Tuesday, December 9, 2008

சமூகத்தில் நடை பெறும் விஷயங்கள் மீது அக்கறை கொள்ள வேண்டுமா?


நாடு உலகம் எப்படியோ போகட்டும். எதற்காக அலட்டிக் கொள்ள வேண்டும்? எனக்கென்ன ஆயிற்று? சமுகத்தினைப் பற்றி கவலைப் பட பலர் இருக்கிறார்கள். சாமான்ய மத்திய தர வர்க்கத்தில் ஒருவனான என்னால் கவலைப் பட்டு மட்டும் என்ன செய்ய முடியும்? என் அளவில் அல்லது என்னை சார்ந்தவர்கள் அளவில் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது.

சமீபத்தில் ஒரு கவிதை படித்தேன். நீங்களும் படிக்க கீழே கொடுக்கப் பட்டது.

அவர்கள் கம்யுனிஸ்டுகளை தேடி வந்தார்கள்
நான் குரல் கொடுக்க வில்லை
ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் இல்லை.

பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளை தேடி வந்தார்கள்
நான் குரல் கொடுக்க வில்லை
காரணம் நான் தொழிற்சங்கவாதியும் கூட இல்லை

அப்புறம் அவர்கள் யூதர்களை தேடி வந்தார்கள்
நான் குரல் கொடுக்க வில்லை.
ஏனென்றால் நான் யூதன் கூட இலலை

கடைசியாக என்னை தேடி தேடி வந்தனர்
குரல் கொடுக்க யாரும் இலலை
காரணம் அங்கு யாருமே இலலை.

ஹிட்லரின் ஆதரவாளராக இருந்து பின்னர் எதிர்ப்பாளராக மாறிய மார்ட்டின் நீமுல்லேர் என்பவரால் ஜெர்மெனியின் நாஜி காலத்தில் எழுதப்பட்டது. இந்த கவிதை. நாஜிகளின் முதல் இலக்கு கம்யூனிஸ்ட்கள், பின்னர் அவர்களின் இலக்குப் பட்டியல் தொழிற்சங்க வாதிகள், பத்திரிக்கையாளர்கள், யூதர்கள் என நீண்டு கடைசியாக சர்ச்சுகளில் வந்து முடிந்தது என்பதையும் நாஜிகள் முதலிலேயே அனைவராலும் தடுக்கப் பட்டிருந்தால் அவர்கள் கொடுமை பட்டியல் நீண்டிருக்காது என்பதையும் குறிப்பால் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

நம்மைச் சுற்றி நடைபெறும் விஷயங்களில் அக்கறை காட்டி மட்டும் என்ன பிரயோஜனம்? என்னால் மட்டும் என்ன செய்ய முடியும் என்று வினவுகிறீர்களா? அக்கினி குஞ்சு மட்டுமே ஒரு பெரிய காட்டை எரிக்க போதுமானது என்றான் நம் பாரதி. இது கவிதை மட்டுமே என்கிறீர்களா? இதற்கு சரித்திரபூர்வமான ஆதாரங்கள் பல உண்டு. ஒரு ஆதாரம் இங்கே.

காந்தி எனும் சூரியன் இந்திய அரசியல் வானில் உதிக்காத காலம் அது. சூரியனே மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெறமுடியும் என்று அரசியல் பெருந்தலைவர்கள் கூட நினைத்திராத காலம் அது. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் பெட்டிசன் தலைவர்கள் என்று மட்டுமே உணரப் பட்ட காலம் அது.

அந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களுக்கு இழைத்து வரும் அநீதிகளை பற்றி ஒரு தலைவர் ஒரு பெட்டிசன் தயாரிக்கிறார். அதற்காக, மிகவும் கடினமாக உழைத்து வார்த்தைகளையும் விவரங்களையும் சேகரிக்கிறார். அவர் இதற்காகப் படும் கஷ்டங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு இளைய தலைவர் வருத்தத்துடன் அவரிடம் கேட்கிறார். "ஐயா, இந்த கடிதத்தை எழுத நீங்கள் மிகவும் கஷ்டப் படுகிறீர்கள். ஆனால் இந்த கடிதத்தின் மீது பிரிட்டிஷ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. சொல்லப் போனால் இந்தக் கடிதத்தை பெற்ற உடன் குப்பைக் கூடையில் போட்டாலும் போட்டு விடுவார்கள். நிலைமை இப்படி இருக்கும் போது, ஏன் நீங்கள் இவ்வளவு கஷ்டப் பட்டு இந்த விண்ணப்பத்தை தயாரிக்க வேண்டும்?"

