Sunday, December 14, 2008

சவாலே சமாளி!


அமெரிக்க பாராளுமன்றத்தில் அவர்களது வாகனத் துறைக்கான மீட்டெடுப்பு மசோதா தோல்வி, உலக சந்தைகளின் மந்தமான சூழல் மற்றும் இந்திய தொழிற் உற்பத்தியின் வீழ்ச்சி என்ற பல சவால்களை நமது பங்கு சந்தை மிகத் திறமையாக சந்தித்து (நாம் ஏற்கனவே எதிர்பார்த்தப் படி) முன்னேற்றமும் கண்டுள்ளது. விவரங்கள் கீழே.

ஏற்கனவே நம் பதிவில் குறிப்பிட்ட படி, சென்ற வாரம் நமது பங்கு சந்தை பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தாலும் இறுதியில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. நிபிட்டி குறியீடு சுமார் ஏழரை சதவீதமும் சென்செக்ஸ் எட்டு சதவீதமும் அதிகரித்துள்ளன. முந்தைய வார இறுதியில் தலைமை வங்கி அறிவித்த வட்டி வீத குறைப்பு, மத்திய அரசு அறிவித்த கிரியா ஊக்கித் திட்டங்களுமே இந்த முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணங்கள். அதே சமயம் மேற்சொன்ன சவால்களின் காரணமாக, சந்தை பல ஏற்றத்தாழ்வுகளையும் சந்திக்க நேரிட்டது.

இந்த வார பணவீக்கம் மேலும் குறைந்து எட்டு சதவீதம் ஆனது மற்றும் தொழிற் உற்பத்தி வீழ்ச்சி ஆகியவை வட்டி வீதங்கள் மேலும் குறைக்கப் படலாம் என்ற புதிய நம்பிக்கையை சந்தைக்கு தந்துள்ளது. இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் துறை பங்குகள் சென்ற வாரம் மிக அதிக முன்னேற்றத்தை கண்டன. இதே காரணத்தின் அடிப்படையில் வங்கிகளின் பங்குகளும் உயர்ந்தன. டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் சிறந்த நிதி செயல்பாடு மற்றும் அரசு வெளியிட்ட ஏற்றுமதி சலூகைகளின் அடிப்படையில் உலோகத் துறையை சேர்ந்த பங்குகளும் உயர்ந்தன. அம்பானி சகோதரர்களுக்கு இடையேயான எரிவாயு பிரச்சினை விரைவில் தீரும் என்ற சந்தை யூகங்களின் அடிப்படையில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகளும் வளர்ச்சியைக் கண்டன.

சென்ற வார பதிவில் சொன்ன படி சென்செக்ஸ் 9350 புள்ளிகளுக்கு வெகுவாக மேலே முடிவடைந்திருப்பது, டெக்னிகல் அனலிசிஸ் படி வரும் வாரத்திற்கு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கிறது. F&O இல் சாதகமான நிலையில் எதிர்காலங்களுக்கான இருப்பு (Positive Open Interest) அமைந்திருப்பதும் புதிய தெம்பைத் தருகிறது. அமெரிக்க தலைமை வங்கி மேலும் வட்டி வீதங்களைக் குறைக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். மேலும் நமது தலைமை வங்கியின் நிலை மற்றும் அரசின் புதிய சலுகை/கிரியா ஊக்கி திட்டங்கள், உலக சந்தைகள் போக்கு, அமெரிக்க வாகனத்துறைக்கான மீட்டெடுப்பு மசோதாவில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இந்திய சந்தைகளின் போக்கை நிர்ணயிக்கும்.

வரும் வாரத்திற்கான எதிர்ப்பு நிலைகள்

சென்செக்ஸ் - 9750-9850, 10200-300,
நிபிட்டி 2980-3030, 3140-60

வரும் வாரத்திற்கான அரண் நிலைகள்
சென்செக்ஸ் - 9350-9450, 8700-8800
நிபிட்டி - 2800-2810, 2675-2700
வர்த்தகர்கள் தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limits) பெரிய நிறுவனங்களுக்கான பங்குகளை அல்லது குறியீடுகளை வாங்கலாம். சென்செக்ஸ் 10200 புள்ளிகளுக்கு அருகே மற்றும் நிபிட்டி 3150 புள்ளிகளுக்கு அருகே தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limit) விற்பனை செய்யலாம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வர்த்தகத்தில் ரூபாய் மேலும் முன்னேற்றம் அடைய அதிக வாய்ப்புகள் உண்டு. மேலே சொன்ன சந்தை காரணிகள் ரூபாய் வர்த்தகத்தையும் பாதிக்கும். இந்திய ரூபாய் 47.50 இலிருந்து 49.00 வரை இருக்க வாய்ப்புகள் உண்டு.

வரும் வாரம் சிறப்பான வாரமாக அமைந்திட வாழ்த்துக்கள்.
நன்றி.

2 comments:

வால்பையன் said...

மகிழ்ச்சியூட்டும் செய்தி முதலீட்டார்களுக்கு

கமாடிடியும் நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கிறது

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

நீங்க சொன்னது போல மார்க்கெட் எல்லாம் இப்ப நல்லா இருக்கு. கொஞ்சம் சந்தோசமா இருக்கு. பெடெரல் இண்டரஸ்ட் கம்மி பண்ணுவாங்க போல.

Blog Widget by LinkWithin