடன் ஒருவர் மிக அருகாமையிலோ அல்லது அடிக்கடி தொடர்பு வைத்துக் கொண்டோ இருக்க வேண்டிய அவசியம் இருந்தது இல்லை.

இந்த பதிவுலகில் கூட பலரும் நேருக்கு நேர் பார்க்காமலேயே, தொலைபேசி தொடர்புகள் இல்லாமலேயே மனதுடன் பெருமளவு நெருங்கி இருக்கிறார்கள். இந்த பதிவு வலையை ஆரம்பித்த பிறகு வரும் இந்த முதல் நண்பர்கள் தினத்தில் அனைத்து பதிவுலக தோழர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்களும் உங்களது நட்பு அனுபவங்களை ஒரு கணம் உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள். முடிந்தால் உங்களது பழைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளுங்கள்.

நட்பை விட சிறப்பான, அள்ள அள்ள குறையாத, மகிழ்ச்சி செல்வம் வேறெங்கும் இல்லை.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

நன்றி.

Comments

கபீஷ் said…
//மற்ற கடிகாரங்கள் நேரத்தை மட்டும் காட்ட, இந்த கடிகாரம் நட்பையும் சேர்த்து காட்டுகிறது.
//

:-) நல்லாருக்கு
நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.
Maximum India said…
நன்றி கபீஷ்!

நன்றி ஜமால்!
Karthik said…
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!! :)
Maximum India said…
நன்றி கார்த்திக்!

:-)
நல்ல பகிர்வு சார், நட்பு பகிர்வு.
நட்பு தின நல்வாழ்த்துக்கள்.

இன்று நட்பு தினமாமே
நமக்கு தினம் தினம்
நட்பின் தினம் தானே....
Maximum India said…
//இன்று நட்பு தினமாமே
நமக்கு தினம் தினம்
நட்பின் தினம் தானே....//

உண்மைதான் பீர். நல்ல நட்புக்கு எல்லா நாளும் நண்பர்கள் தினம்தான்.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
Naresh Kumar said…
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!!

நரேஷ்
www.nareshin.wordpress.com
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
Maximum India said…
நன்றி நரேஷ்! உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

நன்றி வால்பையன்! உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
KARTHIK said…
அருமையா சொல்லிருகீங்க.
எனக்கும் அப்படித்தான் ரோட்டுல யாராவது அடிபட்டிருந்தாக்கூட நம்ம ஆளுகளான்னு ஒருதடவ நின்னு பாத்துட்டு தான் போவேண்.
Happy friendship day na
Maximum India said…
நன்றி கார்த்திக்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...