Skip to main content

தவறான அணுகுமுறை

தமிழ் நாட்டில் மீண்டும் ஒரு அவலம் நிகழ்ந்தேறி உள்ளது. இந்த முறை மோதியது, போலீசாரும் வழக்கறிஞர்களும். முதலில் தவறு யார் செய்தார்கள் என்பதை விட அரசாங்கமும் போலீசும் பிரச்சினைகளை (தவறுகளை) எப்படி அணுகுகிறார்கள் எனபதைப் பொறுத்தே நல்ல தீர்வுகள் அமைகின்றன.

காஷ்மீர் பிரச்சினை முதல் ஸ்ரீ லங்கா பிரச்சினை வரை சில பிரச்சினைகளின் அடிப்படையில் சிறிய அளவில் துவங்கிய மக்கள் இயக்கங்களை கண்மூடித்தனமாக அரசாங்கங்கள் (போலீஸார்) நசுக்க முற்பட்டதே, அந்த இயக்கங்கள் பெரிய அளவிலான போராட்டங்களாக மாறியதற்கு முக்கிய காரணம் ஆகும். துவக்கத்திலேயே சரியான அணுகுமுறை இருந்திருந்தால், பல பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளப் பட்டிருக்கும். இந்த விஷயத்தில், அரசுக்கும், போலீசாருக்கும் மிகப் பெரிய பொறுப்புக்கள் உண்டு.

வழக்கறிஞர்கள் விஷயத்திற்கு வருவோம். சில வழக்கறிஞர்கள் சுப்பிரமணியம் சுவாமியை தாக்கியதை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர்களை கைது செய்ய போலீஸார் முயன்ற போது, வழக்கறிஞர்கள் தடுத்ததால் (அல்லது தாக்கியதால்), அவர்களை திருப்பி தாக்க நேர்ந்ததாக போலீஸ் தரப்பில் கூறப் படுகிறது.

என்னுடைய சில சந்தேகங்கள்:

குறிப்பிட்ட சில வழக்கறிஞர்களை நீதி மன்ற வளாகத்தில் வைத்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? நீதி மன்றத்தில் மற்ற வழக்கறிஞர்கள் முன் வைத்து அவர்களை கைது செய்தால், எதிர்ப்பு தோன்றும் என்று போலீசாருக்கு தெரியாதா?

அவர்களை அவர்களின் வீட்டிலேயோ, அலுவலகத்திலேயோ வைத்து கைது செய்திருந்தால் இவ்வளவு பெரிய கலவரத்தை தவிர்த்திருக்க முடியுமே? பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் இரவோடு இரவாக கைது செய்த போலீசாருக்கு இந்த சின்ன விஷயம் கூடவா தெரிய வில்லை?

பொதுமக்கள் பெருமளவிற்கு கூடுகின்ற இடத்தில் இது போன்ற கலவரங்கள் உருவானால், அப்பாவிகள் பலரின் பாதுகாப்புக்கு ஆபத்து வரும் என்று தெரியாதா?

போலீஸார் வாதத்தின் படியே கூட கலவரங்கள் செய்தது வக்கீல்கள். நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வாகனங்கள் என்ன பாவம் செய்தன? அவைகளை போலீசாரே அடித்து நொறுக்கியதற்கும் கலவரத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ஏன் இந்த மிருக வெறி?

கலவரம் செய்தவர்கள் வக்கீல்கள்தான் என்ற பட்சத்தில், ஊடகங்களை சேர்ந்தவர்களும், நீதிபதிகளும் தாக்கப் பட்டதற்கு காரணம் என்ன?

கைது செய்ய செல்ல சென்ற சில போலீசாரின் பாதுகாப்புக்காக முன்கூட்டியே பல ஆயிரம் போலீஸார் நிறுத்திவைக்கப் பட்டதற்கு என்ன காரணம்?

ஒரு வேளை, இலங்கை தமிழர் பிரச்சினை முதலான பல சமூக பிரச்சினைகளில் முன் நிற்கிற வழக்கறிஞர்களுக்கு "ஒரு சரியான பாடம்" கற்பிக்கவே இந்த தாக்குதல் என்றால், இதற்கும் "என்கௌண்டேர்களுக்கும்" என்ன வித்தியாசம் இருக்கிறது? இது ஒரு தவறான அணுகுமுறை அல்லவா? இந்த தாக்குதல்களால் பிரச்சினைகள் தீர்ந்து போய் விடுமா? மேலும் விரோதங்கள் அல்லவா வளரும்?

