Skip to main content

அப்பா எங்கே?

அப்பா! என்று அழைத்தேன். ஆனால், உதடுகள் பிரிந்தாலும் வார்த்தைகள் வெளியேற வில்லை. அப்பா இப்படி இருந்து இத்தனை வருடங்களாக ஒரு போதும் பார்த்ததில்லை. உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் அப்பா எப்படி இருக்கிறார் என்று பல வருடங்கள் வரை கண்டு கொண்டதே இல்லை.

பெருசு, கிணற்றுத் தவளை என்றெல்லாம் கேலி பேசிய காலங்கள் கூட உண்டு. அப்போதெல்லாம், அப்பா கூறுவார், "உனக்கு நாற்பது வயதாகும் போதுதான் ஒரு தந்தையின் மனநிலை புரிய வரும்", என்று. ஆனால் கால ஓட்டத்தின் வேகம் ஒரு தந்தையின் மனநிலையை முப்பது வயதிலேயே ஓரளவுக்காவது உணர்த்தி விட்டது.

"என்ன அப்பா! வேலைக்கு போகலையா?" என்று கேட்டேன்.

"நான் எப்பவுமே பிசி" என்ற விளம்பர வாசகங்கள் அப்பாவிற்கு நிறையவே பொருந்தும். மிகச் சிறிய வயதிலேயே வேலைக்கு செல்ல ஆரம்பித்த அவர், அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட தனியார் வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார். பொருளாதார நிர்பந்தங்கள் எதுவும் இல்லையென்றாலும், தொழில் மீது இருக்கும் ஆர்வம் மற்றும் சோம்பி இருக்கக் கூடாது என்ற மனப் பாங்கு அவரை ஓய்வுக்குப் பின்னரும் வேலைக்கு செல்ல உந்தி வந்திருக்கிறது.

வீட்டில் நடந்த முக்கிய விசேஷங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் கூட அவர் வீடு தங்கியதில்லை. வீட்டில் இருந்தாலும் எப்போதும் எங்களை விரட்டிக் கொண்டேதான் இருப்பார். காலையில் தாமதமாக எழுந்தால் அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. விடுமுறை என்றாலே நிறைய தூங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எங்களுக்கு அவர் விடுப்பு நாட்களில் வேலைக்கு சென்றால் சந்தோசமாகவே இருக்கும். அவரது விடுமுறை நாட்களில் கூட ஏதாவது ஊர் வேலையாக சுற்றிக் கொண்டே இருப்பார்.

"இல்லப்பா! ரொம்ப டயர்டாக இருக்கிறது. ஒரு வாரம் லீவு போட்டு விட்டேன்" என்று பதில் வந்தது அப்பாவிடமிருந்து.

இது கூட கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது எனக்கு. சில மணி நேரம் பயணம் செய்தாலே "இவ்வளவு நேரம் ரெஸ்ட் எடுக்க வேண்டும்" என்று கணக்கு போட்டு ரெஸ்ட் எடுக்கும் மகன் இருக்க, இந்த வயதிலும் காசி முதல் ராமேஸ்வரம் வரை தொடர்ந்து ரயில் பயணம் செய்த பிறகும் அடுத்த நாளே வேலைக்குப் போனவர் எனது தந்தை. இப்படி அடுத்த நாளே வேலைக்குப் போனார் என்று கேள்விப் பட்டவுடன் நான் டயர்டாகி ரெஸ்ட் எடுத்துக் கொண்டது தனிக் கதை.

"நன்றாகத்தான் இருந்தார். திடிரென்று இப்படி ஆகி விட்டது" என்றார் எனது அப்பா.

அவர் என்னிடம் பேசுகிறாரா இல்லை தனக்குத்தானே பேசிக் கொள்கிறாரா என்று எனக்கு புரியாததால் பதில் எதுவும் நான் சொல்ல வில்லை.

அப்பாவின் நெருங்கிய நண்பர் வேலாயுதம், அப்பாவை விட பல வருடங்கள் வயதில் மூத்தவர் என்றாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் நல்ல நண்பர்களாக இருவரும் பழகி வந்தனர். அவரும் கூட அப்பாவைப் போலவே கடுமையான உழைப்பாளி. நேற்று அதிகாலையில் திடீரென்று காலமாகி விட்டார்.

எவ்வளவோ வாழ்வியல் தத்துவங்களை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த எனது தந்தையை நான் என்ன சொல்லி தேற்றுவது என்று எனக்கு புரிய வில்லை.

