Skip to main content

வெற்றி தொடருமா?

சென்ற வாரம் பலரும் எதிர்பாரா வண்ணம் சந்தைகள் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டன. உலக சந்தைகளின் தொடர்ந்த உயர்ச்சி நமது சந்தைகளுக்கும் நல்ல ஊக்கத்தைக் கொடுக்க சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கும் மேலே உயர்ந்து மிக முக்கிய இலக்கான 10,௦௦௦000 புள்ளிகளையும் எளிதில் கடந்தது. அதே போல, நிபிட்டி குறியீடு சுமார் 300 புள்ளிகள் உயர்ந்து 3100 புள்ளிகளுக்கும் மேலே முடிவடைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவு பங்குகளை வாங்கியதும், விற்று பின் வாங்கும் நிலையை எடுத்தவர்கள் அவசர அவசரமாக அந்த நிலையை சமன் செய்ய முனைந்ததும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்கள்.

நாம் ஏற்கனவே சென்ற பதிவில் விவாதித்த படி, அமெரிக்க பணம் உலகெங்கும் பாயும் என்ற நம்பிக்கையும் சந்தைகளின் புதிய நம்பிக்கைக்கு முக்கிய காரணம். இதன் விளைவாக இந்திய ரூபாய் உட்பட முக்கிய உலக நாணயங்களுக்கு எதிரான டாலர் மதிப்பு சென்ற வாரம் குறைந்தது. உலகெங்கும் உள்ள பொருட்கள் மற்றும் பங்கு சந்தைகள் பெருமளவுக்கு உயர்ந்தன.

பெரிய அமெரிக்க வங்கிகள் வீழ்ச்சியில் இருந்து தப்பிக்கும் என்ற புதிய நம்பிக்கையிலும், இந்திய வங்கிகளின் செயல்பாடு இந்த வருடம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையாலும், இந்திய வங்கித் துறை பங்குகள் பெருமளவு உயர்ந்தன. உலோகங்களின் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் உலோகத் துறை பங்குகள் நன்கு முன்னேறின.

நானோ கார் வரவு வாகனத் துறை பங்குகள் உயர உதவின. நிபிட்டி குறியீடு கணக்கிடும் முறை மாற்றப் பட்டது ரிலையன்ஸ் பங்குகளுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் ரிலையன்ஸ் பங்குகள் வெகுவாக உயர்ந்தன. இதர எரிபொருள் பங்குகளும் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் உயர்ந்தன.

பணவீக்கம் மேலும் சரிந்தது வட்டி வீதங்கள் குறைக்கப் படும் என்ற புதிய நம்பிக்கையை உருவாக்கியது.

பல பன்னாட்டு பங்கு சந்தை மேதைகள், தற்போதைய சந்தை முன்னேற்றம் இன்னும் பல காலம் நீடிக்கும் என கருத்துத் தெரிவித்துள்ளனர். நிபிட்டி குறியீடு 3600 வரையிலும் சென்செக்ஸ் குறியீடு 12000 வரையிலும் உயரக் கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

திரும்ப வரும் வெளிநாட்டு முதலீடுகள், உள்நாட்டு நிறுவனங்களின் தொடர்ந்த ஆர்வம், பெரிய அளவில் விலை சரிந்துள்ள பங்குகள் போன்ற விஷயங்கள், மேற்கூறிய கருத்துக்கு சாதகமாக இருந்தாலும், கடந்த மூன்று வாரங்களில் பெருமளவு முன்னேறியுள்ள சந்தையில் சிறிதளவாவது 'லாப விற்பனை' நடைபெறும் என்றே தோன்றுகிறது. ரூபாய் 50 அளவை இன்னும் முறியடிக்காதது வெளிநாட்டு பணவரவு குறித்த சில சந்தேகங்களை உருவாக்குகிறது.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள G-20 மாநாடு, ஐரோப்பிய வங்கியின் வட்டி வீத முடிவு மற்றும் அமெரிக்க வாகனத் துறைக்கான அரசு உதவி போன்றவை சந்தையின் போக்கை தீர்மானிக்கும். மேலும் அடுத்த வாரம் வெளியிடப் படவுள்ள அமெரிக்காவின் பொருளாதார செய்திகள் சந்தையின் கவனத்தை ஈர்க்கும்.

இந்திய சந்தைகளின் பெரிய வர்த்தகர்கள் பெருமளவு சிறிய மற்றும் நடுத்தர பங்குகளில் வர்த்தகம் செய்து வருகிறார்கள். இது சந்தையின் மீது காணப் படும் நம்பிக்கையைப் பிரதி பலிக்கின்றது என்றாலும், "அக்ருதி" போன்ற பங்குகளின் ஏற்றத் தாழ்வு நிலைகளில் இருந்து தம்மை தாமே பாதுகாத்துக் கொள்வது சிறிய முதலீட்டாளர்களின் பொறுப்பு ஆகும்.

நல்ல டிவிடென்ட் தரும் மற்றும் சிறந்த நிலையில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் மெல்ல மெல்ல வாங்கலாம். வர்த்தகர்களின் அடுத்த இலக்காக, நாம் ஏற்கனவே கூறியிருந்த படி, 3200 (நிபிட்டி) புள்ளிகள் இருக்கும். அதுவரை "வாங்கும் நிலையை" வர்த்தகர்கள் எடுக்கலாம். அந்த நிலையை அடைந்த பிறகு, அன்றைய சூழலில் அடிப்படையில் ஒரு புதிய கோணத்தில் சந்தை அணுகப் பட வேண்டும்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Comments

MCX Gold Silver said…
நிப்டி குறியிடு கணகிடும் முறை எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?நன்றி
Maximum India said…
முன்பு ஒரு நிறுவனத்தின் மொத்த சந்தை முதலீட்டின் (Total Market Capitalization) அடிப்படையில் அந்த நிறுவனத்தின் நிபிட்டி பங்கீடு (Weight) இருந்தது. ஆனால், இப்போதோ ஒரு நிறுவனத்தின் பங்குகளில் துவக்க முதலீட்டாளரின் (Promoter) பங்குகளை நீக்கி விட்டு, சந்தையில் உள்ள பங்குகளின் சந்தை முதலீட்டின் அடிப்படையில் மட்டுமே நிபிட்டி மதிப்பிடப் படுகிறது.

உதாரணத்திற்கு ரிலையன்ஸ் பங்குகளில் சுமார் 45 சதவீதம் சந்தையில் வர்த்தகம் (Floating Shares) செய்யப் படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயத்தில் என்டிபிசி பங்குகளில் சுமார் 20 சதவீதம் மட்டுமே சந்தையில் வர்த்தகம் செய்யப் படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நிபிட்டி கணக்கிடும் முறை


நிபிடியில் ரிலையன்ஸ் பங்கீடு = மொத்த ரிலையன்ஸ் சந்தை முதலீடு * 45% / நிபிட்டி மொத்த சந்தை முதலீடு (Total Nifty Market Cap)

நிபிடியில் என்டிபிசி பங்கீடு = மொத்த என்டிபிசி சந்தை முதலீடு * 20% / நிபிட்டி மொத்த சந்தை முதலீடு

சென்செக்ஸ் ஏற்கனவே இதே முறையில்தான் கணக்கிடப் பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

சரியான முறையில் விளக்கி இருக்கிறேனா என்று நீங்கள்தான் இப்போது சொல்ல வேண்டும்.
MCX Gold Silver said…
தங்களின் விளக்கத்திற்கு நன்றி நன்றி நன்றி

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...