Skip to main content

2004 = தமிழ் நாடு, 2009 = மேற்கு வங்கம்?

2004 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் என்று அந்த கட்சியைச் சார்ந்த பலரே எண்ணியிராத போது, அந்த கட்சியின் தலைமை, கூட்டணி அமைக்கும் விஷயத்தில் ஒரு அதிரடி முடிவு எடுத்தது. ராஜிவ் காந்தி கொலை சம்பந்தமாக அமைக்கப் பட்ட ஜெயின் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப் பட்ட எந்த கட்சியின் அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து அப்போதைய ஐ.கே குஜரால் அரசு கவிழ காரணமாக இருந்ததோ, அந்த கட்சியுடனேயே (திமுக) தமிழகத்தில் கூட்டணி அமைக்கும் ஒரு எதிர்பாரா முடிவை காங்கிரஸ் தலைமை எடுத்தது. அது மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப் பட்ட பாமக, மதிமுக போன்ற கட்சிகளுடனும் பல மாநிலங்களில் தனக்கு நேர் போட்டியாளர்களான இடது சாரி கட்சிகளுடனும் இனைந்து ஒரு மெகா கூட்டணியை காங்கிரஸ் அமைத்தது.

விளைவு அனைவரும் அறிந்ததுதான். பாண்டிச்சேரியையும் சேர்த்து தமிழகத்தின் நாற்பது தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றி அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு பெரும் பலமாக இருந்ததுடன் எளிதில் ஆட்சியை அமைக்கவும் உதவி புரிந்தது. தனிப் பட்ட அளவில் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் இடையே மக்களவை தொகுதி வெற்றி எண்ணிக்கையில் இருந்த வித்தியாசம் நாற்பது சீட்டுகளுக்கும் குறைவுதான் என்பது கவனிக்கத் தக்கது.

தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் தனது கணக்கினை நடைபெறும் தேர்தலில் அதிகரித்துக் கொள்ள முடியாத (சொல்லப் போனால் குறையவே வாய்ப்புக்கள் அதிகம்) காங்கிரஸ் இப்போது மேற்கு வங்கத்தின் மீது குறி வைத்துள்ளது.

தமிழகத்தைப் போலவே காங்கிரசால் தனித்து போட்டியிட்டு பெருமளவு சாதிக்க முடியாத ஒரு மாநிலம் மேற்கு வங்கம். பிரணாப் முகர்ஜீ போன்ற காங்கிரஸின் மூத்த தலைவராலேயே அங்கு 2004 தேர்தல் வரை வெற்றி பெற முடிய வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இடது சாரிகள் பலம் மிகுந்த அந்த மாநிலத்தில், காங்கிரசில் இருந்து துடிப்பான இளம் தலைவரான மம்தா பானர்ஜீ வெளியேறியது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே இருந்தது. மேலும் இடது சாரி கட்சிக்கு எதிரான வாக்குகளை அவர் சிதறடித்தது மேற்கு வங்கத்தில் இனிமேல் காங்கிரசுக்கு வாய்ப்பில்லை என்றே எண்ண வைத்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் தனது கட்சியின் குழந்தையான திரிணாமுல் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து, அதிலும் இரண்டாவது கட்சி என்ற அந்தஸ்த்துக்கும் ஒப்புக் கொண்டது மற்றும் நாற்பத்திரண்டு தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 14 இடங்களில் மட்டுமே போட்டியிட ஒப்புக் கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அது மட்டுமல்ல, அந்த 14 இடங்களும் கூட வெற்றி வாய்ப்பு குறைந்த இடங்கள் (இடது சாரிகளின் கோட்டைகள்) என்று கருதப் படுபவை. இந்த நிலைப் பாடு காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த கூட்டணி முடிவுக்கு கீழ்கண்டவாறு சில காரணங்கள் இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்யும் இடது சாரிகளின் மீது அதிருப்தி (ஓரளவுக்கேனும்) எழுந்தால், அதை சிந்தாமல் சிதறாமல் கூட்டுச் சேர்ப்பது.

சிங்கூர் விவகாரத்தில், மேல் தட்டு மற்றும் மத்திய வர்க்க மக்களின் ஆதரவு இடது சாரி அரசுக்கு இருந்தாலும், எளிய மக்கள் மத்தியில் மம்தாவின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

மேற்சொன்ன இரண்டு காரணங்களால் ஒருவேளை மாநில அரசுக்கு எதிரான பெரிய அலை உருவானால் அந்த அலையின் உதவியால் அதிக உறுப்பினர்களைப் பெற்று மத்திய அரசினை மீண்டும் தக்க வைத்துக் கொள்வது.

மற்றுமொரு பெரிய குறிக்கோள் என்னவென்றால், இடது சாரிகளின் பலம் (நாடாளுமன்ற தொகுதிகள்) மேற்கு வங்கத்தில் குறையும் போது மூன்றாவது அணியின் கட்டுப் பாடு குலைந்து போவதுடன் அந்த கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோருவது என்பது ஒரு கடினமான காரியமாகி விடும். அப்போது, காங்கிரஸ் கட்சியால், தான் ஒரு மதச்சார்பற்ற கட்சி என்ற போர்வையில், பல உதிரிக் கட்சிகளை தனது கூட்டணிக்குள் இழுக்க முடியும்.

ஆக மொத்தத்தில், இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தின் வோட்டுக்கள் மத்திய அரசை நிர்ணயிக்கக் கூடிய வலிமை கொண்டதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

நன்றி.

