Tuesday, August 4, 2009

எது முக்கியம்?


ஊடகங்களில் இப்போதைய தலைப்பு செய்திகள்

ராக்கி சாவந்த் தனது மணமகனை(?) தேர்ந்தெடுத்தார்.

பாகிஸ்தானுடனான கூட்டறிக்கையின் மீது பாராளுமன்ற விவாதம்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் போதை மருந்து சோதனைக்கு உட்படுத்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் மோதல்.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு குறித்து கன்னட அமைப்புகளுடன் கர்நாடக அரசு பேச்சுவார்த்தை

மேற்சொன்ன செய்திகள் பற்றிய காரசாரமான விவாதங்களும் சூடான கருத்துக்களும் ஊடகங்களின் முழுநேரத்தையும் பிடித்துக் கொண்டுள்ளன.

ஆனால் இன்னும் சில முக்கிய செய்திகள் பற்றி தகவல் தெரிவிக்கும் கடமையுடன் மட்டும் ஊடகங்கள் நிறுத்திக் கொண்டன. அந்த விஷயங்களில் மேற்கொண்டு அதிகம் நகரவே இல்லை.

அவற்றில் சில இங்கே.

அண்ணன் தம்பி அம்பானிகள் வழக்கில் மத்திய அரசு அண்ணனுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக தம்பியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தது.

இலங்கைக்கு சென்று சக்தி அம்மா தமிழர்களுக்கு உதவிப் பொருட்கள் அளித்தது.

முதல் பிரச்சினைக்கு வருவோம்.

அரசியல்வாதிகளை பற்றி (அவர் பிரதம மந்திரியாக இருந்தாலும் சரி அல்லது லோக்கல் கவுன்சிலராக இருந்தாலும் சரி) குற்றச்சாட்டுக்களை அள்ளி தெளிக்கும் ஊடகங்கள் தொழில் அதிபர்கள் விஷயத்தில் மிக மென்மையான போக்கையே கடைபிடிக்கின்றன. இத்தனைக்கும் முகேஷ் மீதும் பெட்ரோலிய மந்திரி மீதும் அனில் வீசிய குற்றச்சாட்டுக்கள் சாதாரணமானவை அல்ல.

இந்த பிரச்சினை ஒவ்வொரு இந்தியனும் சம்பந்தப் பட்டது. ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்தமான இந்த நாட்டின் மண்ணில் இருந்து எடுக்கப் பட்ட எரிவாயுவை நம் நாட்டினருக்கே உலக சந்தைகளின் விலையை விட பன்மடங்கு அளவுக்கு அதுவும் டாலர் கணக்கில் விற்பனை செய்ய அனுமதித்தது ஏன் என்று விளக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் மீதான நடவடிக்கை, உங்களுடைய மற்றும் என்னுடைய மாதாந்திர மின்சார பில்லையே மாற்றக் கூடியது. இன்று இந்தியாவில்
அன்றாட நிகழ்வாகிவிட்ட மின்வெட்டை ஓரளவுக்கேனும் தவிர்க்க கூடியது.

இந்த விவகாரத்தில் ஒரு வலுவான பொதுக்கருத்து உருவாகும் பட்சத்தில் இந்த ஒப்பந்தத்தையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும் என்றாலும் கூட, அது நாட்டின் எரிசக்தி தேவையை பெரிய அளவில் நிர்ணயிக்க கூடியது என்றாலும் கூட இவ்விவகாரத்தில் ரிலையன்ஸ் சம்பத்தப் பட்டிருப்பதாலோ என்னவோ தெரிய வில்லை. ஊடகங்களில் இதைப் பற்றிய விவாதங்கள் ஏதும் அதிகம் தென்பட வில்லை.

இத்தனைக்கும் குற்றம் சாட்டியவர் ஏதோ சாதாரணமானவரில்லை. அவர் குற்றம் சாட்டிய இடம் கூட சாதாரணமானதில்லை (முதலீட்டாளர்களின் பொதுக் கூட்டம் - அவர் மீது சட்டரீதியான பொறுப்புக்களை சுமத்தும் இடம்) என்று தெரிந்திருந்தாலும் கூட ஜனநாயகத்தின் முக்கிய தூணாகிய ஊடகம் இந்த விவகாரத்தை பெருமளவு கண்டுகொள்ளாமலேயே போனது.

