Skip to main content

அங்கும் இங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

நாளை வெளியிடப் படவுள்ள மத்திய பட்ஜெட் சந்தைகளைப் பொறுத்த வரை ஒரு மிக முக்கிய நிகழ்வாக கருதப் படுகிறது.

ஏற்கனவே, கடனில் தத்தளிக்கும் மத்திய அரசால் அதிசயம் எதுவும் நிகழ்த்த முடியாமல் போனாலும், நிதி சீர்திருத்தங்களில் அரசின் உறுதிப்பாடு மற்றும் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அரசின் திட்டங்கள் ஆகியவை பங்கு வணிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது.

பெரும்பாலான சந்தை வணிகர்கள் இந்த பட்ஜெட் பல நல்ல விஷயங்களை கொண்டிருக்கும் என்றே நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையின் விளைவாக, சென்ற வாரம் பெரும்பாலான உலக சந்தைகள் வீழ்ந்த போதிலும் நமது சந்தை ஏற்றத்துடனேயே முடிவடைந்தது.

உலக சந்தைகளைப் பொறுத்த வரை, அமெரிக்க பொருளாதாரத்தின் மீட்சி, மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்க படுகிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்தியா போன்ற நாடுகள் தமது வளர்ச்சியை ஓரளவுக்கு தொடர்ந்தாலும் உலக வணிகத்தைப் பொறுத்த வரை இத்தகைய நாடுகளின் பங்கு மிகவும் குறைவானதே. மேலும் இந்தியா போன்ற நாடுகளின் மக்கள் சேமிப்பில் அதிகம் கவனம் செலுத்த அமெரிக்கர்கள் மட்டுமே அதிகப் படியான (சொல்லப் போனால் வரவுக்கு மீறிய்) செலவு செய்து வந்தார்கள். இப்போது அமரிக்காவிலும் சேமிப்புப் பழக்கம் அதிகமானது உலக சந்தைகளை எமாற்றத்துக்குள் உள்ளாக்கியது. மேலும் அமெரிக்காவில் நிகழும் ஏராளமான வேலை இழப்புக்கள், அமெரிக்கர்களின் தேவையை குறைத்து விடும் என்ற அச்சத்தையும் உருவாக்கி உள்ளது. எனவே, சென்ற வாரம் பெரும்பாலான உலக சந்தைகள் வீழ்ச்சிக்கு உள்ளாகின. கச்சா எண்ணெய் விலை பெருமளவில் சரிந்தது. உற்பத்தி உலோக சந்தைகளும் பங்கு சந்தைகளும் கூட ஓரளவு வீழ்ச்சியை சந்தித்தன.

யூரோ மற்றும் பவுண்ட் கரன்சிகள் டாலருக்கு எதிராக வீழ்ச்சியை சந்திக்க இந்திய ரூபாயோ, பட்ஜெட் எதிர்பார்ப்புக்களின் காரணமாக, முன்னேற்றத்தை கண்டது. அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் மீள்வரவும் இந்திய சந்தைகளுக்கு உற்சாகத்தை தந்தது.

தொழிற்நுட்ப ரீதியாக இந்திய சந்தை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு வேளை, உள்ளபடியாகவே பட்ஜெட் பல அதிசயங்களை உள்ளடக்கியதாக இருந்தாலோ (வாய்ப்பு குறைவு) அல்லது ஊடகத்தினரும் பங்கு பெருச்சாளிகளும் பட்ஜெட்டை, பெரிய அளவில் கொண்டாடினாலோ (வாய்ப்பு அதிகம்) சந்தைகள் ஒரு புதிய வரம்பை எட்ட வாய்ப்பு உள்ளது. சென்செக்ஸ் 15500 (நிபிட்டி 4700) புள்ளிகளை முழுமையாக முறியடித்தால் சந்தைகள் நன்கு உயரவும் வாய்ப்பு உள்ளது.

இந்த இரண்டும் நிகழா விட்டால், ஏதோ சாக்கு போக்கு சொல்லி சந்தை சற்று உயர்ந்தாலும், லாப விற்பனை காரணமாக சரியவும் வாய்ப்பு உள்ளது. நிபிட்டியின் அரண் நிலை 4200 புள்ளிகளுக்கு அருகில் இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை, இந்தியப் பொருளாதாரம் இன்னும் சில வருடங்களுக்கு (பருவமழை ஏமாற்றாத பட்சத்தில்)சிறப்பாகவே இருக்கும் என்றாலும், பங்கு சந்தை அந்த முன்னேற்றத்தை எந்த அளவுக்கு பிரதி பலிக்கும் என்பது கேள்விக் குறிதான். உதாரணமாக, எல்.ஐ சி, பி.எஸ்.என்.எல், போன்ற நாட்டின் அதி முக்கிய நிறுவனங்களின் பங்குகள் நமது சந்தைகளில் வர்த்தகமாவதில்லை. இன்னொரு உதாரணம், உலகிலுள்ள எண்ணெய் நிறுவனங்களின் சராசரி மதிப்பை விட ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது அதிக விலையில் வர்த்தகமாகி வருகிறது. என்னதான் ரிலையன்ஸ் நிறுவனம் அரசாங்கத்தில் அதிக செல்வாக்கு பெற்று விளங்கினாலும், அதனால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை சற்று ஓவர்தான் என்றே தோன்றுகிறது. இப்படி இந்திய பொருளாதாரத்தை பங்கு சந்தை சரியாக பிரதி பலிக்காத நிலையும், மற்ற உலக நிறுவனங்களை விட இந்திய நிறுவனங்கள் சற்று ஓவராகவே மதிப்பிடப் படுவதும் சந்தையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல.

