Skip to main content

மாற்றம் தேவை - ஒரு காரோட்டியின் கதை

நீங்கள் வளைவுகள் நிறைந்த ஒரு கிராமப் புறச்சாலையில் வேகமாக காரை ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் திறமையான, அதே சமயத்தில் சாலை விதிகளை எப்போதும் மதிக்கும் ஒரு காரோட்டி என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வளைவில் செல்லும் போது தவறான திசையில் வேகமாக ஆனால் தடுமாறியபடி கார் ஒட்டியபடி வரும் ஒரு இளம்பெண் உங்களைப் பார்த்து "எருமை" என்று கத்தியபடி கடந்து சென்றால் என்ன செய்வீர்கள்? உங்கள் மீது எந்த ஒரு தவறும் இல்லை. சாலையின் சரியான பக்கத்திலேயே சென்று கொண்டிருந்தீர்கள். எதிரில் வந்தது அந்த பெண்ணின் தவறு. தவறான பக்கத்தில் வந்த வண்டியில் மோதாமல் தப்பித்தது கூட உங்களுடைய தனித் திறமையால்தான். இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்து முடிவு செய்து விட்டு மேற்கொண்டு படியுங்கள்.

இப்படித்தான் ஒரு முறை தவறான பக்கத்தில் வந்து விட்டு தன்னை நோக்கி கத்தி விட்டு சென்ற பெண்மணியின் மீது கடுங்கோபம் கொண்ட ஒரு திறமையான காரோட்டி அவளை விடக் கூடாது என்ற நோக்கத்துடன் மிக வேகமாக அவளைப் பின் துரத்திச் சென்றான். பல கி.மீ. தூரம் துரத்திய பின்னர் அவளை மடக்கிய அவன் அவளை பார்த்துக் கோபமாக கூறுகிறான். "நான் ஒரு எருமை என்றால் நீ ஒரு பசு மாடு" என்று. அவளுக்கு ஒன்றுமே புரிய வில்லை. "எதற்காக இப்படி கூறுகிறாய்?" என்று கேட்க இவனுடைய பதில் " வளைவில் தவறான திசையில் வந்த நீ எப்படி என்னைப் பார்த்து எருமை என்று கூறலாம்?" அதற்கு அவள் கூறியது. " நான் உன்னைப் பார்த்து எருமை என்று கூற வில்லை. ஒரு எருமை கூட்டம் வழியை மறித்து நின்று கொண்டிருக்கிறது. ஜாக்கிரதையாகப் போ என்று எச்சரிக்கை செய்வதற்காகவே எருமை என்று கத்தினேன். மேலும் எனக்கு அவசர வேலை இருந்ததால் மேற் கொண்டு விளக்கம் அளிக்க முடியாமல் வேகமாக வந்து விட்டேன்"

இப்போது சொல்லுங்கள். உங்களுடைய பதில் என்ன? இந்த கேள்வி கேட்கப் பட்ட கிட்டத்தட்ட அனைவரிடமும் இருந்து வந்த பதில் என்ன தெரியுமா? "நான் ஏதேனும் ஒரு வகையில் கோபத்தை காட்டி இருப்பேன்."

இந்த நிலைக்கு காரணம் நம் எல்லாருக்கும் உள்ள "ஒருவகை கோட்பாடுகளுக்குள் இயங்கும் மனநிலை அமைப்பு"தான் ஆகும். அதாவது, அழுதால் பால் கிடைக்கும் என்று ஒரு குழந்தை நினைப்பதிலிருந்து, இந்த இனத்தை/ மதத்தை/ மொழியை/ கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று பெரியவர்கள் நினைப்பது வரை எல்லாமே, பிறந்த முதலே ஒரு மனிதனுக்கு மெல்ல மெல்ல உள்ளே திணிக்கப் பட்ட கலாச்சாரக் கோட்பாடுகளின் விளைவே ஆகும்.

ஆனால் இந்த கோட்பாடுகளை உடைப்பது சாதாரண காரியமல்ல. பூமியை மற்ற கிரகங்கள் சுற்றுகின்றன என்ற நம்பிக்கையை உடைத்த கலீலியோ மத நம்பிக்கையாளர்களால் சித்திரவதை செய்யப் பட்டார்.

அதே சமயம், இந்த கோட்பாடுகள் உடைக்கப் பட்டால்தான் புதிய உலகம் தென்படும்.பல உண்மைகள் புரிபடும். பல நன்மைகள் கிடைக்கும். உதாரணத்திற்கு முன்னொரு காலத்தில் கடிகாரம் என்றாலே சுவிற்சர்லாந்து என்று அறியப் பட்டது. சுவிஸ் நாட்டு கம்பெனிகள் ஒரு கடிகாரத்தை பற்சக்கரம், ஸ்ப்ரிங், கீ ஆகியவற்றைக் கொண்ட ஒரு மெகானிகல் இயந்திரமாகவே பார்த்து பழக்கப் பட்டவை. முதன் முதலாக குவார்ட்ஸ் கடிகாரம் சுவிஸ் விஞ்ஞானி ஒருவராலேயே கண்டுப் பிடிக்கப் பட்டாலும், சுவிஸ் கம்பெனிகள் அவரை புறந்தள்ள, அந்த கண்டுப் பிடிப்பை முதன் முதலில் ஏற்றுக் கொண்டது ஜப்பான் கம்பெனிகள்தான். விளைவு, சுவிற்சர்லாந்து கடிகார கம்பெனிகள் காணாமல் போயின. ஜப்பான் உலகின் மிகப் பெரிய கடிகார தயாரிப்பாளர் நாடாக மாறியது.