சொல்லப் போனால், ஜாதிக் கட்சியாக ஊடகங்களால் முன்னிறுத்தப் படுகிற சமாஜ்வாதி கட்சி பாராளுமன்ற நடவடிக்கைகளை இந்த பிரச்சினையை காரணம் காட்டி தடுத்தது என்றோ அண்ணன் தம்பிகள் விஷயத்தில் அரசு தலையிட முடியாது என்று மந்திரி கூறியதை முன்வைத்தோ இந்த பிரச்சினையை ஊடகங்கள் கை விரித்து விட்டன.

மற்றொரு முக்கிய செய்தி, சக்தி அம்மா அவர்கள் தனி ஹெலிகாப்டரில் இலங்கை நாட்டில் உள்ள வவுனியா மாவட்டத்தில் உள்ள தமிழர் முகாமுக்கு சென்று உதவிப் பொருட்களை வழங்கியது. (ஏற்கனவே பண்டித் ரவிசங்கர் இலங்கை தமிழர் முகாமுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.)

ஒரு ஆன்மீகவாதியால் முடிந்தது ஏன் தம்மை தமிழினக்காவலர் என்று சொல்லிக் கொள்பவர்களால் இயலாமல் போனது?

தமிழ் நாட்டில் இருந்து ஏன் பெரிய தலைவர்கள் யாரும் தமிழர் முகாம்களை பார்வையிட செல்ல வில்லை?

ஏதோ உதவிப் பொருட்கள் செல்லும் கப்பலை மாற்றுவதுடன் மட்டும் பொறுப்பு தீர்ந்து விடுமா?

தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் ஒரு பொதுக் குழுவை அமைத்து அதை ஏன் இலங்கை தமிழர் வாழும் பகுதிக்கு அனுப்பக் கூடாது?

அப்போதுதானே அங்குள்ள உண்மையான நிலை அனைவருக்கும் புரிய வரும்?

இலங்கை அரசு நம்மில் பலருக்கு பிடிக்காத அரசாக இருந்தாலும் கூட (தமிழ் நாடு அளவில்) அதனுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே அதன் மீது கொஞ்சநஞ்ச நிர்பந்தமாவது கொடுக்க முடியும் என்பது ஏன் மறந்து போனது?

அந்த நிர்பந்தங்கள் எஞ்சி இருக்கும் தமிழ் சகோதரர்களுக்காவது ஒரு நல்ல வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவும் அல்லவா?

இது போன்ற விஷயங்களை ஊடகங்கள் எடுத்துக் கொண்டு விவாதித்தால் மட்டுமே, நாட்டை ஆளுபவர்களுக்கும் சமூகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் (மக்களிடையே பொது கருத்து உருவாகுவதன் மூலம்) நிர்பந்தங்களை உருவாக்க முடியும்.

ஊடகங்கள் வணிக நோக்கத்தில் செயல்படுவதில் தவறில்லை. அதே சமயம் உணர்வு பூர்வமான பிரச்சினைகளை மட்டுமே முன்னிறுத்தி, மக்களின் கவனத்தை முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவது ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் செய்யும் துரோகமாகவே அமையும்.

நன்றி.

19 comments:

நெல்லி said...

excellent thoughts gentlemen..

the way you are explainning the day to day news matters are very interesting and thought provoking, honestly..

plz write more and more about things, news..

i salute you gentlemen..

Maximum India said...

நன்றி ராமன்!

jothi said...

கேள்விகள் மட்டுமே நிற்கின்றன
விருந்தாளியாய்
விடைகள் மட்டும்
நாடோடிகளாய்

MSVi's said...

ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்க மறுக்கும் இன்னும் சில முக்கிய செய்திகள்.