செத்த பிணத்தைப் பார்த்து வாழும் பிணங்கள் அழுகின்றன என்று சித்தர்கள் எளிதில் சொல்லி விட்டு போய் விட்டாலும் நடைமுறையில் மனிதர்களுக்கு இழப்பு என்பது ஒரு மிகப் பெரிய துன்பமாகவே இருக்கிறது. துன்பம் என்பது செத்த பிணத்திற்க்காக வருவதா இல்லை தானும் ஒரு வாழும் பிணம்தான் என்ற உணர்வு வருவதாலா என்று புரியவில்லை.

எதுவும் சொல்லத் தெரியாமல், "சரி! கிளம்புகிறேன்!' என்று இரண்டு வார்த்தை மட்டும் பேசி விட்டு சொந்த ஊரை விட்டு வந்த ஊருக்கு திரும்பி விட்டேன். வழி முழுக்க ஒரே சிந்தனை, அப்பாவை என்ன சொல்லி தேற்றுவது என்று.

நான் படித்த மேலாண்மை மற்றும் உளவியல் தத்துவங்களை எல்லாம் மீண்டும் ஒருமுறை மனக்கண் கொண்டு வர முயற்சி செய்தேன். ஆனால், அப்பாவை இப்படி பார்த்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் சிந்தனைகள் மேலெழ அனுமதிக்க வில்லை

மறுநாள் காலை எழுந்தவுடன், வீட்டுக்கு போன் செய்தேன். அம்மாதான் போனை எடுத்தார். "அப்பா எங்கே?" என்று கேட்டேன். "அவரா? காலையிலேயே எழுந்து வேலைக்குப் போய் விட்டாரே? " என்று கூறினார்.

மனது கொஞ்சம் லேசானது போல இருந்தது.

நன்றி.

Comments

அப்பாவிற்கு தேவைப்பட்டது அந்த ஒருநாள் தான் போல!
அவருக்கு தெரியாததா நமக்கு தெரிந்துவிடப்போகிறது!
Maximum India said…
//அவருக்கு தெரியாததா நமக்கு தெரிந்துவிடப்போகிறது!//

உண்மைதான் தல. எத்தனை வயதானாலும் அப்பா அப்பாதான். பிள்ளை பிள்ளைதான்.

நன்றி.
அப்பாக்கள் நமது முன் பிரதிகள்.நம் பின் வாழ்கையின் பின் பிரதிபலிப்புகள். லேட்டஸ்ட் மொபைல் போன் போல் மெருகேற்றிய விஷயங்கள் நம்மில் இருந்தாலும் நம் மூலத்தின் விதை அப்பா மூலமே நம் கண்டு கொள்ளலாம். நம் தின செயல்பாடுகளை நிர்ணயிப்பதில் அப்பாக்களின் பங்கு அதிகம். எதை விதைத்தால் எது கிடைக்கும் என்பதை நம் அப்பாவின் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளலாம்.நம்மை செதுக்கிட செப்பனிட அவரது வாழ்க்கையில் உதாரணங்கள், ரணங்கள் அதிகம். நல்ல அப்பாவாய் நாம் இருந்திட அப்பாக்கள் முன்மாதிரிகள். நல்ல அப்பா, திருட்டு அப்பா, அரசியல் அப்பா, டாஸ்மாக் அப்பா, பிசினஸ் அப்பா, கவர்மென்ட் அப்பா, கூலி அப்பா, என்று அப்பாக்கள் பலவிதம். ஆனால் நம் பிள்ளை ஒழுங்காக உருப்பட வேண்டும் என்பதே எல்லா அப்பாக்களின் முதல் நோக்கம். எல்லா அப்பாக்களும் நிஜமான (சில நேரம் பொய்யான ) தயாரிப்பாளர்கள் . ஆனால் அதில் சில பேரே நல்ல இயக்குனர்கள். அவர்கள் கண்டிப்பான வாத்தியார்கள். சில நேரம் கம்பை உபயோகபடுத்துகிறார்கள். சில நேரம் உண்மையிலேயே நம்மை படுத்துகிறார்கள். அவர்கள் கரண்ட் போல. இல்லாத போதுதான் அவர்களின் அருமை தெரியும்.. ஆக .. அப்பாக்களை மதிப்போம்.. வயதான காலத்தில் உறு துணையாய் இருப்போம். குறைந்த பட்சம் உறுத்தாமல் இருப்போம். நல்ல அப்பாவாய் நாமும் இருப்போம்.
Maximum India said…
நன்றி பொதுஜனம்!

