Sunday, February 1, 2009

வடிவேலு ஆகிப் போன சந்தை


இந்த வாரம் சந்தைகள் ஒரு மகிழ்ச்சிகரமான ஆச்சர்யத்தை அளித்தன. மீண்டுமொருமுறை "அதிகரிக்கும் பணவீக்கம்", "வட்டிவீதங்கள் குறைக்கப் படாதது", "ஏமாற்றமளிக்கும் வணிக நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள்", "தொடரும் உலக (அமெரிக்கா) பொருளாதார தளர்ச்சி" மற்றும் "சத்யம் விவகாரம்" என என்று எத்தனையோ அடி விழுந்தாலும் அத்தனையும் தாங்கிக் கொண்டு "அமெரிக்காவில் வீடுகளின் விற்பனை அதிகரிப்பு" என்ற ஒரு பெரிய சாதக அம்சத்தின் அடிப்படையில் நம் சந்தைகள் சென்ற வாரம் நல்ல முன்னேற்றம் கண்டன. மேலும், சந்தையில் இருப்பில்லாமல் விற்கும் நிலையை (Shorting) எடுத்தவர்கள், மூன்று நாள் நீண்ட வார இறுதி விடுமுறைக்கு பின்னர், எத்தனை அடி வாங்கினாலும் தாங்கிக் கொள்ளும் இந்த நல்ல சந்தையைப் பார்த்து திடுக்கிட்டுப் போய் அவசர அவசரமாக தமது நிலையை பெருமளவுக்கு சமன் செய்ததும் (Short Covering) இந்த வார முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் ஆகும். வணிக நிறுவங்களின் நிதி நிலை மிக மோசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சந்தையில் விற்றவர்கள், உண்மை நிலை அவ்வளவு மோசமாக இல்லாததால், வேக வேகமாக Short Covering செய்தனர் என்றும் கூட சில சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் ஓரளவுக்கு வலுவான உலக சந்தைகள் (அமெரிக்கா நீங்கலாக) நமது சந்தைக்கு நல்ல பலத்தை கொடுத்தன. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நமது சந்தையில் இந்திய பங்குகளை விற்பனை செய்து வருவது நின்று சிறிய அளவில் முதலீடு செய்ததும், பரஸ்பர நிதிகள் பெரிய அளவில் முதலீடு செய்ததும், நமது சந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்தன. அதே சமயம் முன்னேற்றம் பெரிய பங்குகளில் மட்டுமே அதிகம் காணப் பட்டதும், சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் அதிக முன்னேற்றம் காணாததும் கவனிக்கத் தக்கவை. சென்ற மாதத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்த உலோகம், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் வங்கிப் பங்குகள் சென்ற வாரம் Short Covering காரணமாக பெருமளவு உயர்ந்தன. மிகப் பெரிய பணவீக்கம் சற்று உயர்ந்து 5.64% ஆனது சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை. ஏற்கனவே நாம் தெரிவித்திருந்த படி இந்த வாரமும் நிபிட்டியில் 2700 புள்ளிகள் நல்ல அரணாகவே காணப் பட்டது.

வரும் வார நிலவரம்

கடந்த வெள்ளிக் கிழமை தகவலின் படி அமெரிக்கா பொருளாதாரம், எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வீழ்ச்சி அடைந்திருப்பது, நமது சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். திங்கட் கிழமை காலையில் சந்தைகள் சற்று சரிவுடன் (அப்போதைய ஆசியா சந்தை நிலவரமும் கவனிக்கப் பட வேண்டியது) துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதே சமயம், தற்சமயம் சந்தையின் மனப் போக்கு சற்றே ஏற்ற நிலையில் இருப்பதும், பெரும்பாலான புதிய F&O நிலை (Fresh addition to the F&O series) ஏற்றத்தையே (Long Position) சார்ந்து இருப்பதால், வீழ்ச்சி பெரிதாக இருக்காது என்று எதிர்பார்க்கப் படுகிறது.

எனவே நிபிட்டி 2800 க்கு அருகே பங்குகளை வர்த்தக நோக்கில் வாங்கலாம். மேலும் நிபிட்டி பல நாட்களாக 2700 புள்ளிகளுக்கு கீழே (அதிக நேரம்) செல்லாமலேயே இருப்பது சந்தையின் அடி தாங்கும் திறனையே காட்டுகிறது. இதே ஏற்ற நிலை தொடரும் பட்சத்தில் நிபிட்டி சுமார் 3050 வரை கூட செல்ல வாய்ப்புக்கள் உள்ளன. 2880-2900 அளவில் சற்று எதிர்ப்பு நிலை காணப் படலாம். ஆனால், அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பு இந்திய சந்தையிலும் பெரிய அளவில் உணரப் படுமேயானால், 2750 இல் முதல் ஸ்டாப் லாசும், 2660 இல் இரண்டாவது வைத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை திங்கட் கிழமை சரிவு ஏற்பட்டால், சற்று குறைந்த விலை அளவில், ரிலையன்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, ONGC, போன்ற பங்குகளை தகுந்த ஸ்டாப் லாஸ் லிமிட்டுடன் வர்த்தக நோக்கில் வாங்கலாம்.

பங்கு இலக்கு 1 இலக்கு 2 அரண் 1 அரண் 2

ரிலையன்ஸ் 1375 1430 1215 1110
பாரத ஸ்டேட் வங்கி 1188 1227 1084 1018
ONGC 675 698 624 580

வரும் வாரம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்

எச்சரிக்கை: இந்த பதிவு தகவலுக்காக மட்டும். பரிந்துரைக்காக அல்ல. பங்கு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (ஸ்டாப் லாஸ் லிமிட்டுடன்) பங்கு வர்த்தகம் செய்யவும்.

4 comments:

பொதுஜனம் said...

பங்கு சந்தையை வெச்சி காமடி கீமடி பண்ணலியே ?

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//பங்கு சந்தையை வெச்சி காமடி கீமடி பண்ணலியே ?//

நாம எங்க பங்கு சந்தைய வச்சு காமெடி கீமெடி பண்றது? அதுதானே நம்மள வச்சி காமெடி பண்ணுது. முன்னாடி போனா முட்டுது. பின்னாடி போனா உதைக்குது. :)

KARTHIK said...

// எத்தனை அடி வாங்கினாலும் தாங்கிக் கொள்ளும் இந்த நல்ல சந்தையைப் பார்த்து திடுக்கிட்டுப் போய்//

:-))

// நாம எங்க பங்கு சந்தைய வச்சு காமெடி கீமெடி பண்றது? அதுதானே நம்மள வச்சி காமெடி பண்ணுது. முன்னாடி போனா முட்டுது. பின்னாடி போனா உதைக்குது. :)//

நீங்களே இப்படி சொல்லும் போது நாங்க எனத்த சொல்லுரது.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//நீங்களே இப்படி சொல்லும் போது நாங்க எனத்த சொல்லுரது.//

என்ன விடுங்க. சந்தையில பழம் தின்னு கொட்டை போட்ட நாஸ்டாக் முன்னாள் தலைவர் மேடோப் அவர்களுக்கே தண்ணி காட்டுச்சு இந்த பங்கு சந்தை. எத்தனை வருஷம் அனுபவமும் சந்தையில் நிலைத்து நிற்க உத்திரவாதமில்லை.

நன்றி.

Blog Widget by LinkWithin