Monday, February 23, 2009

சரிவின் விளிம்பில்?


சென்ற வாரம் வெளியிடப் பட்ட மத்திய அரசின் இடைக்கால நிதி அறிக்கை சந்தைகளுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையே தந்தது. பட்ஜெட்டில் பொருளாதார மீட்சி திட்டங்கள் எதுவும் இல்லாமல் போனது மற்றும் பட்ஜெட்டில் காணப் பட்ட மிக அதிக அளவிலான நிதி பற்றாக்குறை, பட்ஜெட் சலூகைகளுக்காக மிகப் பெரிய எதிர்பார்ப்புக்களுடன் காத்திருந்த சந்தைகளுக்கு அதிர்ச்சியையே தந்தது. இடையில் , தொடர்ந்து இழுத்து மூடப் பட்டு வரும் அமெரிக்க வங்கிகள் மற்றும் பொருளாதார சிக்கல் குறித்த பயங்கள் காரணமாக பல வருடங்களில் இல்லாத அளவிற்கு உலக சந்தைகள் வீழ்ந்தது போன்ற விஷயங்கள் நமது சந்தையில் ஒரு மிகப் பெரிய சரிவுக்கு வழி வகுத்தன.

நம்மூர் கரன்சி தொடர்ந்து வீழ்ந்து வந்ததும் தங்கத்தின் விலை சரித்திரம் காணாத அளவிற்கு உயர்ந்ததும், பங்கு சந்தையில் ஒரு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தின. பணவீக்கம் பதின்மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு விழுந்தது, புதிய வட்டி வீதக் குறைப்பு பற்றிய ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் சந்தைக்கு பெரிய அளவில் உபயோகமளிக்க வில்லை.

அதிகரிக்கக் கூடிய வாராக் கடன்களைப் பற்றிய பயத்தில், சென்ற வாரம் வங்கித் துறையைச் சேர்ந்த பங்குகள் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தன. உலக பொருளாதார வீழ்ச்சி பற்றிய அச்சத்தினால் உலோகத் துறையைச் சேர்ந்த பங்குகள் அடுத்தபடியாக அதிக அளவில் வீழ்ந்தன. மற்ற துறைகளைச் சேர்ந்த பங்குகளும் சென்ற வாரம் கணிசமான அளவில் சரிந்தன. அதே சமயம் நிபிட்டி குறியீடு முக்கிய அரண் நிலையான 2700 புள்ளிகளுக்கு மேலேயே முடிவடைந்தது ஒருவித நம்பிக்கையை அளிக்கின்றது.

சில பிரபல பொருளாதார நிபுணர்களிடம் எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்பின் படி, அமெரிக்க பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதிக்குள் மேம்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின் அடிப்படையில் அமெரிக்காவில் இந்த வார துவக்கம் சற்றே சிறப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நம்முடைய சந்தையும் கூட இந்த அளவினை (நிபிட்டி 2700 புள்ளிகள்) நல்ல அரணாக வைத்துக் கொண்டு முன்னேற முயற்சிக்கும் (இலக்குகள் 2790, 2880) என்றே தோன்றுகிறது. அதே சமயத்தில் அமெரிக்காவில் இருந்து ஏதேனும் கெட்ட செய்தி வந்து, 2700 அரண் முழுமையான அளவில் முறிக்க பட்டால், அதல பாதாள நிலைக்கு நமது சந்தை பாயும் என்றே தோன்றுகிறது. எனவே வர்த்தகர்கள் கீழே 2700 அளவை ஸ்டாப் லாஸ் லிமிட் ஆக வைத்துக் கொண்டு எச்சரிக்கையான வர்த்தகத்தில் ஈடுபடலாம். வரும் வாரத்தில் F&O நிலைகள் காலாவதி ஆவதினால், சந்தையில் ஏகப் பட்ட ஏற்ற இறக்கங்களை காண முடியும். வரும் வாரம் வெளியிடப் படவுள்ள, இந்திய ஒட்டு மொத்த உற்பத்தி (GDP) பற்றிய விவரங்களும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு வேளை, வட்டிவீதங்கள் குறைக்கப் பட்டால், வட்டி வீத தொடர்பான பங்குகளில் (வாகனத் துறை, வங்கித் துறை, ரியல் எஸ்டேட் துறை) வர்த்தகம் செய்யலாம். பெட்ரோலிய துறை விநியோகஸ்த நிறுவனங்களில் முதலீடு செய்ய பரிசீலனை செய்யலாம். ஒ.என்.ஜி.சி நிறுவனம் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் எண்ணெய் கண்டுபிடித்திருப்பதாக உறுதி செய்யப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தைகளில் மற்ற கரன்சிகளுக்கு எதிராக டாலர் வலிமை பெற்று வருகிறது. நமது பங்கு சந்தை 2700 புள்ளிகளுக்கு கீழே சரியும் பட்சத்தில், ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு 50அளவை தாண்ட வாய்ப்பு உள்ளது. தங்கத்தின் விலை அமெரிக்க பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து அமையும்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

4 comments:

KARTHIK said...

// ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு 50அளவை தாண்ட வாய்ப்பு உள்ளது.//

அப்படி மேல போச்சுன்ன.இவங்க அதையே சாக்கா வெச்சு மறுபடியும் பெட்ரோல் டீசல் விலைய ஏத்தாம இருந்த சரிதான்.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

//அப்படி மேல போச்சுன்ன.இவங்க அதையே சாக்கா வெச்சு மறுபடியும் பெட்ரோல் டீசல் விலைய ஏத்தாம இருந்த சரிதான்//

ஏற்றமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். காரணங்கள், வரப் போகிற பொதுத்தேர்தல் மற்றும் உலக சந்தையில் மிகவும் விலை குறைந்துள்ள கச்சா எண்ணெய். இப்போதைய லோக்கல் விலை அளவில் பெட்ரோல் விநியோகஸ்த நிறுவனங்கள் நல்ல லாபத்தை சம்பாதிக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி.

வால்பையன் said...

அமெரிக்க சந்தியின் குறியீடுகளும் தானே சரிந்து கொண்டே இருக்கிறது.
ஏன் இந்திய பண மதிப்பு மட்டும் குறைகிறது? இதில் எதாவது அரசியல் கலந்திருக்கிறதா?

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

//அமெரிக்க சந்தியின் குறியீடுகளும் தானே சரிந்து கொண்டே இருக்கிறது.
ஏன் இந்திய பண மதிப்பு மட்டும் குறைகிறது? இதில் எதாவது அரசியல் கலந்திருக்கிறதா?//

இதில் அரசியல் ஏதும் இல்லை. யானை படுத்தாலும் குதிரையின் உயரம் எனும் வழக்கிற்கு ஏற்ப, சரிவான பொருளாதார சூழ்நிலையில் கூட அமெரிக்கா மற்றும் அதன் கரன்சியான டாலர் இந்தியா மற்றும் ரூபாயை விட மிகவும் வலிமை வாய்ந்தது. இன்னும் சில காரணங்கள் உண்டு. கூடிய சீக்கிரம் இதைப் பற்றி ஒரு பதிவே போடலாம் என்று இருக்கிறேன்.

Blog Widget by LinkWithin