Thursday, January 8, 2009

பொருளாதார பயங்கரவாதம்


சத்யம் நிறுவனத்தின் தலைவராக இருந்த ராமலிங்க ராஜு சுமார் 7000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது இப்போது பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது. இந்திய வணிக வரலாற்றில் இதுவே மிகப் பெரிய (பகிரங்கப் படுத்தப் பட்ட) மோசடி எனக் கருதப் படுகிறது. இந்த மோசடி குறித்து இங்கு விவாதிப்போம்.

சத்யம் நிறுவனம் 1987 இல் ராமலிங்கம் ராஜு அவர்களால் ஆந்திர மாநிலத்தில் துவங்கப் பட்டது. கடந்த இருபது வருடங்களில் பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ள இந்த நிறுவனம் இப்போது இந்தியாவின் முதல் நான்கு பெரிய மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் உலகின் பல பகுதிகளிலும் (66 நாடுகள்) சேவை செயல்பாடுகள் கொண்ட இந்த நிறுவனத்தில் 50,000 பேருக்கும் மேற்பட்டோர் பணி புரிகிறார்கள். இந்த நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்கு சந்தையிலும் மிக அதிக அளவில் வர்த்தகம் ஆகி வருவதும், இதன் பங்கு சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகளில் முக்கிய மதிப்பீடு பெற்றிருப்பதும் குறிப்பிடத் தக்கவை. அதே சமயத்தில், நிறுவனத்தின் தலைமை மிகக் குறைந்த அளவே பங்குகள் சொந்தமாக வைத்திருப்பதும் பெரும்பாலான பங்குகள் பொது மக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களே கொண்டிருப்பதும் கவனிக்கப் படவேண்டிய விஷயம்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் தலைமை சத்யம் நிறுவனத்தில் உள்ள சுமார் 6000 கோடி ரூபாய் பணத்தை தலைவரின் மகனால் நடத்தப் படும் இன்னொரு நிறுவனத்திற்கு மாற்ற சில முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் சத்யம் முதலீட்டாளர்களின் உடனடி முயற்சியால் அந்த மோசடி தடுக்கப் பட்டது. (இது குறித்து இன்னொரு பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது)

இப்போது , சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு புதிய குண்டை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை மீது மட்டுமல்ல இந்திய பொருளாதாரத்தின் மீதும் வீசியுள்ளார். . அதாவது, நிறுவனக் கணக்கில் உள்ள சுமார் 7,000 கோடி ரூபாய் தவறாக அதாவது அதிகமாகக் காட்டப் பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதன் விவரம் கீழே.

௧. நிறுவனத்தின் ரொக்க கையிருப்பில் ரூ. 5040 கோடி குறைவாக உள்ளது.
௨. நிறுவனம் பெறப் பட வேண்டிய வட்டி கணக்கில் 376 கோடி குறைவாக உள்ளது.
௩. சத்யம் நிறுவனம் பெற்றுள்ள கடன் ரூ.1230 கோடி குறைவாக காட்டப் பட்டுள்ளது.
௪. சத்யம் நிறுவனம் கொடுத்துள்ள கடன் ரூ.490 கோடி அதிகமாகக் காட்டப் பட்டுள்ளது.

ஆக மொத்தம் ரூ.7136 கோடி நிறுவனத்தின் சொத்துத் தொகையில் அதிகமாக காட்டப் பட்டுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த வித்தியாசம் பல வருடங்களாக லாபத் தொகை அதிகமாக காட்டப் பட்டதாலேயே என்று சொல்லப் பட்டாலும் அது மட்டுமே காரணமா என்பதில் மிகப் பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை சுருட்ட மேற்கொண்ட முயற்சி பலிக்காத நிலையில், இது இரண்டாவது முயற்சியோ என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பே 2008 ஆம் ஆண்டு நிதி அறிக்கையின் படி சுமார் ரூ.7355 கோடி மட்டும்தான் எனும் பட்சத்தில் இப்போது ஏற்பட்டுள்ள இழப்பின் காரணமாக, இந்த நிறுவனமே திவாலாகும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், இந்தியாவில் தவறான வணிக நடைமுறைகளால் திவாலாகும் முதல் பெரிய நிறுவனம் சத்யம் என்ற இழி பெயரை இந்த நிறுவனம் பெறும். இந்த நிறுவனத்தை தணிக்கை செய்து வந்த அமெரிக்க தணிக்கை நிறுவனமும் (Price Waterhouse), செபி போன்ற கண்காணிப்பு நிறுவனங்களும், இந்த நிறுவனத்தில் தனி இயக்குனர்களாக பணி புரிந்தவர்களும் பல வருடங்களாக நடைப் பெற்று வருவதாக சொல்லப் படும் இந்த மோசடியை ஏன் முன் கூட்டியே தடுக்க வில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த தவறான நிகழ்வினால் கீழ்க்கண்ட இழப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது.

