Skip to main content

எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அரசியல் பெருந்தலைவர்களே! உங்களுக்கு ஓர் கடிதம்.

வணக்கம். உங்களில் சிலருக்கு வழங்கப் படும் உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை (Z+ வகை) , தனது சாலையோர பயணங்களின் போது, கூர்ந்து கவனித்த ஒரு பொது ஜனம் நான்.

உங்கள் வீடுகளை சுற்றி திரும்பிய திசையெல்லாம் உள்ள பாதுகாப்பு வளையங்கள் எத்தனை?. அங்கே நவீன ஆயுதங்களைத் தாங்கிய உடல் துடிப்பான போலீஸ் வீரர்கள் எத்தனை பேர்? இது நாடா அல்லது போர்க்களமா என்று சந்தேகப் பட வைக்கிற பல மணல்மூட்டை மேடுகள் கூட உங்கள் வீட்டை ஒட்டிய சாலைகளில் வைக்கப் பட்டுள்ளது அல்லவா? போலீஸ் கவச வாகனங்கள் சுற்றிலும் நிறுத்தப் பட்டு , அதில் ஏராளமான போலீசார்கள் 24 மணி நேரமும் உங்களை பாதுகாக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, உங்கள் பிள்ளைகள் சினிமா நட்சத்திரங்களை அருகே அமர்த்திக் கொண்டு, மாலை நேர விருந்துகளுக்கு (சுயமாக ஒட்டி) செல்லும் செல்லும் போது கூட, முன்னேயும் பின்னேயும் எத்தனை போலீஸ் வாகனங்கள்? இத்தனை பாதுகாப்பு போதாதென்று, பல வண்டிகளில் கூடவே செல்லும் தொண்டர் படை ஊர்வலம் அதுவும் சாலையில் செல்லும் என்னை போன்ற மற்ற வாகன ஓட்டிகளை மிரட்டிக் கொண்டு செல்வது கூட உண்டு.

அதே சமயம் பொதுமக்கள் லட்சக் கணக்கில் தினந்தோறும் வந்து செல்லும் மும்பை சி.எஸ்.டி ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் ஒன்றிரண்டு போலீஸ்காரர்கள் (அதுவும் லத்தி மட்டுமே துணை கொண்டு) எங்களின் பாதுகாப்பிற்கு துணை சேர்க்கிறார்கள். கடைசியாக மும்பையில் தாக்குதல் ஏற்பட்ட போது, இந்த பரிதாபத்திற்குரிய போலீஸ்காரர்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவே மிகவும் தடுமாறி விட்டனர். ஏன் இந்த வேறுபாடு? எல்லா உயிருமே போனால் திரும்பி வராததுதானே?

என்னை போன்று, எளிமையாக சுதந்திரமாக வாழ ஆசைப்பட்டு தன்னிச்சையாக வாழும் பொது மக்களுக்கு மத்தியில், வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற தீராத வேட்கை கொண்டு இவ்வளவு உயரத்திற்கு வந்துள்ள உங்களது உயிருக்கு அதிக விலை உண்டு என்பதை நான் மறுக்க வில்லை. நீங்கள் இன்னும் பலகாலம் வாழ்ந்து இந்த நாட்டு மக்களுக்கு பல சேவைகள் புரிய வேண்டும் என்பது கூட என் ஆசைதான். மேலும் உங்கள் உயிருக்கு பல தீவிரவாத அச்சுறுத்தல்களும் உண்டுதான். எனவே, உங்கள் பாதுகாப்பைக் குறைத்துக் கொண்டு எங்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுங்கள் என்று நான் கேட்க வில்லை.

ஆனால், உங்களை விட்டால் நாங்கள் யாரிடம் இது குறித்து முறையிட முடியும்? பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் பேச்சை மட்டுமே அரசு இயந்திரம் கேட்கிறது. என்னை போன்றவர்களிடம் வாக்கினை மட்டுமே விரும்பிக் கேட்கும் நீங்கள் எங்கள் கருத்துகளையும் கவலைகளையும் ஏன் கொஞ்சமாவது அக்கறையுடன் கேட்கக் கூடாது? எங்களுக்காக நீங்கள் ஏன் அரசு இயந்திரத்திற்கு அனைத்து மக்களுக்கும் உரிய சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரச சொல்லி உத்தரவிடக் கூடாது? இதற்கு தேவையான பண வசதி, மனித வளங்கள் மற்றும் அறிவியல் தொழிற் நுட்பம் அனைத்தும் இந்தியாவில் உண்டு என்பதை நீங்களும் அறிவீர்கள். இல்லாதது "செய்து முடிப்போம்" என்ற மனம் மட்டும்தான்.

