Friday, April 17, 2009

காலாண்டு நிதி அறிக்கைகளை வெளியிடத் தயங்கும் இந்திய நிறுவனங்கள்.


மந்த நிலையில் உலகப் பொருளாதாரம். இதை உறுதி செய்யும் வகையில் அன்றாடம் வெளிவரும் பொருளாதாரத் தகவல்கள். அதே சமயம் பெருமளவு முன்னேறிக் கொண்டிருக்கும் பங்கு சந்தைகள். 'கண் கட்டி வித்தை' போல ஒரு மாதத்திற்குள்ளேயே பல மடங்கு விலை உயர்ந்து விட்ட இந்திய நிறுவனப் பங்குகளில் ( இவ்வளவு விலை உயர்ந்த பிறகு) முதலீடு இப்போது செய்யலாமா என்று விழி பிதுங்கும் முதலீட்டாளார்கள். இவர்களின் கலங்கரை விளக்கமாக கருதப் படுபவை நிறுவனங்களின் செயல்பாடு குறித்து விளக்கும் காலாண்டு நிதி அறிக்கைகள். இந்த நிதி அறிக்கைகளை உடனடியாக வெளியிடத் தயங்கும் இந்திய நிறுவனங்கள்.

தயக்கத்திற்கு காரணம் என்ன? இங்கு பார்ப்போம்.

ஒரு நிறுவனத்தின் பங்கு இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் ஆகும் பட்சத்தில், அதனுடைய (தணிக்கைச் செய்யப் படாத) காலாண்டு நிதி அறிக்கை காலாண்டு முடிந்த ஒரு மாதத்திற்குள் வெளியிட வேண்டும். மார்ச்சுடன் நிறைவடையும் காலாண்டிற்கு (அல்லது நிறுவனத்தின் நிதி ஆண்டின் கடைசி காலாண்டு) மட்டும் ஒரு விதி விலக்கு உண்டு. அதாவது, தணிக்கை செய்யப் படாத காலாண்டு அறிக்கையை வெளியிட தேவை இல்லை. அதற்கு பதிலாக தணிக்கைச் செய்யப் பட்ட நிதி அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் வெளியிடலாம். இந்த வருடம் மேற்சொன்ன சலுகையை பயன்படுத்திக் கொண்ட பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையை வெளியிடுவதில் இருந்து விலக்கு பெற்றுக் கொண்டதாக பத்திரிக்கைத் தகவல்கள் கூறுகின்றன. இவற்றில் பல பெரிய நிறுவனங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கு முன் கண்டிராத வண்ணம், இவ்வாறு பல நிறுவனங்கள் தமது காலாண்டு நிதி அறிக்கையை வெளியிட தாமதிப்பதற்கு நிதி வட்டாரங்களில் பல காரணங்கள் கூறப் படுகின்றன. அவையாவன.

இந்திய நிறுவனங்களில் பல நிறுவனங்கள் அந்நிய செலவாணி மாற்று வர்த்தகத்தில் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இந்த நஷ்டத்தை நடப்பு நிதி அறிக்கையில் காட்ட வேண்டியதில்லை என்ற ஒரு புதிய சலுகையை மத்திய அரசு சமீபத்தில் அளித்தது. இதற்கு வசதியாக தணிக்கை நியதி 11 இல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. (இந்த திருத்தம் எந்த அளவுக்கு சரி என்பது விவாதத்துக்குரிய விஷயம்). இவ்வாறு நஷ்ட அளவு மாறுபடுவதால், நிறுவனங்களுக்கு தங்கள் அறிக்கையில் சில மாற்றங்கள் செய்ய போதுமான அவகாசம் தேவை இருப்பதால் இந்த கால தாமதம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

இப்போது நல்ல மனநிலையில் பங்கு சந்தைகள் உள்ளன. இதனால் குருட்டாம் போக்கில் பல பங்குகள் நல்ல விலை உயர்வு கண்டு வருகின்றன. இந்த தருணத்தில், மோசமான அறிக்கையை வெளியிட்டால் அவற்றின் விலை உயர்வு பாதிக்கப் படும். எனவே, மோசமான செய்திகளை தள்ளிப் போட நிறுவனங்கள் முயல்கின்றன என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இன்னொரு கருத்து நம்மைத் திகைக்க வைக்கின்றது. தேர்தலின் முடிவைப் பொருத்து தமது நிதி அறிக்கையை "உருவாக்க" சில நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகவும் கருதப் படுகின்றது. காங்கிரஸ் அல்லது பிஜேபி அரசாங்கம் உருவானால் ஒரு மாதிரியான நிதி அறிக்கை. இடது சாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்தால் இன்னொரு மாதிரியான நிதி அறிக்கை. குறிப்பாக, இந்த முடிவை வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் எடுத்திருப்பதாக் சொல்லப் படுகிறது.

உலக அளவில் என்ரோன் மற்றும் இந்திய அளவில் சத்யம் ஊழல்கள் நிதி அறிக்கையில் எப்படியெல்லாம் பித்தலாட்டங்கள் செய்யப் படுகின்றன என்பதை ஏற்கனவே வெளிக் காட்டி உள்ளன.

எனவே, வாசகர்கள் நடப்பு காளை ஓட்டத்தில் (Bull Run) பங்கு முதலீடு குறித்த தங்களது முடிவுகளை மிகுந்த கவனத்துடன் எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

2 comments:

Itsdifferent said...

There is also another view to this. In the US most of the companies, are so focussed towards making sure their quarterly results are right, they miss the long term planning completely making the companies not realising their full potential. It has become an addiction to the stock market, to make sure their share prices are right all the time. I think we should ask the companies to follow good ethics, and just keep doing what they are good at rather than near term quarter focus.

Maximum India said...

Thanks for the comments, Itsdifferent

I feel that market should worry more about corporate ethics rather than long term planning/near term profit or losses. Because ethic form the base of the organisation. If there is any faulty base, the organisation may collapse howsoever it grows.

Blog Widget by LinkWithin