//அப்பாக்கள் நமது முன் பிரதிகள்.நம் பின் வாழ்கையின் பின் பிரதிபலிப்புகள். லேட்டஸ்ட் மொபைல் போன் போல் மெருகேற்றிய விஷயங்கள் நம்மில் இருந்தாலும் நம் மூலத்தின் விதை அப்பா மூலமே நம் கண்டு கொள்ளலாம். //

நம் மூலத்தின் பிரதிபலிப்பை நமது பிள்ளைகளிடமிருந்து கூட கண்டு கொள்ளலாம்.

//நம் தின செயல்பாடுகளை நிர்ணயிப்பதில் அப்பாக்களின் பங்கு அதிகம். எதை விதைத்தால் எது கிடைக்கும் என்பதை நம் அப்பாவின் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளலாம்.நம்மை செதுக்கிட செப்பனிட அவரது வாழ்க்கையில் உதாரணங்கள், ரணங்கள் அதிகம். //

பொதுவாக அனைவருமே தாயின் தியாகத்தைத் தான் பாராட்டுவார்கள். ஆனால் தந்தையின் பங்கும் எந்த விதத்திலும் குறைந்ததில்லை.

//நல்ல அப்பாவாய் நாம் இருந்திட அப்பாக்கள் முன்மாதிரிகள். நல்ல அப்பா, திருட்டு அப்பா, அரசியல் அப்பா, டாஸ்மாக் அப்பா, பிசினஸ் அப்பா, கவர்மென்ட் அப்பா, கூலி அப்பா, என்று அப்பாக்கள் பலவிதம். ஆனால் நம் பிள்ளை ஒழுங்காக உருப்பட வேண்டும் என்பதே எல்லா அப்பாக்களின் முதல் நோக்கம். எல்லா அப்பாக்களும் நிஜமான (சில நேரம் பொய்யான ) தயாரிப்பாளர்கள் . ஆனால் அதில் சில பேரே நல்ல இயக்குனர்கள். அவர்கள் கண்டிப்பான வாத்தியார்கள். சில நேரம் கம்பை உபயோகபடுத்துகிறார்கள். சில நேரம் உண்மையிலேயே நம்மை படுத்துகிறார்கள். //

உண்மையான வார்த்தைகள்.

//அவர்கள் கரண்ட் போல. இல்லாத போதுதான் அவர்களின் அருமை தெரியும்.. //

சத்தியமான வார்த்தைகள்

//ஆக .. அப்பாக்களை மதிப்போம்.. வயதான காலத்தில் உறு துணையாய் இருப்போம். குறைந்த பட்சம் உறுத்தாமல் இருப்போம். நல்ல அப்பாவாய் நாமும் இருப்போம்.//

நிச்சயமாக.

நன்றி.
Naresh Kumar said…
நல்ல கதை!!!

கிராமங்களில் நான் அறிந்த பல அப்பாக்கள் இது மாதிரிதான் இருந்திருக்கின்றனர்...

இதே போன்றதொரு சம்பவம் என் அப்பாவிற்கும் நடந்திருக்கிறது, அதிலும் ஒரே வருடத்தில் அவரது மிக நெருங்கிய நண்பர்கள் மூவர் இறந்து போனர்...

எப்போதும் மற்றவர்களைத் தேற்றும், தன் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாத, தன் குழந்தைகளுக்கு மட்டுமே தான் ஆறுதல், எக்காரணத்தைக் கொண்டும் தன் குழந்தைகள் தனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய கஷ்டத்தைக் கூட தரக்கூடாது என்று நினைக்கிற தந்தை அந்த நண்பர்களின் மறைவின் போது ரொம்பவே வருத்தப்பாட்டார்.....

எங்கள் தாத்தாவின் மறைவிற்குப் பின், எங்கள் கையைப் பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தது அப்போதுதான்....

உங்கள் கதை இவற்றை நினைவுக்கு கொண்டு வந்தது.....மிக நன்று!!!
Maximum India said…
//எப்போதும் மற்றவர்களைத் தேற்றும், தன் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாத, தன் குழந்தைகளுக்கு மட்டுமே தான் ஆறுதல், எக்காரணத்தைக் கொண்டும் தன் குழந்தைகள் தனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய கஷ்டத்தைக் கூட தரக்கூடாது என்று நினைக்கிற தந்தை அந்த நண்பர்களின் மறைவின் போது ரொம்பவே வருத்தப்பாட்டார்.....//

உண்மைதான் நரேஷ்! பல வருடங்கள் ஒன்றாக பழகிய நண்பர்களின் மறைவு எப்படிப் பட்ட தைரியசாலியையும் கலங்கடித்து விடும்.

இது போன்ற தருணங்களில் பெரியவர்களுக்கு ஆதரவாக ஆறுதலாக இருக்க வேண்டியது நமது கடமை.

நன்றி.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...