Monday, February 23, 2009

ஜெய் ஹோ இந்தியா!


கடந்த எண்பது ஆண்டு கால ஆஸ்கார் சரித்திரத்தில் இரண்டு இந்தியர்கள் ஆஸ்கார் மட்டுமே விருது பெற்றுள்ளனர். ஆனால் இந்த ஒரு தடவையிலோ மூன்று இந்தியர்கள் ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ளனர். கொடுக்கிற (ஆஸ்கார்) தெய்வம் இந்த முறை கூரையை பிய்த்துக் கொண்டு கொடுத்திருக்கிறது. இந்த வெற்றியின் அடிப்படை காரணத்தைப் பற்றியும் இந்திய திரையுலகத்திற்கு இந்த வெற்றியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.

"Slumdog millionaire (சேரி நாய் கோடீஸ்வரன் ?)" திரைப் படம் ஒரு இந்தியப் படமா என்பதிலேயே பலமான சர்ச்சை இருந்து வருகிறது. இந்தப் படத்தில் இந்தியாவை தவறாக சித்தரித்துள்ளதாகவும் கூட (குறிப்பாக மும்பை தாராவியை சேர்ந்தவர்களால்) எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கிலம் பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டில் இந்தப் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்ற பின்னரே இந்தியாவில் மொழி பெயர்க்கப் பட்டது என்பதும் இந்தியாவில் இந்தப் படம் பெரிய தோல்வியை பெற்றதும் குறிப்பிடத் தக்கது.

இன்றைக்கு உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டு பெரிய நாடுகள் இந்தியா மற்றும் சீனா. பொதுவாகவே, சீனாவின் கலாச்சாரத்தினைப் பற்றிய உயர்ந்த கருத்துடன் அமைந்த படைப்புக்கள் மேலை நாட்டினரால் வரவேற்கப் படும் அதே வேளையில் இந்தியாவின் இருண்ட பக்கத்தினை (ஓரளவுக்கு உண்மையான பக்கங்கள்தான்) வெளிச்சம் போட்டுக் காட்டும் படைப்புக்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. (இதற்கு பல உதாரணங்கள் கூற முடியும்). அந்த வகையில் "Slumdog Millionaire" பெற்ற வெற்றியில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லை என்றே கூற வேண்டும். இந்தப் படத்தின் வெற்றிக்கு இன்னும் சில காரணங்கள் கூட கூறப் படுகின்றன. பொருளாதார வீழ்ச்சியில் துவண்டு போயிருக்கும் மேலை நாட்டினருக்கு, இந்த படத்தில் சித்தரிக்கப் பட்டிருக்கும்படி "துவேஷிக்கப் படும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு ஏழை சிறுவன்" தனது வாழ்வில் பெற்ற மிகப் பெரிய வெற்றி ஒரு ஊக்கத்தை தருவது போல உள்ளது என்றும் கூறப் படுகிறது.

ஆனால், இந்தப் படம் ஆஸ்கார் அளவில் அடைந்திருக்கும் மகத்தான வெற்றி (8 விருதுகள்) மற்றும் இந்திய கலைஞர்களுக்கு கிடைத்திருக்கும் உலகளாவிய அங்கீகாரம் இந்த வெற்றிக்கு பின்னணியில் இன்னும் சில விஷயங்கள் உண்டு என்பதை காட்டியுள்ளது. இந்தியப் படங்களில் இசை ஒரு நெருடலாகவே உள்ளது என்ற மேலை நாட்டு கருத்துக்களுக்கு நேர்மாறாக, இந்திய கலைஞர் ஒருவர் இசைக்காகவே விருது பெற்றிருப்பதும், மேலைநாட்டு (சிறப்பு) தொழிற்நுட்ப விஷயமொன்றில் (ஒலிக் கலவை), இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்திருக்கும் ஒரு தொழிற்நுட்ப கலைஞர் விருது பெற்றிருப்பதும் அனைவரையும் தலை நிமிரச் செய்யும் விஷயங்கள். மேலும், பற்சிதைவுக்கு உள்ளான சிறுமியைப் பற்றிய ஒரு இந்திய ஆவணப் படம் விருதை வேண்டிருப்பது உலக அளவில் இந்தியாவிற்கு புதிய அங்கீகாரம் கிடைத்திருப்பதை உறுதி செய்கிறது.

இதற்கு முன்னர், இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் சென்ற மிகச் சிறந்த படைப்புக்களான ரோஜா, தேவர் மகன், ஹே ராம் மற்றும் லகான் ஆகியவை (வெளிநாட்டு படப் பிரிவில் சென்றவை) வெறுங்கையுடன் திரும்பி வந்துள்ளன. இளையராஜா, ஆர்.டி. பர்மன் போன்ற இசையுலக மேதாவிகள் உலக அளவில் இது வரை அங்கீரிகரிக்கப் பட்டதில்லை. ஏ.ஆர் ரஹ்மான் கூட இந்தப் படத்தின் இசையமைப்புதான் அவருடைய படைப்புகளிலேயே (ரோஜா, பாம்பே, லகான் போன்றவை) மிகவும் சிறந்தது என்று ஒப்புக் கொள்ளமாட்டார் என்றே நினைக்கிறேன்.

