Monday, December 15, 2008

சரித்திரம் காணாத சந்தை மோசடி


இது வரை சரித்திரம் கண்டிராத சந்தை மோசடி அமெரிக்காவில் இப்போது நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் மோசம் செய்யப் பட்ட பணத்தின் அளவு சுமார் 50 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய்) என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவரங்கள் உள்ளே.

அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் ஹெட்ஜ் பான்ட் (Hedge Fund) என்றழைக்கப் படும் குறுகிய வட்ட முதலீட்டு நிதிகள் பிரபலமானவை. நமக்கு மிகவும் அறிமுகமான பரஸ்பர நிதியைப் போல, பொது மக்களிடம் இருந்து இவை நிதி திரட்டுவதில்லை. மாறாக, ஒரு சில பணக்காரர்களிடம் (குறைந்த எண்ணிக்கையில்) இருந்து மட்டும் பெருமளவு பணம் திரட்டப் படுகிறது. அந்தப் பணம் உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் பெரும்பாலும் குறுகிய கால வர்த்தக நோக்கில் முதலீடு செய்யப் படுகிறது. இந்த நிதிகள் பரஸ்பர நிதிகளைப் போல பொதுவாக எந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் வரம்புகளுக்கும் உட்படுவதில்லை. மேலும், சுய அளவில் கூட எந்த வரையறுக்கப் பட்ட கட்டுப்பாடுகள் அற்றவை. எந்த நாட்டிலும், எந்த சந்தையிலும், எந்த பங்கு அல்லது வர்த்தகத்திலும் முதலீடு செய்ய இவறிற்கு சுதந்திரம் உண்டு. இந்த நிதிகளின் ஒரே நோக்கம் லாபம் லாபம் லாபம் மட்டுமே.

அமெரிக்க பங்கு சந்தையின் (நாஸ்டாக்-Nasdaq) முன்னாள் தலைவரான பெர்னார்ட் மடொப்ப் (Bernard Madoff) நடத்தி வந்த ஒரு ஹெட்ஜ் பான்ட் நிதியமைப்பு இப்போது ஐம்பது பில்லியன் டாலர் பணத்தை மோசடி வழிகளில் இழந்திருப்பதாக அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த நிதி நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பிருந்தே இழப்புகளைச் சந்தித்து வந்துள்ளது. ஆனால் இந்த தகவல் வெளி உலகத்திற்கு தெரியப் படுத்தப் படவில்லை. அதிகம் லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாகவே விளம்பரம் செய்யப் பட்டு வந்துள்ளது. தனது சந்தை வர்த்தகத்தில் தொடர்ந்து நஷ்டங்களையே சந்தித்து வந்தாலும், புதிய முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு பழைய முதலீட்டாளர்களுக்கு பணம் பட்டுவாடா (லாபம் சம்பாதிப்பது போல) செய்யப் பட்டுள்ளது. இந்த நிறுவனம் நிதி முதலீட்டு நிறுவனம் போல அல்லாமல் ஒரு பெரிய போன்சீ (பிரமிட் முறையிலான) நிதி அமைப்பாகவே செயல் பட்டு வந்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

போன்சீ (Ponzi) நிறுவனம் என்பது சட்டவிரோதமாக செயல் படும் ஒரு அமைப்பாகும். இதில் தொடர் முறையில் புதிய முதலீட்டாளர்களிடமிருந்து பழைய முதலீட்டாளர்களுக்கு பணம் கை மாறுகிறது. நம்மூரில் இதனை லிங்க் ஸ்கீம் என்று அழைப்பார்கள்.

(பணம் இழந்தவர்கள் கம்பெனி முன்னர் கூடியிருக்கிறார்கள். நம்மூர் மோசடி பைனான்ஸ் கம்பெனிகளில் பணம் போட்டு இழந்தவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?)

