Skip to main content

ஒபாமாவே வருக! நம்பிக்கையைத் தருக!

பொருளாதார வீழ்ச்சி, வேலை இழப்புகள், வங்கிகள் மூடப் படுதல், வாகனத்துறை வீழ்ச்சி மற்றும் சந்தை ஊழல்கள் என கெட்ட செய்திகளாகவே வந்து கொண்டிருந்த அமெரிக்காவிலிருந்து பல நாள்களுக்கு பிறகு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதாவது, வரும் வாரத்தில் திரு.ஒபாமா அவர்கள் அமெரிக்காவின் முதல் குடிமகனாக பொறுப்பேற்க உள்ளார் என்ற செய்தி. பல நூற்றாண்டுகளாக கொடுமைபடுத்தப் பட்ட ஆப்ரிக்கா-அமெரிக்கா இனத்தை சேர்ந்த ஒருவர் முதன் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கிறார் என்பது அரசியல் ரீதியான முக்கிய நிகழ்வு ஆகும்.

அதே சமயம், பல ஆண்டுகளாக ஒரே (பொருளாதார) பாதையில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவிற்கு (ஓரளவிற்கேனும்) வேறுபட்ட சிந்தனைகளைக் கொண்ட ஒருவர் பொறுப்பேற்கிறார் என்பது சந்தைகளிற்கு சற்று தெம்பைக் கொடுக்கும் விஷயம். இந்த தெம்பு வரும் வாரத்தில் சந்தைகளில் என்ன மாற்றம் தர உதவும் என்று பார்க்கலாம்.


சென்ற வார சந்தை நிலவரம்


நாம் எதிர்பார்த்தது போலவே, சத்யம் ஊழல் மற்றும் சரிவைக் காட்டும் அமெரிக்க பொருளாதார புள்ளி விவரம், சென்ற வாரம் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவரின் ஊழல் பற்றி தினந்தோறும் வரும் புதிய தகவல்களும், முதலில் சத்யம் நிறுவனத்தை மீட்கலாம் என்று களத்தில் இறங்கிய மத்திய அரசு, ராஜு செய்த மோசடியின் வீச்சு கண்டு சற்று தயங்கியதும், இந்த வார வீழ்ச்சிக்கு பெரிய காரணங்கள்.


பொருளாதார பின்னடைவு குறித்த அச்சத்தின் காரணமாக உலக சந்தைகள் இந்த வாரம் பெரும் சரிவை சந்தித்ததும் நமது சந்தைகளின் நம்பிக்கையைச் சிதைத்தன. அமெரிக்க வங்கிகளின் காலாண்டு நிதி நிலை அறிக்கைகள் மிக மோசமாக இருந்ததும் நமது சந்தைகளின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. இந்த வாரமும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்று வந்தன.

அதே சமயம், இந்திய கார்பொரட் உலகத்தின் அச்சாணிகளான அண்ணன்-தம்பிகளுக்கிடையேயான எரிவாயு பங்கீடு குறித்த பிரச்சினைக்கு விரைவில் முடிவு கிடைக்கும் என்ற பலமான வதந்தியும் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் எரிவாயு உற்பத்தி விரைவில் தொடங்கும் என்ற செய்திகளும் சந்தைக்கு ஊக்கத்தைத் தந்தன. மேலும் சரியும் பணவீக்கம் (5.24), அதனடிப்படையில் வட்டி வீதங்கள் மேலும் குறைக்கப் படலாம் என்ற நம்பிக்கைகளைத் தந்தது. ரிலையன்ஸ் குழுமம் மற்றும் எரிசக்தி துறை பங்குகள் இந்த வாரம் சிறப்பான வளர்ச்சியைச் சந்தித்தன. டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை ஏமாற்றத்தைத் தந்தாலும், இன்போசிஸ் நிறுவனத்தின் சிறப்பான காலாண்டு அறிக்கை மென்பொருள் துறை பங்குகள் சிறப்பாக செயல் பட உதவியது. வங்கிகளின் நிதி அறிக்கைகள் சிறப்பாக இருந்தாலும், உலகளாவிய நிதித் துரையின் வீழ்ச்சி இந்திய வங்கிகளின் பங்குகளிலும் எதிரொலித்தது. ரியல் எஸ்டேட் துறை பங்குகளின் வீழ்ச்சி சென்ற வாரமும் தொடர்ந்தது. நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல சென்செக்ஸ்சுக்கு 9000 புள்ளிகளும் நிபிட்டிக்கு 2700 புள்ளிகளும் நல்ல அரண்களாக இருந்தன.