மொத்தத்தில், உலக அரங்கிற்கான கதவு இப்போதுதான் இந்தியாவிற்கு திறந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. தந்தையின் உழைப்பு தனயனுக்கு அங்கீகாரத்தை தேடித் தருவதை போல, பல இந்திய திரை மேதைகள் இட்ட அடித்தளம் உலக அளவில் இன்றைய இந்திய திரைத்துறையினர் வெற்றி பெற உதவியாக உள்ளது என்றே கருதுகிறேன்.

இந்த வெற்றியின் முக்கியத்துவங்கள்

இந்த படத்தின் மூலமாக, உலகின் பார்வை இந்திய திரைகலைஞர்களின் மீது படிந்துள்ளது. பல இந்திய கலைஞர்களுக்கு மேலைநாட்டு படங்களில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். இதில் அவர்களுக்கு கிடைக்கும் அரிய அனுபவம் மேலும் சிறந்த இந்தியப் படங்களைத் தயாரிக்க உதவி செய்யும். இந்தியப் படங்களுக்கான சந்தை கூட உலக அளவில் விரியும் என்பதும் பொருளாதார ரீதியான நல்ல செய்தி.

நன்றி

பின்குறிப்பு: இந்தியருக்கு பெருமை சேர்த்த ரஹ்மான், ரேசுல் பூக்குட்டி, குல்சார் ஆகியோருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள். ஆஸ்கார் மேடையில் தமிழில் பேசி அசத்திய ரஹ்மானுக்கு இரட்டிப்பு வாழ்த்துக்கள்

12 comments:

KARTHIK said...

// ஆஸ்கார் மேடையில் தமிழில் பேசி அசத்திய ரஹ்மானுக்கு.//

அட அட இதப்பாக்காம போயிட்டேனே.
படிக்கவே சந்தோசமா இருக்கு.

Maximum India said...

நன்றி கார்த்திக்

வீடியோ படம் இதில் நீங்கள் பார்க்கலாம்.


http://www.sathyamurthy.com/2009/02/23/a-proud-double-from-a-r-rahman/

அப்துல்மாலிக் said...

இந்தியருக்கு கிடைத்திருப்பது மைல்கல் எல்லைக்கோடு அல்ல

உலக ஜாம்பவான் மத்தியில் தமிழில் பேசி தமிழனை தலைநிமிர வைத்த ரகுமானுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Maximum India said...

அன்புள்ள அபுஅப்ஸர்

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

//இந்தியருக்கு கிடைத்திருப்பது மைல்கல் எல்லைக்கோடு அல்ல//

கண்டிப்பாக. அதனால்தான், "கதவு இப்போதுதான் திறந்திருக்கிறது" என்று பதிவிலேயே கூறி உள்ளேன். வருங்காலத்தில் மேலும் பல ரஹ்மான்கள் உருவாகி இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துவோம்.

//உலக ஜாம்பவான் மத்தியில் தமிழில் பேசி தமிழனை தலைநிமிர வைத்த ரகுமானுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்//

அப்துல் கலாம் முதல் ரஹ்மான் வரை தமிழகத்தின் மேதைகள் எவ்வளவு உயரம் போனாலும் தமிழை மறக்காமல் இருப்பது தமிழின் பெருமையினையும் தமிழர்களின் அருங்குணத்தையும் காட்டுகிறது. இந்த நிமிடத்தில் ஒரு தமிழனாக இருப்பதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.

நன்றி.

மற்றும் ஒரு காதலன் said...

சர்ச்சைகளை தாண்டி, இது உண்மையாகவே ஒரு சந்தோஷ தருணம்.

Please visit my blog: http://valibarsangam.wordpress.com & give me your support too

வால்பையன் said...

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் சக இந்தியர்களுக்கு என் வணக்கங்கள்.

வாழ்த்த வயதில்லாவிட்டால் இது தான் எங்கள் பழக்கம்.


ஹீஹீஹீ

Maximum India said...

நன்றி வால்பையன்

Maximum India said...

அன்புள்ள சரவணன்

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

//சர்ச்சைகளை தாண்டி, இது உண்மையாகவே ஒரு சந்தோஷ தருணம். //

கண்டிப்பாக.

//Please visit my blog: http://valibarsangam.wordpress.com & give me your support too//

உங்களுடைய பதிவுகளைப் பார்த்தேன். மிக நன்றாகவே உள்ளன. வாழ்த்துக்கள்.

நன்றி

பொதுஜனம் said...

