Tuesday, July 21, 2009

கிளாஸ் டீச்சராகிப் போன கிளிண்டன்!


இன்று காலையில் பார்த்த ஒரு பத்திரிக்கை செய்தி, ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபக்கம் கோபத்தை வரவழைத்தது.

பத்திரிக்கை செய்தி இதுதான்!

மன்மோகன் சிங்கைப் பற்றி ஹில்லாரி கிளிண்டனிடம் அத்வானி கம்ப்ளைன்ட் செய்தார்.

இந்த செய்தி எனக்கு "டீச்சர்! இவன் எனது பல்பத்தை திருடிட்டான்" என்ற ஸ்கூல் ஞாபகத்தை வரவழைத்தது.

அப்படி என்ன குற்றச்சாட்டு என்று பார்ப்போம்.

பல மாதங்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பாகிஸ்தான் அரசுடனான பேச்சுவார்த்தையை (பயங்கரவாதத்தைப் பற்றி வலியுறுத்தாமலேயே) இந்தியா மீண்டும் துவங்க சம்மதித்தது மற்றும் பலுசிஸ்தான் பிரச்சினையில் இந்தியாவிற்கு தொடர்பு இருக்கிறது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டிற்கு வலுவான பதில் அளிக்காதது ஆகியவை.

மேலும் முக்கியமாக, மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானால் தண்டிக்கப் படாத நிலையில் பேச்சு வார்த்தையை புதிப்பிப்பது சரியல்ல என்றும் அத்வானி தெரிவித்திருப்பதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

மேற்சொன்ன குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. அவர் தெரிவித்திருக்க வேண்டிய, ஆனால் தெரிவிக்காமல் போன இன்னொரு குற்றச்சாட்டு, பல வருடங்கள் எதை எதிர்த்து இந்தியா போராடியதோ, அந்த ஒப்பந்தத்திலேயே இந்தியா கையெழுத்திட்டது.

கார்பன் வெளியீடு பற்றிய ஒருதலைபட்சமான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதும், இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக இந்தியா போராடிய போது முக்கிய பணியாற்றிய ஒரு அரசு அதிகாரி வெளிப்படையாக எதிர்ப்பை தெரிவித்ததாக பத்திரிக்கை செய்திகள் வெளியிடப் பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதும் அவசர அவசரமாக பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை துவங்கியதும், அமெரிக்க நிர்பந்தங்களின் அடிப்படையில், முக்கியமாக ஹில்லாரி கிளிண்டனின் வருகையை முன்னிட்டுத்தான், என்பது நாடறிந்த ரகசியம்.

இந்த நிலையில், யார் இதற்கெல்லாம் முக்கிய காரணமோ, அவரிடமே சென்று நம் எதிர்கட்சி தலைவர் முறையிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

அதே சமயத்தில் இந்தியா இறையாண்மை கொண்ட ஒரு சுதந்திர நாடு. இந்திய தலைவர்களின் தவறு குறித்து மக்களிடமோ அல்லது மக்கள் பிரதிநிதி சபையிலோதான் முறையிட வேண்டும். இதை விடுத்து அந்நிய நாட்டிடம் அதுவும் நம்மை ஆட்டிப் படைக்க விரும்பும் ஒரு நாட்டின் பிரதிநிதியிடம் முறையிடுவது என்ன விதத்தில் நியாயம்?

நன்றி.

14 comments:

வால்பையன் said...

அமெரிக்கா தான் நாட்டாமைங்கிறது தவிர்க்க முடியாத உண்மை ஆகி கொண்டு வருகிறதோ!

மீண்டும் காலணி ஆதிக்கம்!
நாடு உருப்பட்டுரும்!

Maximum India said...

நன்றி வால்பையன்!

//அமெரிக்கா தான் நாட்டாமைங்கிறது தவிர்க்க முடியாத உண்மை ஆகி கொண்டு வருகிறதோ!//

இத அவங்க சொல்றாங்களோ இல்லையோ, நம்ம பெருசுங்க போட்டி போட்டுக்கிட்டு சரணம் போடுறாங்க!

நன்றி!

Naresh Kumar said...

இவர்களைப் போன்ற தலைவர்கள்தான் இந்தியாவை ஆளவேண்டியிருப்பதுதான் நம் நேரக் கொடுமை!!!

Maximum India said...

//இவர்களைப் போன்ற தலைவர்கள்தான் இந்தியாவை ஆளவேண்டியிருப்பதுதான் நம் நேரக் கொடுமை!!!//

இந்தியாவின் சாபக்கேடு என்று கூட சொல்லலாம். தமக்குள்ளே அடித்துக் கொண்டு இந்த மண்ணிற்குள் அந்நியரை வரவழைத்த வரலாற்றுக் காலம் ஞாபகத்திற்கு வருகிறது.

நன்றி நரேஷ்!

KARTHIK said...

திரை மறைவுல என்ன டீல் நடந்துதோ அதுல அவரக்கு சரியானா பங்கு போயிருக்காது.அதனால கடுப்பாகி இருப்பார்.