இதற்கு அந்த பெருந்தலைவர் அளித்த பதிலைப் படிக்கும் போது என்னையுமறியாமல் என் கண்ணில் நீர் வழிந்தது. அவர் கூறியது. "நண்பரே! இந்த கடிதம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு முகவரியிடப் பட்டிருக்கலாம். ஆனால் இந்த விண்ணப்பத்தின் வரிகள் இந்திய மக்களை சென்றடைவதற்காக தயாரிக்கப் பட்டவை. இவற்றில் உள்ளவற்றை அவர்கள் சரியாக புரிந்து கொண்டால் போதுமானது. இந்த கடிதத்தின் மீது அரசு இன்றைய தேதியில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம். ஆனால், மக்கள் ஒரு நாள் உரிய நடவடிக்கை நிச்சயம் எடுப்பார்கள். அன்றைக்கு இந்தியாவிற்கு விடிவு காலம் பிறக்கும். ஆனால் அதற்கு பல காலம் கூட பிடிக்கலாம். ஏன் அப்போது நான் உயிரோடு இருப்பேனா என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் எனது சந்ததியினர் அந்த விடிவு நாளை நிச்சயம் பார்ப்பார்கள். இதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் "

அன்று, அவரிட்ட சிறு தீப்பொறி பரவ கொஞ்ச நாள் பிடித்தது. இந்தியாவிற்கு சுதந்திரம் வந்தது. ஆனால் அவரது சத்திய வார்த்தைகள் பலித்த நாளை அவரால் காண இயலவில்லை. ஆம், அவர் உயிர் அதற்கு முன்னரே பிரிந்து விட்டது.

நமது பாரதி கூட இந்தியா சுதந்திரம் பெற்றால் பாட ஒரு பாட்டு வேண்டுமே என்று "ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று" நாம் விடுதலை பெறுவதற்கு பல ஆண்டுகள் முன்னரே ஒரு பாட்டை எழுதி வைத்தான். அவன் கூட,அந்த சுதந்திர திருநாளை காண முடிய வில்லை. ஆனால் அவன் பாடல்களோ இன்னும் கூட பல நூற்றாண்டுகள் வரை ஒலித்து கொண்டே இருக்கும்.

எனவே நண்பர்களே, நம்மை சுற்றி நடைபெறும் தீமையான விஷயங்களைக் கூர்ந்து கவனிப்போம், வீதியில் வந்து போராடா விட்டாலும் குறைந்த பட்சம் அவற்றின் மீது நமது கருத்துக்களை உருவாக்குவோம் (இது சுதந்திர வேள்விக்கு அச்சாணி போட்டவர்களின் பாணி.) அவற்றை உரிய வகையில் வெளிப்படுத்துவோம். அந்த தீப்பொறிகள் நாடு முழுக்க பரவி, இன்றில்லை என்றாலும் என்றாவது ஒருநாள், தீமைகளைச் சுட்டெரிக்கும். இல்லாவிடில், நீமுள்ளர் சொன்னது போல இன்றைக்கு நாம் பாதிக்கப் படவில்லையென்றாலும் என்றாவது ஒரு நாள் தீமை நம்மையும் விடாமல் தாக்கும்.

நன்றி.

4 comments:

KARTHIK said...

// நம்மை சுற்றி நடைபெறும் தீமையான விஷயங்களைக் கூர்ந்து கவனிப்போம், வீதியில் வந்து போராடா விட்டாலும் குறைந்த பட்சம் அவற்றின் மீது நமது கருத்துக்களை உருவாக்குவோம் //

நிச்சயம் உருவாக்குவோம்.

வழமைபோல மிக நல்லபதிவு.

மும்பை நிகழ்வுக்குப்பின் மக்களும் நாட்டைப்பற்றி கொஞ்சம் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்க

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//மும்பை நிகழ்வுக்குப்பின் மக்களும் நாட்டைப்பற்றி கொஞ்சம் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்க//

நீங்கள் சொல்வது உண்மைதான். தீமையான வருந்தத் தக்க ஒரு நிகழ்வில் பிறந்த ஒரு சந்தோசப் படக் கூடிய நல்லவிஷயம் இது.

Itsdifferent said...

Good post.
How do we unite that energy and funnel it to the right cause?

Our problem is we are so disjoint, everyone has a blog, but can we unite and create a structure, and speak in one voice?

Everyone wants to get fame,gain visibility, no one wants to follow or do the actual work.

How do we do that? What will work?

Do we need a charismatic leader, to rally behind him/her?

Or, can we just create an organization, work towards a set of goals, and create a leader from that?

I was reading about Popatrao Pawar, as an individual he has done lots of things, can we start doing things like that.
Adopt villages, schools and selflessly work hard to improve the conditions?

Maximum India said...

Dear ItsDifferent

Thanks for the comments

//Our problem is we are so disjoint, everyone has a blog, but can we unite and create a structure, and speak in one voice?

Everyone wants to get fame,gain visibility, no one wants to follow or do the actual work.//

I may not fully agree with you. Many of us are already doing something good for the society in our own capacity. Forming a new NGO requires lot of energy, time and other resources which will be difficult for many of us as we are ourselves not settled fully in life. What we can do is to select an already well functioning NGO and support from outside.

I do not think that the blogs are created to earn name and fame alone. I believe that blogs help in expressing and sharing of views with many new friends. That's all.

What I meant in the blog is to have public opinion about various things happening around us which by itself a great force and such public opinion will send strong signals to the government and politicians.

Blog Widget by LinkWithin