Skip to main content

மதில் மேல் பூனை!

சென்ற வாரம் முக்கிய உலக சந்தைகள் (குறிப்பாக அமெரிக்க மற்றும் சீன சந்தைகள்) பெருமளவிற்கு வீழ்ச்சி அடைந்தாலும் இந்தியாவில் ஓரளவுக்கு அமைதி நிலவியது. சர்வதேச தர நிர்ணய நிறுவனமான S&P நிறுவனத்தால் இந்திய நாணயமான ரூபாயின் தர மதிப்பு குறைக்கப் பட்டது, நமது நாணய சந்தையில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தினாலும் கூட, பங்கு சந்தையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.

சென்ற வாரம் மத்திய அரசு அறிவித்த வரிச் சலுகைகள், பணவீக்கம் மேலும் சரிவடைந்தது, இதன் காரணமாக மேலும் வட்டிக் குறைப்பு நேரலாம் என்று சந்தைகளுக்கு கிடைத்த புதிய நம்பிக்கைகள், டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் (எதிர்பார்ப்பிற்கு மிகவும் அதிகமான லாபம்) காலாண்டு அறிக்கை ஆகியவை சந்தையின் முக்கிய பங்குக் குறியீடுகள் சரிவதிலிருந்து காப்பாற்றின. உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருந்தாலும், இவ்வாறான பொருளாதார வீழ்ச்சி, தலைமை வங்கி மேலும் வட்டிகளைக் குறைப்பதற்கு வழி வகுக்கும் என்று புதிதாக முளைத்த நம்பிக்கையால், சந்தை பெரிய சரிவிலிருந்து தப்பித்தது. மேலும் பெப்ரவரி மாதத்திற்கான F&O திறந்த நிலை சென்ற வாரம் காலாவதியானதை முன்னிட்டு, F&O ஷார்ட் நிலைகள் சமன் செய்யப் பட்டதால், முக்கிய குறியீடுகள், வாராந்திர அடிப்படையில், சிறிதளவு மேலே கூட சென்றன. நாம் ஏற்கனவே பல முறை குறிப்பிட்டிருந்த படி, நிபிட்டி குறியீட்டின் 2700 புள்ளிகள் அளவு சந்தைக்கு பெரும் அரணாகவே இருந்தது. அதே சமயத்தில், சிறிய மத்திய நிலை பங்குகள் பெருமளவு வீழ்ச்சியை சந்தித்ததும் குறிப்பிடத் தக்கது.

வட்டி வீதம் குறைக்கப் படும் என்ற நம்பிக்கைகள் மற்றும் நானோ கார் விற்பனைக்கு விரைவில் வரும் என்ற அறிவிப்பு ஆகியவை, வாகனத் துறை பங்குகள் உயர உதவின. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மென் பொருள் துறை பங்குகள் உயர உதவியது. அதே சமயம், ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகள் தமது வீழ்ச்சியைத் தொடர்ந்தன. வங்கிப் பங்குகள் கூட சரிவிலேயே இருந்தன.

வரும் வாரம்?

பணவீக்கம் பெருமளவு குறைந்துள்ளதாலும், உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி மிகவும் குறைந்திருப்பதாலும், இந்திய மத்திய வங்கி தனது வட்டி வீதங்களை மேலும் குறைக்கும் என்று சந்தைகளால் எதிர்பார்க்கப் படுகிறது. தேர்தலை சந்திக்க மும்முரமாக உள்ள மத்திய அரசு, இந்த விஷயத்தில் மத்திய வங்கிக்கு நிர்பந்தங்கள் கொடுத்து வருவது போல தோன்றுகிறது. வருகின்ற வாரம், வட்டி வீதங்கள் குறைக்கப் படும் பட்சத்தில், வங்கி , ரியல் எஸ்டேட் மற்றும் வாகனத் துறை பங்குகள் ஓரளவுக்கு உயர வாய்ப்புள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் தனது துணை நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தை தன்னுடனேயே முழுமையாக இணைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பது, ரிலையன்ஸ் நிறுவன பங்குகளுக்கு உதவினாலும், ரிலையன்ஸ் பெட்ரோலிய பங்குகளுக்கு பாதகமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. உலக சந்தைகளில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய பெட்ரோல் தயாரிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உதவக் கூடும். சத்யம் நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் மற்ற பெரிய நிறுவனங்களைப் பற்றி செபி வெளியிடவுள்ள தணிக்கை அறிக்கை, சந்தைகளில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அடுத்த வாரம், பொதுத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியிடப் படக் கூடும்.

ஆக மொத்தத்தில்,ஆக மொத்தத்தில், சரிவுக்கும் உயர்வுக்கும் சமமான வாய்ப்புகள் உள்ளதால், பங்கு சந்தை இப்போது "மதில் மேல் பூனை" என்ற நிலையிலேயே இருப்பது போல தோன்றுகிறது. மேலும், வரும் வாரம் ஒரு குறுகிய வட்டத்தில் ஏற்றத் தாழ்வுகளுடன் பயணிக்கும் என்றே இப்போதைக்கு தோன்றுகிறது.

ஏற்கனவே சொல்லிருந்த படி, நிபிட்டி குறியீட்டுக்கு 2700 புள்ளிகள் முக்கிய அரணாக இருக்கும். இந்த நிலை முழுமையாக முறிக்கப் பட்டால், சந்தை பெரிய வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளது. அதே போல, 2800 அளவில் பெரும் எதிர்ப்பு நிலை காணப் படுகிறது. 2830க்கு மேல் சந்தைகள் பயணித்தால், F&O ஷார்ட் நிலைகள் சமன் செய்யப் படும் நிலை ஏற்பட்டு , சந்தைகள் நமது முந்தைய இலக்கான 2880, 3050 ஆகியவற்றை நோக்கி முன்னேற வாய்ப்புள்ளது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

Comments

பங்கு சந்தை மீண்டும் பொங்கு சந்தையாக வருமா என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் உண்டு.ஒரு கால சுழற்சியின் அடிப்படையில் பங்கு சந்தைக்கு அவ்வப்போது பாங்கு ஊதப்படுகிறது. வெறுமையாய் விட்டத்தை பார்க்காமல், விட்டதை பற்றி கவலை படாமல் பொறுமையை நல்ல பங்குகளை பொறுக்கி எடுத்து கொஞ்சமாகமுதலீடு செய்து வர வேண்டும். மீண்டும் சக்கரம் சுழன்று "மணி" அடிக்கப்படும்.சந்தை உயிர்தெழும். தற்போது நின்று ஆட வேண்டிய தருணம். நம்பிக்கையோடு ஆடுவோம்.
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

கருத்துரைக்கு நன்றி.

சந்தைகள் கீழ் நிலையில் இருப்பது, முதலீட்டாளர்களுக்கு அதுவும் முக்கியமாக புதிதாக வருபவர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாகவே கருத வேண்டும். எனவே, பொருளாதார தளர்ச்சி நிலையில் கூட நன்கு செயல் படும் நிறுவனங்களின் பங்குகளை நீண்ட கால நோக்கில், எப்போதெல்லாம் குறைந்த விலையில் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் வாங்கி வர வேண்டும்.

வாழ்த்துக்கள்.
DG said…
பங்கு சந்தை பற்றிய கட்டுரை மிகவும் பயனாக உள்ளது. உங்கள் சேவை எங்கள் தேவை.
"வாழ்க வளமுடன்"
DG
Maximum India said…
பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி dg

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...