அரசின் அனுமதி இல்லாமல் போலீசாரால் இது போன்ற தாக்குதலில் ஈடுபட முடியுமா? அரசின் முதல் கடமை மக்களைப் பாதுகாக்க வேண்டியதுதானே? பொதுமக்கள் பெருமளவிற்கு கூடும் இந்த பகுதியில், தாக்குதலை நடத்த அனுமதித்தது ஏன்?

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே, வன்முறையில் ஈடுபட்டால், பொதுமக்களுக்கு ஒரு வித அச்ச உணர்வு தோன்றாதா?

ஒரு நாட்டின் அரசு அதன் மக்களுக்கு பெற்றோரை ஒத்தது. குழந்தைகள் தவறு செய்யலாம். பெற்றோர் கண்டிக்கலாம். ஆனால், குழந்தைகளை திருத்துவதைத் தவிர்த்து, பெற்றோரே குழந்தைகளை தாக்க ஆயுதங்களை எடுக்கக் கூடாது என்பதே என் கருத்து. பல சமயங்களில் பிரச்சினைகளைத் தீர்கிறோம் என்று அதிகப் படுத்தும் போக்கையே நம்மால் பார்க்க முடிகிறது.

நன்றி

Comments

தமிழ் நாட்டில் நடந்த இன்னொரு அவலம்; சட்டக் கல்லூரியில் சில வாரங்களுக்கு முன்பு நடந்ததே அது போன்றது தான் இதுவும்.

போலீசின் வன்முறை என்பது நாம் பலமுறை கேள்விப்பட்டது தான். இம்முறை தாக்கப்பட்டது வக்கீல்கள்; அவ்வளவே.

பொது மக்களுளின் ஆதரவு வழக்குரைங்கர்களுக்கு உண்டா என்பதையும் பார்க்கவேண்டும்.

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் வேலைநிறுத்தம்; ஈழத்தில் சண்டை என்றால் வேலை நிறுத்தம்; வழக்கு தொடுத்து அவதிப்படும் வாதி-பிரதிவாதிகள் எக்கேடு கெட்டதாவது போகட்டும். அவர்கள் தமிழ் நாட்டில் பிறந்தது அவர்கள் குற்றம் என்னும் மனப்பான்மை வந்து விட்டது.

சட்டக் கல்லூரியில் சாதி பார்த்து முக்குலத்தோரா தலித்தா என்று பார்த்து வெட்டும் மாணவர்கள் தேர்வு தேறி வக்கீல்கள் ஆனால் எப்படி நடந்து கொள்வார்கள்?

சட்டம் படிப்பவர்களே சட்டத்தை மதிக்காவிட்டால் வேறு எவன் மதிப்பான்?

தமிழ் நாட்டில் பிறந்தவன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படும் நிகழ்வுகள் இப்போது அடிக்கடி நடப்பது நம் போதாத காலம்.
Maximum India said…
அன்புள்ள ஐயா!

கருத்துரைக்கு நன்றி

//பொது மக்களுளின் ஆதரவு வழக்குரைங்கர்களுக்கு உண்டா என்பதையும் பார்க்கவேண்டும். //

பொது மக்களின் ஆதரவு போராடும் வழக்கறிஞர்களுக்கு மிகக் குறைவு என்றே எனக்கும் தோன்றுகிறது. சொல்லப் போனால், யாராலும் நடத்தப் பெறும் எந்த ஒரு போராட்டத்திற்குமே மக்களின் ஆதரவு கொடுப்பதில்லை. யார் எப்படிப் போனால் என்ன? நாம் வீடு போய் சேர்ந்தால் போதும் என்றே பலருக்கும் தோன்றுகிறது. இதில் அவர்கள் தவறொன்றுமில்லை. பல போராட்டங்களில் சுயநலங்களும் அரசியலும் கலந்திருப்பதால்தான் இப்படி.

நன்றி.
வழக்கறிஞர்களுக்கும் , காவல் துறையினருக்கும் ஏற்கனவே ஒரு அதிகாரப்போர் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் யார் பெரியவன் என்று அடித்து பார்த்து கொள்கிறார்கள்.

வேறென்ன சில அப்பாவிகளின் மண்டை உடையும்.
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//வழக்கறிஞர்களுக்கும் , காவல் துறையினருக்கும் ஏற்கனவே ஒரு அதிகாரப்போர் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் யார் பெரியவன் என்று அடித்து பார்த்து கொள்கிறார்கள்.

வேறென்ன சில அப்பாவிகளின் மண்டை உடையும்.//

உண்மைதான். போலீஸார், தமது கவனத்தை நாட்டின் பாதுகாப்பிலும் வழக்கறிஞர்கள் தமது கவனத்தை மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதிலும் கொஞ்சம் திருப்பினால் நன்றாக இருக்கும்.

நன்றி.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!

எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன். அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார். இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் ப...