1.உலக வர்த்தக சபையின் டோகா பேச்சுவார்த்தையில் இந்தியா முக்கிய முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறியிருக்கிறது. தற்போது அந்த துறைக்கு அமைச்சராக இருப்பவர் அதிகம் அனுபவமில்லாதவர். முரசொலி மாறன் போன்றோரால் அது கவனமாக கையாண்ட செய்தி. அதில் சிறு தவறு நடந்தாலும் ஒட்டு மொத்த இந்தியாவும் பிற்காலத்தில் பாதிக்க படும்

2.2. உலக சுற்றுசூழல்(புவி வெப்பமடைதல்) உடன்பாட்டுக்காக இத்தனை நாட்களாக இந்தியா சேர்பில் வைக்க பட்ட கோரிக்கைகள் ஏற்று கொள்ள படாத ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங் இத்தாலியில் ஒப்பந்தமிட்டு வந்து பிறகு அவற்றில் சில வற்றை ஏற்ரு கொள்ள வில்லை என்று பல்டி அடித்தார். இதை டைம்ஸ் ஓப் இந்தியா பத்திரிக்கை மட்டும் வெளி கொண்டு வந்துள்ளது. உண்மையில் என்ன ந்டக்கிறது என்று தெரியவில்லை. இந்த் ஒப்பந்தம் இந்த வடிவத்தில் கையெழுத்து இட பட்டால் அது வளரும் நாடுகளுக்கு பெரும் பாதகமாகவும் ,வளர்ச்சியை கட்டு படுத்துவதாகவும் ஒருதலை பட்சமாகவும் இருக்கும்

Maximum India said...

உங்கள் கவிதை பின்னூட்டம் அழகாக இருந்தது ஜோதி!

நன்றி.

Maximum India said...

அன்புள்ள கவிதா!

நீங்கள் சொன்ன பிரச்சினைகள் ஒவ்வொரு இந்தியனையும் பாதிக்கக் கூடியவை. இருந்தாலும், மக்களுக்கு அதிகம் உதவாத கிரிக்கெட், சினிமா, ஆரவாரமான அரசியல் மோதல்கள் ஆகியவற்றிலேயே மக்களின் கவனத்தை வைத்திருக்கும் ஒரு நயவஞ்சக செயலில்தான் இன்றைய ஊடகங்களில் பெரும்பாலானவை ஈடுபட்டுள்ளன.

மக்களுக்கு இதுதான் பிடிக்கிறது அதனால்தான் கொடுக்கிறோம் என்பவர்கள், அவர்களது சொந்த மக்களுக்கு பிடிக்கிறது என்பதற்காக ஆரோக்கியமில்லாத உணவை கொடுத்து வளர்ப்பார்களா?

நன்றி.

Thomas Ruban said...

//அண்ணன் தம்பிகள் விஷயத்தில் அரசு தலையிட முடியாது என்று மந்திரி கூறியதை முன்வைத்தோ இந்த பிரச்சினையை ஊடகங்கள் கை விரித்து விட்டன.//

சகோதரர்களுக்குள் நடக்கும் சச்சரவுகள் படிதாண்டி வந்திருக்கிறது. எனவே இது பொதுப்
பிரச்சனை.மற்றும், பல லட்சம் பங்குதாரர்கள் நலனும் அடங்கி இருக்கிறது.இனியும் அரசு
பாரப்ட்ச்மின்றி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு விரைவில் தீர்த்துவைக்க முயற்சிக்க வேண்டும்.

ஊடகங்கள் லாப (விளம்பரம் )நோக்கம் கருதாமல் சமுக அக்கறையுடன் நடந்து கொள்ள
வேண்டும்.

//ஒரு ஆன்மீகவாதியால் முடிந்தது ஏன் தம்மை தமிழினக்காவலர் என்று சொல்லிக் கொள்பவர்களால் இயலாமல் போனது?//

எல்லாம் நடிப்பு!

பதிவுக்கு நன்றி..

வனம் said...

வணக்கம்

\\ஒரு ஆன்மீகவாதியால் முடிந்தது ஏன் தம்மை தமிழினக்காவலர் என்று சொல்லிக் கொள்பவர்களால் இயலாமல் போனது?

தமிழ் நாட்டில் இருந்து ஏன் பெரிய தலைவர்கள் யாரும் தமிழர் முகாம்களை பார்வையிட செல்ல வில்லை?\\

இந்த கேள்வியெல்லாம் நாம் கேட்கக்கூடாது

நல்லபிள்ளைகளா மானாட மார்பாட, காமடி சேனல் பார்துக்கொண்டு யோசிக்காத முட்டாள்களாய்தான் இருக்கவேண்டும்

இராஜராஜன்

வால்பையன் said...

ராக்கி சவந்த் போட்டோ போட்டிருக்கலாம்!