வரும் வார சந்தை நிலவரம்.


மேலே கூறியது போல, ஒபாமா வருகை சந்தைகளுக்கு ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என நம்பலாம். திங்கள் கிழமை அமெரிக்கா சந்தைகளுக்கு விடுப்பு என்பதால், வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் இந்திய சந்தை நல்ல நிலையில் இருக்கக் கூடும். சென்ற வாரம் சென்செக்ஸ்சுக்கு 9000 புள்ளிகளும் நிபிட்டிக்கு 2700 புள்ளிகளும் நல்ல அரண்களாக இருந்ததும் சந்தைக்கு ஒரு நல்ல தெம்பை கொடுக்கும்.


அதே சமயத்தில், சந்தை மிக அதிக முன்னேற்றம் காணும் என நம்புவது கடினம். அமெரிக்கா நிதி சந்தைகளின் நிலை மற்றும் இந்திய நிறுவனங்களின் (முக்கியமாக ரிலையன்ஸ்) காலாண்டு அறிக்கைகள் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். மொத்தத்தில் இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம்.


வரும் வாரத்திற்கான எதிர்ப்பு நிலைகள்

சென்செக்ஸ் - 9500-9600, 9900-10100,
நிபிட்டி 2900-2930, 3000-3030

வரும் வாரத்திற்கான அரண் நிலைகள்


சென்செக்ஸ் - 8950-9050, 8400-8500,
நிபிட்டி - 2700-2725, 2475-௨525


நிபிட்டி 2700 க்கு (சென்செக்ஸ் 9000) கீழே முடிவடையும் பட்சத்தில் வர்த்தகர்கள் தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limits) பெரிய நிறுவனங்களுக்கான பங்குகளை அல்லது குறியீடுகளை விற்கலாம்.

நிபிட்டி 2700 புள்ளிகளுக்கு மேல் தொடரும் வரை தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limit) பெரிய நிறுவனங்களுக்கான பங்குகளை அல்லது குறியீடுகளை வாங்கலாம்.

முதலீட்டாளார்கள் சந்தை சரிவைச் சந்திக்கும் பட்சத்தில், நன்கு செயல் படும் பொதுத் துறை வங்கிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகளை நீண்ட கால நோக்கில் வாங்கலாம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வர்த்தகம் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்பனை செய்வது ரூபாய் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். மற்றும் மேலே சொன்ன இதர சந்தை காரணிகள் ரூபாய் வர்த்தகத்தையும் பாதிக்கும். இந்திய ரூபாய் 48.00 இலிருந்து 49.50 வரை இருக்க வாய்ப்புகள் உண்டு.

வரும் வாரம் சிறப்பான வாரமாக அமைந்திட வாழ்த்துக்கள்.


நன்றி

Comments

பொங்கல் வாரத்தில் ஒபாமா சந்தையை பொங்க வைப்பார் என எதிர்பார்ப்போம்
kajan said…
ஒபாமா வந்தது நன்மை தான்.என்கிறீங்க
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டதிற்கு நன்றி

//பொங்கல் வாரத்தில் ஒபாமா சந்தையை பொங்க வைப்பார் என எதிர்பார்ப்போம்//

கண்டிப்பாக. ஒரு கடினமான தருணத்தில் நிகழும் இது போன்ற மாற்றங்கள் புதிய நம்பிக்கையை தர உதவுகின்றன.
Maximum India said…
அன்புள்ள கஜன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//ஒபாமா வந்தது நன்மை தான்.என்கிறீங்க//

ஒபாமா வந்தது என்பதை விட புஷ் போனது நல்லது என்று தோன்றுகிறது. நன்றி.
ஒபாமா = ஒ ழுக்கமான பாரபட்சமற்ற மா மனிதர்
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

அருமையான விளக்கத்திற்கு நன்றி. ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புகள் பல சமயங்களில் எதிர்வினையையே ஏற்படுத்தி இருக்கின்றன. ராஜீவ் காந்தி ஒரு நல்ல உதாரணம். எனவே, மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற படி ஒபாமா இருக்க முடியுமா என்பது ஒரு கேள்விக் குறியே.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...