சந்தை வட்டாரங்களில் மிகவும் மதிக்கப் படும் நாஸ்டாக் அமைப்பின் முன்னாள் தலைவரே இந்த தகிடு தித்த வேளையில் ஈடுபட்டிருப்பது உலகின் சந்தைகளில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. சூப்பர் பெண்மணி என்று பிரிட்டிஷ் பத்திரிக்கை உலகில் வர்ணிக்கப் பட்ட நிகோலா ஹோர்லிச்க் நிதி மேலாளர் ஆக பணிபுரிந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. (நன்றி: பி.பி.சி. வேர்ல்ட், டெலிகிராப்)

இந்தியாவில் இது போன்ற ஹெட்ஜ் பான்ட் நிதிகள் புழக்கத்தில் இல்லை என்றாலும், இந்தியாவின் கடைக் கோடி மனிதனும் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முன் வரும் இந்த காலக் கட்டத்தில், பொது மக்கள் பணத்தை கையாளும் அனைத்து நிதி அமைப்புகளையும் அரசு உன்னிப்பாக கவனித்து வர வேண்டும். இதற்காக அமைக்கப் பட்டுள்ள செபி (SEBI) போன்ற அரசு அமைப்புகள் நிதி நிறுவனங்களில் வருடாந்திர ஆய்வுகள் நடத்தி நிதி அறிக்கைகளின் நம்பகத் தன்மையை பரிசோதிக்க வேண்டும்.

நன்றி

16 comments:

கபீஷ் said...

Good Post, informative!!

Maximum India said...

Dear Kabeesh

Thank you for the comments

வால்பையன் said...

அந்த ஆளோட குரு யாருன்னு கேளுங்களேன். நம்ம அரசியல்வாதிகள் பெயரைத் தான் சொல்லுவார்

அர டிக்கெட்டு ! said...

// அந்த ஆளோட குரு யாருன்னு கேளுங்களேன். நம்ம அரசியல்வாதிகள் பெயரைத் தான் சொல்லுவார் //

நீங்க வேற அமெரிக்கா திவால் ஆனுதுக்கு காரணமே MGR நகர் கவுன்சிலர்தான்.... போகட்டும்..!

இந்தியாவில் திருப்பூரில் பலர் HEDGE FUNDS முதலீடு (டாலர் மதிப்பு குறைந்த காலத்தில் ) செய்துள்ளனர்..இன்று டாலர் விலை ஏறியதால் அவர்களுக்கு நட்டம் என சமீபத்தில் படித்தேன்...மற்றபடி
இது எதிர்பார்க்கூடியதுதான் hedge funds வழிமுறையே சூதாட்டம்...அதில் நேர்மையை எதிர்பார்பது....?????

Maximum India said...

நன்றி வால்பையன்

//அந்த ஆளோட குரு யாருன்னு கேளுங்களேன். நம்ம அரசியல்வாதிகள் பெயரைத் தான் சொல்லுவார்//

உண்மைதான். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? சுவிஸ் பாங்குகள்ள இருக்க பணத்துல பாதி நம்மாளுங்கலோடதுதானாமே.

Maximum India said...

அன்புள்ள அர டிக்கெட்டு

//hedge funds வழிமுறையே சூதாட்டம்...அதில் நேர்மையை எதிர்பார்பது....?????//

உண்மைதான் நம்மூரு பைனான்ஸ் கம்பெனில பணம் போட்டு ஏமாந்து போற குப்பனுக்கும் சுப்பனுக்கும் இந்த மாதிரி ஹெட்ஜ் பண்டுல பணம் போட்டு ஏமாந்து போற வால்டேர் சென்றிக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?

நன்றி

சங்கரராம் said...

நல்ல போஸ்ட்

Anonymous said...

தனிமனிதன விட்டுத்தள்ளுங்க, HSBC, RBS போன்றாவை பில்லியன் கணக்கில் முதலீடு செய்துள்ளனவாம். என்னத்தச் சொல்ல?

nerkuppai thumbi said...

அமெரிக்கா போலவே சுதந்திரமான வணிகம் இருக்கவேண்டும் என்று இன்றும் கூறிக்கொண்டிருக்கும் ரகுராம் ராஜன் ( உலக வங்கியின் தலைமை வகித்தாரே நம்ம ஊர் பேர்வழி, அவரைத் தான் சொல்கிறேன்) போன்றோர்கள் இது போன்ற செய்திகளிலிருந்து தன் கருத்துக்களை ஓரளவேனும் மாற்றிக்கொண்டால் சரி.
கணக்குகளில் மோசடி செய்து பல முதலிட்டாளர்கள் பணம் இழக்க வைத்த ENRON போல இன்னொன்று இது.
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் : ரிசர்வ் வங்கி போல ஓரளவு கட்டுப்படுத்திக்கொண்டிருந்தால் நல்லது தான்

Maximum India said...

அன்புள்ள சங்கரராம்

பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி

Maximum India said...