பொதுஜனம் said...

நாட்டில் நடக்கும் பல பொய் நாடகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய ஊடகங்கள் வெறும் பூடகங்களாக போனது வருத்தமே. எரிவாயுவை பற்றி நம் வேட்டிகளுக்கும் குர்தாகளுக்கும் கவலை இல்லை. காரணம் தேர்தலின் போது கும்பானிகள் கொடுத்த பணம். பணம் எரிவாயுவை மட்டும் அல்ல. கேள்வி கேட்க வேண்டிய எல்லோர் வாயையும் அடைக்கிறது.
சக்தி அம்மா , ரவி சங்கர் போன்றோர் சேவையை பாராட்ட வேண்டும். விமர்சன்களுக்கு அப்பாற்பட்டு கடைகோடியில் நிற்கதியில் நிற்கும் யாரோ ஒருவருக்காவது உதவி போய் சேர்கிறது. நம் வெட்டிகளுக்கு சாரி வேட்டிகளுக்கு எதையும் அரசியலாக்கி பார்த்தே பழக்கம். எங்கே இலங்கை போனால் சிங்களன் போட்டு தள்ளி விடுவானோ என்று கூட பயம் இருக்கலாம் போல. ஒரு பக்கம் நிவாரண பொருட்கள் போய் சேர்கின்றன. அவை உரிய இடத்தில், நேரத்தில் போய் சேர்கிறதா என்பதை கண்காணிக்க யார் உள்ளனர்? போர் முடிந்த நிலையில் நிலைமையை சாதகமாக உபயோகித்து எஞ்சிய மக்களுக்கு உதவி புரிந்திட நம் தலைவர்களால் முடியும்.. ஆனால் நமக்குதான் இடைத்தேர்தல் இருக்கிறதே..இதை விட முக்கிய , முக்க வேண்டிய வேலை ஏதும் இல்லை.

ஊடகங்களை பொறுத்த வரையில் சூடான செய்திகளே முக்கியம்.. டெல்லியில் ஒரு கொலை தொடர்பாக கிட்ட தட்ட ஒரு சீரியலே நடத்தி முடித்தது ஒரு சேனல் . வணிக நோக்கம், போட்டி , கட்சி சார்பு , என பல விஷயங்கள் .. அவர்களும் தான் என்ன செய்வார்கள்.? ஏதோ நாம்தான் இப்படி எழுதி கொட்டி ஆற்றிக்கொள்ள வேண்டும்.

Maximum India said...

//ஊடகங்கள் லாப (விளம்பரம் )நோக்கம் கருதாமல் சமுக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். //

லாப நோக்கம் தவறில்லை. லாபம் மட்டுமே நோக்கமாக இருந்தால் தவறு. சமூக அக்கறை தேவையில்லை. ஆனால் சமுதாயத்தின் கவனத்தை திசை திருப்பக் கூடாது.

நன்றி தாமஸ் ரூபன்!

Maximum India said...

//நல்லபிள்ளைகளா மானாட மார்பாட, காமடி சேனல் பார்துக்கொண்டு யோசிக்காத முட்டாள்களாய்தான் இருக்கவேண்டும் //

இவையெல்லாம் கூட மக்களை மயக்கும் ஒருவித போதை வஸ்துக்கள் என்றே நினைக்கிறேன்.

நன்றி ராஜராஜன்!

Maximum India said...

//ராக்கி சவந்த் போட்டோ போட்டிருக்கலாம்!//

அப்படி போட்டிருந்தால் வெகுஜன ஊடகங்களை இடித்துரைக்கும் உரிமை என்னிடம் இருக்காது அல்லவா?

மேலும் இது போன்ற விவகாரங்களை அலசி பிழிந்திடத்தான் நமது தமிழ் பதிவுலகில் "பெரிய" பதிவர்கள் இருக்கின்றார்களே? அவர்கள் கூடாரத்தில் நான் ஏன் தலையை நுழைக்க வேண்டும்?

நன்றி வால்பையன்!

Maximum India said...

//. பணம் எரிவாயுவை மட்டும் அல்ல. கேள்வி கேட்க வேண்டிய எல்லோர் வாயையும் அடைக்கிறது.//

உண்மைதான்!