பிரிட்டன் தயாரிப்பு என்றாலும் இந்திய கதை என்பதால் இரட்டிப்பு சந்தோசம். தொழில் நுட்ப ரீதியில் இந்தியர்களில் வளர்ச்சி பிரம்மாண்டமாய் உள்ளது. ரஹ்மான் அதில் உச்சியில் பிரகாசிக்கிறார்.இருப்பினும் கதையில் கோட்டை விடுவதாலும், கதை சொல்லுவதில் கோட்டை விடுவதாலும் ஆஸ்கர் என்ற கோட்டையில் இதுவரையில் நுழைய முடிவதில்லை. சிறப்பான திருப்பங்கள் கொண்ட காந்தி கதையை அட்டன் பரோ , பென் கிங்க்ஸ்லி ஆகியோர் இந்தியாவில் எடுத்து ஆஸ்கர் பெற்றனர். அனால் நம்மவர்கள் பெரும்பாலோர் இன்னும் இரண்டு வாரம் ஓடக்கூடிய படங்களை எடுத்து திருப்தி பட்டு கொள்கின்றனர்.கமல் ஆமீர் போன்றோர் கோட்டை வாசல் வரை சென்று கேட்டை திறக்க முடியாமல் வந்து விட்டனர். ரஹ்மான் வெற்றிப்படி ஏறி சாதித்துள்ளார். அவர் பட்ட கஷ்டங்கள் அவருக்கே தெரியும். சாதரண மிடில்க்ளாஸ் மனிதனின் சாதனை தன்னம்பிக்கை அளிக்கிறது.

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

//தொழில் நுட்ப ரீதியில் இந்தியர்களில் வளர்ச்சி பிரம்மாண்டமாய் உள்ளது. ரஹ்மான் அதில் உச்சியில் பிரகாசிக்கிறார்.//

உண்மைதான். நமது தொழிற் நுட்பம் உலகத் தரம் வாய்ந்ததே.

//இருப்பினும் கதையில் கோட்டை விடுவதாலும், கதை சொல்லுவதில் கோட்டை விடுவதாலும் ஆஸ்கர் என்ற கோட்டையில் இதுவரையில் நுழைய முடிவதில்லை.சிறப்பான திருப்பங்கள் கொண்ட காந்தி கதையை அட்டன் பரோ , பென் கிங்க்ஸ்லி ஆகியோர் இந்தியாவில் எடுத்து ஆஸ்கர் பெற்றனர். அனால் நம்மவர்கள் பெரும்பாலோர் இன்னும் இரண்டு வாரம் ஓடக்கூடிய படங்களை எடுத்து திருப்தி பட்டு கொள்கின்றனர்//

ஆஸ்கார் என்பது ஆங்கிலப் படங்களுக்கான ஒரு அளவுகோல் மட்டுமே என்றாலும், நம்மால் உலகத் தரம் வாய்ந்த படங்களை தயாரிக்க முடியாமல் போனதற்கு நீங்கள் சொன்னது போல குறுகிய வணிக நோக்கங்களுடன் படங்கள் தயாரிப்பதுதான். இருந்தாலும் அவ்வப்போது நமது திரையுலக சிப்பிகளிடமிருந்து நாயகன், தேவர் மகன் அன்பே சிவம், லகான், தாரே ஜாமீன் பர், முன்னா பாய் போன்ற முத்துக்கள் வெளிவந்தது கொண்டுதான் இருக்கின்றன.

// சாதரண மிடில்க்ளாஸ் மனிதனின் சாதனை தன்னம்பிக்கை அளிக்கிறது.//

கண்டிப்பாக.

நன்றி.

Naresh Kumar said...

ர்குமானுக்கு, உங்களது வாழ்த்துடன் எனது வாழ்த்தும் சேர்ந்து ஒலிக்கட்டும்...

Slumdog millionaire படத்தை எப்படி அருந்ததிராய் போன்றோர் தவறான படம் என்று விமர்சிப்பது அபத்தமாக படுகிறதோ, அதே போல்தான் இந்த படத்துக்கு கிடைத்திருக்கும் அளவுக்கு மீறிய ஹைப்புகளும் படுகின்றன...

அனில் கபூர், எப்ப டைரக்டர் போனாலும் கூடவே போய் “how to sell yourself" கான்செஃப்ட் கற்ரு கொடுக்கிறார்.

“ஸ்மைல் பிங்கி”க்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

Maximum India said...

அன்புள்ள நரேஷ் குமார்

//Slumdog millionaire படத்தை எப்படி அருந்ததிராய் போன்றோர் தவறான படம் என்று விமர்சிப்பது அபத்தமாக படுகிறதோ, அதே போல்தான் இந்த படத்துக்கு கிடைத்திருக்கும் அளவுக்கு மீறிய ஹைப்புகளும் படுகின்றன...//

உண்மைதான்.

கருத்துரைக்கு மிக்க நன்றி.

Blog Widget by LinkWithin