பல ஆயிரம் பேர் வேலை.
முதலீட்டாளர்களின் பணம்.
இந்திய நிறுவனங்களின் நம்பகத்தன்மை
புதிய வெளிநாட்டு முதலீடுகள்.

சத்யம் நிறுவனத்தில் மட்டுமா அல்லது வேறு சில நிறுவனங்களிலும் இது போன்ற தவறுகள் நடந்து வருகின்றனவா என்ற கேள்வியும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

இந்திய பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ள இவர்களைப் போன்ற பண வெறி பிடித்த பொருளாதார பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். இது போன்ற தவறுகள் இனியொரு முறை நடக்காத வண்ணம், வணிக நிதிமுறைகளை (Corporate Governance) வலுப் படுத்துதல், தணிக்கை விதிமுறைகளை கடுமைப் படுத்துதல் மற்றும் கண்காணிப்பு முறைகளை பலப் படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

நன்றி

14 comments:

குமரன் (Kumaran) said...

அடடா. இந்தியாவின் என்ரான் என்று சொல்லும்படி இருக்கிறதே. :-(

Nam-Tamil said...

:)

Maximum India said...

அன்புள்ள குமரன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//அடடா. இந்தியாவின் என்ரான் என்று சொல்லும்படி இருக்கிறதே. :-(//

நீங்கள் சொல்வது சரி. இந்திய கண்காணிப்பு முறைகள் அமெரிக்க முறைகளை விட சிறப்பாக உள்ளன என்று இனிமேல் தம்பட்டம் அடிக்க முடியாது. அது மட்டுமல்ல, இனிமேல் அனைத்து பெரிய நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளும் சந்தேக கண்ணோடே நோக்கப் படும்.

நன்றி.

Maximum India said...

Dear Nam-Tamil

:-)
:-)

நாமக்கல் சிபி said...

//இனிமேல் அனைத்து பெரிய நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளும் சந்தேக கண்ணோடே நோக்கப் படும். //

பின்னே! ஒரு பானைச் சோத்துக்கு ஒரு சோறு பதம் ஆச்சே!

K.R.அதியமான் said...

this is only the tip of the iceberg. tax evasion and window dressing of company accounts has been our national 'norms' for the past many deacades, due to the corrupting ways of state socialism and excessive tax regime in the past. old habits die hard. and we Indians are cynical and our standard operating procedure is
as per the 11th commandment :

"thou shall not be found out"

as long as our tax evasions, black money and other shady actions are not exposed, it is ok.

Maximum India said...

அன்புள்ள நாமக்கல் சிபி

பின்னூட்டத்திற்கு நன்றி

Maximum India said...

அன்புள்ள அதியமான்

பின்னூட்டத்திற்கு நன்றி.

உங்களது கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன். ஊழல் என்பது கண்டுபிடிக்கும் வரை தவறில்லை என்ற எண்ணம் நமது சமூகத்திலேயே புரையோடிப் போயிருப்பது மற்றும் தவறிழைப்பவர்கள் கூச்சப் பட்ட காலம் போய் சரியாக நடந்து கொள்பவர்களை "பிழைக்கத் தெரியாத மனிதர்கள்" என்று ஏளனம் செய்வது வழக்கமாகிப் போய்விட்டது என்பதும் வேதனையான விஷயங்கள்.

Sathyamurthy said...

You may want to read my blog post at: http://www.sathyamurthy.com/2009/01/07/satyam-fraud-unravelling-the-mystery/

வால்பையன் said...

இதில் இவர்களுடய வரி நிலுவை எவ்வளவு என கணக்கு வரலையே?

pothujanam said...

வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் போட்ட கோயிந்தா கோஷத்தில் ராஜுவின் கோயிந்தாவும் சேர்ந்து ஒலித்துள்ளது. முழித்துக்கொண்டு இருக்கும் போதே பட்ட நாமம் போட்டுள்ளார் அவர்.. கோட் சூட் போட்ட கார்பரேட் கனவான்கள் ஒன்னும் ஒன்னும் மூணு என்று சொன்னதை கேள்வி கேட்காமல் நம்பி உள்ளனர் மக்கள். செபி . ரிசர்வ் பேங்க் , கணக்கு பிள்ளைகள் (அதாங்க ஆடிட்டர்ஸ்) எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி உள்ள ராஜுவை எப்படியாவது தேடி பிடித்து நம் அரசியல் வாதிகள் கையில் சிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரை அடுத்த நிதி அமைச்சர் ஆக்கினாலும் ஆச்சர்யம் இல்லை.
இப்போதெல்லாம் மக்கள் தொகை உயர்வது போல் காலத்துக்கு ஏற்ப கொள்ளை அடிக்கும் பண அளவும் ஏறு முகத்தில் உள்ளது. ஆயிரம் கோடிக்கு கீழ் ப்ளேடு போட்டால் கேவலம் போல் இருக்கிறது.இவர்களுக்கு எல்லாம் மறு ஜென்மத்தில் நம்பிக்கை உண்டு போல் தோன்றுகிறது. சொர்கத்துக்கோ நரகத்திற்கோ போய் ஜாலியா செலவு பண்ணு வாய்ங்க போல. எது எப்படி போனால் நமக்கு என்ன ...ஏங்க! பெட்ரோல் வெல அஞ்சு ரூபா கொறையுமா கொறையாதா ?