//சக்தி அம்மா , ரவி சங்கர் போன்றோர் சேவையை பாராட்ட வேண்டும். விமர்சன்களுக்கு அப்பாற்பட்டு கடைகோடியில் நிற்கதியில் நிற்கும் யாரோ ஒருவருக்காவது உதவி போய் சேர்கிறது. //

நிச்சயமாக!

//ஒரு பக்கம் நிவாரண பொருட்கள் போய் சேர்கின்றன. அவை உரிய இடத்தில், நேரத்தில் போய் சேர்கிறதா என்பதை கண்காணிக்க யார் உள்ளனர்? போர் முடிந்த நிலையில் நிலைமையை சாதகமாக உபயோகித்து எஞ்சிய மக்களுக்கு உதவி புரிந்திட நம் தலைவர்களால் முடியும்..//

கண்டிப்பாக முடியும்.

//ஊடகங்களை பொறுத்த வரையில் சூடான செய்திகளே முக்கியம்.. டெல்லியில் ஒரு கொலை தொடர்பாக கிட்ட தட்ட ஒரு சீரியலே நடத்தி முடித்தது ஒரு சேனல் . வணிக நோக்கம், போட்டி , கட்சி சார்பு , என பல விஷயங்கள் .. அவர்களும் தான் என்ன செய்வார்கள்.? ஏதோ நாம்தான் இப்படி எழுதி கொட்டி ஆற்றிக்கொள்ள வேண்டும்.//

குறைந்த பட்சம் இது போன்ற தகவல்களையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ள உதவும் பதிவுலகத்திற்கு நன்றி சொல்வோம்.

இங்கு மட்டும்தான் பணபலம், உடல்பலம், அரசியல் பலம் என்ற எந்த உதவியும் இல்லாமல் சுதந்திரமாக கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

நன்றி பொதுஜனம்!

Itsdifferent said...

Very true. When I was in India, there was a discussion among most of the media, about education minister or some one suggesting to remove the SSLC exam as public exam. I thought that he was making a suggestion, and encouraging a dialogue. But the media and other pols started portraying it as decision, and rather than discussing the merits and demerits of such a proposal, everyone was thrashing him.
I think web is providing a good media for discussion, but we have to see a day, whete every available media like radio, tv, print, web etc, being used for such discussions (side benefit: we can move Cinema to a minimum level)

Maximum India said...

நன்றி itsdifferent!

நீங்கள் சொல்வது உண்மைதான்.

நாட்டிற்கு முக்கியமான பல விஷயங்களில் ஊடகங்கள் இந்த பாணியையே பின்பற்றுகின்றன. ஒருசில சமயங்களில் அரசியல்வாதிகள் ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகள் எடுக்க முன்வந்தாலும் பல்வேறு துவேஷங்கள் மற்றும் டி ஆர் பி பொருட்டு ஊடகங்கள் அவற்றுக்கு முட்டுக் கட்டை போட்டு விடுகின்றன.

நன்றி.

Naresh Kumar said...

ஊடகங்கள் நடந்து கொள்ளும் முறை இப்படித்தானே???

வழிநடத்த வேண்டிய அரசு தவறு செய்கிறது, சுட்டிக் காட்ட வேண்டிய ஊடகங்கள் அலட்சியம் காட்டுகின்றன, கோபப்பட வேண்டியவர்கள் மதியிழந்து நிற்கிறார்கள், வெளங்கிரும்....

Maximum India said...

//வழிநடத்த வேண்டிய அரசு தவறு செய்கிறது, சுட்டிக் காட்ட வேண்டிய ஊடகங்கள் அலட்சியம் காட்டுகின்றன, கோபப்பட வேண்டியவர்கள் மதியிழந்து நிற்கிறார்கள், வெளங்கிரும்....//

உண்மைதான் நரேஷ்!

நன்றி!

வனம் said...

வணக்கம்

\\இவையெல்லாம் கூட மக்களை மயக்கும் ஒருவித போதை வஸ்துக்கள் என்றே நினைக்கிறேன்.\\

போதை வஸ்து என நிணைக்கின்றீர்களா ?!!!!!!!!!

எப்போதும் போதையிலேயே நிலையான தள்ளாட்டத்திலேயே வைத்திருப்பதுதான் இதன் உள்ளர்த்தமே

இராஜராஜன்

Blog Widget by LinkWithin