எனவே பட்ஜெட்டுக்குப் பின்னர் சந்தை ஜெட் வேகத்தில் பறந்தால் முதலீட்டாளர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏற்கனவே சொன்ன படி, சந்தைக்கு புதிதாக வரக் கூடிய அரசு நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்தவும். சந்தை ஊகங்களை நம்பி பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். எப்போதும் போல ஒவ்வொரு சரிவின் போதும், சிறிய அளவில், நன்கு செயல்படும் நிறுவனங்களின் பங்குகளை சேகரித்து வரவும்.

வரும் வாரம் சிறப்பானதாக இருக்க வாழ்த்துக்கள்.

நன்றி.

Comments

Thomas Ruban said…
தங்கள் பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அன்புடனும் நன்றியுடனும்

தாமஸ் ரூபன்.
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!
Anonymous said…
Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Thomas Ruban said…
மத்திய பட்ஜெட் பற்றி உங்களுடைய கருத்து என்ன சார்?

பங்கு சந்தயை எந்தளவுக்கு பாதிக்கும்.நன்றி.
தங்கம் மற்றும் வெள்ளிக்கு கொடுத்திருக்கும் வரி உயர்வு பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்!
Maximum India said…
அன்புள்ள தாமஸ் ரூபன்!

//மத்திய பட்ஜெட் பற்றி உங்களுடைய கருத்து என்ன சார்?

பங்கு சந்தயை எந்தளவுக்கு பாதிக்கும்.//

என்னுடைய கருத்துக்களை மத்திய பட்ஜெட் வருவதற்கு முன்பே சொல்லியிருக்கிறேன்.

உங்களுக்காக மீண்டும் ஒரு முறை இங்கே!

இந்திய அரசு ஏற்கனவே கடனில் தத்தளித்து வருகிறது. சீனாவைப் போல பெரிய அளவு திட்டங்களை அறிவிக்கும் அளவுக்கு அரசிடம் நிதி வசதி இல்லை.

மேலும் பட்ஜெட் என்பது வெறும் வரவு செலவு திட்டம் மட்டுமே. அதற்கு இந்த அளவு முக்கியத்துவம் வருவதற்கு காரணம் ஊடகங்களே!

மேலும் இது ஒரு நல்ல பட்ஜெட்தான் என்றாலும், பங்கு வணிகர்கள் விரும்பிய சில அறிவிப்புக்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாததால் சந்தை சரிவை சந்தித்தது. இந்திரா காந்தியின் பெயரை பிரணாப் உபயோகித்தது, எங்கே இந்தியா மீண்டும் சோஷலிச பாதைக்கு சென்று விடுமோ என்ற அச்சத்தை அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. அந்த பயம் நீங்கினால் மட்டுமே மீண்டும் சந்தை உயர்வை சந்திக்கும்.

இப்போது மும்பையை விட்டு வெளியே அலுவல் ரீதியாக வந்திருப்பதால் விரிவாக பதிய முடிய வில்லை. மன்னிக்கவும்.

நன்றி.
Maximum India said…
//தங்கம் மற்றும் வெள்ளிக்கு கொடுத்திருக்கும் வரி உயர்வு பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்//

மன்னிக்கவும். இப்போது மும்பையை விட்டு வெளியே அலுவல் ரீதியாக வந்திருப்பதால் சரியான தகவல்கள் என்னிடத்தில் தற்சமயம் இல்லை. தகவல்கள் கிடைத்ததும் தெரிவிக்கிறேன்.

நன்றி.
Thomas Ruban said…
உங்களுடைய விளக்கத்திற்கு நன்றி.

உங்க்களுக்கு தொந்தரவு கொடுத்ததுக்கு மன்னிக்கவும்.

நன்றி.
Maximum India said…
அன்புள்ள தாமஸ் ரூபன்!

தொந்தரவெல்லாம் ஒன்றுமில்லை. வெளியூரில் இருப்பதால் அதிக நேரம் இண்டர்நெட்டில் செலவிட முடிய வில்லை அவ்வளவுதான்.

நன்றி.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...