நையாண்டி நைனா said...

What we can do? Our Leaders are like that.

nerkuppai thumbi said...

பாகிஸ்தானுடன் comprehensive talks நடத்த இந்தியா தயார் என செய்தி வந்தவுடன், திருமதி சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்திலேதான் மிகவும் சத்தமாக குரல் எழுப்பினார். ஆனால், அரசு தரப்பிலிருந்து தரப்பட்ட உரையில் சரியான விளக்கம் தரப்படவில்லை. ( என் மனைவி தினமும் குழம்பிலே உப்பு அதிகம் போட்டு விடுகிறாள் என்பது போல் வீதியில் பார்த்தவரிடம் புலம்புவது போன்று ) க்ளிண்டனிடம் புலம்பியிருக்கிறார் அட்வாணி
தவிரவும், பின்னூட்டத்திலே நண்பர்கள் சொல்லி , இருப்பது போல அமெரிக்கா நாட்டாண்மையை உலகமே ஒப்புக்கொண்டு இருக்கும் போது நாம் அவர்களிடம் "முறை இடுவதில் " தவறு இல்லை. ஆனால், அது நீங்கள் சொல்லி இருப்பது போல், வகுப்பு ஆசிரியையிடம் அழுவது போல் தான் தோன்றும் தான்

Thomas Ruban said...

//இவர்களைப் போன்ற தலைவர்கள்தான் இந்தியாவை ஆளவேண்டியிருப்பதுதான் நம் நேரக் கொடுமை!//

இன்று இருக்கும் தலைவர்கள் பலரும் தேச நலனில் அக்கரை இல்லாதவர்கள்.தங்களுடைய சுய நலன்க்காகபாடுபடுபவர்கள். அவர்களை மட்டும் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை மக்களும் (தேச நலனில் அக்கரை இல்லதவர்க்கே )
அப்படிபடவ்ர்க்கே ஆதரவு அளிக்கிர்னர்.

அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.

நன்றி..நன்றி..

பொதுஜனம் said...

இரு வேறாக சொல்லலாம்...ஒன்று.. எந்த வெளி நாட்டு பிரஜை வந்தாலும் இந்தியாவில் ஒரு மாதிரி பேசி பார்டர் தாண்டியதும் மாற்றி பேசுவது வாடிக்கை..மேலும் உள் நாட்டின் தேவை அடிப்படையிலும் வளர்ச்சியின் அடிப்படையிலும் தான் முதலீடுகளும் ஒப்பந்தங்களும் செயல்படுத்தப்படுகின்றன.. தலைவர்களின் விசிட் அதற்க்கு ஒரு டோக்கன் போல..ஆக ஹிலாரி வந்து போவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.. இரண்டு.. எப்படி என்றாலும் அமெரிக்கா இன்றும் அசைக்க முடியாத சக்திதான்..ஆக மாற்று பிரதமராக ஓரளவுக்காவது மதிக்கப்படும் ஒரு தலைவர் அமெரிக்கா ஜனாதிபதி வாய்பை நெருக்கத்தில் இழந்த ஒரு வசீகரமான தலைவரிடம் தான் கருத்தை சொல்லியதில் அல்லது புலம்பியதில் ஒன்றும் தவறில்லை..

Maximum India said...

நன்றி கார்த்திக்!

//திரை மறைவுல என்ன டீல் நடந்துதோ அதுல அவரக்கு சரியானா பங்கு போயிருக்காது.அதனால கடுப்பாகி இருப்பார்.//

இருக்கலாம்! அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே?

நன்றி!

Maximum India said...

நன்றி நையாண்டி நைனா!

Maximum India said...

// என் மனைவி தினமும் குழம்பிலே உப்பு அதிகம் போட்டு விடுகிறாள் என்பது போல் வீதியில் பார்த்தவரிடம் புலம்புவது போன்று ) //

உதாரணம் நன்றாகவே இருக்கிறது சார்!

Maximum India said...

//அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.//

உண்மைதான் தாமஸ் ரூபன்!

நன்றி!

Maximum India said...

//மேலும் உள் நாட்டின் தேவை அடிப்படையிலும் வளர்ச்சியின் அடிப்படையிலும் தான் முதலீடுகளும் ஒப்பந்தங்களும் செயல்படுத்தப்படுகின்றன.. //

இதெல்லாம் கொஞ்சம் ஓவரு. நம்ம தலைவருங்க மேலே அநியாயத்துக்கு நம்பிக்கை வைக்கிறீங்க!

//ஆக மாற்று பிரதமராக ஓரளவுக்காவது மதிக்கப்படும் ஒரு தலைவர் அமெரிக்கா ஜனாதிபதி வாய்பை நெருக்கத்தில் இழந்த ஒரு வசீகரமான தலைவரிடம் தான் கருத்தை சொல்லியதில் அல்லது புலம்பியதில் ஒன்றும் தவறில்லை..//

இது கொஞ்சம் புதுசா இருக்கு!

நன்றி பொதுஜனம்!

Blog Widget by LinkWithin