அன்புள்ள வடகரை வேலன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//தனிமனிதன விட்டுத்தள்ளுங்க, HSBC, RBS போன்றாவை பில்லியன் கணக்கில் முதலீடு செய்துள்ளனவாம். என்னத்தச் சொல்ல?//

நீங்கள் சொல்வது சரியே. முதலில் இந்த ஊழலில் பாதிக்கப் படப் போகிறவர்கள் தனி நபர்களே என்றும் பலரும் (தவறாக) எண்ணியதால் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் தரப் படவில்லை. இப்போது , வங்கிகளும் பாதிக்கப் பட்டுள்ளன என்று தெரிய வந்ததும், சந்தைகளில் ஒரு வித பதட்டம் நிலவுகிறது.

Maximum India said...

அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா

பின்னூட்டத்திற்கு நன்றி

//அமெரிக்கா போலவே சுதந்திரமான வணிகம் இருக்கவேண்டும் என்று இன்றும் கூறிக்கொண்டிருக்கும் ரகுராம் ராஜன் ( உலக வங்கியின் தலைமை வகித்தாரே நம்ம ஊர் பேர்வழி, அவரைத் தான் சொல்கிறேன்) போன்றோர்கள் இது போன்ற செய்திகளிலிருந்து தன் கருத்துக்களை ஓரளவேனும் மாற்றிக்கொண்டால் சரி. கணக்குகளில் மோசடி செய்து பல முதலிட்டாளர்கள் பணம் இழக்க வைத்த ENRON போல இன்னொன்று இது. நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் : ரிசர்வ் வங்கி போல ஓரளவு கட்டுப்படுத்திக்கொண்டிருந்தால் நல்லது தான்//

மிகச் சரியாக சொன்னீர்கள். இந்தியாவை எதற்கெடுத்தாலும் குறை சொல்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பல நாடுகளை விட (அமெரிக்கா சீனா உட்பட) வங்கித் துறை மற்றும் நிதித் துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது.

ஒரு சிறிய திருத்தம், ரகுராம் ராஜன் பன்னாட்டு நிதி அமைப்பில் (IMF) தலைமை பொருளாதார ஆலோசகராகவே பணி புரிந்தார் என்று நினைக்கிறேன்.

KARTHIK said...

// பொது மக்கள் பணத்தை கையாளும் அனைத்து நிதி அமைப்புகளையும் அரசு உன்னிப்பாக கவனித்து வர வேண்டும். இதற்காக அமைக்கப் பட்டுள்ள செபி (SEBI) போன்ற அரசு அமைப்புகள் நிதி நிறுவனங்களில் வருடாந்திர ஆய்வுகள் நடத்தி நிதி அறிக்கைகளின் நம்பகத் தன்மையை பரிசோதிக்க வேண்டும்.//

// பல நாடுகளை விட (அமெரிக்கா சீனா உட்பட) வங்கித் துறை மற்றும் நிதித் துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. //


அனிலின் நிறுவனத்தின் மேல செபி போட்ட வழக்குகள் ஆயிரக்கனக்கணக்குல நிழுவையில இருக்காமே.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

//அனிலின் நிறுவனத்தின் மேல செபி போட்ட வழக்குகள் ஆயிரக்கனக்கணக்குல நிழுவையில இருக்காமே//

உண்மைதான். ஒரு வழக்கு கூட நிரூபிக்கப் பட வில்லை (என்று கூட சொல்லப் படுகிறது) என்பது ஒரு வருந்தத் தக்க உண்மைதான். ஆனால் ஒரு விஷயம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் பெரும்பாலும் சில தனி நபர்கள் அல்லது அவர்களால் நடத்தப் படும் நிறுவனங்களே மோசடியில் ஈடுபடுகின்றன. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் வங்கிகள், தொழிற் முறை நிறுவனங்கள், ஹெட்ஜ் பண்ட, பல தனி நபர்கள் பல வகையிலான மோசடியில் ஈடுபடுகின்றனர். இத்தகைய மோசடிதான் சப் ப்ரைம் என்ற வடிவில் இன்றைக்கு உலகையே ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது.

குமரன் (Kumaran) said...

இந்தச் செய்தியைக் கேள்விபட்ட நாள் முதல் ஹெட்ஜ் பண்ட் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அறிந்தேன். நன்றி.

Maximum India said...

அன்புள்ள குமரன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

Blog Widget by LinkWithin