பாதுகாப்பு விஷயத்தில் நீங்கள் உடனடியாக செயல்பட தவறினால், நீங்கள் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர உதவும் தேர்தலுக்கு அடிப்படையான ஜனநாயகம் எங்களோடு சேர்ந்து மடிந்து போய் விடும். சொல்லப் போனால், இதே போல தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே போய் வாக்கு அளிக்க இந்தியர் ஒருவர் கூட உயிரோடு இல்லாத அவல நிலை கூட ஏற்பட்டு விடும் ஆபத்து உள்ளது. அப்போது நீங்கள் பிணங்களுக்கு மத்தியில் பேயாட்சிதான் செய்ய முடியும் (இப்போது மட்டும் வேறு ஆட்சி நடக்கிறதா என்று கேட்டு விடாதீர்கள்?) எங்களுக்காக இல்லாவிடிலும் உங்களுக்காகவாவது பொது மக்களுக்கான பாதுகாப்பை அதிகரியுங்கள்.

நன்றி

மீண்டும் வணக்கத்துடன்

Comments

கபீஷ் said…
ஐ! ரொம்ப நல்லாருக்கு!
Maximum India said…
அன்புள்ள கபீஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி
Maximum India said…
viswanarayan commented on your story 'அரசியல் பெருந்தலைவர்களே! உங்களுக்கு ஓர் கடிதம்'

'நல்லா கேட்டீங்க‌'

Here is the link to the story: http://www.tamilish.com/story/16492

Thank your for using Tamilish!

- The Tamilish Team
Maximum India said…
viswanarayan commented on your story 'அரசியல் பெருந்தலைவர்களே! உங்களுக்கு ஓர் கடிதம்'

'நல்லா கேட்டீங்க‌'

Here is the link to the story: http://www.tamilish.com/story/16492

Thank your for using Tamilish!

- The Tamilish Team
Maximum India said…
அன்புள்ள vishwanarayan

கருத்துக்கு நன்றி
pothujanam said…
அட நல்லா இருக்கே ! இந்த சங்கு எங்கே கிடைத்தது? பரவால்லே நல்லாவே ஊதறீங்க.அதாவது... நாங்க என்னையா பண்றது இதுக்கெல்லாம் ? ஒரு பதவிய புடிககிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா .எத்தன பேர அடிச்சு .. பொய் சொல்லி.. ஊர ஏமாத்தி..காச காப்பாத்தி..இந்த பதவிய வாங்கறது ஐ எ எஸ் விட கஷ்டம்பா . என்ன எந்த தீவிரவாதியும் சுடமாட்டான் . நாங்க பண்ற பிரச்னைல பொது மக்கள் எங்கள போட்டு தள்ளாம இருந்த சர்தான். எப்பயாவது ஒரு எலெக்ஷன் ல ஓட்டு .போட்டுட்டு கேக்கேறது பார் கேள்விய ? ஆட்சி நா சும்மாவா ? தம்பி ஒன்னு நல்லா புரிஞ்சுகோ.அப்போல்லாம் Govt of the people..for the people.. by the people.. இப்போ govt "off the people". "buy the people". "far from the people". புரியுதா ?
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

யாருங்க நீங்க? புதுசா போட்டியா முளச்சிரிங்கீங்க?

கமெண்ட் சூப்பர் போங்க. அதுவும்

//தம்பி ஒன்னு நல்லா புரிஞ்சுகோ.அப்போல்லாம் Govt of the people..for the people.. by the people.. இப்போ govt "off the people". "buy the people". "far from the people". புரியுதா ?//

இது அருமையிலும் அருமை.

நன்றி
எல்லாம் அவுங்க வீட்டு பொண்டுகளுக்கு வேலைக்கு. எந்த வேலை எண்டு கேக்கப் படாது.
Maximum India said…
அன்புள்ள ஆட்காட்டி

//எந்த வேலை எண்டு கேக்கப் படாது.//

கண்டிப்பா கேட்க மாட்டேன்.

பின்னூட்டத்திற்கு நன்றி
Maximum India said…
அன்புள்ள டோண்டு ராகவன் ஐயா!

உங்களது பின்னூட்டத்திற்கும் அருமையான விளக்கத்திற்கும் நன்றி.
KARTHIK said…
// அப்போது நீங்கள் பிணங்களுக்கு மத்தியில் பேயாட்சிதான் செய்ய முடியும்.//

இப்பையும் அதுதான் நடக்குது

//அப்போல்லாம் Govt of the people..for the people.. by the people.. இப்போ govt "off the people". "buy the people". "far from the people". புரியுதா ? //

Mr.பொதுஜனம் கலகிட்டீங்கபோங்க
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இப்பையும் அதுதான் நடக்குது //

//Mr.பொதுஜனம் கலகிட்டீங்கபோங்க //

நானும் வழி மொழிகிறேன்

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...