சிந்தனையில் மாற்றங்கள் என்பது வளமான வாழ்விற்கு மட்டுமல்ல, வாழும் வாழ்வை தக்க வைத்துக் கொள்ளவும் மிகவும் அவசியம். உயிரியல் கோட்பாட்டின் படி இயற்கையின் போக்கிற்கு ஏற்றவாறு மாற முடியாத விலங்குகள் மண்ணோடு மண்ணாக (டினோசார் கூட இதற்கு விதி விலக்கல்ல), மாற முடிந்த விலங்குகள் மட்டுமே இன்று வரை உயிர் வாழ்கின்றன.

எனவே, பழைய கட்டுப்பாடான கோட்பாடுகளை களைவோம். ஒவ்வொரு விஷயத்தையும் புதிதாக நோக்குவோம். சிந்தனையில் மாற்றங்களை உருவாக்குவோம்.

நன்றி.

Comments

Felix Raj said…
அருமையா கட்டுரை நன்றி
Maximum India said…
அன்புள்ள பெலிக்ஸ் ராஜ்

பின்னூட்டத்திற்கு நன்றி
நாம் மாறுகிறோமோ இல்லையோ.. மும்பை காரோட்டிகள் மாற வேண்டும்.. தண்ணி அடித்து இரவில் காரோட்டி எத்தனை பேர் உயிரை ஓட்டி விடுகிறார்கள்...
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//மும்பை காரோட்டிகள் மாற வேண்டும்.. தண்ணி அடித்து இரவில் காரோட்டி எத்தனை பேர் உயிரை ஓட்டி விடுகிறார்கள்...//

மானின் உயிரை விட மனிதனின் உயிர் மலிவாகி விட்ட இந்தியாவில், சில மேல்தட்டு மக்களின், "பணத்தைக் கொடுத்து எதையும் ஏன் உயிரையும் கூட வாங்கி விடலாம்" என்ற பண போதையே (குடி போதையை விட) மும்பையின் தொடரும் சோகத்திற்கு காரணம். எனது தனிப் பட்ட அனுபவத்தில் கூட, வேடிக்கைக்காக, இரு சக்கர வாகனங்களை உரசுவது போல பயமுறுத்தி வேகமாக காரோட்டும் சில பணக்கார வீட்டு பையன்களை சந்தித்திருக்கிறேன்.

நன்றி
KARTHIK said…
// சிந்தனையில் மாற்றங்கள் என்பது வளமான வாழ்விற்கு மட்டுமல்ல, வாழும் வாழ்வை தக்க வைத்துக் கொள்ளவும் மிகவும் அவசியம்.//

உண்மதாங்க.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி
ஏற்கனவே படித்தது போல் நினைவு,
இது மீழ்பதிவா?

காரோட்டி கோபப்பட்டது அடுத்த பிரச்சனை! அது நமக்கு அவசர சமங்களில் வராமலும் போகலாம்.
ஆனால் தவறு செய்தவருக்கு புத்தி சொல்லுதல், அறிவுரை வழங்குதல் தான் தீய குணம்.

மற்றவர்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் பேசுவது, கோபப்படுவதை விட முட்டாள்தனமானது என நினைக்கிறேன்
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//ஏற்கனவே படித்தது போல் நினைவு,
இது மீழ்பதிவா?//

இது மீள்பதிவு அல்ல. ஆனால், இதே போன்று (மாற்றம் தேவை - ஒரு கழுகின் கதை) ஏற்கனவே ஒரு பதிவு இட்டிருக்கிறேன். இன்னும் சில பதிவுகள் இது தொடர்பாக இடவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

//காரோட்டி கோபப்பட்டது அடுத்த பிரச்சனை! அது நமக்கு அவசர சமங்களில் வராமலும் போகலாம்.
ஆனால் தவறு செய்தவருக்கு புத்தி சொல்லுதல், அறிவுரை வழங்குதல் தான் தீய குணம்.

மற்றவர்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் பேசுவது, கோபப்படுவதை விட முட்டாள்தனமானது என நினைக்கிறேன்//

உண்மைதான். தனது எண்ணங்களின் அடிப்படையில் மற்றவர்களை எடை போடாதே, தனது எண்ணங்களை அவ்வப்போது புனரமைத்துக் கொள் என்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.

நன்றி.
/
சிந்தனையில் மாற்றங்கள் என்பது வளமான வாழ்விற்கு மட்டுமல்ல, வாழும் வாழ்வை தக்க வைத்துக் கொள்ளவும் மிகவும் அவசியம்.
/

நல்ல அருமையான பதிவு. நன்றி
Maximum India said…
அன்புள்ள சிவா

நன்றி :)

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...