Comments

citizen said…
"2004 = தமிழ் நாடு, 2009 = மேற்கு வங்கம்?" என்பது 100% சரியே என்று தோன்றுகிறது . மார்க்சிஸ்ட் மிக பெரிய இழப்பை எதிர் நோக்கி உள்ளது .
Maximum India said…
அன்புள்ள சிட்டிசன்

கருத்துரைக்கு நன்றி.

கூட்டணி மாற்றங்கள் மற்றும் நம்பகத்தன்மை இழப்பு ஆகியவை இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிகளை பெருமளவுக்கு பாதிக்கப் போகிறது.

நன்றி.
மக்கள் மனதில் என்ன உள்ளது என்பது இப்போது தெரியாது. இலவசங்களும் கவர்ச்சி அறிவிப்புகளும் பாதிக்காமல் சிந்த்தித்து ஓட்டு போட்டால் உருப்படியான கட்சி ஆட்சி பிடிக்கும். என்னை கேட்டால் எவ்வளவோ சீர்திருத்தங்களை செய்கிறது தேர்தல் ஆணையம். ஒவ்வொரு கட்சியின் செயல்பாடு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தேர்தலுக்கு முன் கட்டுப்பாடற்ற , கட்சி பாகுபாடற்ற , நல்ல மனிதர்களை கொண்ட அமைப்பின் மூலம் சர்வே நடத்தி கருத்து கணிப்பை வெளியிட்டால் கொஞ்சம் மக்கள் உணர்ந்து ஓட்டு போட வசதியாக இருக்கும். அதற்கும் நம்ம வேட்டிகள் கட்சி சாயம் பூசாமல் இருந்தால் சரி.
முலயாம் மற்றும் மாயாவதி தனபட்ட நிலையில் ஒருவர் மட்டும் மிக அதிக தொகுதிகளில் வெற்றி பெற வில்லை என்றால் மூன்றாவது அணி கடினம் தான்.மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் சில இடங்களை மட்டுமே கூடுதலாக இழக்கும் என்பது என் கருத்து
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

கருத்துரைக்கு நன்றி.

//இலவசங்களும் கவர்ச்சி அறிவிப்புகளும் பாதிக்காமல் சிந்த்தித்து ஓட்டு போட்டால் உருப்படியான கட்சி ஆட்சி பிடிக்கும். //

உண்மையில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. "There is no free lunch" என்று வெகுநாட்களுக்கு முன்னமேயே சொல்லப் பட்டிருக்கிறது. இதைப் பற்றி ஒரு விரிவான பதிவே போடலாம் என்று நினைக்கிறேன்.

//என்னை கேட்டால் எவ்வளவோ சீர்திருத்தங்களை செய்கிறது தேர்தல் ஆணையம். ஒவ்வொரு கட்சியின் செயல்பாடு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தேர்தலுக்கு முன் கட்டுப்பாடற்ற , கட்சி பாகுபாடற்ற , நல்ல மனிதர்களை கொண்ட அமைப்பின் மூலம் சர்வே நடத்தி கருத்து கணிப்பை வெளியிட்டால் கொஞ்சம் மக்கள் உணர்ந்து ஓட்டு போட வசதியாக இருக்கும். அதற்கும் நம்ம வேட்டிகள் கட்சி சாயம் பூசாமல் இருந்தால் சரி//

நல்ல யோசனைதான்.

தொலைகாட்சிகளின் வீச்சு வெகுவாக அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில், சமூக பொருளாதார விவாதங்களை கட்சியின் தலைவர்கள் (நேரடி ஒளிபரப்பில்) மக்கள் முன்னிலையில் நடத்தலாம் (அமெரிக்காவைப் போல) எதையெதையோ காப்பி அடிக்கும் நாம் இதையும் கொஞ்சம் காப்பி அடிக்கலாம்.

மக்களும் கொஞ்சம் சாதி மத இன பாகுபாடுகளை மறந்து வாக்களித்தால் நன்றாக இருக்கும்.

நன்றி.
Maximum India said…
அன்புள்ள சதுக்கபூதம்

கருத்துரைக்கு நன்றி.

//முலயாம் மற்றும் மாயாவதி தனபட்ட நிலையில் ஒருவர் மட்டும் மிக அதிக தொகுதிகளில் வெற்றி பெற வில்லை என்றால் மூன்றாவது அணி கடினம் தான்.//

இவர்கள் மட்டுமல்ல இடது சாரிகள் பெருமளவுக்கு வெற்றி பெற வில்லையென்றாலும் மூன்றாவது அணி தடுமாறும் என்றே நினைக்கிறேன்.

//மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் சில இடங்களை மட்டுமே கூடுதலாக இழக்கும் என்பது என் கருத்து//

இருக்கலாம். அதே சமயம், துவக்கத்தில் சிறிதாக உருவாகும் அலைகள் சமயத்தில் நிலைமையையே தலைகீழாக திருப்பி போட்டு விடுவதை நாம் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம்.

நன்றி.
என்னதான் குட்டிகரணம் அடிச்சாலும் தமிழகத்தில் காங்கிரஸுக்கு அல்வா தான்!
Maximum India said…
கருத்துரைக்கு நன்றி வால்பையன்.

//என்னதான் குட்டிகரணம் அடிச்சாலும் தமிழகத்தில் காங்கிரஸுக்கு அல்வா தான்!//

உண்மைதான். ஆனால், அந்த அல்வா எவ்வளவு பெரியது என்பது மாற்றுத் தரப்பில் யார் பிரதமர் வேட்பாளர் மற்றும் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன என்பதை பொருத்து அமையும்.

நன்றி.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...