Skip to main content

அசர வைத்த அதிரடி ஆட்டம்!

பங்கு சந்தை மீண்டுமொருமுறை பலரையும் மூக்கில் விரல் வைக்க செய்திருக்கிறது. பட்ஜெட்டில் பங்கு சந்தையை திருப்தி படுத்துமளவுக்கு ஒரு விஷயமும் இல்லை, இந்திரா காந்தி காலத்திற்கு நாட்டை காங்கிரஸ் எடுத்துச் செல்கிறது என்றெல்லாம் காரணங்கள் சொல்லி ஒரே வாரத்தில் 1500 புள்ளிகள் (சென்செக்ஸ்) வீழ்ந்த சந்தை, அடுத்த வாரத்திலேயே முன் சொன்ன விஷயங்களை எல்லாம் மறந்து விட்டு கிட்டத்தட்ட 1200 புள்ளிகள் வரை உயர்ந்தது.

தேர்தல் முடிவுக்கு அடுத்த நாள் சந்தை ஒரு பெரிய இடைவெளியுடன் துவங்கியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். தொழிற்நுட்ப அடிப்படையின் படி (Technical Analysis) அந்த இடைவெளி நிரப்பப் பட வேண்டும் என்று நம்பிய பல சந்தை தாதாக்கள் பட்ஜெட்டுக்குப் பின்னர் விற்ற பின் வாங்கும் (Shorting) முடிவை எடுத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் விற்பனை எதுவும் இல்லாததால் துண்டை காணோம் துணியை காணோம் என்று அவசரகதியாக தம்முடைய விற்பனை நிலையை (Short Position) சமன் (Short Covering) செய்ததே இந்த அதிரடி மீட்சிக்கு முக்கிய காரணம் ஆகும்.

உலக சந்தைகளின் சாதகமான போக்கும், பாராளுமன்றத்தில் சந்தை உணர்வுகளுக்கு ஆதரவாக நிதி அமைச்சர் உரையாற்றியதும் கூட சந்தைக்கு உதவியாக இருந்தன. அண்ணன்-தம்பி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமான முறையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது, சென்செக்ஸ் மற்றும் நிபிட்டியின் மிகப் பெரிய பங்கான ரிலையன்ஸ் பங்கினை நன்கு உயர்த்தியது.

இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தைகளின் எதிர்பார்ப்பை விட அதிகமாக இருந்தது தகவல் தொழிற்நுட்ப பங்குகளை நன்கு உயர்த்தியது மட்டுமல்லாமல் மற்ற இந்திய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் நன்றாகவே இருக்கும் என்ற புதிய நம்பிக்கையையும் சந்தைக்கு கொடுத்தது.

ஒரு வேடிக்கையான கதை உண்டு. பல ஆண்டுகள் கழித்து இந்தியா வரும் ஒரு வெளிநாட்டுக்காரர் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியையும் செல்வ செழிப்பையும் பார்த்து ஆச்சரியப் படுகிறார். அப்போது அருகில் இருக்கும் அவரது நண்பரை பார்த்து, எப்படி இப்படி பல இந்தியர்கள் வெகு சீக்கிரத்தில் பணக்காரர்கள் ஆகி விட்டனர் என்று வினா எழுப்புகிறார். பங்கு சந்தையில் முதலீடு செய்துதான் இப்படி பலரும் பணக்காரர்கள் ஆகி இருக்கின்றனர் என்று நண்பர் பதில் கூறுகிறார். சரிதான், அப்படியென்றால் விமான நிலையத்தின் வெளியே பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் யார் என்று வெளிநாட்டுக்காரர் கேட்க, அவர்களெல்லாம் விற்ற பின் வாங்கும் நிலை (Short Position) எடுத்தவர்கள் என்று நண்பர் பதிலளிக்கிறார்.

இப்படி விற்ற பின் வாங்கும் நிலை எப்போதுமே அதிக ஆபத்தானது. இந்த முறையும் அந்த நிலை எடுத்தவர்கள் புல்டோசர் கொண்டு நசுக்கப் பட்டிருக்கிறார்கள்.

சரி, இப்போது வருகின்ற வாரத்தின் நிலையை பார்ப்போம்.

சந்தை இப்போது ஒரு முக்கிய எதிர்ப்பு நிலைக்கு வெகு அருகில் உள்ளது. கீழே உள்ள தொழிற்நுட்ப விளக்க வரைபடத்தைப் (Technical Chart) பாருங்கள்.



திங்கட்கிழமை நமது சந்தை ஒரு இடைவெளியுடன் மேலே எழும்பி அந்த உயரத்தை முழுமையாக தக்க வைத்துக் கொண்டால், சந்தை வெகுவாக உயர வாய்ப்பு உள்ளது. மாறாக வீழ்ச்சியுடன் துவங்கினால் மீண்டுமொருமுறை கீழ்நோக்கி பயணம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.

வர்த்தகர்களுக்கான நிலைகள்

Nifty 4374.95
Support - 1 - 4292
Support - 2 - 4202
Resistance - 1 - 4480
Resistance- 2 - 4610

உலக சந்தைகளின் போக்கை, குறிப்பாக பொருட்கள் சந்தைகளின் (கச்சா எண்ணெய் போன்றவை) போக்கை கவனித்து வருவது நல்லது. கச்சா எண்ணெய் பெரிய அளவில் முன்னேறாதது உலக சந்தைகள் பொருளாதார மீட்சியில் அதிக நம்பிக்கை வைக்க வில்லை என்பதையே காட்டுகிறது.

முதலீட்டாளர்கள் இது போன்ற தொழிற்நுட்ப வரைபடத்தைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை. ஏற்கனவே இங்கு பலமுறை சொன்னபடி, ஒவ்வொரு வீழ்ச்சியிலும் நல்ல பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வரவும். அப்படி சேகரிப்பதற்கு சந்தை பல வாய்ப்புக்களை கொடுக்கும்.

வரும் வாரம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.

நன்றி!

Comments

Thomas Ruban said…
//எப்படி இப்படி பல இந்தியர்கள் வெகு சீக்கிரத்தில் பணக்காரர்கள் ஆகி விட்டனர் என்று வினா எழுப்புகிறார். பங்கு சந்தையில் முதலீடு செய்துதான் இப்படி பலரும் பணக்காரர்கள் ஆகி இருக்கின்றனர் என்று நண்பர் பதில் கூறுகிறார். சரிதான், அப்படியென்றால் விமான நிலையத்தின் வெளியே பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் யார் என்று வெளிநாட்டுக்காரர் கேட்க, அவர்களெல்லாம் விற்ற பின் வாங்கும் நிலை (Short Position) எடுத்தவர்கள் என்று நண்பர் பதிலளிக்கிறார்.

இப்படி விற்ற பின் வாங்கும் நிலை எப்போதுமே அதிக ஆபத்தானது. இந்த முறையும் அந்த நிலை எடுத்தவர்கள் புல்டோசர் கொண்டு நசுக்கப் பட்டிருக்கிறார்கள்//

பேராசை பெருநஷ்டம் என்று அழகாக சுருக்குமாக கூறி உள்ளேர்கள். பங்கு சந்தையில் முதலீடு செயபவர்க்கு பொறுமை மிக மிக அவசியம்.

நன்றி..நன்றி..
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...