Maximum India said...

அன்புள்ள சத்யமுர்த்தி

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

உங்களுடைய பதிவினையும் பார்த்தேன். இந்த பிரச்சினை குறித்த ஒரு சிறந்த அலசலை தணிக்கையாளரின் பார்வையில் கொடுத்துள்ளீர்கள்.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இதில் இவர்களுடய வரி நிலுவை எவ்வளவு என கணக்கு வரலையே?//

நிறுவனம் பல ஆண்டுகளாக நிதி நிலை அறிக்கையில் வெளியிடப் பட்டதை விட குறைவாக லாபம் பெற்றதாக இப்போது கூறப் படுவதால் வரி நிலுவை என்ற கேள்வி எழாது என்றே நினைக்கிறேன்.

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

எப்போதும் போல ஒரு எள்ளலான மற்றும் கலக்கலான பின்னூட்டத்திற்கு நன்றி

//வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் போட்ட கோயிந்தா கோஷத்தில் ராஜுவின் கோயிந்தாவும் சேர்ந்து ஒலித்துள்ளது. முழித்துக்கொண்டு இருக்கும் போதே பட்ட நாமம் போட்டுள்ளார் அவர்.. //

நாமும் ஒரு கோவிந்தா போட்டு விடுவோம் (நான் சொன்னது வைகுண்ட ஏகாதசிக்காக)

//கோட் சூட் போட்ட கார்பரேட் கனவான்கள் ஒன்னும் ஒன்னும் மூணு என்று சொன்னதை கேள்வி கேட்காமல் நம்பி உள்ளனர் மக்கள். செபி . ரிசர்வ் பேங்க் , கணக்கு பிள்ளைகள் (அதாங்க ஆடிட்டர்ஸ்) எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி உள்ள ராஜுவை எப்படியாவது தேடி பிடித்து நம் அரசியல் வாதிகள் கையில் சிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரை அடுத்த நிதி அமைச்சர் ஆக்கினாலும் ஆச்சர்யம் இல்லை.//

கண்ணில் மண் தூவி உள்ளாரா அல்லது அவர்களும் இதில் உடந்தையா என்பது கேள்விக் குறி. எப்படி இது போன்ற மோசடியை பல ஆண்டுகள் தொடர்ந்து செய்ய முடியும் என்பது புரியாத புதிர். மேலும் இந்த நிறுவனத்திற்கு சிறந்த வணிக நடைமுறைகளுக்காக (Corporate Governance) விருது வழங்கப் பட்டது ஒரு கேலிக் கூத்து.

//இப்போதெல்லாம் மக்கள் தொகை உயர்வது போல் காலத்துக்கு ஏற்ப கொள்ளை அடிக்கும் பண அளவும் ஏறு முகத்தில் உள்ளது. ஆயிரம் கோடிக்கு கீழ் ப்ளேடு போட்டால் கேவலம் போல் இருக்கிறது.இவர்களுக்கு எல்லாம் மறு ஜென்மத்தில் நம்பிக்கை உண்டு போல் தோன்றுகிறது. சொர்கத்துக்கோ நரகத்திற்கோ போய் ஜாலியா செலவு பண்ணு வாய்ங்க போல. //

மூன்று தலைமுறைகளுக்கு மேல் சொத்து சேர்க்க நினைப்பவர்கள் நாட்டின் வளங்களை சுரண்டும் பகல் கொள்ளைக்காரர்களே. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

//எது எப்படி போனால் நமக்கு என்ன ...ஏங்க! பெட்ரோல் வெல அஞ்சு ரூபா கொறையுமா கொறையாதா ?//

தேர்தலை மனதில் வைத்து ஒன்றிரண்டு வாரங்களில் பெட்ரோல் ஐந்து ரூபாய் வரை குறைக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் நாம் இப்படி முன் வாசலில் ஒன்றிரண்டு ரூபாய்க்கு பேரம் பேசிக் கொண்டு இருக்கும் போது பின் வாசல் வழியே நம் (நாட்டின்) பல ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் கொள்ளை போவதை கண்டுக் கொள்ளாமல் விட்டு விடுகிறோம் என்பது எனது தாழ்மையான கருத்து.

Blog Widget by LinkWithin